வரலாற்று சுவடுகள் – புரட்சியும் மகிழ்ச்சியும்

2023 கட்டுரைகள் பிப்ரவரி 16-28, 2023

பேரறிஞர் அண்ணா

திருவாங்கூர் திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வேதம், இந்து மதம், பார்ப்பனியம் ஆகியவற்றைக் கண்டித்துப் பேசியமைக்காக, பார்ப்பன இன உணர்வுடன் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தார். அவருடைய எதிர்ப்புக்கு
திரு.எஸ். இராமநாதன் அவர்கள் ‘லிபரேட்டர்’ இதழில் மறுப்புக் கட்டுரை ஒன்றை எழுதினார். அதனடிப்படையில்
அறிஞர் அண்ணா அவர்கள் திரு.எஸ். இராமநாதனைப் பாராட்டியும், சர்.சி.பி. இராமசாமி அய்யர் வகையறாக்களுக்கு சில வினாக்களை எழுப்பியும், தமிழர்கள் பார்ப்பனியத்தைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் ‘திராவிட நாடு’ இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து…

கொடுங்கோலும், வெஞ்சிறைக் கோட்டத்துத்
திறவுகோலும், தளைகளும் தூக்கு மேடைகளும், புரட்சிப் புயலின் முன்பு வெறும் கூளங்களாயின! இது வரலாறு! நாம் அறிவோம் நாட்டிலே பலர் அறிவர் இதனை. ஆனால் திருவாங்கூரிலே திருக்கோவில்கொண்டு எழுந்தருளியிருக்கும் திருப்பிரம்மச்சொரூபர், திருமயிலைச் சீலர், பிரம்மஞானச்சீடர், பெசண்ட் அம்மையின், ‘ஞானப்பால்’ உண்ட சம்பந்தர், சச்சிலோத்தமர், சர்.சி.பி. இராமசாமி அய்யர், இந்த வரலாறு அறிந்தவர்தானா என்பதை அறிந்துகொள்ள நாம் ஆவலாக உள்ளோம். வரலாறு அறியாத வகையற்றவர் பேசும்
வறட்டு வாததத்திலே, அவர் தமது வாயுரையை அமைத்திருப்பது கண்டே, நமக்கு இச்சந்தேகம் தோன்றியிருக்கிறது. அரசோச்சும் அண்ணலுக்கு அமைச்சராக அமர்ந்துள்ள அவருக்கு, அநேகம் தொல்லை-கள் உண்டு என்பதை நாமறிவோம். நள்ளிர-விலேயுங்கூட, சர்.சி.பி. இராமசாமி அய்யர் அவர்களுக்கு, நாடாளும் மன்னனுக்கு நல்லதெது என்பதைக் கண்டறிந்து காரியம் செய்ய வேண்டிய பொறுப்பு மிகுந்து இருக்கும் என்பதும் நாமறிந்ததே. வேலை மிகுதியால் வரலாறு காண அவரால் முடியவில்லை என்று கருதியே
தான் நாம் சற்று விரிவாகவே கூறினோம்- புரட்சியின் தன்மைபற்றி.

அவர் தமது இனத்தின் முன்னாள் வேலையை முறையாகச் செய்துகொண்டு, கபாலீச்சுவரருக்குக் கற்பூரார்த்தி காட்டிக்கொண்டிருக்கும் கனபாடியாக இல்லை. கடல்கடந்து, காட்சி பலகண்டு, பதவி பல பெற்றுப் பக்குவமுற்றுப், பாராளும் வேந்தருக்குப் பண்புரைக்கும் பணியிலமர்ந்தன்றோ இருக்கிறார். பிரம்மஸ்ரீ மட்டுமல்லவே! சர்.சி.பி. அல்லவா? திதிக்கும் திருமணத்திற்கும் நாள் குறித்துத் தந்து காய், கறியும் காசும் பெறும் திருப்பிரம்மம் அல்லவே! திவான்ஜீ அல்லவா அவர்! அப்படிப் பட்டவருக்கு எப்படி வரலாறு மறந்துவிட்டது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். அவர் தமது சொந்த வரலாற்றினை வேண்டுமானால் மறந்துவிடலாம். மறவாதிருப்பின் மனச்சாந்தி இராது, சென்னை அரசியல் விஷயங்களிலே அவர் சிக்கியபோது சற்றுச் சிரமப்பட்டிருக்கிறார். ஆனால். பல்வேறு நாடுகளின் வரலாறுகளை அவர் மறக்கலாகுமா? பெருந்தவறு! ஆம்! அவ்வளவு பெரியவர் செய்யக்கூடாத தவறு. ஆகவேதான், புரட்சி வருமுன் புல்லர்கள் இறுமாந்து கிடப்பர். புரட்சி வந்துவிட்டாலோ மருட்சி கொள்வர், புரட்சியோ தன் எதிர்தோன்றும் எந்தத் தடையையும் தகர்த்தெறிந்துவிடும். ரஷிய, பிரான்சுப் புரட்சிகள் இதனை எவருக்கும் அறிவுறுத்தும், இந்த அறிவை வரலாறு தரும். ஆகவே அந்த வரலாற்றினை மட்டும் மறக்கலாகாது என்ற யோசனையை நாம் சர்.சி.பி. அவர்கட்குச் சமர்ப்பிக்கிறோம்.

திவான்ஜீக்கு, இந்த விஷயத்திலே தெளிவு இல்லாததால்தான், திருவாங்கூர் விஷயத்தைக் கவனித்துக்கொண்டு இருப்பதோடு நில்லாது, டாக்டர் அம்பேத்கரிடம் மோதிக்கொள்ள முனைந்தார். அம்பேத்கரின் அறிவுரை, ஆண்மையுரை, ஆரியபுரியிலே அச்சத்தைத் தந்தது. தத்தோமென்றாடி, தகாதன பல கூறி ஆரிய ஏடு எழுதிகள் ஏங்கினர். அவர்களுக்கு அபயம் அளிக்க இவர் ஏன் முன் வரவேண்டும்? வீரத்தைக் காட்டிக்கொள்ளவா? விவேகத்தை விற்பனை செய்யவா? வேதியகுலத் தலைவன் என்ற விருது பெறவா? காரணம் என்ன இவருக்கு இத்தனை கவலைபிறக்க! எக்காரணம் கொண்டோ வந்தார் என்றே கொள்வோம். வந்தவர் என்ன வகையுள்ள பேச்சா சொன்னார்?

வேதத்தை இகழ்ந்தாரே அம்பேத்கர், இந்துமதத்தைப் பழித்தாரே! பார்ப்பனியத்தைக் கண்டித்தாரே! தகுமா, முறையா? நீங்கள் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கலாமா? ஆஹா! உஹும்! அய்யோ! என்று அலறினாரேயொழிய, அம்பேத்கர் கூறியவற்றிலே இது தவறு என்று அறிவுக்குப் பொருத்தமான வாதங்காட்டினாரோ? இல்லை! அதைத்தான் கேட்கிறார் அன்பர் எஸ். இராமநாதன். இக்கிழமை “லிபரேட்டர்’’ இதழிலே அவர் தீட்டியுள்ள ஒரு அரிய கட்டுரை முலம்! சர்.சி. பியின் பேச்சைத் தவிடு பொடியாக்குகிறார் முன்னாள் அமைச்சர். இறுதியாக ஒரு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார், “அய்யா! மக்கள் கண்மூடி மவுனியாகிக் கிடந்தனரே அந்தக்காலம் மலை ஏறிப்போச்சு, இது புரட்சிக்காலம். உண்மையான சமூகப்புரட்சியை நடத்த ஏற்ற காலம், இந்தச் சமயத்திலே செல்லாது ஆரிய ஜாலம், ஆரியம் அனாவசியமாகக் குறுக்கிட்டு இப்புரட்சியைத் தடுத்தால் இரத்த வெள்ளம் உண்டாகும். அதை நீந்திக்கடந்தேனும் விடுதலை பெறுவது என்ற வீர உறுதியிலே மக்கள் உள்ளனர்.’’ என்பது இராமநாதன் அவர்களின் அறிவுரை. அது திராவிட மக்களின் இருதய முத்திரை பொறிக்கப்பட்டு, ஆரியபுரிக்கு இ-றுதி எச்சரிக்கையாக, அனுப்பப்பட வேண்டிய, விடுதலைப்போர் துவக்க அறிவிப்பு ஓலை என்போம்.

அம்பேத்கர்மீது குற்றம் சுமத்திய திவானுக்கு, அன்பர் இராமநாதன் அறிவு புகட்ட முன் வந்திருப்பது திராவிடப் பண்பு. அறிவுரைக்கு அடங்க மறுப்பது ஆரியத் தன்மை, அறிவுரை பயனற்ற பிறகு சொல்வானேன்-? எம்முறை ஏற்றது என்று தீர்மானிக்கும் பொறுப்பை நம்போன்றார் இழந்துவிடுகிறோம், புரட்சியின் கோபம், என்ன கூறுமோ, யார் அறிவர்?

இராமநாதன் அவர்களின் கட்டுரையிலே, பார்ப்பனியம் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை இதோ வெளியிடுகிறோம், பார்க்கட்டும் திவான், கூறட்டும் இந்தப் படப்பிடிப்பு தவறா என்பதை! “பார்ப்பனியம் என்ற முறையிலே அடிப்படையான தத்துவம், பிராமணா மமதேவதா, அதாவது பார்ப்பனர் பூதேவர்கள் என்பதாகும். பார்ப்பனருக்குப் பிறப்பினாலேயே உயர்வு உண்டாகிவிடுகிறது. பிறர், எவ்வளவு பாண்டித்வம் பெற்றுப் பண்புற்ற போதிலும் பார்ப்பனராக முடியாது. பார்ப்பனன் உயர் ஜாதி, மற்ற ஜாதிகள் அந்தப் பார்ப்பன குலத்துக்குப் பணிவிடை புரியவே பிரமனால் படைக்கப்பட்டவர்கள். இந்தத் தர்மத்தை மறுப்பவர் நீசர், அவர்கள் சேரிகளிலே வறுமையிலே, சேற்றிலே, நொந்து கிடக்கவேண்டும்.’’
பார்ப்பனியம் இதுதானே? இல்லை என்று கூற முன்வரும் வீரன் உண்டா? இப்படி ஒரு வகுப்பு பிறவியிலேயே உயர் ஜாதியாகி மற்ற வகுப்பினரை அடக்கி ஒடுக்கி அடிமை கொள்வதுதான் சரியான முறை என்று கூற முன்வரும் அறிவாளிகள் யார்? இப்படித்தான் நடந்தாக வேண்டும் என்று கூறும் இறுமாப்பினைக்கொண்ட நெஞ்சினர் உள்ளவரையிலே வெல்லமல்ல உயிர், என்று கூறி வீறுகொண்டு எழுந்து அறப்போர் தொடுக்கும் ஆண்மையாளர்கள் ஆயிரமாயிரம் உண்டு என்பதைக் காட்டாதவன். மனிதனா, தமிழனா? பறந்துவரும் வல்லூறையும் பாய்ந்து சென்று தாக்க முனையுமாம் கோழி- தன் குஞ்சுகளின் நலனைக் கோரி. மானத்தைப் பழிக்க, இனத்தை அழிக்க, நீதியைச் சாய்க்க ஒரு சிறு கூட்டம் முனைகின்றதென்றால், நெடுஞ்சுவர்போல், ஓங்கிவளர் மரம்போலவா, இருப்பர் தமிழர்? அவர்கள் மனதிலே உணர்ச்சி கிடையாதா? நரம்புகள் முறுக்கை இழந்தே போயினவா? என்றெல்லாம் கேட்கலாம் என்று யாருக்குத்தான் தோன்றாது? அதனால் நாம் வீணாக வார்த்தைகளை வீசுவானேன் என்றே வாளா இருக்கிறோம், நாம் அறிவோம். புரட்சிவாடை வீசுவதை, மாளிகையிலே உள்ள மயிலையார் அதனை அறியார், அறியாததாலேயே அவர் ஆர்ப்பரித்திருக்கிறார். ஒரு திவானுக்கு இவ்வளவு “திமிர்வாதம்’’ இருக்கலாமா என்று நாம் விசாரிக்கவில்லை, இனஎழுச்சிமிக்க இக்காலத்திலே இறுமாந்து கிடக்கிறாரே இந்த ஆரியர் என்று கோபங்கொள்ளவுமில்லை. மாறாக, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆம்! திவானுக்கு நன்றியும் கூறுகிறோம். நன்றி கூறுகூது மட்டுமல்ல, நாளையும் இதுபோலவே பேசுங்கள். மேலும் மேலும் பேசுங்கள். தொடர்ந்து தொடர்ந்து பேசுங்கள், கூடிக் கூடிப் பேசுங்கள், என்று கேட்டுக்கொள்கிறோம். ஏன் என்று கேட்பீர். ஒரு சி.பி.யின் ஒரு நாள் உரை, எந்த இராமநாதனை இரவல் பெற்றுவிட்டோம், இனி அவர் நமது பொருள் என்று ஆரியம் எண்ணிக்கொண்டிருந்ததோ, அந்த எண்ணத்திலே மண் விழச்செய்து விட்டதல்லவா? தணல் தீச்சுழலாகி விட்டதல்லவா? இதுபோல் இனியும் பல தீச்சுழல்கள் திருநடனம் புரியக்காண்போம், ஆரியர்கள் தமது அகத்திலுள்ளதை மறைவின்றி மன்றேறிக் கூறிவிட்டால்.

“ஒற்றுமை ஒற்றுமை என்று ஓலமிடுவர், தேசியம் பேசுவர். ஆனால் ஒற்றுமை குலைக்கும் பார்ப்பனியத்தை ஒரு சொல் கண்டித்துக் கூறார், இத்தகைய தேசியவாதிகள், மக்களை ஏய்த்துக் கொண்டிருக்கின்றனர்!’’ என்று இராமநாதன் எழுதியிருக்-கிறார். கதராடையுடன் உலவிக்-கொண்டு, கைராட்டையை நம்பிக்கொண்டுள்ள எவ்வளவு திராவிடர்கள் இல்லங்களின் கதவுகளை இவ்வாசகம் தட்டுகிறது, “கதவு, திறமினோ! களம் காண்மினோ, இனத்தைக் காக்க எழுமினோ’’ என்று, எவ்வளவு உள்ளங்களிலே, இவ்வாசகம் பதிந்திருக்கும். தேவர்கள் துயிலிலே அமைதி இருந்திருக்குமா? நாடிமுத்துக்களின் நள்ளிரவு நினைப்பு என்னவிதமாக இருந்திருக்கும்!

“உண்மைதானே! அவர் கூறியது. முற்றிலும் உண்மைதானே!’’ என்று அவர்களிலே பலர் வாய்விட்டுக் கூறியுமிருப்பரன்றோ! ஆம்! இன்னமும் மயங்கிக் கிடக்கும் தமிழரை, நமது அணிவகுப்புக்குக் கொண்டுவந்து சேர்க்க, ஆரிய ஆணவமே நமக்கு உதவியாக இருக்கும். ஆகவேதான் சர்.சி.பி.யை நாம், மேலும் சில பல பேசுங்கள். மேற்குலப் பெருமையைப் பற்றி வானளாவ வாய் வீசுங்கள். தம்மை மறந்து, ஆரியரை அடுத்து வாழும், தமிழரும், உண்மை அறிந்துகொள்ளட்டும் என்று கூறுகிறோம். பசுத்தோல் கீழே வீழந்து விட்டால்தானே தடிகொண்டு தாக்குவர் புலியை. ஆகவேதான், ஆரியரின் ஆணவ உரைகள் நமக்குச் சிலசமயம் மகிழ்ச்சியைத் தருகின்றன.


