தலையங்கம் : பெரியாரிசத்தை ஒழிக்க பா.ஜ.க. கால் பதிக்கிறதா?

ஏப்ரல் 16-31,2021

காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யும் பா.ஜ.க.!

பா.ஜ.க.வின் கருநாடக எம்.பி. ஒருவர் (தேஜஸ்வி சூர்யா என்பவர்) ‘‘தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடுவது பெரியாரிசத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத்தான்’’ என்று கூறி, தங்களது முக்கியப் பணியாக எது இப்போது இருக்கிறது என்பதை வெளியே காட்டியுள்ளார்!

நாளும் நாளும் பெரியார் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவையே ஆட்கொண்டுவரும் மானுட குலத்தின் மகத்தான தத்துவமாக மாறி வருகிறார்!

பெரியாரிசம் என்பது வாணவேடிக்கை அல்ல;

ஒரு சமூக விஞ்ஞானம்!

பெரியாரிசம் என்பது வெறும் கிள்ளுக்கீரை அல்ல! பேதத்தால் மக்களைப் பிளவுபடுத்தும் வருணாசிரமத்தின் வைரியாகிய அசைக்க முடியா எரிமலை. அதனிடம் நெருங்கும் சனாதனத்தை சுட்டுப் பொசுக்கிவிடும். பெரியாரிசம் என்பது வாணவேடிக்கை அல்ல – ஒரு சமூக விஞ்ஞானம்!

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமை வாழ்வில் அவதிப்படும் மக்களை அதிலிருந்து விடுவித்து, புதிய சுகாதாரக் காற்றை – சமத்துவத்தை – சுயமரியாதையைக் கற்றுக் கொடுத்து, அவர்களை முழு மனிதர்களாக்கும் மூல பலம் – மாமருந்து!

கடைசி அடிமையும், பேதத்தால் மக்களைச் சுரண்டிவாழும் கடைசி எத்தனும், அதைப் புரிந்துகொள்ளாமல் காவிகள் வலையில் விழும் பித்தனும் இருக்கும்வரை பெரியாரிசம் இருந்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம். ஞாலத்தின் தேவை!

சமத்துவத்திற்காகச் சமர்புரியும் போராயுதம்!

பெரியாரிசம் என்பது வெறும் தேர்தல்  ஜால வித்தை கிடையாது; பரம்பரை யுத்தமான இரு வேறு தத்துவங்களின் போரில் சமத்துவத்திற்காகச் சமர்புரியும் போராயுதம் – பேராயுதம்!

இதன் வேர் எங்கே என்று இந்தக் காவிப் புல்லுருவிகளின் காமாலைக் கண்களுக்குத் தெரியாது.

சுயமரியாதை இயக்கத்தின் துவக்க காலப் பிரச்சாரத் தளபதிகளில் முக்கியமானவரான அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள் மேடைதோறும்,

‘‘ஈட்டி எட்டியவரை பாயும்;

பணம் பாதாளம்வரை பாயும்

ஆனால், எங்கள் பெரியார் இராமசாமியின் கொள்கைகளோ, அண்ட பிண்ட சராசரங்களையும் தாண்டி அதற்கப்பாலும் பாயும்’’ என்று முழங்குவார்.

அதனை இந்த காவிக் காளான்கள் அறியமாட்டார்கள்!

எதிர்ப்பு என்ற உரத்தாலேயே வளர்ந்தோங்கிய வயலின் விளைச்சல்!

காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்கிறார்கள்!

பெரியாரிசத்தை ஒழிப்போம் என்பவர்கள் ‘காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யவிருக்கும்’ அதிமேதாவிகள்!

அது சரிந்து விழும் மணல் வீடல்ல; எவர் மோதினாலும் அவர் மண்டைதான் உடையுமே தவிர, அந்த மலைக்கோட்டைப் பாறைகளுக்கு ஒருபோதும் சேதம் ஏற்படாது – காரணம், அது பேதத்தை வீழ்த்தும் பே(£)ராயுதம்!

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு உடனடியாக பதிலடி தரத் தயாராகிவிட்டனர். அது எப்படிப்பட்ட பொதுவான போர்க் கருவி – மனுதர்மத்திற்கு மரண அடி தரும் – எதிரிகளை விரட்டிடும் மகத்தான ஏவுகணை என்பதை உணர்த்தத் தொடங்கிவிட்டனர்!

