சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்!

2023 சிறந்த நூல்களிலிருந்து சில பக்கங்கள் ஜூன் 1-15, 2023

நூல்: ‘ஆரிய மாயை’
ஆசிரியர்: அறிஞர் அண்ணா

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி, போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டுமுடிந் திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இறை, இதோ, போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!!
இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே! பேராசையும், வஞ்சகமும், பிறவுமான கேடுபயக்கும் குணமுடையோரைப் போற்றுவது, மடமையன்றோ? ஒழித்திட வேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடைமையாகுமா? தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியை புண்ணியாவென்றும், பித்தருங் கூறாரே! நீயோ, நயவஞ்சகரை – நா இரண்டுடையாரை, நாவார வாழ்த்துகிறாயே போற்றி போற்றி என்று, இது என்ன பரதா? என்று கேட்பர், அன்பர். அடியேன் அறைவதல்ல அய்யன்மீர்! நமது இனத்திலே உள்ளனரே, விரிந்த மனப்பான்மையும், பரந்த பாசமும், கனிந்த உள்ளமும், கருணை வெள்ளமுங் கொண்ட “சற்சூத்திரர்கள்’’ அவர்கள் சதா காலமும், ஆரியரைப் போற்றி வாழுகிறார்களல்லவா? அவர்கள் போற்றித் தொழுதிடும் “பூசுரரின்’’ திருக்கலியாண குணங்களை, அறிந்தோர் எடுத்துரைத்துள்ளனர். அடியேனுடைய வேலை அவற்றைத் தொகுத்து, பார்ப்பன பக்தர்கள் நடத்தும் `போற்றி போற்றி’யுடன் இணைத்து, அவசரத்திலே அகவலாக்கி உம்மிடம் தந்ததுதான்! நான் ஆரியரைப் போற்றவுமில்லை; போற்றிடக் கூறவுமில்லை! அது போலவே, நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்.

அக்கிரகாரத்தை அனுதினமும் அர்ச்சிக்கும் அன்பர்கள் “ஏண்டா பரதா! எக்காரணம் பற்றி, எந்த ஆதாரத்தின்மீது நீ பூதேவரை நயவஞ்சகரென்று நாத்தடுமாறாது கூறுகிறாய், படுமோசக்காரர் என்று பதட்டம் பேசுகிறாய், பலப்பல கூறி ஏசுகிறாய், பாபமூட்டையைச் சுமக்கிறாய், பாவி, நீ ரவுரவாதி நரகத்தில் உழலுவாய், போ, என்று சபிப்பர். அவர்களுக்குக் கூறுகிறேன், தூற்றவல்ல, நான் தொகுத்திட்ட இப்பா. பன்னெடு நாட்களுக்கு முன்பு, படம் பிடித்தார் ஓர் பரங்கி. அதனை நான் இன்று வெளியிடுகிறேன். சரக்கு நம்முடையதல்ல! இல்லாததை, எடுத்துக்கட்டிக் கூறுவதுமல்ல, மீண்டுமோர் முறை, இப்போதே போற்றிப் பாசுரத்தைப் படியுங்கள். படித்தீர்களா? சரி, இதோ பாருங்கள். சில ஆங்கிலச் சொற்கள்!!!

Avarice, Ambition, Gunning, Wily, Doubletongued, Servile, Insinuating, In-Justice, Fraud, Dishonest, Oppression Intrigue.

இனி, இந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்ன பொருள் என்பதை, அகராதியின் உதவிகொண்டு பாருங்கள். பிறகு, நான் தீட்டிய போற்றிப் பாசுரம் சரியா, மிகைப்படுத்தினேனா தவறா? என்பது பற்றி யோசியுங்கள்.
தோழர்களே, இத்தகைய பதங்களால், ஆரியரை அர்ச்சித்திருக்கிறார். ஆபி டுயூபா எனும் அறிஞர். இன்றல்ல, நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார உரைத்தார் 1807இல்.

