நிகழ்வு – சனாதனத்திற்கு எதிராய் வடலூரில் மாபெரும் மக்கள் எழுச்சி! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

2023 கட்டுரைகள் மற்றவர்கள் ஜூலை 16-31, 2023

– தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் எழுச்சி உரை

ஒரு குறுகிய காலத்தில், இந்த வடலூர் மாநகரம், இதுவரை காணாத ஓர் அற்புதமான மாநாட்டை அறிவார்ந்த கருத்துகளைச் சொல்லக்கூடிய மாநாட்டை – இன்னுங்கேட்டால், எதிர்காலத்தில் எப்படியெல்லாம் மாறுதல்கள் வரும் என்பதற்கான அடையாளத்தை, முன்பே சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

நண்பர்களே, ஒன்றை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அவர்கள் தெரியாமல் பேசவில்லை – திட்டமிட்டு, திசை திருப்பவேண்டும் என்பதற்காகத்தான் அதைச் செய்திருக்கிறார்கள். அதன் விளைவாக இங்கே நாம் சிறப்பாக உண்மை நிலையை எடுத்துச்சொல்லக் கூடிய அந்த வாய்ப்பை உருவாக்கினார்கள்.

‘‘பெரியாரும் – இராமலிங்கரும்!’’

இதோ என் கைகளில் இருப்பது 80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்களால் தொகுக்கப்பட்ட புத்தகம் ‘‘பெரியாரும்
இராமலிங்கரும்!’’ – எதிலிருந்து தொகுத்தார்கள் ‘குடிஅரசு’ பத்திரிகையில் தந்தை பெரியார்அவர்கள் எழுதியவற்றைத்தான் தொகுத்திருக்கிறார்.

இதில் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு செய்தியை உங்களுக்குத் தெளிவாக்கவேண்டும். தொடக்கத்தில் நம்முடைய வள்ளலார் அவர்கள், மற்றவர்களைப்போல, பக்தராகத் தான் இருந்தார்; பலவகையான வழிமுறைகளைத்தான் அவர் கையாண்டார். ஆனால், அதற்குப் பிறகு வள்ளலார் அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய அளவிலே, தன்னுடைய கருத்துகளில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்தார்கள்.

எப்படி தந்தை பெரியார் அவர்கள், சமூகநீதியை செய்வதற்கு, காங்கிரசிற்குப் போனால், சமூகநீதி கிட்டும் – அங்கேயே ஒரு பெரிய தேசிய விடுதலையை உருவாக்கி, அதன்மூலம் ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’ என்பதை உருவாக்கலாம் என்று நினைத்து, ஏமாந்து, எதிர்பார்த்ததையெல்லாம் செய்ய முடியவில்லையே என்பதற்காக, பிறகு சுயமரியாதை இயக்கத்தை அவர் தனியாக உருவாக்கினார்களோ, அதுபோலத்தான், வடலூர் வள்ளலார் அவர்கள், வள்ளல் பெருமான் அவர்கள் ஒரு பெரிய மாறுதல் அடைந்தார் – இறுதிக்காலத்தில் என்பதுதான் மிக முக்கியமானது.

அவருடைய இறுதிக் காலத்தில் அவர் அடைந்த மாறுதலைத்தான் ‘‘பெரியாரும் இராமலிங்கரும்’’ என்று நூலில் தொகுத்திருக்கிறார்கள்.
அதில் உள்ள ஒரு சில செய்திகளை உங்களுக்குச் சொல்லவேண்டும்.
ஆரம்பத்தில் அவர்கள் என்னென்னவெல்லாம் சொன்னார்களோ, அதையெல்லாம் கடைசி கால கட்டத்தில் அந்தக் கருத்துகளை மாற்றிக்கொண்டார்கள்.

‘‘பெரியாரும்இராமலிங்கரும்‘’ என்று, 90 ஆண்டு களுக்கு முன்பு தொகுக்கப்பட்ட புத்தகம். இன்றைக்கு நாங்கள் புதிதாக வடலூருக்கு வரவில்லை; வடலூர் ஏற்கெனவே ஈரோட்டிற்குப் போனதுதான். எனவேதான், இன்றைக்கு ஈரோடு, வடலூர் வள்ளாலாரைக் காப்பாற்றுவதற்காக இன்றைக்கு வந்திருக்கிறோம்.
கட்டுப்பாடோடு இருந்தால்தான், எதிரிகள் நம்மைப் பிரிக்க முடியாமல் ஓடோடிப் போவார்கள்!

