ஆடம்பரத் திருமணம்…ஓர் ஈரோட்டுப் பார்வை ! – முனைவர் வா.நேரு

2024 கட்டுரைகள் மற்றவர்கள் மார்ச் 16-31, 2024

ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்காக ஓர் ஒப்பந்தம் தேவைப்படுகிறது. சுயமரியாதைத் திருமணங்களில் மணமக்கள் ஏற்கும் உறுதிமொழியைப் போல ‘வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு வகிக்கும் உற்ற நண்பர்களாய், என்னிடமிருந்து நீங்கள் என்னென்ன உரிமைகளை எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமைகளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்க உரிமை உண்டு என்னும் ஒப்பந்தத்தின் பேரில் இந்த மலர் மாலையினைத் தங்களுக்கு அணிவிக்கிறேன்’ என்று சொல்வதைப் போல வாழ்வில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும் உற்ற நண்பர்களாய் வாழ்வதற்கு இந்தத் திருமண ஒப்பந்தம் தேவைப்படுகிறது, அந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்கிறார்கள் அல்லது செய்து வைக்கப்படுகிறார்கள் என்ற வகையில் நம்மைச்சுற்றி திருமணங்கள் நடைபெறுகின்றன.

எந்த மாநிலத்திலும் இல்லாத தனித்தன்மையான சுயமரியாதைத் திருமண முறையைத் தமிழ்நாட்டில், அன்றைய சென்னை மாகாணத்தில் 1928இல் அறிமுகப்படுத்திய தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமண மேடைகளில் எல்லாம் திருமணத்தில் சிக்கனத்தின் தேவையை மிக அதிக அளவில் வற்புறுத்தினார். அவரைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்ற அன்னை மணியம்மையாரும் அவருக்குப் பின்னால் திராவிடர் கழகத்தை வழி நடத்தி வரும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் தாங்கள் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமண நிகழ்வுகளில் எல்லாம் சிக்கனமாகத் திருமணத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள்.அதன்படியே பல திராவிடர் கழகத்தோழர்கள் சுயமரியாதைத் திருமண நிலையத்தில், திராவிடர் கழகப் பொதுக்கூட்ட மேடைகளிலும், மாநாட்டு மேடைகளிலும் தங்கள் திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள், நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதற்கு மாறான புராண அடிப்படையிலான திருமணங்கள் சில மிகப்பெரும் செலவோடு நடத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேசு அம்பானி-நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வாரிசான ராதிகா மெர்செண்டுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 1, 2024 முதல் மார்ச் 3, 2024 வரை நடைபெற்றது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அம்பானியின் சொந்த ஊரில் கட்டமைக்கப்பட்ட ரிலையன்ஸ் பசுமை வளாகத்தில் நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவு ரூ.1000 கோடியைத் தாண்டியிருக்கும் எனப் பத்திரிகைகள் எழுதியுள்ளன. முதல் நாளில் உலகப் புகழ்பெற்ற பாடகி ரிஹன்னாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மணமகனான ஆனந்த் அம்பானி கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் ரூ. 14 கோடி எனவும் அதனைப் பார்த்து முகநூல் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரெசில்லாசான் ஆகியோர் வியப்படைந்து விசாரித்ததாகவும் ‘தினமணி ‘நாளிதழ் எழுதுகிறது. உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் பலர் கலந்து கொண்டதாகவும், நடிகைகள், நடிகர்கள், தொழில் அதிபர்கள் மட்டுமல்ல; ஜக்கி வாசுதேவ் போன்ற கார்பரேட் சாமியார்களும் கலந்து கொண்டதாக பத்திரிகைச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பொது மக்களுக்கு, பணக்காரர் வீட்டுத் திருமணம். அவரிடம் பணம் இருக்கிறது, அவர் 1000 கோடி என்ன? 10000 கோடி கூடச் செலவழித்து விட்டுப்போகட்டும், அதனால் நமக்கு என்ன? என்று தோன்றலாம். இதைப் பற்றி நாம் எழுதவேண்டிய,, பேசவேண்டிய தேவை என்ன என்று கூடத் தோன்றலாம். திருமணத்தில் சிக்கனம் வேண்டும் என்பதற்கு மாற்றான திருமணம் என்பது மட்டுமல்ல, நம் ஊரில் மிகுந்த அளவு கடன் வாங்கி வைத்திருக்கும் ஓர் ஆள் மிக ஆடம்பரமாகத் தன் மகனுக்குத் திருமணம் செய்தால் எப்படிச் சுட்டிக் காட்டுவோமோ அப்படிச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய திருமணமும் கூட இந்தத் திருமணமும் வரவேற்பும்..
ஏனெனில், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமல்ல முகேசு அம்பானி, இந்தியாவின் வங்கிகளில், பல நாட்டு வங்கிகளில் மிகப்பெரும் கடன்களை வாங்கி வைத்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய கடன்காரரும் முகேசு அம்பானி ஆவார்.” கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய சிண்டிகேட் கடன் வாங்கியவர் என்ற பெயரை உருவாக்கி இருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. வெவ்வேறு வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து இரண்டு தவணைகளில் அய்ந்து பில்லியன் டாலர்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளிநாட்டு நாணய கடன்கள் வடிவில் பெற்றுள்ளது. சிண்டிகேட் கடன் என்பது வங்கிகள் நிதி நிறுவனங்களின் குழுமத்தில் இருந்து வாங்கப்படும் கடன் ஆகும்” ஏப்ரல் 6, 2023 பத்திரிகை செய்தி இது.

