சமற்கிருதம் செம்மொழியல்ல… – முனைவர் ப. மருதநாயகம் தம் நூல்கள் வழி உணர்த்தும் ஆய்வு முடிவுகள்

2024 ஏப்ரல் 1-15, 2024 சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

101. சாணக்கியன் என்னும் பார்ப்பனனால் அருத்தசாத்திரம் எழுதப்பெற்றது என்ற கதைக்கு கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன் எவ்விதமான ஆவணச் சான்றும் இல்லை.
102. கவுடலீயம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுவதால், திருக்குறளின் தாக்கத்திற்குக் கவுடலீயம் உட்பட்டிருக்க வேண்டும்.
103. விண்டருனிட்சன், யாலி, கீத்து போன்ற மேலைக் கல்வியாளர்கள் சந்திரகுபுதனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லை யென்பதற்குச் சான்றுகள் பல தருவர்.
104. திருக்குறள் வற்புறுத்தும் நீதிக்கும் கவுடலீயம் கூறும் நீதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.
105. வருண வரையறையை வலியுறுத்தும் சுக்கிரநீதியும் பகவத்து கீதையும் எங்ஙனம் செவ்விலக்கியங்கள் ஆகும்?
106. அகில இந்திய அறிவு மரபிற்குத் தமிழின் பங்களிப்பு பேரளவினது!
107. சமற்கிருதக் கவிதையியல் நூல்கள் யாவும் ஏற்கெனவே சமற்கிருதத்தில் எழுதப்பெற்ற கவிதைகளையெல்லாம் ஆராய்ந்து தன்னுணர்ச்சிப் பாக்களைத் தெளிவாக வரையறுக்கவில்லை.
– வங்க அறிஞர் சுகுமாரி பட்டாச்சார்சி, சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு / History of Classical Sanskrit Literature
108. சமற்கிருதத்தில் முதலில் எழுதப்பெற்ற நாடகங்கள் கிரேக்க இன்பியல் நாடகங்களின் தாக்கத்திற்கு உட்பட்டவை.
– வங்க அறிஞர் பட்டாச்சார்சி, சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு/ History of Classical Sanskrit Literature
109. பண்டிதமணி, தெ.பொ.மீ. போன்றவர்கள் தமிழும் வடமொழியும் அறிந்தவர்களாயிருந்தும் பல ஒப்புமைகளைத் தாமே கண்டறிந்த வழியும் அவை தமிழ் இலக்கியங்களிலிருந்தே வடநூல்களுக்குச் சென்றிருக்க வேண்டும் என்று சொல்லாமல், அகில இந்திய அறிவு மரபிலிருந்து தமிழ், வடமொழிப் புலவர்கள் இவற்றைப் பெற்றிருக்க வேண்டுமென்று கூறினர்.
110. அருவருப்பூட்டும் இழிகாமக் குப்பைகள் என வடநூலாரே புராண வகைகளைக் கூறுகின்றனர்.
111. பஞ்சதந்திரம் கி.பி. நான்கு அல்லது அய்ந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இது சமற்கிருதத்தில் எழுதப்பெற்ற முதல் நூலன்று. கிரேக்க மொழியிலுள்ள ஈசாப்பு கதைகளைத் தழுவியது.
112. சங்கரரின் அத்துவைதத் தத்துவங்களின் மூலங்கள் தமிழ்நாட்டுப் புறப்பாடல்களில் காணக்கிடக்கின்றன. – சார்லசு கோவர் (Charles Gover)
113. இராமானுசர் தமிழ் ஆழ்வார் பாடல்களையே பயன்படுத்தி உள்ளார்.
114. இராமானுசர் வசிட்டாத்துவைதக் கோட்பாட்டை உருவாக்க ஆழ்வார் பாடல்களுக்குக் கடன் பட்டிருக்கிறார். – எஃப், டபிள்யூ.எல்லீசர் (F.W.Ellis)
115. இராமானுசர் தமிழில் எழுதவில்லையாயினும் தமது சொற்பொழிவுகளில் பெரிதும் தமிழைப் பயன்படுத்தியிருந்தார். – வெங்கடாச்சாரி.
