திராவிட நிலவாய் ஆசிரியர் ஒளிர்ந்து வாழ்க !

2023 கவிதைகள் டிசம்பர் 1-15, 2023
…  முனைவர் கடவூர் மணிமாறன் … 
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர் எல்லாம்
உவகையுடன் ஆசிரியர் என்றே சொல்வர்;
நலமார்ந்த பகுத்தறிவை ஒதுக்கித் தள்ளி
நால்வருணம் மனுதருமம் என்றே ஏய்க்கும்
விலகாத மடமையிருள் நீக்க வந்த
வெங்கதிரே நம்தமிழர்  தலைவர் ஆவார்!
தளராமல் ஆற்றுமுயர் தொண்டால் போற்றும்
தகைசான்ற தமிழறிஞர் விருதும் பெற்றார்!
ஆரியத்தின் பொய், புரட்டை அழிக்கும் நோக்கில்
அன்றாடம் தம்முடைய எழுத்தில் பேச்சில்
வீரியமாய்ப் பதிவிட்டு நலன்கள் சேர்த்த
வீறார்ந்த பெரியாரின் அணுக்கத் தொண்டர்!
நேரியநற் பாதையினில் தமிழர் நெஞ்சில்
நிகரற்ற இனமானம் செழிக்கச் செய்யும்
கூரியநல் மதிவளத்தால் கொள்கைப்’பற்றால்
குவலயமே மதிக்கின்ற தலைவர் ஆனார்!
தொண்ணூற்றைக் கடந்திட்ட களப்போ ராளி!
துயரிழைக்கும் இனப்பகைவர் நடுங்கும் வண்ணம்
எண்ணத்தில் செயற்பாட்டில் எழுச்சி தன்னை
எல்லாரும் எய்திடவே உழைக்கும் ஏந்தல்!
உண்மையுடன் விடுதலையும் பெரியார் பிஞ்சும்
உயர்வான திராவிடநற் பொழிலும் வாழ்த்தும்
தொண்டறத்தில் முன்நிற்கும் இதழ்கள் ஆசான்!
தொலைநோக்குச் சிந்தனையால் பெருமை பெற்றார்!
உமி, பதரோ ஒருநாளும் அரிசி ஆகா!
ஒப்பனைகள் மேகம்போல் கலைந்து போகும்;
தமிழினத்தின் அடையாளம் மீட்க வந்த
தன்மதிப்புப் பேரியக்கக் குரிசில், நம்மோர்
நிமிர்ந்தெழவே கருத்தியலால் விளக்கம் நல்கும்
நெஞ்சுரத்தர்! அஞ்சாத அரிமா! என்றும்
தமிழ்காக்கும் ஆசிரியர் திராவிடத்தின்
தருநிழலாய் புகழ்நிலவாய் ஒளிர்ந்து வாழ்க! ♦