வள்ளலார் பாடுகிறார்  -ஆறாந் திருமுறையை வள்ளலார் பாடுகிறார் – மாறிய வள்ளலார் பாடுகிறார் – சனாதனத்தைச் சாடும் வள்ளலார் என்ன? பாடுகிறார்

“ஜாதியும் மதமும் சமயமுங் காணா

ஆதி அநாதியாம் அது ஜாதியும் மதமும்

சமயமும் பொய்யென ஆதியில்

உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி.’’

இருட்டில் இருந்தேன்; அந்த இருட்டில் எனக்கு அறிவு வெளிச்சம் வந்தது. ஜோதி என்பது நெருப்பு இல்லை. நெருப்பு யாருக்கோ பயன்பட்டது; ஆனால், இன்றைக்கு நெருப்பும் நம்மிடத்திலே வராது; பொறுப்பு நம்மிடத்தில் இருக்கின்ற காரணத்தினால்தான், விருப்பு நம்மிடத்திலே இருக்கின்ற காரணத்தினால்தான், அனைவரையும் கட்டித் தழுவுகின்ற இயக்கம் இந்த இயக்கம். பிரித்துப் பார்க்கின்ற இயக்கமல்ல.அதைத்தான் வள்ளலார் தெளிவாகச் சொன்னார்கள்.
ஜாதி கிடையாது, மதம் கிடையாது – என் சகோதரர்களைப் பார்த்து தொடாதே என்று சொன்னார்களே, அவர்களை இல்லாமல் ஆக்கிவிடுவோம் நாங்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எட்டி நில் என்று சொல்லாதே கிட்டே வராதே என்று சொல்லாதே ரத்தத்தில் என்ன வேறுபாடு என்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
இது பார்ப்பான் ரத்தம் – பறையர் ரத்தம் என்று எங்கேயாவது உண்டா? மனித ரத்தம் என்றுதான் உண்டு.
இதை இப்பொழுது சொல்லவில்லை நண்பர்களே, வள்ளலார் அன்றே சொன்னார்.

“ஜாதியும், மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி’’
சமயம் என்று சில பேர் சொல்கிறார்கள், எல்லா வற்றிற்கும் சேர்த்துத்தானே – சனாதனத்
தினுடைய வேரைத் தூக்கி எறிந்தவர் வள்ளலார்.

“சாதி மதம் சமயமெனும் சங்கடம்விட்டு அறியேன்
சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன்’’

சாத்திரம் என்பது சேறு; அந்த சேற்றில் நான் மாட்டிக் கொண்டேன்; அதிலிருந்து எப்படி வருவது என்று தெரியாமல் தவித்தேன்; அப்படி தவித்து வெளியே வந்தவர்கள்தான் இந்தத் திருமாவளவனும், இந்த வீரமணியும், இந்தக் கருப்புச்
சட்டையும், இந்த நீலச்சட்டையும் என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

“ஆதி அந்தநிலை அறியேன் அலை
அறியாக் கடல்போல்
ஆனந்தப் பெரும்போகத்து
அமர்ந்திடவும் அறியேன்’’

இப்பொழுது எனக்கு ஏற்பட்டு இருக்கின்ற மகிழ்ச்சி இருக்கிறதே – ஜாதி குலம் இல்லாமல் வெளியே வந்திருக்கிறேன் என்கிறார்.

“கூறுகின்ற சமயம் எலாம்
மதங்கள் எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன்
ஒன்றுங்கொண்டறியர் வீணே
நீறுகின்றார் மண்ணாகி
நாறுகின்றார் யீவர்போல்
நீடுலகில் அழிந்துவிட
நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன்
ஏற்றுவித்தாய் ஆங்கே
இலங்குதிருக் கதவு திறந்து
இன்னமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான
சித்தியறப் புரிவாய் சித்தமே
வேநெறி ஆகமத்தின் நெறிபு ராணங்கள்
விளிம்புநெறி இதிகாசம்
விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உள்
அனைத்துங் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர
உணர்த் தினையே சித்தமே’’

நன்றாகக் கவனியுங்கள்! ஏன் திராவிடர் கழகத்துக் காரன், ஏன் பகுத்தறிவு பேசுகின்ற விடுதலைச் சிறுத்தைகள், ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள், ஏன் திராவிட இயக்கத்தவர்கள், பகுத்தறிவாளர், சிந்தனை யாளர்கள் – வள்ளலாரைக் காப்பாற்றவேண்டும் என்று ஏன் நினைக்கின்றோம்?

