மருத்துவம் : மரணம்(3)

2023 பிப்ரவரி 1-15, 2023 மருத்துவம்

மருத்துவர் இரா. கவுதமன்

உணவை மறுக்கின்ற நிலை இறந்து கொண்டிருக்கின்றவருக்கு ஏற்படும்.

கழிவு உறுப்புகள் செயலிழப்பு: உணவு செரித்தல் குறைவதாலும், தண்ணீர் உடலின் உள்ளே செல்லாததாலும் மரணத்தின் பிடியில் உள்ளளவர்களுக்கு ஆரம்ப நிலையில் “மலச்சிக்கல்’’ ’ (Constipation) ஏற்படும். ஆனால் மரணம் நிகழும் பொழுது இடுப்புச் சதைகள், சிறுநீர்ப் பைகள், குடல் பகுதிகள் முழுமையாக இளகி விடுவதால் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி சிறுநீர், மலம் முழுவதுமாக வெளியேறிவிடும்.

தோல், தசைகள் தொய்வு: படுத்த படுக்கையாக நீண்ட நாள்கள் இருக்கும் நோயாளிகளின் தசைகள் மெலியும், குரல் சரியாக எழும்பாது. அதனால் நோயாளி தெளிவின்றி மெல்லிய குரலில் பேசுவார். தோலில் புதிய செல்கள் தோன்றும் நிலை நின்று விடுவதால், தோலின் தடிமன் குறைந்து, மெலிதாகி விடும். அதனால் எளிதாக சிராய்ப்புகள், காயங்கள் ஏற்படும். நீண்ட நாள்கள் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் “படுக்கைப் புண்கள்”(Bed Sores) ஏற்படும்.

எதிர்பார்ப்பின்மை, பற்றின்மை(Withdrawal and Detachment):மரணம் நிகழும் பொழுது நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்க வேண்டுமென்றோ, அவர்களிடம் உறவாட வேண்டுமென்ற உணர்வோ ஏற்படாது. களைப்பும், சலிப்பும் உண்டாகும்

உயிரோட்டம் குறைதல் (Declining Vital Signs) : உடலின் உயிரோட்டம் மெல்ல, மெல்ல குறையத் தொடங்கும். உடலின் இயல்பான வெப்பநிலையான 98.4குதி யில் இருந்து மெல்ல குறையத் தொடங்கும். குறையத் துவங்கும் உடல் வெப்பம் இறப்பு நிகழும் பொழுது முழுமையாகக் குறைந்து உடல் குளிர்ச்சியடைந்து விடும்.

நாடித் துடிப்பு : நாடித் துடிப்பு, இலகுவாகி, குறைந்து கொண்டே வந்து முழுமையாக நின்றுவிடும் (இயல்பு நிலை 72/நிமிடம்)

மூச்சுவிடுதல்: முதலில் மூச்செடுத்து விடலாம் அல்லது மெலிதாகி நின்றுவிடும். (நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விடுதல் இயல்பு நிலை)

இரத்த அழுத்தம் : இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் 120/80 MM of Hg என்றிருக்கும். மரணம் நிகழ்கையில் இரத்த அழுத்தம் முழுமையாகக் குறைந்து ஒன்றுமே தெரியாத நிலை ஏற்படும்.

இதய மின்னலைப் பதிவு (ECG): இயல்பு நிலையில் ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். இதய மின்னலைப் பதிவு, இறப்பு ஏற்படும் பொழுது ஒரே கோடு போல் தெரியும்.

கிளர்ச்சியடைதல் (Agitation): திடீரென நோயாளி பலம் பெற்றவர் போல் கிளர்ந்தெழுவார். இரத்தக் குழாய்களில் செலுத்தப்படும் மருந்துக் குழாய்களைப் பிடுங்கி எறிய முயல்வார். படுக்கையை விட்டு எழுந்து, இறங்க முயல்வார். செவிலிய உதவியாளர்களையும், பிடிக்க வரும் உறவினர்களையும் தள்ளிவிடுவார்.

