பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரள்வோம்! – வி.சி.வில்வம்

2024 கட்டுரைகள் மற்றவர்கள் மார்ச் 16-31, 2024

“ஸநாதனம்’ நிலையானது, மாற்ற முடியாதது என்பார்கள். அறிவியலை அறவே ஏற்றுக் கொள்ளாத மதம் ஹிந்து மதம். ஆனால் நவீன அறிவியல் சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்துவார்கள்.

கைப்பேசி வழியே கடவுளைப் பிரச்சாரம் செய்வார்கள். இரண்டாயிரம் ஆண்டு பழமையே வாழ்க்கைக்குப் போதும் என்பார்கள். அதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான ‘யூடியூப்’ வழியே பிரச்சாரம் செய்வார்கள்.

கிறிஸ்தவர்களையும், அவர்கள் மதத்தையும் கடுமையாகத் தாக்கிக் கொண்டே இருப்பார்கள்.‌ அதற்கு அவர்கள் கண்டுபிடித்த வாட்சப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களையே பயன்படுத்துவார்கள். பிறரின் பொருட்களைத் தனதாக்கிக் கொள்வதில் பார்ப்பனீயத்திற்கு மிஞ்சிய மனிதர்கள் உலகினில் வேறெங்கும் இல்லை.

இந்தியர்கள் அனைவரையும் ஹிந்துக்களாக மாற்றி வைத்துள்ளார்களே அதுபோல! இந்தியாவிற்குள் வந்தவர்கள் இந்தியாவையே தனதாக்கிக் கொண்டார்களே அதுபோல! இவர்கள் நுழைந்து ஸநாதன ஹிந்து மதத்தை நுழைத்த காரணத்தினாலே இந்தியாவில் பெரிய கண்டுபிடிப்புகளோ, அறிவியல் அறிஞர்களோ தோன்றவில்லை! ஆனால் தங்கள் காட்டுமிராண்டி கால கருத்துகளைப் பிரச்சாரம் செய்ய, அறிவியலை மட்டுமே பயன்படுத்துவார்கள்.
இப்படித் தங்கள் மதத்தைப் பரப்பி வந்தவர்கள், தங்கள் கட்சியான பாரதீய ஜனதாவையும் இவ்வழியே வளர்த்து வருகிறார்கள். ஒரு காலத்தில் பத்திரிகைகள் இருந்தன. அவை முழுக்கப் பார்ப்பனர்கள் வசமே இருந்தன. பிறகு தொலைக்காட்சிகள் வந்தன. அவையும் அவாள் வசமே போயின. பிறகு ஒவ்வொரு மனிதரும் தன்னிச்சையாகச் செயல்படும் வாட்சப், ட்விட்டர், முகநூல், யூடியூப் உள்ளிட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தன. இவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள் இவர்கள்.

கொள்கையில் இருப்பவர்கள் கூட குறைவாகப் பயன்படுத்தும் சூழலில், 24 மணி நேரமும் பயன்படுத்துகிறது பாஜக. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன், பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும் என்பார்கள். அந்த அளவிற்கு, இந்த உலகமே மிரளும் அளவிற்கு, கூச்ச நாச்சமின்றிப் பொய் சொல்கிறார்கள். சமூக ஊடகங்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு, கட்சி நடத்துகிறார்கள்!

நீங்கள் சொல்வது பொய் என்று யாராவது நிரூபித்தால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் அடுத்த பொய்யைப் பரப்புவதற்குப் போய் விடுகிறார்கள். இப்படியாகப் பொய்யையும், புரட்டையும் அரசியலாக்கி, அதில் ஜாதி, மதத்தை ஊற வைத்து, மனித மூளையை மழுங்கடிக்கும் வேலையைச் செய்கிறது பாஜக. இந்தப் பொய்களாலும், வதந்திகளாலும் நிகழ்த்தப்படும் வன்முறைகள் மற்றும் கொலைகள் கணக்கிலடங்காதவை! இப்படியான சூழலில்தான் 2024 மக்களவைத் தேர்தல் வர இருக்கிறது.

வட மாநில மக்களுக்குத் தமிழர்களால் ஆபத்து என்றும், ஹிந்துக்களுக்குத் தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை எனவும் கடுமையான பிரச்சாரங்களைச் செய்கின்றன – ஹிந்தி தொலைக்காட்சிகள்.

