பெரியார் மீது ஏன் இவ்வளவு வன்மம்!

2024 பிப்ரவரி 16-29, 2024

பெரியாரை விதவிதமாக வரைகிறார்கள்; எவ்வளவு கோணல் புத்தியுடன் முடியுமோ, அவ்வளவு வரைகிறார்கள். ஆக பெரியார் நினைப்பாகவே இருக்கிறார்கள்!
சென்ற மாதம் அவரைப் பன்றியாக வரைந்தார்கள், பின்னர் பன்றி மேய்ப்பவராக வரைந்தார்கள். எப்படியாவது கேவலப்படுத்திவிட நினைக்கிறார்கள்.
பெரியாரின் கருத்திற்குப் பதில் சொல்லி, அவரை யாரும் வெல்லலாம்! ஆனால், அது அறிவு சார்ந்த விசயம். முதலில் அவரைப் படிக்க வேண்டும்; பின்னர் அதை மறுக்க வேறு நூல்கள் படிக்க வேண்டும்; பிறகு இரண்டையும் சிந்திக்க வேண்டும்… இதெல்லாம் நடக்கிற காரியமா?

அதனால் படம் வரைந்து மகிழ்கிறார்கள். அதுவும் ஹிந்து மதத்தில் பன்றி ஒரு கடவுள் அவதாரம். அந்த ‘வராஹ’ அவதாரத்தைக் கேலி செய்வது, விஷ்ணுவை நக்கல் செய்வது போன்றது. காலையில் கேலிச் சித்திரம் வரைவது, மாலையில் அவரை வணங்குவது எவ்வளவு முரண்? மனிதருக்குப் பகுத்தறிவு ஏன் முக்கியம் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்!
நீங்களே குறுக்கும், நெடுக்குமாக ஒரு செயலைச் செய்தால், பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வீர்கள்? அவர் யாருக்காகப் பேசினார்? அவர் கொள்கைகள் என்ன? அவரால் பயன் பெற்றவர்கள் யார் என்பதையெல்லாம் நீங்கள் எப்போது உணர்வீர்கள்? இவ்வளவு ஏன் இதே பெரியாரால் உங்கள் குடும்பம் அடைந்த பயன்களும், அதன் பட்டியலும் மிகப் பெரியது! இதைப் புரிந்து கொள்ளும் மனநிலை உங்களுக்கு இல்லையே? உங்களின் முரண்பட்ட இந்த நிலையைக் கண்டு, பொழுதெல்லாம் பெரியார் கவலைப்பட்டாரேயொழிய, கோபப்பட்டதில்லை!
ஆனால், யாரோ சொன்னார்கள் என்பதற்காக, ஏதோ ஒரு வெறுப்பு பெரியார் மேல் இருக்கிறது. கடவுள் இல்லை என்றார்; மதம் வேண்டாம் என்றார்; ஜாதியை ஒழிப்பேன் என்றார்… ஆக, நமக்குப் பிடித்தவற்றை எல்லாம் எப்படி ஒழிக்கலாம் என்கிற கோபம்.

ஆனால், இதையெல்லாம் பிரச்சாரம் செய்த அவர்தான், தமிழர்கள் படிக்கக் காரணமாக இருந்தார்; உயர் பதவிகள் அடைய உதவி செய்தார்; பெண்கள் வாழ்வில் சுயமரியாதையைக் கொண்டு வந்தார். பெண்ணுரிமை என்றவுடன் என்னவோ, ஏதோவென்று குதிக்க வேண்டாம். உங்கள் அம்மா, அக்கா, தங்கையை நினைத்துக் கொள்ளுங்கள்!
பெரியார் பெண்களை வாழ வைத்தார் என்பதைவிட சாகடிக்கப்படாமல் காப்பாற்றினார். ஆம்! பெண்கள் சுமையாகக் கருதப்பட்டு கருவிலும், பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்தும் கொல்லப்படுவதைத் தவிர்க்க அவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு, பணி, சொத்துரிமை ஆகியவற்றைப் பெற்றுத்தந்ததால்தான் இன்று பெண் சிசுக்கள் கொல்லப்படுவதில்லை.
இப்படி எவ்வளவோ புரட்சியை இந்த மண்ணில் நிகழ்த்தியவர்! அதனால் தான் அவர் இருந்த போதும், இறந்த பிறகும் ஆரியம் அலறித் துடிக்கிறது! அவர்களின் ஆதிக்கக் கோட்டை தகர்ந்ததால் அவர்கள் அழுகிறார்கள்! தமிழர்களுக்கு என்ன வந்தது? இன்னமும் ஏன் ஜாதி, மதங்களைப் பிடித்துத் தொங்க வேண்டும்?