”Hindu Manners Customs and ceremonies” என்பவரால், 1807-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிலே, பார்ப்பனரை அவர் இவ்வண்ணம் அர்ச்சித்திருக்கிறார்! ஆரிய இன இயல்பை, மிகத் தெளிவாகத் தீட்டியிருக்கிறார். இவ்வித இயல்புடைய இனத்தைத்தான், இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர்; `சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர்தம் நிலை!

ஆபி டியூபா, பிரெஞ்சுப் பாதிரி. இங்கு 136 ஆண்டுகளுக்கு முன்னர், தாம் கண்டறிந்த உண்மையை எழுதி வைத்தார். அதிலே, பார்ப்பனரின் பண்பு பற்றி அவர் வருணிக்கையிலே, அவர் பிரயோகித்துள்ள பதங்களையே நான் போற்றிப் பாசுரமாக்கிக் காட்டினேன். `அவர் தீட்டியுள்ளது தவறானது; காமாலைக் கருத்துடையவர் அவர்’ என்று யாரும் கூறிடவும் முடியாது. ஈடில்லாத “இந்து’’ பத்திரிகை, ஆபி டியூபாவின் நூலுக்கு மதிப்புரை தந்திருக்கிறது. அதுமட்டுமா? அன்று அப்பாதிரியார் கூறிய அதே நிலையிலேயே இங்கு மக்கள் இன்றும் உள்ளனர் என்றும் “இந்து’’ எழுதிற்று.

ஆரியரில் யாரோ ஒரு அயோக்கியனை, என்றோ ஒரு நாள் அந்த வெளிநாட்டுக்காரன் கண்டுவிட்டு, பொதுப்படையாகப் புகல்வது, மடமையன்றோ? எந்நாட்டிலும், எந்த இனத்திலும் அயோக்கியர்கள் சிலர் இருப்பர்; அதற்காக அந்த இனமே அத்தகைய இயல்புடையது என்று இயம்பலாமா? இது முறையா? அழகா? என்று கேட்பர் சிலர்! முறையாகாது என்று நான் மும்முறை கூறுகிறேன். அழகல்ல என்று ஆறு தடவை வேண்டுமாயினும் சொல்கிறேன். ஓர் ஆளின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு, அந்த ஆள் எந்த இனத்தவரோ, அந்த இனத்தையே அக்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது, மடமைதான்.

ஆனால், ஆபி டியூபா முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார்; நாடு முழுவதும் சுற்றினார்; மக்களின் அன்றாட வாழ்க்கையினைக் கூர்ந்து கவனித்தார். ஆரிய இனத்தின் இயல்பினை, உள்ளது உள்ளவாறு கண்டபிறகே, ஏட்டில் எழுதினார்.

சரி, ஆபி டியூபா, பிரெஞ்சுப் பாதிரி; அவர் பிரான்சு மொழியிலே எழுதியிருப்பார், அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்திருக்கக் கூடாதோ? என்று சாகச சித்தர்கள் கேட்பர். ஆபி டியூபாவின் பிரெஞ்சு நூலை, ஆங்கிலமாக்கியவர் எச்.கே. பீன்சாம்ப் என்னும் ஆங்கிலர்தாம். ஆனால், அதனை மேற்பார்வை செய்தவரே, சி.வி. முனுசாமி அய்யர் எனும் பூசுரரே! தவறு இருப்பின், அவரா சும்மா இருப்பார்? ஆகவே ஆபி டியூபா, ஆரியரை நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது உள்ளபடி தீட்டிட முடிந்தது. அர்ச்சனை கிடக்கட்டும் அன்பர்களே! அவர் தீட்டியுள்ள வாசகக் கருத்துகள் சிலவற்றினைக் கேளீர்!

“பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு; எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை!’’

இது ஆபி டியூபாவின் வாசகம். இன்றும் இதிலே முழு உண்மை இருத்தலை உலகு நன்கு அறியும். மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும், விரக்தியும், விருந்தும் வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா? இதைத்தான் ஆபி டியூபா, அன்றே கூறினார்.

தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன, அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவி பெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார். இதற்குச் சரிதம் அநேக சான்று தருகிறது. புராண இதிகாச கால மன்னர்கள் ரிஷிகளிடமும் முனிவர்களிடமும் பயபக்தி விசுவாசத்துடன் நடந்துகொண்டனர். தமது மணிமுடியையும் காணிக்கையாகத் தந்தனர், அவர்கள் எது கேட்டாலும் வழங்கினர்; அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தனர் என்றெல்லாம் படிக்கிறோம். சரிதகால மன்னர்களிடம் சர்மாக்களும், அய்யர், அய்யங்கார்களும், திவான்களாகவும், மந்திரிகளாகவும் வாழ்ந்தனர். இதோ இன்றும், திருவிதாங்கூருக்கு யார் திவான்? சர். சி.பி. அய்யர்தானே! பரோடாவிலே, சர்.டி.டி. கிருஷ்ணமாச்சாரி, மேவாரிலே
சர். விஜயராகவாச்சாரி என்றுதான் பட்டியல் காணமுடியும். நமது மாகாண சர்க்கார் சீஃப் – செக்ரட்டரியாக இருந்து இன்று ஆலோசகராக இருப்பவர், ஒரு எஸ்.வி. இராமமூர்த்தி அய்யர்தான்! நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர், ஒரு இராஜகோபாலாச்சாரியார்தான்! நமது மாகாண சட்ட நிபுணராக அட்வகேட் ஜெனரலாக இருப்பவர், ஒரு சர். அல்லாடி (கிருஷ்ணசாமி) அய்யர்தான்! ஆபி டியூபா 1807-இல் கூறினது, இன்றும் பிரத்யட்ச உண்மையாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக – அதுவல்ல பொருத்தமான வாசகம்- கைப்புண்ணாக இருக்கிறது என்று கூறுவேன். அதுதான் பொருத்தமான உவமானம்!

அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர் என்று, ஆபி டியூபா எழுதுகிறார். சிண்டு முடிந்துவிடுவதிலே, கலகமூட்டுவதிலே அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். இல்லாமலா கலகத்தையே காரியமாகக் கொண்ட ஒரு தேவன் உண்டு என்ற கதையை வைத்திருக்க ஆரிய மனம் இடம் தந்தது? நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்! எங்கே போகும் அந்தப் பலன்! நமது இனத்தின் தலையிலே வந்து விடிகிறது!!

திறமைசாலிகள் என்பதற்காகப் பார்ப்பனரைப் பார்த்திபர்கள் பதவியில் அமர்த்தினர் என்பது மட்டுமல்ல; மற்ற மக்களிடம் உயர்ஜாதி என்று பெருமை பேசி அவர்களைக் கட்டுப்படுத்தும் “சக்தி’’யை ஆரியர் பெற்றிருப்-பதால், அவர்களை வேலையிலே இருக்கச் செய்தால், சாதாரண மக்களின் சள்ளை இராது என்பதற்காகவே வேந்தர்கள் வேதியரை வேண்டினர் என்ற உண்மையையும் ஆபி டியூபா எழுதுகிறார். இன்றும் ஒரு பள்ளியிலே ஆசிரியராக இருப்பினும், கோயிலிலே பூசை புரிவோராக இருப்பினும், மோட்ச லோகத் தரகராக இருப்பினும், சிற்றுண்டி விற்பவனாக இருப்பினும் அவர்களிடமும் நமது இனத்தவர் எவ்வளவு அடங்கி ஒடுங்கி உள்ளனர் என்பதைப் பாருங்கள்! பார்ப்பனரைப் பழிக்காதே! அது `மகா பாவம்’ என்று கூறும் மனப்பான்மை இன்றும் இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர்கள் அசகாய சூரரல்ல, வீரம் அவர்களுக்குக் கிடையாது, கோழை உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் என்று, ஆபி டியூபா கூறுகிறார். படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே, எம் இனமக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ? ஆபி டியூபா போன்ற அறிஞர்கள் ஆரியரின் குணத்தினை எடுத்துக் கூறியிருப்பதை, நிடுநிலை நின்று யோசிப்பவர் ஆரியரைப் போற்றி வாழ்வாரா? என்று கேட்கிறேன்.

“அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாழுங்குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே! (அய்ங்குறுநூறு)

“அம்மா, அவர், குதிரை மீதேறி வருகிறார் கெம்பீரமாக!’’

“யாரடி, வருவது?’’

“பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுக்குடைய தலைவர் பரிமீதேறி வருகிறார்.’’

“சரி அதிலென்ன வியப்புக் காண்கிறாய்?’’

“அந்தக் குதிரை, தலையை அசைத்துக்கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!’’

“அதிலென்னடி வேடிக்கை! மகாவேடிக்கை!’’
குதிரை தலையை அசைக்கும்போது கொத்தாக இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால், சிரிப்புண்டாகிறது!’’

“குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால், சிரிப்பு வரக் காரணம் என்னடி?’’

“ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சிக்குடுமி, அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப்போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான், எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!

“போடி குறும்புக்காரி’’

வீதிவழியே செல்லுகிறான் குதிரை வீரன்; குதிரை தலையசைக்க, அதன் குடுமி ஆடுகிறது. இதைக் கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது. நகைக்கிறாள்! கண்டதையும், கொண்ட கருத்தையும், தலைவிக்குக் கூறுகிறாள் பழந் தமிழகத்திலே. இக்கருத்துக்கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது, அய்ங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது, இட்டுக்கட்டியதுமல்ல! ஈரோட்டுச் சரக்குமல்ல!
ஒரு காலம் இருந்தது, தமிழர்கள் ஆரியரை, நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம் மங்காதிருந்த காலம், ஆரியத்தைக் கேலிக்கூத்தாகக் கருதிய காலம்! இன்றோ, ஆரியரைப்போன்ற புத்திக்கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே, தமிழருக்குச் சீலத்தையும், சிலாக்கியத்தையுந் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீய்த்து வருகின்றன!

ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடக் கலாச்சாரம் வேறு என்பதுபற்றி, ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே, முதலில் ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது, இங்கு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடிற்று! “வேதம், ஸ்மிருதி என்பவைகளுக்கு மேனாட்டார் எவ்வளவு மதிப்பு தருகின்றனர் பாரீர்! எமது புகழ் எங்கும் பரவிடக் கேளீர்!!’’ என்று பேசினர், பூரித்தனர். ஆபி டியூபா போல, ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்து கூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சியாளர் தோன்றலாயினர். இந்தியாவிலேயே முதன்முதல் நாகரிகத்தைப் புகுத்தியவர்கள் ஆரியர்தான் என்ற பொய்யுரை ஒழியக் காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி, மிகப் பழங்காலந் தொட்டு இங்கே வளமான ஒரு நாகரிகம் ஓங்கியிருந்த உண்மையை உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும், கலை கறையானதும், நிலை குலைந்ததும் ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை, உலகு முதலிலே தெரிந்து கொள்ளவில்லை. இந்தியாவை ஆரியவர்த்தமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்று மொழிந்தும், உலகு கிடந்தது. பேராசிரியர் சர். ஜான்மார்ஷல் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறியபோதுதான் மேனாட்டாரின் கண்களிலிருந்த கறையும், கருத்திலிருந்த மாசும் நீங்கிற்று. பிறகு ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்திற்று என்ற ஆராய்ச்சி வரலாயிற்று. இயற்கை இன்பத்தை நுகர்ந்து, வீரத்தை வணங்கி, அறத்தை ஓம்பி வாழ்ந்த திராவிடரிடையே, கட்டுக் கதைகளைப் புகுத்தி கோழைத்தனத்தை வளர்த்தவர் ஆரியரே என்பதும், ஆரியக் கோட்பாடுகள் புகாமுன்னும் திராவிடர் அறிவுத் துறையிலேயே ஆர்வங் கொண்டிருந்தார்களேயல்லாமல் கண்ணுக்குப் புலனாகாததும், கருத்துக்கு எட்டாததும், வாதத்திற்குக் கட்டுப்படாததும், பிரத்யட்சம் பிரமாணத்துக்கு ஒத்து வராததுமான கொள்கைகளிலே மூழ்கிக் கிடக்கவில்லை என்பதும், பிறகு ஆராய்ச்சிக்காரர்களால் விளக்கப்பட்டது. ஆனால், இவையாவும் பிரேத விசாரணையாகக் கருதப்பட்டதேயல்லாமல், வீழ்ச்சியுற்ற இனத்திற்குத் திருப்பள்ளி எழுச்சியாக உபயோகிக்கப் படவில்லை. சாதாரணக் கல்வியும், பொது அறிவும் அதிகம் பரவாத திராவிட சமுதாயத்திடையே, புதிய ஆராய்ச்சி முடிவுகள் பரவ வழி இல்லாமற் போய்விட்டது. ஆகவேதான், ஆரியம் அழிவைத் தருவது. திராவிடம் தீரரை வளர்ப்பது என்ற நற்கருத்து இன்றும் நம் இனத்தவரிடையே புகவில்லை.

கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும், ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது இந்தத் துறையிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்து போனது போல, ஒரு காலத்திலே உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ, அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்.

“எமைநத்துவாய் என எதிரிகள் கோடி
இட்டழைத்தாலும் தொடேன்’’

– என்று இன எழுச்சியே உருவானது போன்ற நம் கவிஞூர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) பாடுகிறார்! தொடேன் என்று, உறுதியும் ஆவேசமும் மிளிர, அந்தப்பதம் உயிர்க்கவியின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு வெளிக்கிளம்புகிறது! எதிரிக்கு அடிமையாகமாட்டேன். கோடி தரினும்! என்று கூறுகின்றார். கோடி ரூபாய் – பவுன்- வைரக்கற்கள் – நவரத்தினக் குவியல், எதை நீ கோடியாகக் குவித்து என் எதிரே வைத்தாலும் சரியே, உன்னிடம் நான் அடிவருடியாகமாட்டேன் என்று கவி கூறுகிறார். கோடி என்ற பதத்துடன், வேறு பொருளைக் குறிக்கும் எப்பதத்தையும் அவர் இணைத்தாரில்லை! ஏன்? இன்ன பொருள் என்று குறித்துவிட்டால் சரி, வேறு பொருள் கோடி தருகிறேன் என்று எதிரிகேட்க இடமுண்டல்லவா? கோடி ரூபாய் தருகிறேன் என்று எதிரி கூறுகிறான்; தமிழன் வேண்டேன் என்று மறுக்கிறான்; உடனே தந்திரமுள்ள எதிரி கோடி வராகன் தருகிறேன் என்று கூறலாமல்லவா? அந்தப் பேரப் பேச்சுக்கே கவி இடங்கொடுக்கவில்லை. எதுவாகவேணும் இருக்கட்டுமய்யா, கோடி குவித்தாலும் வேண்டாம் என்று முடிவாகக் கூறுகிறார். `தொடேன்’ என்று கவி கூறியதிலே, கையினால் தொடேன் என்ற பொருள் மட்டுமல்ல; கருத்தினாலும் தொடேன் என்ற பொருளும் தொக்கியிருக்கிறது. இப்போது மறுமுறை கூறிப் பாருங்கள் அந்தக் கவிதையை,