உணர்விழத்தல் : உயிரோடு இருக்கும் பொழுது இயல்பான நிலையிலிருந்த பார்த்தல், கேட்டல், நுகர்தல் மாறுபடும். தெளிவான ஓசையுடன் வெளிப்படும் பேச்சு, தெளிவின்றி, மெதுவாக, புரிந்து கொள்ள முடியாத நிலையில் வெளிப்படும். எதிரில் இருப்பவர்கள் யார் என்று அறிய முடியாத தெளிவின்மை ஏற்படும். இந்த மாற்றங்கள் பகலைவிட, இரவில் மேலும் மங்கலாகத் தோன்றும். சிலருக்கு இறப்பதற்கு முன்
மூளையில் சில சுரப்புகள் அதிகம் சுரக்கும்.அதன் விளைவாக நோயாளி திடீரென பார்க்கவோ, பேசவோசெய்வார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அவை மாறி அனைத்தும் அடங்கிவிடும். “அணைகின்ற விளக்கு பிரகாசிப்பது போல்’’, தொடுதல், கேட்டல் இரண்டுமே கடைசியாக மறையும் உணர்வுகள்.

ஆழ்மயக்கம் ((Coma) :  ஆழ்ந்த தூக்கம், ஆழ்ந்த மயக்கமாக மாறி முடிவில் விழிக்க முடியாத நிலை ஏற்பட்டு மரணம் உறுதிப்படும்.

மரணத்தின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
உடல் உறுப்புகள் இயக்கங்கள்
முழுமையாக நின்றுவிடும்.
இதயம் துடிக்காது
மூச்சு நின்றுவிடும்
மூளை செயல்பாட்டை நிறுத்திக்
கொள்ளும்.
இறப்பின் அறிகுறிகள்:
நாடித்துடிப்பு இருக்காது; நின்றுவிடும்.
மூச்சு நின்றுவிடும்.
உடல் குளிர்ந்து விடும். எந்த இயக்கமும் உடலில் இருக்காது.
கண்களின் பாப்பா (Pupils)வெளிச்சத்திற்கு சுருங்காமல் விரியாமல் நிலைக் குத்தி நின்றுவிடும்.
மரணத்திற்குப் பின் :
மரணம் நிகழ்ந்த உடனே உடலின் தசைப் பகுதிகள் அனைத்தும் இயல்பான இறுக்கம்(Toxe) தளர்ந்து, இளகிவிடும், குடல், வயிற்றுத் தசைகள் இளகுவதால் உடலின் உள் இருக்கும் மலம், சிறுநீர் வெளியேறிவிடும். தோல் இறுக்கம் தளர்ந்து, தொய்வடைந்துவிடும்.
உடல் இயல்பாக இருக்கும் எடையை விட கூடிவிடும்.
உடலின் இயல்பான வெப்பநிலையான 98.40தி முழுவதுமாகக் குறைந்து 1.50தி நிலைக்கு வந்துவிடும். அதனால்தான் உடல் குளிர்ந்துவிடுகிறது.
உடலின் இரத்த ஓட்டம், இரத்தக்குழாய்கள் செயலிழப்பதால் புவி ஈர்ப்பு விசையால் இரத்தம் கீழ்நோக்கித் தேங்கும். இரத்தம் தேங்கும் இடங்களில் தோல் கருஞ்சிவப்பாகத் தென்படும்.

உடல் இறுக்கம் (Stiffness) : உடலின் இயக்கம் நின்றுவிடுவதால் அனைத்துத் தசைகளும் இறுக்கமடையும். முதல் முதல் முகமும், கழுத்துப் பகுதியும் இறுகிவிடும், அவ்விறுக்கம் சிறிது, சிறிதாகக் கிழிறங்கி மார்பு, வயிறு, கை, கால்கள் என்று பரவும். இவ்விறுக்கம் விரல்களின் நுனிவரை பரவும்.
தசைகள் இறுகினாலும், கைகளும், கால்களும் இயக்கமின்மையால் தொய்வடைந்து விடும்.
மரணம் நிகழ்ந்த மூன்று மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை உடல் இறுக்கத்தால் விறைத்துவிடும். இதை “மரண விறைப்பு” (Rigor Mortis)என்று அழைக்கிறோம்.
மரண விறைப்பு பொதுவாக 2 மணி முதல் 4 மணிக்குள் ஏற்படும்,
மரண விறைப்பு நேரம், எதிர்பாராத மரணங்களில் மரணம் நிகழ்ந்த நேரத்தைக் கணிக்க உதவும்.
இதன் மூலம், விபத்துகள், கொலை, தற்கொலை போன்றவற்றின் மரண நேரத்தை மருத்துவர்களால் கணிக்க உதவும்.
மரணவிறைப்பு விலகி, மீண்டும் உடல் தளர்வடையும்.