இதன் மூலம் தமிழ்நாட்டின் பெயரைக் கெடுப்பதும், தி.மு.க.வின் பெயரைச் சிதைப்பதும், தி.மு.க. கூட்டணி கட்சிகளை மிரட்டுவதுமான செயலில் அவர்கள் இறங்கியுள்ளார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பா.ஜ.க., வட மாநிலங்களுக்குப் போகும்போது, தாங்கள் செய்த சாதனைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை. மாறாக அந்த மதத்தைப் பார், இந்த மதத்தைப் பார் என்கிறார்கள். கூடவே தமிழ்நாட்டைப் பார் எனப் புதிதாகக் கிளம்பி இருக்கிறார்கள். இவர்களின் அனைத்து அக்கிரமங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. பா.ஜ.க.வுக்கு எதிராக வட இந்தியாவில் இருந்துவரும் ஆர்ப்பாட்டங்களும், காணொளிச் செய்திகளும் பெரும் நம்பிக்கையைத் தருகின்றன.

இந்நிலையில் பா.ஜ.க.விடம் இருந்து இந்தியாவைக் காக்கும் கூடுதல் கடமையும், பொறுப்பும் தமிழ்நாட்டிற்கு இருக்கிறது. குறிப்பாகத் திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முகமூடியைக் கிழித்துத் தொங்கவிட்டதில் திராவிடர் கழகத்திற்குப் பெரும் பங்குண்டு.
அதனையொட்டி எந்தச் சமூக ஊடகங்கள் மூலம் பா.ஜ.க. ஊடுருவி வர முயல்கிறதோ, அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி‌ தடுத்து நிறுத்திடவும், ஓட ஓட விரட்டிடவும் திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழுக் கூட்டம் மார்ச் 2 ஆம் தேதி, திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு, பா.ஜ.க.வை அகற்றும் பணி ஒன்றே முக்கியம் எனத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியதற்கு ஏற்ப, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தோழர்கள் திரண்டு வந்திருந்தனர்!

நம்மிடம் இருக்கும் கொள்கைகள் உண்மையானவை, ஆதாரப்பூர்வமானவை!

நாம் பேசிய கருத்துகளை மறுத்த வரலாறு இதுவரை எங்குமே நிகழ்ந்ததில்லை!அப்படியான கருத்துகளைத் திட்டமிட்டும், மிகக் குறிப்பாக ஒருங்கிணைந்தும் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. தனி மரம் தோப்பாகாது, ஒரு கை ஓசை ஒலி தராது என்பது அறிந்ததே. அதனால் கூட்டு முயற்சியும், ஒரே நேர்கோட்டில் எடுத்துச் செல்லும் படையின் வெற்றியும் அபாரமாக இருக்கும் என்றும் எடுத்துக் கூறப்பட்டது.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது வெற்றியா? தோல்வியா? என்பதை விடவும், வாழ்வா? சாவா? போராட்டம் ஆகும். எனவே நாம் செய்யும் பிரச்சாரங்கள், ஊடக வழித் தாக்குதல்களை தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவிடச் செய்ய வேண்டும். குறிப்பாகத் தமிழில் உள்ள அனைத்தையும், ஹிந்தியில் மொழியாக்கம் செய்து இந்தியா முழுவதும் பரப்பிட வேண்டும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் துளியும் குறையக் கூடாது என்னும் காலகட்டம்!

கோட்சேயைப் பின்பற்றுபவர்கள் எந்தப் பித்தலாட்டத்திற்கும் தயாராக இருப்பார்கள். பொய்களையும், வதந்திகளையும் பரப்பி நம்மை குழப்பம் அடையவும், அச்சம் கொள்ளவும் செய்வார்கள். குறிப்பாக மன உளைச்சலை ஏற்படுத்த முயல்வார்கள். இதுபோன்ற உளவியல் பிரச்சினைகளை ஏற்படுத்தி, நம்மைத் துடிப்போடு செயல்படாதவாறு முடக்கிப் போடப் பார்ப்பார்கள்.
நம் ஆதரவாளர்களை விலைக்கு வாங்குவார்கள். நடிகர்கள் மற்றும் புகழ் பெற்றவர்களை மிரட்டி ஆதரிக்கச் சொல்வார்கள். கால்பந்தாட்டத்தில் விளையாடத் தெரியாதவர்கள் மற்றவர் காலை மிதிப்பதைப் போலத் தான் இவர்களின் நடவடிக்கைகளும்! ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்! அவர்களின் அனைத்து செயல்களுமே காற்றடித்த பலூன்கள் போன்றவையே! அந்தப் பலூன்கள் மிகப் பெரியதாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்மிடம் இருப்பவை கொள்கை எனும் குண்டூசி! எப்பேர்ப்பட்ட பலூனுக்கும் சிறிய குண்டூசி முனையே போதுமானது!

அவற்றைப் பயன்படுத்தி பாசிசக் கருத்துகளைச் சிதறச் செய்வோம்! இந்தியாவையும், அதன் மக்களையும் பாதுகாத்திடுவோம்! n