“எமை நத்துவாய் என எதிரிகள் கோடி
இட்டழைத்தாலும் தொடேன்’’
இந்த உணர்ச்சியும், உறுதியும், சுயநலத்தைப் பற்றித் துளி நினைப்பும் இல்லாத மனப்பான்மையும், சபலத்திற்கு இடங்கொடுக்காத தன்மையும், வீரமும் இருப்பின், கோடி ஈட்டிகள் தமிழரின் மார்புக்கு நேரே நீட்டப்பட்டாலும், எதிரி வெல்ல முடியாதே! எங்கே காண்கிறோம் அந்த உறுதியை? எவரிடம் கேட்கிறோம் இத்தகைய வீரப் பேச்சினை?
`நமக்கென்ன’ என்று கூறும் சுயநலமிகளும், `நம்மால் ஆகுமா’! என்று பேசும் தொடை நடுங்கிகளும், `ஏன் வீண் வம்பு’ என்று சொல்லும் கோழைகளும், “எனக்கு இது பிடித்தமில்லை’’ என்று மிடுக்காகக் கூறும் கோடரிகளும் தமிழகத்திலே உலவக் காண்கிறோம்!
“மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மறவேந்தர்
பூனைகள் அல்லர், அவர் வழிவந்தோர்
புலிநிகர் தமிழ்மாந்தர்!’’

– என்ற வீர முழக்கம், எப்போது தமிழர் மனைதோறும் கேட்கிறதோ, என்றைய தினம் தமிழர் உள்ளம் இந்த நிலை பெறுகிறதோ, அன்றே ஆரியர், `கனகவிசயனைக் கல்லெடுக்க வைத்த சேரன் மரபினர் மீண்டும் தமிழராயினர்; இனி நமது கடை நடவாது’ என்பது தெரிந்து பல்லெல்லாம் தெரியக்காட்டி நிற்பர்! பணிவர்! பகைவரை அடுத்துக் கெடுத்தன்றி, போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்குக் கிடையாது, பெரிய போர்களிலே, அவர்களுடைய பெயர் சம்பந்தப்பட்டதே கிடையாது. புராண இதிகாசங்களிலே நடைபெற்றதாகக் கூறப்படும் போர்கள் வெறும் புளுகு என்றபோதிலும், அதிலும் வீரத்தால் வெற்றி கிடைத்ததாகக் கதை கிடையாது. வேள்வியால் வெற்றி, பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால் எதிரி தோற்றான் என்றுதான் இருக்கும். திராவிட வரலாறுகளிலோ, வீரமே முதலிடம் பெற்றிருக்கும்! ஆரிய இனம் போரிட்டுப் புகழ் ஈட்டியதில்லை; பிறரின் புத்திகெட்ட போதுதான் ஆரியரின் கொட்டம் வளரும்!
போதை ஏறியவன், கல்தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும் திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண்டிடச் செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டிவிட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமைதாங்கியானான். சோர்ந்தான், சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே.

`அய்யன்மீர்! இப்போது நீவிர் வணங்கும் உருவாரங்கள், `ஆரியக் கற்பனை’ என்று கூறுவோரை, மேதாவிகளென்று தம்மை எண்ணிக்கொண்டுள்ள தமிழர்கள், நம்பு-வதில்லை. நையாண்டி செய்கின்றனர்! எதற்கெடுத்தாலும் ஆரியச் சூது, ஆரியச் சதி, புரட்டு என்று கசடர்கள் கூறுகிறார்கள்’ என்று இந்த மேதாவிகள் கூறுகின்றனர். `மழையாம் மழை’ மழை நம்மை என்ன செய்யும்? என்று எருமை கூறுவதில்லை, அதன் நடவடிக்கை, அதனுடைய நினைப்பை நமக்குக் காட்டுகிறது. தமிழரிலே தடித்த தோலர் உளர், நாற்காற் பிராணிகளிலே எருமை இருத்தலைப்போல! வீணான மனப்பிராந்தியால் சிலர், இதுபோல ஆரியர்-_திராவிடர் எனப் பிதற்றுகின்றனர் என்று கூறும் ஏமாளிகளுக்கு, எத்தனை ஏடுகளைக் காட்டினாலும் கருத்துத் துலங்குவதில்லை. சுயமரியாதைக்காரர்களுக்குத்தான், ஆரியரிடம் வீணான துவேஷமிருக்கிறது என்று எளிதில் கூறிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத, அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு என்ன குற்றங் கூறமுடியும்?

