வரலாற்றுச் சுவடு : மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

2023 பிப்ரவரி 1-15, 2023 மற்றவர்கள்

மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றின் கொள்கலன் அவர். ஆரியத்தின் கடும் எதிரி; அவர் எழுதிய ஒப்பியன் மொழி நூலின் முகவுரைப் பகுதி ஒன்று போதும்_- ஆரியத்தின் ஆணிவேர் முதல் உச்சந்தலைவரை உறிஞ்சி எடுப்பதற்கு! அதன் காரணமாகவே ஆரியப் பகைவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவர்.

“திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’’ என்னும் ஆய்வுக் கட்டுரை சாதாரணமானதல்ல! 23 மொழிகளைக் கற்றுத் துறைபோன மொழிக்கடல் அவர்! மொழியியல், சொற் பிறப்பியல், சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி, மொழி ஒப்பீடு, வரலாறு, ஞால நூல், மாந்தரியல், சொற்றொடுப்பு, உரை வரைவு முதலிய துறைகளில் புலமைமிக்கவர்.

அவர் நிறுவியது மூன்று கொள்கைகள்:
1. உலக முதன் மொழி தமிழே!
2. திராவிட மொழிகளின் தாய்மொழி தமிழே!
3. ஆரிய மொழிக்கு மூலம் தமிழே!
ஆகியனவாகும்.
5ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் மதுரையில் கலந்துகொண்டு தமிழ் முழக்கம் செய்து கொண்டிருந்தபோதே நெஞ்சுவலிக்கு ஆளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில நாள்களில் மறைவுற்றார். (1981, ஜனவரி 16).
அவர் ஆக்கித் தந்த நூற் செல்வங்கள் என்றென்றைக்கும் தமிழ் உலகிற்கு நல்லொளி ஊட்டக் கூடியவை; பன்னூறு ஆய்வுகளுக்கு மூலப் பொருளாக விளங்கக் கூடியவை!

தமிழ் செம்மொழியே என்பதற்கு அவர் யாத்த நூல்கள் போதாதா?

பெரியாரும் பாவாணரும்

செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. ‘விடுதலை’, ‘குடிஅரசு’ முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன்.

ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப்பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியுமிருக்கிறேன்.
ஒருமுறை நான் காட்டுப்பாடியிலிருக்கும் போது எனக்கு வருவாய் இல்லையென்று தெரிந்து என் வீடு தேடி கொஞ்சம் பணம் கொடுக்க வந்து, நான் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்த போது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்தில் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர்.
பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தாணியத்தை யெதிர்த்-ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை.

பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது பெரியார் விழாக்கொண்டாட்டத்தில் ஊர்தொறும் ஊர்வலத்திற் கலந்து கொள்வதும் விடிய விடிய சொற்பொழிவாற்றுவதும் பெரியார் படிமைக்கு மாலையணிவதும் பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்?
இதுகாறும் தமிழ்நாட்டில் தமிழர்க்கு மூவேறு வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வெ. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத்தையே அவர் தொண்டாகக் காட்டுபவர் அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவார். தம் சிறு கொள்கைக்கு வெற்றி பெறவே விழாவைப் பெருவியப்பாகக் கொண்டுள்ளனர்.
அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய,முப்பெரும் பெரியார் அகவல்

தமிழகத் தீரே தமிழகத் தீரே
மொழிவர லாறு மொழிவது கேண்மின்
பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு
நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்
பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள்
நைந்தமை தடுக்க நன்மருத் துவராய்
வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்
நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்
நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்
அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்
அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே
விடுதலை பெறவழி வேறில்லை யென்றே
கடவுள் இலையெனுங் காரங் கலந்து
மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்
மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே
அடிமை யொழித்த வல்லதை எழுத்தின்
வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை
குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து
பண்டம் விட்டுப் படிவம் பற்றித்
தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத்
தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து
பெரியார் பெயரைக் கெடுப்பார்
தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.