வள்ளலாருக்குக் காவிச் சாயம் பூச முனைந்தால்…
வள்ளலாருக்குக் காவிச் சாயம் பூச முனைந்தால்,
அது நடக்காது. என்று சொல்லக்கூடிய கூட்டம் இங்கே இருக்கிறது; அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது நாங்கள்.
மேலும் வள்ளலார் சொல்லுகிறார்,

“கலை உரைத்த கற்பனையே
நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கம் எல்லாம்
மண்மூடிப் போக’’

இந்தக் கண்மூடி வழக்கம் என்பதுதான் சனாதனம்!
இன்னும் சொல்லுகிறார் கேளுங்கள்:

‘‘மதமென்றும் சமயமென்றும்
சாத்திரங்கள் என்றும்
மன்னுகின்ற தேவரென்றும்
மற்றவர்கள் வாழும்
பதமென்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்க
பட்டஅனு பவங்கள் என்றும் பற்பலவா விரிந்த
விதம்ஒன்றுந் தெரியாது மயங்கினேனே’’

‘‘ஆரம்பத்தில் நான் மயங்கிப் போயிருந்தேன்; அதனால் என்னுடைய அறிவு மழுங்கிப் போயிருந்தது; நான் இன்றைக்குத் தெளிவுபடுத்திச் சொல்லுகின்றேன் _ -இதுதான் என்னுடைய உறுதியான கருத்து’’ என்று சொல்கிறார்.
எவன் திரிபுவாதம் செய்தாலும், வள்ளலா
ரைப் பாதுகாக்கும் ஒரு பெரிய அணியை நாங்கள் உருவாக்குவோம். அந்த அணியில், நாங்கள் இருப்போம், திருமா இருப்பார்; அத்துணை பகுத்தறிவுவாதிகளும் இருப்பார்கள்; அத்துணை சமத்துவவாதிகளும் இருப்பார்கள். லட்சக்கணக்கான மக்கள் மட்டும் இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை; உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நாம் செய்யவேண்டிய பணி என்ன?
வள்ளலார் அன்றைக்குச் சொன்னதைத்தான் பெரியார் எடுத்துக் காட்டினார்.
“நால்வருணம் ஆச்சிரம ஆசாரம் முதலாம்
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே!’’

சிறிய வயதில், மண்ணில் மூத்திரம் விட்டு, அதைப் பிடித்து வைத்து, இதுதான் பிள்ளையார், இதுதான் சாமி என்று சொல்வார்கள். அதுபோன்று பிள்ளை விளையாட்டு என்று சொன்னார் வள்ளலார்.

‘‘இந்தப் படை போதுமா?
இன்னுங்கொஞ்சம் வேண்டுமா?’’

ஆகவேதான், இந்தப் பிள்ளை விளையாட்டு
களையெல்லாம் எங்களிடம் காட்டாதீர்கள்; அதைக் கிள்ளி எறிவது எப்படி என்பதற்காகத்தான் இங்கே ஆயிரக்கணக்கான இளைஞர்கள், எழுச்சித் தமிழர் முன்னால், எங்கள் முன்னால், ‘‘இந்தப் படை போதுமா? இன்னுங்கொஞ்சம் வேண்டுமா?’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறார்கள்.
“சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன் மார்க்க வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே’’ அதனால்தான் தந்தை பெரியார் வள்ளலாரை ஆதரிக்கிறார்.

சன்மார்க்கம் என்றால் என்ன அர்த்தம்?

முகத்தில் பிறந்த ஜாதி, தோளில் பிறந்த ஜாதி, தொடையில் பிறந்த ஜாதி, காலில் பிறந்த ஜாதி என்று சொன்னார்கள்.
அன்றைக்கே தந்தை பெரியார் சொன்னார் – உங்களைப்போன்ற இளைஞர், பெரியாரிடம் கேள்வி கேட்டார்-
‘‘அய்யா, முகத்தில், தோளில், தொடையில், காலில் பிறந்தார் என்று சொல்கிறார்களே, நாங்கள் பஞ்சமர் – அய்ந்தாம் ஜாதியினர் என்று சொல்கிறார்களே, நாங்கள் எங்கே பிறந்தோம் என்று சொல்லவில்லையே?’’ என்று.
உடனே பதில் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள், ‘‘நீங்கள்தான் அப்பாவிற்கும் – அம்மாவிற்கும் பிறக்க வேண்டிய இடத்தில் முறையாகப் பிறந்தவர்கள்’’ என்று சொன்னார்.

எனவே, ஜாதி மண்மூடிப் போக என்று சொல்லக் கூடிய அளவில், இறுதியாக ஒரு செய்தியைச் சொல்கிறேன்.
நீங்கள் அமைதியாக இருந்திருந்தால், எழுச்சித் தமிழர் இன்னும் நிறைய பேசியிருப்பார். நான் பேசுவதைவிட, அவர் நிறைய பேசவேண்டும் என்றுதான் எனக்கு ஆசை.