பெரியாரின் பெரு நெருப்பிற்கு அருகே சென்று போக்குக் காட்டினால், காயப்படுவதும், அவதிப்படுவதும் நீங்களாகத் தான் இருக்கும்! இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியாரை இழிவு செய்ய நீங்கள் எத்தனை படம் வரைந்தாலும், நாங்கள் கோபப்படுவதில்லை. ஒருவேளை படம் நன்றாக இருந்தால் வாழ்த்துச் சொல்வோம்! எங்களைக் கோபப்படுத்த நினைத்து, அது ஆகாத நிலையில், மீண்டும் நீங்கள் தான் கோபப்படுகிறீர்கள். இந்தக் கோபம் ஆரோக்கிய உடலுக்கு நல்லதல்ல! பெரியார் எங்களுக்கு உயர்ந்த கொள்கைகள் மட்டுமே சொல்லிக் கொடுத்தார். அதன் மூலம் பக்குவம் பெற்றோம்! மற்றவற்றை எல்லாம் அலட்சியம் செய்தே வருகிறோம்!

ஆரியத்தைப் புனிதம் என்றார்கள். அதைத் தீயிட்டுக் கொளுத்தியவர் பெரியார்! அந்தப் புனிதம் தமிழர் இனத்திலும், வாழ்விலும், மொழியிலும்‌ கூட இருக்கக் கூடாது என்றவர்! அதனால் தான் ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான பல சாதனைகளைத் தமிழ்நாட்டில் அவரால் நிகழ்த்த முடிந்தது!
எனவே அவரை, நீங்கள் உருவக் கேலி செய்து மகிழ்ந்திடுங்கள். அதேநேரம் தமிழரின் நிறத்தை உருவக் கேலி செய்த வரலாறு ஆரியத்திற்கு உண்டு. தவிர தமிழர்களுக்குப் பெயர்களையும் கேவலமாக வைத்தார்கள். இந்த அவலத்தை ஒழித்த மான மீட்பரும் தந்தை பெரியார் தான்!
பெரியார் என்றுமே உருவத்திற்கு மதிப்புக் கொடுத்தவர் இல்லை. அவரின் வாழ்க்கையில் அழகுக்கு அழகு சேர்த்தவை அவரின் கொள்கைகள் மட்டுமே! கூட்டம் ஒன்றில் பேசும்போது,
பெரியார் மீது மலத்தை வீசினார்கள்.

“என் மீது மலம் வீசியது இருக்கட்டும், அந்த நரகலைப் போய் நீ ஏன் கை வைத்து அள்ளினாய்?”, என வீசியவருக்குப் பரிந்து பேசினார் பெரியார்.
“கல்லால் அடித்தீர்கள், கம்பால் அடித்தீர்கள், செருப்பை வீசினீர்கள், இப்போது மலத்தை எறிகிறீர்கள். நீங்கள் எவ்வளவு கேவலப்படுத்தினாலும், உங்களுக்கு நான் நன்மையே செய்வேன்” என்றார் பெரியார்.

அப்படி பெரியாரால் நன்மை அடைந்தவர்கள் எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகி, சிந்திக்கும் திறனை இழந்து படம் வரைகிறார்கள்! அவர் இந்த உலகத்திற்கே பாடமாகத் திகழ்பவர். காலம் கடந்தாலும் நீங்களும் ஒருமுறை அவரை வாசித்து விடுங்கள்!
அதேநேரம் இந்த மண் நீறுபூத்த நெருப்பு என்றே சொல்ல வேண்டும். இந்திய அளவில் பக்குவமான மண்! உலக அளவில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட கட்டமைப்புகளில் முன்னோடியாக இருக்கும் மண்!

தொலைக்காட்சிகள் ஹிந்து மதத்திற்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டால்… அதை எதிர்த்து எழுதுபவர்களில் சீனிவாசன், நாராயணன், முருகன், கணபதி போன்ற பெயர்கள் கணிசமாக இருக்கும்!

சரி… அவர்களின் முகநூல் பக்கத்தில் போய் பார்த்தால் அவர்கள் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் இல்லை, கருப்புச் சட்டையும் இல்லை. பிறகு ஏன் எதிர்த்து எழுதுகிறார்கள்? இவ்வளவிற்கும் பெயர்கள் எல்லாம் சாமி பெயராக இருக்கிறதே? இதுபோன்ற விசயங்கள் தான் பாரதீய ஜனதாவிற்குப் புரியவில்லை.
அதேபோல பெரியாருக்கு எதிராக யாராவது பேசினால், அதை எதிர்ப்பவர்கள் பெரியாரிஸ்டுகள் மட்டுமல்ல; எண்ணற்ற தமிழர்கள் உடன் வந்து நிற்பார்கள். பெரியார் நூற்றுக்கணக்கான கொள்கைகளை இந்த மண்ணில் வீசிச் சென்றவர்.

அவற்றால் எல்லோருமே பயன் பெற்றவர்கள்! அதை உணர்ந்த காரணத்தால் தான் அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்! அதனால் தான் இது பெரியார் மண் என்றும் அழைக்கப்படுகிறது! l