ஆரியர், தங்களுடைய கருத்துகளையும் கடவுள் கதையும் கூறிவரும்போது, அறிவுக்கு இவை பொருந்துமா? ஆராய்ச்சிக்கு ஈடுகொடுக்குமா? என்பனபற்றி கவலையே கொள்ளவில்லை. ஆண்டை, அடிமைக்குக் காரணம் கூறிக்கொண்டிருப்பானா? குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப்பற்றியும், ஆறு காலனைப்பற்றியும் கதை கூறும்போது, குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய்பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, `தாத்தா இதை நான் நம்பமுடியாது’ என்று கூறுவதுண்டா?

குழந்தைப்பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்தபோதுதான், இடிதேவன், மின்னல்மாதா, மழைமாகாளி, தீக்கடவுள் எனக் கடவுள் கதைகள் கட்டிவிடப்பட்டன. உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றதும் மறைய
லாயின! ஆனால் இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடைப் பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக்கொண்டுள்ளனர். அதனாலேயே, அறிவு சூன்யமே ஞானமென்றும், இருப்பதை இல்லையென்று கூறுவதே வேதாந்தமென்றும், இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கமென்றும், போதிக்கப்பட்டுவிட்டது. அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்ற பிரசங்கம் புரிவானா?

மற்ற மக்களுக்குத் தெரியாதது தங்கட்குத் தெரியுமென்றும், மற்றவர்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்கமுடியுமென்றுங் கூறிடுபவனை, ஆராய்ச்சியுடையோர், அவன் ஓர் புரட்டன் என்று ஏசி ஒதுக்குவார்; ஆராயுந் திறனற்றாரோ, `அப்படியா!’ என்று ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர், கைகூப்புவர்! இந்த முறையிலே, ஆரியம், தமிழரிலே தன்னுணர்வு, அறிவு நுணக்கம் அற்றவர்களைப் பலிகொண்டது. வீராவேசங்கொண்ட வேங்கை யானாலும், சதுப்பு நிலத்திலே -_ படுகுழியிலே _ வீழ்ந்துவிட்டால் சாகத்தானே வேண்டும்! நீள்வையம் எதிர்த்தாலும், எமக்கு நிகர் இல்லை என்று கூறிப் போரிடும் மறத்தமிழரும், ஆரிய மதக்குழியிலே வீழ்ந்ததால் அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை இழக்கவேண்டி நேரிட்டது.

“இந்தியாவில் ஆரிய ஆட்சி’’ என்றோர் நூல், ஹாவல் (Havell)என்பவர் எழுதியுள்ளார். அதிலே மதச்சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும், ஆபாசமான, காட்டு மிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரில் ஜெயமோ, அபஜெயமோ, மந்திர உச்சாடனத்தாலே சாதிக்கமுடியும்! சமஸ்தானங்களின் சேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே மந்திரத்தால் பலன் உண்டு!

நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ அற்பவிஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறிவைத்தனர்! என்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டு வாசியா? பெரியாரின் சீடரா? சுயமரியாதைப் பிரசாரகரா? ஏன் சுரண்டிப் பிழைக்க “மந்திரம்’’ என்று மயக்க மொழிபேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார்? `ஆரியமாயை’யிலே சிக்கி நம்மவர்மீது “துவஜம்’’ தொடுக்கும் தமிழர்கள், இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப்பற்றி யோசிக்கக்கூடாதா? “வேத கால முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம், பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப் படுத்தவும், ஏமாற்றவும் ஓர் கருவியாக உபயோகப்பட்டது’’ என்றும் ஹாவல் எழுதுகிறார். மந்திரம், யாகம் என்பவைகள் பார்ப்பன புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் “தாசர்கள்’’, இந்த ஆராய்ச்சிக்காரனின் உரை கேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக்கொள்ளக் கூடாதா? `ஆரிய ஆட்சி’, ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை மனத்தினரை வாட்டிவதைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன்வருவார்களா என்று கேட்கிறேன்.