யாருக்காவது இந்துமதம் என்றால் என்ன என்று தெரியுமா?

2023 பிப்ரவரி 16-28, 2023 பெரியார்

தந்தை பெரியார்

 சிந்திக்க வேண்டாமா? யாருக்காவது இந்து மதம் என்றால் என்ன என்று தெரியுமா? இந்து மதம் என்றால் சங்கராச்சாரிக்கும் தெரியாது, பண்டார சன்னதிகளுக்கும் தெரியாதே!
சங்கராச்சாரியார் கூறுகின்றார்: இந்து மதம் என்று ஒன்று இல்லை. இதற்கு ஆரிய மதம், வைதிக மதம் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார். பண்டார சன்னதியைக் கேட்டால் எனக்கு சைவம் தான் பெரிது. இந்து மதம் வேறு என்கின்றார்கள். பட்டிக்காட்டில் வாழும் பாமரன் கொண்டாடும் மாரியாத்தா விழாவிற்கும், இன்று கொண்டாடும் விவேகானந்தர் விழாவிற்கும் என்ன வித்தியாசம்?

நம் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் இருக்கின்றார். இவருக்கு எப்படியோ தத்துவ ஞானி என்று பெயர் வந்துவிட்டது! இவர் எதற்கு எடுத்தாலும் ஆத்மா; முன்னோர் சொன்னது; ஆத்மார்த்தம்; ஆன்மிகம் என்று அடிக்கடி எடுத்துக் கூறுகின்றார்! இதுவா தத்துவவாதியின் வாயில் வரக்கூடிய சொற்கள்?

தோழர்களே! உலகிலேயே தலைசிறந்த தத்துவ ஞானியான ரஸ்ஸல் கூறுகின்றார்: உலகிலேயே தலைசிறந்த மடையன் யார் என்றால் கடவுளை உண்டாக்கியவன்தான். இவனை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால், ஆத்மாவை, மோட்சம், நரகத்தை உண்டாக்கியவன் அயோக்கியன். அவனை ஒருக்காலும் மன்னிக்கவே கூடாது என்று கூறியுள்ளார்.
விவேகானந்தர் என்ன கூறினார், சாதித்தார்? ஜாதியை நிலை நிறுத்தும் வகையில்தானே பாடுபட்டு வந்து இருக்கின்றார்? விவேகானந்தர் கூறுகின்றார்: ஜாதி முறையினைச் சமன்படுத்த வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். ஜாதி என்பது மிக நல்ல காரியம், நாம் பின்பற்ற வேண்டிய முறைக்கு உரிய திட்டமே ஜாதி என்பது. ஜாதி என்றால் என்ன என்பதை 10 இலட்சத்தில் ஒருவர் கூடச் சரியாகப் புரிந்து கொண்டவர் இல்லை. ஜாதி இல்லாத நாடே உலகில் இல்லை என்று இப்படியாகக் கூறியுள்ளார்.

இவர் தொண்டு என்ன? மங்கிக் கொண்டு வந்த இந்து மதத்தையும், அதன் வருணாசிரமக் கோட்பாட்டையும் மீண்டும் மீண்டும் புத்துயிர் கொடுத்து நிலை நிறுத்துவதுதானே?
ஜாதி இல்லாத நாடே கிடையாது என்று கூறுகின்றாரே… நான் கேட்கின்றேன், எந்த நாட்டில் பார்ப்பான் இருக்கின்றான்? தொடக்கூடாத பறையன் இருக்கின்றான்? எந்த நாட்டில் மனிதனை மனிதன் தொட்டாலோ – தொட்டதை அருந்தினாலோ -தீட்டு என்ற நியதி இருக்கின்றது?

எனவே, விவேகானந்தர் செய்த தொண்டு நமது இழிவு நிலையை வளர்க்கவும், வளர்ச்சிக்கும் தடையாக இருந்து வரும் இந்து மதத்தை வலுப்படுத்தப் பிரச்சாரம் செய்ததுதானே?
நீங்கள் கேட்கலாம் – விவேகானந்தர் அமெரிக்காவுக்கு எல்லாம் போய் இந்து தருமத்தைப் பிரச்சாரம் செய்து இருக்கின்றார்; இவரைப் பின்பற்றக் கூடியவர்கள் எல்லாம் அமெரிக்காவில் இருக்கின்றார்கள்; ஸ்தாபனங்-கள் எல்லாமே இருக்கின்றனவே என்று.

இப்படிக் கூறுபவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளுகின்றேன். முட்டாள்கள் என்பவர்கள் இந்த நாட்டுக்கு மட்டும்தானா உரியவர்கள்? எல்லா நாட்டிலும்தானே இருக்கச் செய்கின்றார்கள்.
(18.1.1963அன்று மதுரை – தியாகராயர் கல்லூரியில் மாணவர் யூனியன் துவக்க விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு  ‘விடுதலை’, 3.2.1963).

ஜாதியை ஒழிக்க எண்ணுகிறவர்களுக்கு பகுத்தறிவு வேண்டும்

 எனக்குத் தெரிய எனது 14 வயது முதல் ஜாதிக்கு எதிரியாகவே இருந்து வந்து உள்ளேன். எனக்கு நினைவு தெரியாத காலமாகிய 7 வயது முதலே ஜாதிக்கு எதிர்ப்பாகவே இருந்து வருகின்றேன் என்றுதான் கூறவேண்டும்.