“பகுத்தறிவாளன் படாதபாடு பட்டிருக்கிறான். இந்நாட்டிலே, சமணர்களைச் சித்திரவதை புரிந்தனர்; கழுவேற்றினர். சகலரும் சமம் என்ற சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய இராமாநுஜரை வைதிகம் பணியவைத்துவிட்டது, நந்தனைத் தீயிலே தள்ளிச் சாகடித்து, ஜோதியிலே கலந்தான் என்று புரட்டுரை புகன்றது,’’ என்று இராமநாதன், பகுத்தறிவாளர்களை வைதிகம் வாட்டிவதைத்தவிதத்தை உரைத்திருக்கிறார். இவ்வளவு இன்னல் உண்டா என்று பயங்கொண்டுவிடுவாரோ தமிழர் என்ற பயம் ஒரு துளியும் இன்றி, ஏன்! அவர் அறிவார் தன் இனத்தின் இயல்பினை. இடுக்கண் வருங்கால் சிரிப்பார். இன்னலைக் கன்னல் என்று ஏற்பர் கொள்கைக்காக. தமிழர் தயங்கார், மயங்கார், பணியார். கொடுமை பலபுரிய ஒரு கும்பல் துணிந்தாலும், பகுத்தறிவாளர் பின்வாங்கினதில்லை. அதனாலேயே பாரிலே அறிவு ஆட்சி செய்ய முடிந்தது. அறிவுக்கும் ஆண்மைக்கும் உயரிடம் தரும் இனம், தமிழர். அதனை அறிந்துதான், இவ்வளவு இடர்விளைவிப்பர். என்றாலும், பார்ப்பனியத்தை ஒழித்தாகவேண்டும், என்று தைரியத்துடன், நம்பிக்கையுடன் நண்பர் இராமநாதன் இதனைக் கூறினார். இருக்கும் சச்சரவுகள் போதாதென்றா, இப்போது ஓர் புதிய சண்டையைக் கிளப்பிவிடுகிறார்?
இந்து _ முஸ்லிம் சண்டை இருக்கிறது, இது போதாதா தொல்லை, புதிய தொல்லை வேண்டுமோ?
ஆதித்திராவிடரின் விடுதலைக்காகப் போராடுவதைவிட்டு, இந்த அம்பேத்கர் ஏன் வேறு சண்டையை மூட்டிவிடுகிறார்?
திராவிட நாட்டுப் பிரச்சினையைப் பற்றி வடநாட்டிலிருந்து வந்த ஒருவர் பேசுவானேன்? _என்று கேட்கும் மேதாவிகட்கு நண்பர் சரியான பதிலளித்திருக்கிறார். நாட்டிலே உள்ள நானாவித நோய்களுக்கும் மூலநோய் பார்ப்பனியமே என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
“பார்ப்பனியமே, இந்நாட்டிலுள்ள பல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. பார்ப்பனியமே இந்து _ முஸ்லிம் பூசலை உண்டாக்கிற்று. தீண்டாமையும் ஜாதிக் கொடுமையும், அதன்விளைவுகளே. திராவிட நாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சிக்குப் பார்ப்பனியமே காரணம்’’ என்று அன்பர் இராமநாதன் அடுக்கடுக்காகக் கூறிவிட்டார்.

டாக்டர் அம்பேத்கர் எந்த ஆதித்திராவிட மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறாரோ, அந்த மக்களின் அடிமைத்தனத்துக்குக் காரணம் பார்ப்பனியம், அந்தப் பார்ப்பனியத்துக்கு ஆதராம் வேத புராண இதிகாசங்கள், எனவே, ஆதித்திராவிடரின் தளைகளை உடைத்தெறிய வேண்டுமானால் வேத புராணப் புரட்டுகளை ஒழித்தாகவேண்டிய கடமை டாக்டர் அம்பேத்கருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கூறியதோடு, இங்கு எப்படி ஆரியர் உயர்ஜாதி என்ற இறுமாப்பான கோட்பாட்டினைக் கொண்டுள்ளனரோ, அதுபோலவே ஜெர்மானியர் அய்ரோப்பாவிலே பார்ப்பனர்களாக முயற்சிக்கின்றனர். அதனை நேசநாட்டுப் படைகள் முறியடிக்கின்றன. அதுபோலவே இங்கு பார்ப்பனிய பாசிசத்தை அழித்தொழிக்க அஞ்சாநெஞ்சன் டாக்டர் அம்பேத்கர் முன்வந்த ஆண்மையை நான் பாராட்டுகிறேன். என்றும் இராமநாதன் கூறியுள்ளார். நேர்மையுடன் அவர் கூறியுள்ளவற்றை ஏற்க ஆரியம் மறுக்கும் என்பது உறுதி. அணைத்தால் ஆரியம் அடங்காது! அடிவருடினால் அன்பு காட்டாது!! உன் பிடியிலே இனி இரேன் என்ற உறுதியைத் தெரிவித்துவிட்டால் மட்டுமே ஆரியம் அடங்கும். ஆண்மையாளர்காள்! இதனை அறிக! ஒன்று சேருக! வெல்க!!
– திராவிட நாடு
22.10.1944