116. பெரியவாச்சான்(பிள்ளை) சமற்கிருதத்தினும் உயர்ந்த இடத்தில் தமிழை வைத்தார்.
117. தமிழ் வடமொழியைச் சார்ந்திராது தனித்து இயங்க வல்ல மொழி என்றும் அதன் சொற்கள் பொருளைத் தெளிவாகவும் அய்யத்திற்கு இடமின்றியும் குறிக்கவல்லவை.
– பெரியவாச்சான்(பிள்ளை)
118. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியவாச்சான் (பிள்ளை) தமிழின் தொன்மைக்கு ஆதரவாக இருந்ததுபோல் 12ஆம் நூற்றாண்டில் பிறந்த நஞ்சீயாரும் தமிழ்ப் பகைவருக்கு எதிராக இருந்தார்.
119. இந்தியாவின் பிற பகுதிகிள் யாவற்றிலும் உள்ள உண்மையான அறிஞர்கள் யாவரும் தமிழ் அறிந்தவர்கள்.
120. தமிழ் அறியாதவர்கள்மீது தம் அருட்பார்வை படுவதற்கு இறைவனுக்கு விருப்பம் இல்லை.
– பெரியவாச்சான்(பிள்ளை)
121. பத்தி இலக்கியம் தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவியது.
– பாகவத புராணம், 48ஆம் பாடல்
122. பாகவதபுராணத்தில் ஆழ்வார்கள் பாடல்களின் தாக்கம் மிகுதி.
– அறிஞர் ஃபிரீதம் ஆருடி, ‘விரகபத்தி’ (ஆங்கில நூல்)
123. தேரூர்ந்த முறை செய்த தமிழ் மன்னனின் வரலாறு பிற்காலச் சோழர்காலத்தில் ஆரியத் தொன்மமாக மாற்றப்பட்டது.
124. புறநானூறு சுட்டும் புறாவின் புன்கண் தீர்த்த தமிழ் மன்னனின் வரலாறும் பிற்காலச் சோழர் காலத்தில் நம்பகத்தன்மை இழந்த ஆரியத் தொன்மமாக உருமாற்றம் செய்யப்பெற்றது.
125. விக்கிரமன் சோழன் காலத்தில் கி.பி.1123. மே 31இல் கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுத் திருவாரூர்க் கோயில் தென்புறச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்ப் பெயர்களெல்லாம் சமற்கிருதப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. கற்பனைச்செய்திகளும் பொய்யுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்நிகழ்வு மெய்யோ, பொய்யோ என்று குழம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
126. பிற்காலச் சோழ மன்னர்கள் காலத்திலேயே தமிழர் வரலாறு ஆரியத் தொன்மமாக மாற்றப்பட்டுள்ளது.
127. தமிழ் மன்னனின் வரலாற்றுப் பெருமை மிக்க செயல் நம்ப முடியாத ஆரியத் தொன்மக் கதைகளில் ஒன்றெனக் கருதுமாறு மாற்றம் செய்யப்பெற்றுள்ளது.
128. சமற்கிருதச் சார்புடையார் தமிழுக்கு இழைத்த கேடுகளைத் தேவநேயப்பாவாணர் அரிய பட்டியலாகத் தந்துள்ளார்.
129. ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் சமற்கிருதச் சார்புடையார் தமிழுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்னும் வரலாற்றுச் செய்திகளைத், திராட்டுமன்(Trautmann) தம் இரு நூல்களில் (Dravidian Proof, Madras School of Orientalism) தெரிவித்துள்ளார்.
130. குசராத்தியரே சமற்கிருதத்திற்கு முதல் பகைவர்கள்- இராசசேகர், காவிய மீமாமுசா (சமற்கிருத நூல்)
131. சமற்கிருதம் உயர்ந்த காப்பியங்கள் எழுதுவதற்குத் தகுதியற்ற மொழி. – பிராகிருத மொழியினர்
132. சமற்கிருதம் தேங்கிய குட்டை.
– இந்தி மொழிக் கவிஞர் கபீர்தாசு
133. மநுநூலைப் படிக்காமலேயே நீட்சே என்னும் பேரறிஞர் அது பெண்களின் பெருமையைப் பேசும் அரிய நூலென்று எழுதினார்.
134. பாணினியின் தாது பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1750 வேர்களுள் பெரும் பாலானவை கற்பனையானவை – விட்டினி (Whitney), எட்கிரன் (Edgren) ஆகிய மேலை மொழியியல் வல்லார் (1884).
135. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே; வேதங்களில் தமிழின் தாக்கம் பெரிது; இருக்கு வேதத்தில் கையாளப் பெற்றுள்ள சமற்கிருதம் தமிழர்களின் மொழியால்தான் உருப்பெற்றது. – வேதவிற்பன்னர் சுந்தர் இராசு, இருக்குவேத ஆய்வுகள் (Rig Vedic Studies)
136. வேதத்தின் மொழியைப் படைத்த பிருகற்பதி, பழந்தமிழிலிருந்து எழுத்துகளை எடுத்துக்கொண்டு சில மாற்றங்களைச் செய்து சமற்கிருத எழுத்துகளை உருவாக்கினர்.
137. கி.பி. முதல் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சமற்கிருத எழுத்துகள் உருவாக்கப்பட்டன; தமிழ் எழுத்துகளோ கிறித்துவிற்குப் பல நூற்றாண்டுகள் முன்னமேயே வழக்கில் இருந்தன;
138. சட்டம்பி அடிகளார் வேறு எம்மொழியுடனும் ஒப்பிட இயலா நிலையுடைய தமிழின் சிறப்புகளைக் கூறுகிறார்.
139. இந்திய ஒன்றிய அரசு 2004இல் செம்மொழிக்கான தகுதிகளை வரையறுத்தது. இத்தகுதிகளின் அடிப்படையில் சமற்கிருத மொழி இலக்கிய வரலாற்றையும் அம்மொழியில் செவ்விலக்கியங்கள் என்று போற்றப்படுபவற்றையும் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கும்போது தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகியவற்றை ஒத்து எண்ணத்தக்க பெருமை அதற்கு இல்லை.
140. சமற்கிருதத்தின் செவ்விலக்கிய வரலாறு கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொடங்கி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் முடிந்துவிடுகிறது. – திருமதி சுகுமாரி பட்டாச்சார்சி, சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு/History of Classical Sanskrit Literature.
141. தமிழிலிருந்து மட்டுமல்லாமல் பிற இந்திய மொழிகளிலிருந்தும் நல்ல இலக்கியப் பகுதிகளை எல்லாம் சமற்கிருத நூல்களில் இடைச் செருகல்களாகச் சேர்த்தார்கள்.
142. பிற மொழி இலக்கியங்களில் சிறந்தனவற்றை மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு மூலநூல்களை முற்றிலுமாக அழித்தார்கள். அழிக்க முடியாது போனால் சமற்கிருத நூலே மூலமென்றும் பிற மொழி நூல் மொழிபெயர்ப்பென்றும் பொய்கூறி ஏமாற்றினர்.
143. “அறிவியல் காணாததை எல்லாம் வேதம் கண்டுள்ளது” என்ற பொய்யான கருத்தைப் பரப்பப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வானூர்திகளைக் கட்டமைப்பது குறித்துப் பரத்துவாச முனிவரின் நூலில் கூறப்பட்டுள்ளதென்று கூறியவற்றை அய்ந்து பொறியியல் வல்லுநர்கள் அஃது எவ்வளவு பெரிய மோசடி என்பதைக் கண்டு வெளிப்படுத்தினர்.
144. எங்கும் வழங்காத சமற்கிருதக் கிளைமொழி யொன்றைக் கற்பனை செய்து அதற்குப் ‘பாந்தீர பாசா’ என்று பெயரிட்டு இலக்கணமும் எழுதினர்.
– ஏ.சி. பருனல்
145. கிரேக்க அறிஞர்கள் பெயர்களைச் சமற்கிருதப் பெயர்களாக்கி அவர்களைச் சமற்கிருத அறிஞர்கள்எனப் பரப்பினர். – வேத விற்பன்னர் சுந்தரராசு.
