ஆசிரியர் பதில்கள் : பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்!

ஏப்ரல் 16-31,2022

கே:       பெரியார் கொள்கைகளை நிறைவேற்றும் மாண்புமிகு முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க் கழகத்தின் பாராட்டு விழாவை எதிர்பார்க்கலாமா?

               – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

ப:           பெரியார் உலகம் துவக்க அடிக்கல் நாட்டு விழா _ அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பாராட்டு _ திராவிட மாடல் வாழ்த்து எல்லாம் இணைந்த ஒரு மாபெரும் மாநில மாநாடாக (அநேகமாக சிறுகனூரில்) நடத்த திட்டமிட்டுள்-ளோம் _ முதலமைச்சர் வசதிப்படி.

கே:       யூதர்கள் மீது ஹிட்லர் அவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளக் காரணம் என்ன?

               – கு.பழநி, புதுவண்ணை

ப:           ஆரம்பத்தில் அவரது கோட்பாடுகள் -_ அவர்களது ஆதிக்க எதிர்ப்பில் நல்ல துவக்கமானாலும் _ ‘ஆரம்பத்தில் அடாணா _ முடிவில் முகாரி’ என்பதுபோல், அதிகார வெறி _ யதேச்சாதிகார பாசிசம் அவரை வீழ்த்தி, தற்கொலைக்குத் தள்ளியது, வரலாறு!

கே:       கலைஞரோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் கருத்து என்ன?

               – தி.பொ.சண்முகம், திட்டக்குடி

ப:           துப்பாக்கி வயிற்றில் பீரங்கி!

கே:       12 ஆண்டுகள் பணியாற்றிய 11 ஆயிரம் ஆசிரியர்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்ற தனிநீதிபதி கூறியது சரியா? தகுதித் தேர்வை ஆண்டுதோறும் அரசு நடத்தாத நிலையில் கூடுதல் கால அவகாசம் ஆசிரியர்களுக்கு அளிப்பது தானே நியாயம்? மேல்முறையீடுதான் வழியா?

               – செந்தில், திருச்சி

ப:           உங்கள் கேள்வியில் உள்ள நியாயத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு முன்வைக்கிறோம். ஆனால், நீதிமன்ற ஆணை ஒரு முக்கிய தடையாக இருக்கும் போலிருக்கிறதே!

கே:       இலங்கைக்கு உதவி செய்யும் ஒன்றிய அரசு, தமிழர்களின் சிக்கலுக்கும், மீனவர் சிக்கலுக்கும் நிரந்தரத் தீர்வு காண நிபந்தனை விதிக்கலாம் அல்லவா?

               – மோகன், வேலூர்

ப:           ‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு! எம் இனமில்லை; எனவே எங்களுக்கு மனமில்லை’  என்ற போக்கு இருப்பதால் இது நடக்காது!

கே:       தங்களின் ‘நீட்’ – புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் பிரச்சாரம் முடிந்தவுடன், மக்கள் போராட்டமாக முன்னெடுக்கச் செய்வது தான் பயன் தரும் என்பது பற்றி தங்கள் கருத்து என்ன?

               – அன்புச்செல்வன், புதுவை

ப:           நிச்சயம் அதுதான் விடியலை உருவாக்கும்! ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற தொடர் அறப்போராட்டம் இன்றியமையாததே!

கே:       சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கள் கருத்து என்ன?

               – அருள், தாம்பரம்

ப:           நீதிபதிகள் தன்னிச்சையாக முடிவு

(Discretion) எடுப்பதால் No Comments! பதில் ஏதும் சொல்ல விரும்பவில்லை!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *