ஆரிய ஊடுருவலை அகற்றி தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாக்களைக் கொண்டாடுவோம்!

2024 முகப்பு கட்டுரை ஜனவரி 16-31, 2024
  • மஞ்சை வசந்தன்

தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருதப் பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழித்தனர்.
நன்றியின்பாற்பட்ட பொங்கல் விழாக்களை புராணக் கதைகள் மூலம் மகரசங்கராந்தி போகி என்று மாற்றியும், திரித்தும் மூட விழாக்களாக்க முயற்சி செய்கின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டை மாற்றிய மோசடி

தமிழர்கள்தான் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள். காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.

மாதம் என்பதற்குத் தமிழில் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது. முழு நிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.

அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்-கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனை-யிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பூமியின் சுழற்சி காரணமாக பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்-கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.

சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான்.

ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர். அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதினாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற,
நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற,யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார்.
அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, பிரபவ தொடங்கி அட்சயமுடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அருவருப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர்.

தமிழாண்டு என்றால் தமிழிலல்லவா ஆண்டுப் பெயர் இருக்கும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 ஆண்டுகள் எப்படித் தமிழாண்டுகளாகும். சித்திரை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஆரியர் பண்பாட்டின் திணிப்பு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதே தமிழரின் மரபு!

இந்த உண்மைகளை மறைத்து ஆரியப் பார்ப்பனர்கள் தொடர்ந்து சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கின்றனர். சித்திரையில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும். ஆண்டு தொடங்கும்போது தலைக்கு நேர் இருந்து தொடங்க மாட்டார்கள். நாள் தொடங்கும்போது காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதைத்தான் எடுத்துக் கொண்டனர். மாறாக, மதியம் தலைக்கு நேர் சூரியன் இருப்பதை எடுக்கவில்லை. அதேபோல் சூரியன் தென்கோடியிலிருந்து தை மாதம் முதல் நாள் வடக்கு நோக்குவதைத்தான் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனரே தவிர, சூரியன் தலைக்கு நேர் இருக்கும் சித்திரையை அல்ல.

தை முதல் நாளே புத்தாண்டு!

ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள் என்ற தமிழரின் கணக்கீட்டை ஹிந்து மத சாஸ்திரமே ஏற்கிறது. நாரதருக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவை 60 ஆண்டுகள் என்பதும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது.

ஆரியர்கள் உள்பட எந்தவோர் இனமும் இவ்வுலகில் மொழி, நாகரிகம், பண்பாடு, கலை, வணிகம், கட்டுமானம், வானியல், கணிதம், இசை என்று எதையும் அறிந்திராத நிலையில் அனைத்திலும் உயர்ந்து நின்ற இனம் தமிழினம். அதை அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்ய முடியும்; உறுதியும் செய்யப்பட்டுள்ளது.
அப்படி காலக் கணக்கீட்டிலும் உலகில் முன்னோடி தமிழர்களே. இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் மொழி உள்பட எல்லாவற்றையும் தமிழர்களிடமிருந்தே பெற்றனர். அவர்களுக்கென்று எதுவும் இல்லை. எல்லாமும் தமிழரிடம் பெறப்பட்டவையே!

நாம் மேலே விளக்கியபடி சூரியன், நிலவு இவற்றை வைத்து தமிழர்கள் செய்த காலக் கணக்கீட்டை அவர்களும் ஏற்று அவர்களின் முதன்மைச் சாஸ்திரமான மநுதர்ம சாஸ்திரத்தில் எழுதிக் கொண்டனர். மநுதர்மம் முதல் அத்தியாயத்தில் 65 முதல் 67 வரையிலான ஸ்லோகங்களில் இதைக் காணலாம். சுலோகம் 65 நாள் பற்றியும், சுலோகம் 66 மாதம் பற்றியும் சுலோகம் 67 ஆண்டு பற்றியும் கூறுகிறது.

சுலோகம் 65: பகல் இரவு சேர்ந்தது நாள். அதாவது காலை முதல் இரவு விடியும் வரை ஒரு நாள் என்கிறது மநுஸ்மிருதி. தமிழர்கள் கூறிய சூரிய தோற்றம் முதல் இரவு விடியும் வரை ஒரு நாள் என்பதை மநுஸ்மிருதி ஏற்கிறது.

சுலோகம் 66: முழு நிலவு (பவுர்ணமி) தொடங்கி அமாவாசை வரை 15 நாள்கள் (கிருஷ்ண பட்சம்). அதன் பின் முழு நிலவு வரை 15 நாள்கள் (சுக்கில பட்சம்). இரண்டும் சேர்ந்து 30 நாள் _ ஒரு மாதம் என்கிறது மநுஸ்மிருதி.
தமிழர்கள் கூறிய ஒரு முழு நிலவு தொடங்கி மீண்டும் முழு நிலவு வரும் வரை ஒரு மாதம் என்பதை மநுஸ்மிருதி ஏற்கிறது.

சுலோகம் 67: தை மாதம் முதல் ஆனி மாதம் வரை ஆறு மாதம் உத்ராயனம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். உத்ராயனம் தொடங்கி தட்சிணாயனம் முடிய ஓராண்டு.

சூரியன் வடக்கு நோக்கல் தொடங்கி வடக்கே சென்று மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து தெற்கை அடையும் வரையிலான காலம் ஓராண்டு என்ற தமிழர் ஆண்டுக் கணக்கை மநுஸ்மிருதி ஏற்கிறது. இதில் முக்கியமான கருத்து -_ ஆண்டுத் தொடக்கம் தை மாதம் என்பதை மநுதர்மம் 67ஆவது ஸ்லோகம் ஏற்கிறது என்பதே. எனவே, தை முதல்நாளே ஆண்டின் தொடக்கம் என்பது தமிழர் மரபுப்படியும், மநுதர்ம சாஸ்திரப்படியும் உறுதியாகிறது. எனவே, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம். அதுவே தமிழர்க்கும், தமிழ் மரபுக்கும் உகந்தது.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவதன் மூலம், சமஸ்கிருத ஆண்டைத் திணித்த ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்க்க முடியும்.தமிழ் அறிஞர்கள், சான்-றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.
இந்த முடிவை 18.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்று கூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 1935+31=1966.
அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது.

(பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர், 1935)

தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்! அரசும் இதை உடனடியாகச் செயல்படுத்தவேண்டும். அதுவே தமிழர்க்கும், தமிழினத் தலைவர் கலைஞர்க்கும் செய்யும் உயர் பெருமையாகும்!
தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.

அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.
இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துகளை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.

பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும்.

மழை அன்றைய தினம் பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளையிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையை பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்ற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருள்களைக் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உள்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டு தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்ற கேடுகளையும் உருவாக்கி வருகிறது.

ஆக, ஆரியப் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகிக் கேடு பயக்கிறது.

பொங்கல் திருநாள் :

பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும். காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அன்று பயிர் விளைய அடிப்படைக் காரணியாய் உள்ள சூரியனுக்கு நன்றி செலுத்தினர்.
அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.

“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயனம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருட்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகர சங்கராந்தி யென்று மாற்றினர்.
சூரியத் திருநாளை மகர சங்கராந்தி என்று மாற்றியதுபோல, மழைத் திருநாளை போகி என்று மாற்றினர்.
சூரியத்திருநாளுக்கு முதல்நாள் மழைத்திருநாள்.மழைத் திருநாள் போகிப் பண்டிகை-யாக்கப்பட்டது

மாட்டுப் பொங்கல் :

வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.
காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன்படுகிறது என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.
ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.

காணும் பொங்கல் :

அடுத்த நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு, கொண்டாடப்படுவதாகும்.
அன்று உழைப்பாளிகள் நில உரிமையாளர்களிடம் சென்று நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்தியைப் பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலதும் வழங்கிச் சிறப்பிப்பர்.
இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறிப் புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.

கோபங்கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதுவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.

எனவே, புராணத் திரிபுகளைப் புறந்-தள்ளி, நன்றியின்பாற்பட்ட விழாவாக பொங்கல் திருநாள்களைக் கொண்டாடி, தமிழர்ப் பண்பாட்டைக் காக்கவேண்டும்; நிலைநிறுத்தவேண்டும்.
விழாக்கள் பண்டிகைகள் என்பவை பொழுது போக்கிற்கும், களியாட்டாங்களுக்கும், ஆடம்பரங்களுக்கும் மட்டும் என்ற எண்ணத்தை நாம் அடியோடு விட்டொழித்து, தந்தை பெரியார் கூறியது போல, அவை மக்கள் அறிவு வளர்ச்சிக்கும், விழிப்புணர்ச்சிக்கும், சமத்துவத்திற்கும், வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் கொண்டாடவேண்டும்.
மழைத்திருநாள் (போகிப்பண்டிகை) அன்று நீர்வளம் பெருக்குதல், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், தடுப்பணைகள் அமைத்தல், போன்ற பணிகளைச் செய்ய திட்டமிடவேண்டும், அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும்.

மறுநாள் சூரியத் திருநாள் அன்று, சூரிய ஒளி ஆற்றலை (Solar Energy) ஆக்கபூர்வமாக எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள், செயல் முறைகளைச் செய்ய வேண்டும்.

மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளின் வளத்தைப் பெருக்கவும், அவற்றின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு, செயல்திட்டங்கள் உருவாக்குதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

நான்காம் நாள் காணும் பொங்கல் அன்று தொழிலாளர் நலன் சார்பைப் பற்றி கருத்தரங்குகள், ஆய்வரங்கங்கள் நடத்த வேண்டும் வேளாண் தொழிலாளர் பாதுகாப்பு, நலன், உரிமை, ஊதியம், பணிப்பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றி விவாதிக்கும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, தொழிலாளர் மேம்பாட்டிற்கும் நலத்திற்கும் செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
எனவே, தமிழரின் அறிவார்ந்த புத்தாண்டு, பொங்கல் திருநாள்களில் ஆரியர் புகுத்திய திரிபுகளை அகற்றி, தமிழரின் மரபுப்படியும், கால மாற்றத்திற்கு ஏற்ற வகையிலும் தமிழர் விழாக்களைக் கொண்டாடி ஆரியப் பண்பாட்டு ஊடுருவலை முறியடித்து, அறிவார்ந்த தமிழர் மரபைக் காக்கவேண்டிய கட்டாயக் கடமையாகும்! தமிழர் பண்டிகையின் இலக்கு நிறைவேறும்; பண்டிகைகள் பொருளுடையதாகும்; உலகம் பாராட்டும்; சிறப்பையும் பெறும்.♦