நமது நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் முகேசு அம்பானி பெற்றிருக்கும் கடன்கள் எல்லாம் ஏழை எளிய இந்திய மக்கள் தங்கள் சேமிப்புகளாகப் போட்டு வைத்திருந்த பணம். ஊதாரித்தனமாக பல ஆயிரம் கோடிகளைத் திருமண வரவேற்பு என்ற பெயரில் செலவழிக்கும் இந்த முகேசு அம்பானி போன்றவர்களின் பல இலட்சம் கோடிக் கடன்களை ஒன்றிய இந்திய அரசாங்கம் தள்ளுபடி செய்திருக்கிறது. அதனால் பல பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன.

இந்த ஆடம்பரத் திருமண நிகழ்விற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக சில நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக நிகழ்த்தப்பட்ட சட்ட விதிமீறல்கள், கோயில்களின் ஆகம விதிமீறல்கள் பற்றியெல்லாம் செய்திகள் நிறைய வருகின்றன. ஓர் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைவதற்காக நடத்தப்படும் இந்த விழாவிற்காக இத்தனை விதிமீறல்களும் இத்தனை ஆடம்பரங்களும் தேவைதானா? என்னும் கேள்வியை ஊடகங்கள்,பத்திரிகைகள் எழுப்பவில்லை. மாறாக பக்கம் பக்கமாக அதனை விவரித்து எழுதிக்கொண்டும் புகழ்ந்து பேசிக்கொண்டும் இருக்கும் கொடுமையைப் பார்க்கின்றோம்.

“சுமார் 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டனவாம்! இதற்காக மட்டும் சுமார் 130 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் அம்பானி. இந்தியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் அம்பானி இல்லத் திருமண விழா வைரல் ஆனது. சமூக வலைத்தளங்களில் திருமண விழா குறித்த பதிவுகளும் புகைப்படங்களும் டிரெண்டிங்கில் இருந்தன.

ஜாம்நகரில் உற்சாகமாக நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூபாய் 1,250 கோடி செல்வு செய்துள்ளாராம். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியே இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றது என்றால், திருமணத்தை எப்படி நடத்தப் போகிறாரோ?.. என நெட்டிசன்கள் இப்போதே வியந்து பார்த்து வருகின்றனராம்.” இது ஒரு பத்திரிகையில் வந்த செய்தி.

இந்தியா போன்ற சமதர்ம சமத்துவமற்ற சமுதாயத்தில் நிகழும் இந்த மாதிரியான திருமண நிகழ்வுகள் மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தவேண்டும் n.