146. பிராமிக்கு மூலம் பழந்தமிழ் எழுத்தே!
147. ஔ என்பது மூலத்தமிழ் எழுத்தே!
148. இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்களின் பெயர்கள் தமிழ்மொழிக் குடும்பத்திலிருந்து பெறப்பட்டவை.
149. தமிழகத்துக் கோட்பாடுகள் சிந்துவெளியின் மூலம் இருக்கு வேதத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.
150. சமற்கிருதத்திற்கும் தாயாகத் தமிழே உள்ளது.
151. சமற்கிருதம் ஒரு குடும்ப மொழியாக இருந்ததில்லை. – அறிஞர் தானியல் இங்கால் (Daniel H.H. Ingalls)
152. சமற்கிருதம் செம்மொழியல்ல! அல்ல! அல்ல!
153. இருக்குவேத சமற்கிருதத்தைக் காட்டிலும் தமிழ்மொழி தொன்மையும் உயர்வும் உடையதென்பதும் அதற்கான மொழியியல் பண்பாட்டுக் கூறுகளைத் தமிழே தந்ததென்பதும் நாம் ஏற்றுக் கொள்ளற்குரியவை.
154. தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் இருக்கு வேதத்திற்கும் வேத சமற்கிருதத்திற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே பெரு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; முன்னதிலிருந்து பின்னது பேரளவிற்குக் கடன் பெற்றிருக்க வேண்டும்.
155. சமற்கிருதம் என்று அழைக்கின்ற கலப்பு மொழி உருவானது வெகுகாலத்திற்குப் பின்தான். அதன் பின்னே வேதங்கள் தோன்றின.
– கேரளபுரக் கிருட்டினமூர்த்தி
156.. சமற்கிருதத்திற்கு எழுத்திலும் சொல்லிலும் மூலமாகத் தமிழ் உள்ளது.
– வேத விற்பன்னர் சுந்தரராசு
157. சமற்கிருதம் செம்மொழி எனக் கூறும் பொய்யான பரப்புரைக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். வரிப்பணத்தில் அதற்கு வீண் செலவு செய்வதையும் நிறுத்த வேண்டும்.
158. புதின ஆசிரியர்கள் சங்க இலக்கிய மரபுநெறியைப் பின்பற்ற வேண்டும்.
159. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்தாளர் கவிஞரானாலும் புதின ஆசிரியரானாலும் சங்க இலக்கிய மரபை அறிந்திருக்க வேண்டும்
– சியார்சு ஆர்த்து
160. ஆதித்த கரிகாலனைப் பிராமணர்களே கொன்றனர்!
161. கலைஞர் காட்டு மன்னார்குடிக் கல்வெட்டுச் செய்தி மூலம் பிராமணர்களே அவரைக் கொன்றனர் என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார்.
162. பகவத்துகீதை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பெற்று மகாபாரதத்தில் இடைச் செருகலாகப் புகுத்தப்பட்டதென்பதை மேலை நாட்டு வடமொழி இலக்கிய வல்லுநர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, திருக்குறளிலும் பகவத்துகீதையிலும் காணப்படும் ஒற்றுமைக் கருத்துகளெல்லாம் திருக்குறளிலிருந்து பகவத்துகீதைக்குச் சென்றுள்ளன வென்பது தெளிவு.
163. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் புகழ் வாய்ந்த நூலை வெளியிடுவதற்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே திராவிட மொழிகளின் தனித்தன்மை பற்றிய கருத்து எல்லீசரால் அறிவிக்கப்பட்டது.
164. மனித வாழ்வு பற்றிய நூல்கள் தமிழில் உள்ள அளவு வேறு ஆசிய மொழி எதிலும் இல்லை. – எல்லீசர்
165. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் சமற்கிருதத்திலிருந்து பெறப்பட்டவையல்ல; அவற்றின் வாழ்வுக்கு அது தேவையற்றது. அவை ஒரு தனி மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை; சமற்கிருதம் அக்குடும்பத்தோடு பின்னால் கலந்துவிட்டாலும் அதற்கு அக்குடும்பத்தோடு நெருங்கிய உறவு கிடையாது.
– எல்லீசர்
166. உ.வே.சா. அச்சேற்றிய புறநானூற்று பாடல் 34 இல் உள்ள “பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்” என்னும் அடி. எல்லீசரின் மேற்கோளில் “குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்” என இடம் பெற்றிருக்கும். அல்லும் பகலும் தேடித் தேடித் தமிழ்ச்சுவடிகளை அச்சேற்றிய உ.வே.சா. இதுபோன்ற பாடலடிகளைப் பாடபேதமாகவும் சுட்டிக்காட்டியிருக்க மாட்டார்.
167. பழந்தமிழ் இலக்கியப் புலமையும் ஆழமான ஆங்கில அறிவும் உண்மையான தமிழ் பற்றும் உடைய ஒருவர் சிலப்பதிகாரத்தை ஆங்கிலக் கவிதை நடையில் தர முன்வர முனைதல் வேண்டும்.
168. தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் மறைக்கும் மறுக்கும் பல உண்மைகளை நம்மவர் அறிந்துகொள்ள வேண்டுமென்பதே தமிழ் அழகியல்- உலகளாவிய ஒப்பு நோக்கு நூலின் தலையாய நோக்கமாகும்.
169. பிளேட்டோ, அரிசுடாட்டில், கேட்டோ, மார்க்கசு அவுரேலியசு, மநு, கவுடிலியர், பத்துருகரி, மாக்கியவல்லி, இசுப்பினோசோ, மோந்தேயின், பேகன் போன்றோர் படைப்புகளெல்லாம் கட்டமைப்பிலும் கருத்துச் செறிவிலும் இலக்கியத்தரத்திலும் வள்ளுவரின் நூலைச் சற்றும் நெருங்க முடியாதவை.
170. தமிழ்ப் பகைவர்களின் பிதற்றல்களுக்கு மறுமொழி தருவதுடன் உரையாசிரியர்களின் தவறான விளக்கங்கள் சிலவற்றையும் சுட்டிக் காட்டியுள்ளார். கிரேக்க, உரோமானிய, பிற நாட்டு அறிஞர்களின் உவமைகளுடன் ஒப்பிட்டு ஒத்த தன்மை குறித்தும் வள்ளவர் கூறும் உவமைகளின் சிறந்த தன்மை குறித்தும் நமக்கு விளக்கம் அளித்தார்.
171. ஒப்பில் கம்பன் உலகக் காப்பியங்களோடெல்லாம் ஒப்பிட்டுக் கம்பனின் காப்பிய உயர்வை நிறுவுகிறது.
172. இன்றைய இசைக்கலை தமிழரிடமிருந்து ஆரியர் கற்றது.
– அறிஞர் ஓ.கோசுவாமி, இந்திய இசை வரலாறு
173. இசையறிவை ஆரியலரல்லாதவரிடமிருந்து ஆரியர் கடன் பெற்றதை மறைப்பதற்காகவே சாமவேதத்திலிருந்து இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர். – அறிஞர் ஓ.கோசுவாமி, இந்திய இசை வரலாறு
174. எல்லா வடநூல்களும் எல்லாப் பழந்தமிழ் நூல்களுக்கும் முந்தியவை என்ற தவறான எண்ணம் தக்க ஆதாரங்கள் இல்லாமல் வலியுறுத்தப்பட்டபோது ஒற்றுமைகள் கண்டபோதெல்லாம் வடநூல்களிலிருந்தே தமிழ்நூல்கள் அவற்றையெல்லாம் பெற்றுள்ளன
வென்பதைத் தமிழறிஞர்களும் தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் பட்டம் பதவிகள் மேலிருந்த ஆசை காரணமாகவும் ஏற்றுக் கொண்டனர். வையாபுரிப் பிள்ளை.
175. இத்தகைய தவறான முடிவுகளுக்குத் தம்மாலான பங்களிப்பைச் செய்தார். இத்தகைய (தவறான) முயற்சிகளையெல்லாம் காலங்காலமாக மேற்கொண்டு இந்தோ- அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தில் சமற்கிருதமே முதலில் தோன்றிய மொழியென்ற எண்ணத்தை மொழியியல் வல்லுநர்களிடையே ஏற்படுத்தி அது கிரேக்கம், இலத்தீன் போன்று செம்மொழித் தகுதி உடையது என்னும் பொய்யையும் வரலாற்று உண்மையாகச் சமற்கிருதச் சார்புடையோரால் நிலைநாட்ட முடிந்தது.
176. சங்கச் சான்றோர் பாடல்களில் காணப்படும் இத்தகைய உவமைகள் யாவும் மேலையோர் விதந்து கூறும் ஓமர், மிலட்டன் போன்றோரின் உலகறிந்த காப்பியங்களில் காணப்படும் உவமைகளினும் பொருத்தம், எடுத்துக்காட்டல், அணியாதல், தாழ்த்தல், உயர்த்தல், வருவது சுட்டல், சொற்சிக்கனம் ஆகிய எல்லாக் கூறுகளிலும் உயர்ந்தவை.
177. சிந்துவெளிப் பண்பாடு, பழந்தமிழர் பண்பாடே; சிந்துவெளி எழுத்து திராவிட மொழிக்குடும்பத்து மூத்த மொழியான தமிழுக்கே உரியது. – சிந்துவெளிப்பண்பாட்டு ஆராய்ச்சி அறிஞர் அசுகோ பார்ப்போலா (Asko Parpola)
178. மொகஞ்சதாரோ, அரப்பா, சாஞ்சுதாரோ ஆகியவற்றின் நாகரிகச் சிறப்புகள், சிந்துவெளிப் பண்பாட்டின் தொடர்ச்சி இன்னும் தமிழ்நாட்டில் உயிரோடிருக்கின்றன. – ஈராசு பாதிரியார்.
179. ஆரிய இனச்சார்புடையோரால் பொய்யும் புரட்டும் அவர்கள் கையிலுள்ள ஊடகவழியாகப் பரப்பப்படலாயின – இராக்கிகிர் அகழ்வாய்வு கட்டுரை. இந்தியா இன்று (India Today – sep.10.2018)
180. ஆதி வேதங்கள் சிந்துவெளி நகரங்கள் அழிந்து வெகுகாலத்திற்குப் பின் தோற்றம் பெற்றவை; சிந்துவெளி மக்கள் பேசியது மூலத்திராவிட மொழி. – இந்தியா இன்று (India Today – sep. 10.2018)
181. 4500 ஆண்டுப் பழமையுடைய அரியானாவில் இராக்கிகரியில் கிடைத்த எலும்புக்கூடுகளின் மரபணு மாதிரிகள், சிந்து வெளிப்பண்பாடு வேதகாலத்திற்கு முந்தையது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
182. மாடு மேய்த்து வந்த வேதகால மக்கள் நகரப்பண்பாடு அறியாதவர்கள், சிந்துவெளிப்பண்பாடு கல்வியறிவு உடைய இனத்தின் நகரப் பண்பாடு – வரலாற்றுப் பேராசிரியர் உரோமிலா தாப்பர் (Romila Thapar)
183. சிந்துவெளிப்பண்பாடு ஆரியப்பண்பாடே என ஆதாரமில்லாமல் தவறான கருத்துகளை அறைகூவும் ஆரிய சமாசத்தை உருவாக்கிய தயானந்த சரசுவதி போன்றோரின் கருத்துரைகள் பொய்யுரைகளே!
– அகழ்வாராய்வாளர்கள்
184. அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தினும் தொன்மையானது பூம்புகார் நாகரிகம்- இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வு வல்லுநர் கிரகாம் ஆன்காக்கு
185. தமிழ் செம்மொழித் தகுதியுடையது
– எல்லீசர்
186. தமிழ் செழுமையான, மூலச் சொற்களஞ்சியம் கொண்ட தனித்தியங்கும் மொழி
– போப்பு அடிகளார்
187. தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே எழுதப் படிக்கத் தெரியும்.
– பரிதிமாற்கலைஞர்.
188. தமிழர் இடத்திருந்த பல ஆரிய விசயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தனபோலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் ஆரியர் காட்டினர்.
– பரிதிமாற்கலைஞர்.