நான் பள்ளிக்குப் போகும் போது குறவர் முதலிய கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் வீட்டில் எல்லாம் சோறு தின்று உள்ளேன். இது காரணமாகவே எங்கள் வீட்டில் என்னை வெளியில் வைத்து சாப்பாடு போட்டு இருக்கின்றார்கள். இம்மாதிரி செய்கையே என்னை ஜாதி ஒழிப்பு முயற்சியில் சிந்திக்கத் தூண்டியது.
தோழர்களே! ஜாதியை ஒழிக்க எண்ணு-கிறவர்களுக்கு கொஞ்சம் தத்துவ ஞானம் வேண்டும். தத்துவ ஞானம் என்றால் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் கூறுகின்றாரே _ குப்பைத் தொட்டி தத்துவ ஞானம் _ அது அல்ல. தத்துவ ஞானம் பகுத்தறிவு வேண்டும் என்றுதான் குறிப்பிடுகின்றேன்.

ஜாதியை ஒழிக்கின்றவன் முன்னோர்கள நடந்தது, சொன்னது, எழுதி வைத்ததுஎன்பன போன்றவற்றை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.
நமக்கு எவனும் முன்னோர்கள் அல்லர். நாம்தான் வருங்காலத்தவர்களுக்கு முன்னோர்கள் என்று கருதி காரியம் ஆற்றவேண்டும். நமக்கு யார் முன்னோர்கள்? எதில் முன்னோர்கள்? எது முதல் முன்னோர்கள்?தோழர்களே! தமிழர்களுடைய சரித்திரத்துக்கு கால வரையறையே இல்லையே! நமக்கே என்றால் பார்ப்பனப் புராணங்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
திரேதா யுகம், கிரேதா யுகம் என்று எல்லாம் கூறி யுகத்துக்கு 1,00,000, 10,00,000 வருஷங்கள் என்று கணக்குப் போட்டுப் புளுகுவான்!
புத்தருக்குப் பிறகுதான் இந்த இராமாயண – பாரதங்களும், புராணங்களும் ஏற்பட்டன. இராமாயணத்தில் பல இடங்களில் புத்தரைப் பற்றி பேசப்படுகின்றது. பாரதம், விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலியவற்றிலும் பேசப்படுகின்றது.

ஏன் இப்படி என்றால் சங்கராச்சாரியார் கூறுகின்றார்: இது ஒன்றும் முரண் அல்ல – நாட்டின் ஒவ்வொரு யுகத்தின் போதும் ஒவ்வொரு புத்தர் தோன்றுவது உண்டு. இராமாயணத்தில் உள்ள புத்தர் அந்த யுகத்துப் புத்தர், பாரதத்தில் உள்ள புத்தர் பாரதகால யுகத்துப் புத்தர் என்று கூறுகின்றார்.

அப்படியே அந்த யுகங்கள் எல்லாம் உண்டு என்று வைத்துக் கொண்டு பார்த்தாலும், அந்தக் காலத்து மனிதர்களுக்கு எப்படி அறிவு மேலாக இருக்க முடியும்? இவன் குறிப்பிடும் யுககாலத்தில் மனிதன் புல்லாய் புழுவாய் இருந்தானோ? அல்லது குரங்காக இருந்தானோ?

நமக்கு வரும் எதிர்ப்பு எல்லாம் முன்னோர்கள் சங்கதி பற்றித்தான் வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயமரியாதைக் கலியாணம் செல்லாது என்று அய்க்கோர்ட்டில் தீர்ப்புக் கூறினான். இது செல்லாது என்பதற்கு எதை ஆதாரம் காட்டினான் தெரியுமா? நாரதர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். பராசரர் இப்படிச் சொல்லி இருக்கின்றார். ஆபத்ஸ்தம்பர், யாக்ஞவல்கியர் அப்படிச் சொல்லி இருக்கின்றார்கள். இவர்களுடைய முறைக்கு இந்தத் திருமணம் மாறாகஇருப்பதால் இது செல்லாது என்று கூறியிருக்கின்றார்!
இது எவ்வளவு முட்டாள் தனம்! இவர்கள் எல்லாம் யார்? இவர்கள் எந்தக் காலத்துப் பசங்கள்? இவர்களில் அநேகர் மனிதனுக்கே பிறக்கவில்லையே! கழுதைக்கும், கோட்டானுக்கும், மாட்டுக்கும், கிளிக்கும்,மற்ற மற்றதுகளுக்கும் பிறந்த பசங்களா நம்முடைய முன்னோர்கள்? இவர்கள் காலத்தில் மனிதனுக்கு எவ்வளவு அறிவு இருந்து இருக்க முடியும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.

பாவம், புண்ணியம், முன் பின் பிறவிகள் என்பன எல்லாம் கடைந்தெடுத்த முட்டாள் தனமானது – ஒழிக்கத்தக்கது என்று உணர வேண்டும். இவை பற்றி மக்களுக்குத் தெளிவு உண்டாக்கும், பணியில் தீவிரமாக ஈடுபட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுகள் சம்பந்தமான அறிவு நூல்களைப் படித்து உணர வேண்டும்.
இன்றைக்கு உள்ள புரட்டுகள் எல்லாவற்றையும்விட பெரிய புரட்டு இந்த 20ஆம் நூற்றாண்டிலும் ஜாதிக்கு ஆதாரமாக கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பான் இவற்றை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியும் என்று நம்புவதாகும்.

(15.12.1962 அன்று திருச்சி மாவட்டத்தில் கரூர் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு – ‘விடுதலை’, 23.12.1962).