பெரியார் அனைவருக்கும் உரியார்!

பெரியார் பாசறையாம் திராவிடர் கழகம் – திராவிடர் கழகத்தவர்களாகிய நாங்கள் பதிலடி கொடுப்பதற்கு முன்னால்,

‘‘கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தத்துவம் பெரியாரிசம், 

பெரியார் அனைவருக்கும் உரியார் – என்பதை

நரியாரைத் தவிர,  அறியார் பேதைகளே!’’

என்பதைப் பறைசாற்றும் வகையில் வெகுண்டெழுந்து,

மத்திய மேனாள் நிதியமைச்சர்  ப.சிதம்பரம் கண்டனம்!

மேனாள் இந்திய நிதியமைச்சரும், சிறந்த கருத்தியலாளருமான திரு.ப.சிதம்பரம் அவர்கள் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் சிறப்பாக பதில் உடனடியாகத் தந்துள்ளார்.

‘‘தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார்.

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா.

தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அ.இ.அ.தி.மு.க. பா.ஜ.க. தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை?

தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக,  வழிகாட்டியாக இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?

‘‘தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்‘ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பா.ஜ.க. இங்கு வந்திருக்கிறது’’ என்று பா.ஜ.க. தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

‘சனாதன தர்மம்‘ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.’’

பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்!

காங்கிரஸ் பேரியக்கத்தின் பேச்சாளர்களில் ஒருவரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் ‘‘பெரியாரிசத்திற்கு’’ முடிவு கட்டப் போகிறார்களாம். பா.ஜ.க. சொல்கிறது. பெரியார் எங்கள் மண்ணோடு, மனதோடு, உயிரோடு, உணர்வோடு கலந்தவர்.

எங்கள் பிணங்களின்மீதுதான் அது நடக்கும்.

நாங்கள் இல்லாமல் அது எப்படி ‘‘இந்தியாவாகும்?’’

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கண்டனம்

கோவில்பட்டியில் சி.பி.எம்.  வேட்பாளரை ஆதரித்து உரையாற்றிய பிரபல எழுத்தாளரும், புரட்சிகர சிந்தனையாளருமான தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் கூறியுள்ளதாவது:

“பா.ஜ.க தலைவர் ஒருவர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிடுவது பெரியாரிசத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத்தான் என்று தெரிவித்துள்ளார். பெரியாரிசம் என்பது தேர்தலுடன் சம்பந்தப்பட்டதல்ல என்பது அவருக்குத் தெரியாது. எங்கெல்லாம் ஜாதிய ஒடுக்குமுறை இருக்கிறதோ, ஆணாதிக்கம் இருக்கிறதோ, பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்கிறதோ, மூடநம்பிக்கை இருக்கிறதோ, கடவுளின் பெயரால் எங்கெல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களோ அங்கெல்லாம் பெரியார் இருப்பார். அதனால்தான் பா.ஜ.கவுக்கு திரும்பத் திரும்ப பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  கள்ளக்குறிச்சியில் அண்ணாசிலை எரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துவோரால் பேச முடியவில்லை. அந்த அளவுக்கு முதுகெலும்பற்றவர்களாக இபிஎஸ்சும் – ஓபிஎஸ்சும் இருக்கிறார்கள்.’’

பெரியார்தான் இப்போது புரட்சிகர இளைஞர்களுக்குப் பாடநூல் என்பது நிலைத்த உண்மையாகி விட்டது!

மலைமீது மோதி மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்!

தமிழ்நாட்டில் சொந்தக் காலில் நிற்க முடியாதவர்கள் – பெரியார் என்ற சிங்கத்தின் முன்னால் சிறுநரிகளின் ஊளைகள் – சிங்கம் சிலிர்த்தெழுந்து, கர்ச்சனை செய்யவே அது காரணியாகும்!

பா.ஜ.க.வினரே, அடிக்கடி இப்படி உளறுங்கள் – அதுவே எங்களுக்கு உற்சாகமூட்டும் செயலிகளாக வேலை செய்யும்!

அதற்காக ‘நன்றி’யும்கூட சொல்லுகிறோம்!

காவிகளே கனவு காணாதீர் – தேர்தல் களம் உங்களுக்குப் பதில் கூறும்!!

– கி.வீரமணி

               ஆசிரியர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *