இந்து ராஜ்ய கனவை இந்தியா கூட்டணி தகர்க்க வேண்டும்!

2024 பிப்ரவரி 01-15, 2024

‘மலர வேண்டும் ராமராஜ்ஜியம்’ என்ற தலைப்பில் 23-1-2024 தேதியிட்ட ‘தினமணி’ நாளேடு தலையங்கம் தீட்டி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது!
‘‘கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது; அயோத்தி ஸ்ரீராமர் கோவில் பிராண பிரதிஷ்டை
ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூண்டது என்றுதான் சொல்லவேண்டும்.

இதைக் கருப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்கின்ற சிலரின் செயல்பாடு, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கருதும் அசட்டுத்தனம் என்பதல்லாமல் வேறென்ன” என்று ‘குசலேயாசனி’ பாடி மகிழ்கின்றன ‘தினமணியும்’ அதன் வழியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காவிக் கூட்டமும்.
முதல் வாக்கியத்திலேயே முரண்பாடு முட்டி நிற்பதைக்கூட அதை எழுதியவர் ஏனோ அறியவில்லை!

ஒட்டுமொத்த இந்தியாவை விழாக்கோலம் பூண்டது என்று கூறிவிட்டு, இதைக் கருப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்பதாக சிலரின் செயல்பாடு உள்ளது என்பதையும் கூறி, ஒளிந்திருந்த பூனைக்குட்டி அவரையும் மீறி வெளியே தலைகாட்டியுள்ளது!

அந்த நிகழ்வை ஏற்காத மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் – அது பக்திக்கான இராமன் அல்ல; தேர்தலில் வெற்றி பெற வேறு முக்கிய சாதனைகள் இன்மையாலும்– மக்களுக்கு 10 ஆண்டுகளில் செய்வதாகக் கொடுத்த முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும், வேலையின்மை, விலைவாசி உயர்வு, கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்புத் திட்டம் விவசாயிகளின் வாழ்வை இரட்டிப்பு மடங்கு உயர்த்துவது, மீனவர்கள் பாதுகாப்புக்கு என்று வாயால் வடை சுட்டது எல்லாம் நீர்மேல் எழுத்துக்களாகிவிட்டதாலும், அதை இளையர்கள்முதல் மகளிர், முதியவர்வரை புரிந்துகொண்டுள்ளதாலும், அவர்களை ஏமாற்றி, அவர்களது வாக்குகளைப் பறிக்கவே இராம பக்தி என்ற ஜும்லா (புருடா), ‘மயக்க பிஸ்கெட்’. ஹிந்து மத பார்ப்பனர்களின் நான்கு சங்கராச்சாரிகள், ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர்கள், பிராமணர் சங்கத்தினர் உள்பட புறக்கணித்துள்ளனர்; பகிரங்கப் பேட்டிகள், அறிக்கைகள் முதல் பலவற்றை செய்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் ‘தினமணி’யாரின் பார்வையில் ‘அசட்டுப் பூனைகள்’தானா?

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு எழுதுகிறவர் தினமணியார் அல்லவா?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குரலை அப்படியே ஒலிக்கும் ‘ஹிஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ என்பதாக இத்தலையங்கம் இருக்கிறது.
‘‘இந்தியாவில் உள்ள அனைவரும் பிறப்பால் ஹிந்துக்கள்; நம்பிக்கையால் அவரவர் விரும்பும், ஏற்றுக் கொள்ளும் மதத்தைச் சேர்ந்தவர்கள்” – என்பது ஏற்புடையதா, சட்டப்படி?
‘ஹிந்து லா’ என்ற ஹிந்து சட்டத்தின் ஹிந்து என்பதற்கு இந்த வரைமுறை ஏற்கப்பட்டிருக்கிறதா?
அனைவரும் ஹிந்து என்று சொல்லிவிட்டு பிறகு ஏன் ஆர்.எஸ்.எஸ். 80:20 மெஜாரிட்டி, மைனாரிட்டி என்று ஹிந்து – முஸ்லிம், கிறித்துவர் என்று பிரித்து பகிரங்கமாக உ.பி. போன்ற மாநிலங்களில் வாக்குக் கேட்கிறார்கள்? வெளிப்படையாகப் பேசி வீண் வம்பை விதைக்கின்றார்கள்?