189. மணிப்பிரவாளம் ஆபாச நடை
– பரிதிமாற்கலைஞர்
190. தமிழை நீக்கி அதனிடத்து வடமொழியை வைத்தலால், பிராமணர் ஆயினார்க்கு விசேடமான அனுகூலமும் ஏனையோர்க்கு விசேடப் பிரதிகூலமும் விளையுமென்க.
– பரிதிமாற்கலைஞர்
191. நீண்ட காலமாக வழக்கொழிந்திருந்த எபிரேய மொழிக்குப் புத்துயிர் தந்த பின் அது கல்லூரிகளிலும் பாடமொழியாகிற தென்றால், சொல் வளம் மிக்கதும் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து உயிர்த்துடிப்புடன் செயல்படுவதுமான தமிழ் ஏன் பயிற்றுமொழியாக இருத்தல் கூடாது.
– பேராசிரியர் கைம் இராபின்
192. பழந்தமிழ் நூலில் வடசொற்கள் பல உள்ளன என்பது உள்நோக்குடன் செய்யப்பட்ட பரப்புரை ஆகும். அவற்றைக் கால்டுவல் கூறியுள்ள மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆராய்வோமானால் அவையெல்லாம் தமிழ்ச் சொல்லே என்பது புலப்படும்.
– இலக்குவனார்
193. தமிழ்மொழியே முதல் மாந்தன் பேசிய மொழி; தமிழினமே முதலில் தோன்றிய மாந்த இனம்; குமரிக் கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பு.
– தேவநேயப் பாவாணர்
194. தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டிற்கு வடமொழி இலக்கணம் பண்பாடு ஆகியவை பெரிதும் கடன்பட்டிருக்கின்றன.
– தேவநேயப் பாவாணர்
195. கைம்ராபின் ஓர் அரிய ஆங்கிலக் கட்டுரையின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் எழுதுபதுகளிலேயே தமிழ் செம்மொழித் தகுதியுடையது என்பதை அய்யத்திற்கிடமின்றி நிறுவியுள்ளார்.
196. தமிழ் அக இலக்கிய மரபு அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது
– கைம் இராபின்
197. சமற்கிருதம் ஒரு குடும்ப மொழியாக இருந்ததில்லை. – அறிஞர் தானியல் இங்கால் (Daniel H.H.Ingalls)
198. மொழிபெயர்ப்புகள் மூலமாகச் சங்க இலக்கியங்களை உலக அறிஞர் அரங்கிற்குக் கொண்டு சென்றவர்களில் பெரும்பங்களிப்பு செய்தவர்
– அ.கி. இராமானுசன்.
199. வடமொழியை வழிபாட்டு மொழியாகவும் தெலுங்கை இசை மொழியாகவும் இந்திய நாட்டு மொழியாகவும் ஆங்கிலத்தைப் பன்னாட்டு மொழியாகவும் ஏற்றுக்கொண்டு, தமிழுக்கு வீட்டு மொழியாகக்கூட இடம்தரத் தமிழர் விரும்பாராயின் தமிழின் தலைவிதி என்னாகுமோ
– இலக்குவனார்.
200. சங்கப்பாடல்களில் ‘தமிழ்’ என்னும் சொல் இடம் பெறுவதால், அஃது அழகிய தமிழ்ச்சொல்லே; ‘திராவிட’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது என்பது தவறான கருத்து; ‘திராவிட’ என்னும் சொல் கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டிலேயே முதலில் தோன்றியது.
– இலக்குவனார்
மேற்குறித்துள்ள நடுநிலை இலக்கியவாணர்கள் தெரிவித்த கருத்துகளையும் பேரா. மருதநாயகம் நடுநிலையுடன் ஆராய்ந்து தெரிவித்துள்ள முடிவுகளையும் அனைவரும் அறிந்து சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்களைப் போற்ற வேண்டும். பொய்யான புகழுரைகளைக் கற்பித்து முன்னணியில் நிறுத்தப்படும் சமற்கிருத்தின் உண்மைத் தன்மையை உலகறியச் செய்ய வேண்டும்.

– விரிவிற்குக் காண்க:
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
ப. மருதநாயகம்