ஹிந்து லா என்ற சட்டப்படி இந்தியாவில் பிறந்த அனைவரும் ஹிந்து என்றால், பிறகு அரசமைப்புச் சட்டம் கூறும் சிறுபான்மை கல்வி, கலாச்சார உரிமையை ஏன் மறுக்க வேண்டும்? சிறுபான்மையினர் என்று பிரித்து வெறுப்புக் கூச்சல் போடுவது தவறல்லவா?

அத்தலையங்கத்தின் மற்றொரு சுயமுரண் – வித்தை காட்டும் வேடிக்கை விளையாட்டு (வார்த்தை விளையாட்டு) ‘‘அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது இராமனல்ல.” பின் என்னவாம்?

இராம ராஜ்ஜியத்தின் அடையாளமாம்! ஆரியப் பூனைக்குட்டிகள் அதன் சாக்குமூட்டையிலிருந்து வெளியே குதிக்கின்றன!
இராமர் அல்ல, ஓட்டு வங்கிக்கான பக்தி விஷ உருண்டை –  தேர்தல் மந்திரக்கோல் என்பதைத்தான் ‘தினமணி’ சொல்லாமற் சொல்கிறதோ!
தவம் செய்த சம்பூகனை சூத்திரன் என்று கூறி வெட்டிக் கொன்றவன்தானே ராமன்?

அவன் பெயரால் இராஜ்யம் என்றால் அதன் கொடுமை எப்படியிருக்கும் ! வால்மீகி இராமாயணம் கூறுவதைப் படித்ததில்லையா?

காட்டில், தனியே கடவுள்களை நோக்கி தலைகீழாக நின்று ‘சூத்திர சம்பூகன்’ என்பவன் தவம் செய்தான். இது மனுதர்ம- வருணதர்ம விரோதம் (காரணம் ஞானியானாலும், முனிவர்களானாலும், பிராமணனையே கடவுளாக சூத்திரன் வணங்கவேண்டுமே தவிர, நேரிடையாகக் கடவுளைப் பூஜிக்கும் உரிமை கீழ்ஜாதி, நாலாஞ்ஜாதி சூத்திரனுக்கு இல்லை என்பதால்). அதனால் ‘‘தர்மம்” அழிந்தது; தர்மம் அழிந்ததால், பார்ப்பனச் சிறுவன் உனது ஆட்சியில் இறந்தான் என்று ராம சபையில் பார்ப்பனர் முறையிட, உடனே எவ்வித விசாரணையும் இன்றி, நேரே வாளெடுத்துச் சென்று தவஞ்செய்த சூத்திர சம்பூகனை ராமன் வெட்டிக் கொன்றான்; உடனே இறந்து போன பார்ப்பனச் சிறுவன் உயிர் பிழைத் தெழுந்தான் என்று கூறுகிறதே, வால்மீகி இராமாயணத்தின் உத்தரகாண்டம்! இராமன் ஆட்சியின் அடையாளமே இதுதானே!

எனவே, இராமராஜ்ஜியம் என்பது அசல் மனுதர்ம – ஆரிய தர்ம – வருணாசிரம தர்ம – ஆட்சிதானே?
பார்ப்பன ஆதிக்க அதிகாரத்தை நிலை நிறுத்தி, அனைவருக்கும் சமநீதி என்ற சமூகநீதிக்கு விடை கொடுப்பது என்பதுதானே அந்த இராஜ்ஜியத்தின் இலக்கு, இயல்பு?
எனவே, இந்த ஆபத்து வராமல் தடுக்க, தவிர்க்க தேர்தல் பிரச்சாரம் நடக்கட்டும்! ஜனநாயகம் பிழைக்க ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு நிற்கட்டும், வெல்லட்டும்!
நாட்டுக்கு நல்வாழ்வு மலரட்டும்! ஜனநாயகத்தைக் காப்பாற்றட்டும்!!

– கி.வீரமணி
ஆசிரியர்