ஏனென்றால், இன்றைக்கு நம்பிக்கை நட்சத்திரம் அவர் – உலகத்திற்கு. என்னிடம், அருள்மொழி ஞாபகப் படுத்தினார், 90 வயது, 90 வயது என்று.
வள்ளலாருக்கு ஒரு புதிய எழுச்சியை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். இதுவரையில், யாரோ நான்கு பக்தர்கள்தான், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். நான்கூட 5 ஆம் வகுப்பில் படிக்கும்பொழுது நடந்ததை ‘‘அய்யா வின் அடிச்சுவட்டில்’’ எழுதியிருப்பேன். எங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார் -‘‘கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று சொன்னவர் வள்ளலார்’’ என்று.

‘‘அப்படியா? யாருங்க அவர்’’ என்று கேட்டேன்.

‘‘இதோ பார்’’ என்று ஒரு பொம்மையைக் காட்டினார்.
சந்தைக்குச் சென்றபொழுது, வள்ளலார் பொம்மை விற்றார்கள்; அந்தப் பொம்மையை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து, தினமும், ‘‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங் கருணை’’ என்று சொல்லி வந்திருக்கிறேன். அப்போது அதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியாது.

‘‘கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக’’ என்று சொன்னார் வள்ளலார்.
சனாதனம் மண்மூடி போகச் செய்வதுதான் வள்ளலாருடைய தத்துவம்!

இன்னும் மண்மூடிப் போகவேண்டிய இடத்தில், கண்மூடி வழக்கம் இருக்கிறது. அந்தக் கண்மூடி வழக்கத்தை நிலைநாட்டுவது சனாதனம். அதை மண் மூடி போகச் செய்வதுதான் வள்ளலாருடைய தத்துவம். அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதோ ஒரு செய்தியை நான் சொல்கிறேன்.

சத்திய ஞான சபையில், பார்ப்பன படையெடுப்பு இப்பொழுது நடக்கவில்லை – இதற்குமுன்பும் ஒரு குழு வந்து, அது பிரச்சினையாகி வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.
மற்ற கடவுளைக் கொண்டு வந்து உள்ளே நுழைக்க ஆரம்பித்தன சனாதன சக்திகள். அதை எதிர்த்து வள்ளலார் பக்தர்கள் வழக்குத் தொடுத்தனர்.

‘‘வடலூர் வள்ளலார் வடலூரில் வருவாரா?’’ என்று கேட்டார்கள்.
வருவார் வள்ளலார் – எப்படி?

இதன்மூலம் வருவார் -இந்தக் கொள்கையின்மூலம் வருவார். அவர் உருவமல்ல_ – அவர் தத்துவம் -_ அவர் கொள்கை. அந்தக் கொள்கை நிச்சயமாக வரும்.
2006ஆம் ஆண்டு சத்திய ஞான சபையில், சிவலிங்கம் ஒன்றை, சபாபதி சிவாச்சாரியார் என்ற ஒரு பார்ப்பனர் வைத்து பிரதோசம் அன்று வழிபாடு செய்தார்.
இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்
திற்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதியரசர் சந்துரு மனுதாரர் முன்வைத்த விவாதங்களை ஏற்றுக்கொள்ளாது அவரது மனுவைத் தள்ளுபடி செய்து 24.03.2010இல் தீர்ப்பு வழங்கினார்.

வள்ளலார் என்பவர் முழுக்க முழுக்க இதற்கெல்லாம் விரோதமானவர்; இந்தக் கொள்கையை அவர் ஒருபோதும் ஏற்கமாட்
டார்கள் என்று சொல்லி,
தீர்ப்பின் தொடக்கத்தில் வள்ளலாரைக் குறித்த சிறு அறிமுகத்தைச் செய்துள்ளார்.

‘கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரம்ஆ சாரம்
சமயமதா சாரம்எனச் சண்டைஇட்ட கலக
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற்றவர்தம்
மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே’
‘ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே
என்ற வள்ளலாரின் பாடல்களுடன் அந்த அறிமுகம் தொடங்குகிறது. சமயம், ஜாதி, ஆகமம், வேதம் என்பன வற்றை அவர் ஏற்றுக்கொள்ளாததை வெளிப் படுத்தும் வழிமுறையாக,

‘சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில்
உணர்த்திய அருட்பெருஞ்சோதி’
‘ஆகமுடி மேல் ஆரண முடிமேல்
ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்சோதி’
‘சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி’
என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை எடுத்துக் காட்டி தீர்ப்பு வழங்கினார் நீதியரசர் சந்துரு அவர்கள்.
இங்கே அருள்மொழி அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்;

அழகாக விளக்கம் சொன்னார்,

‘‘வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடுகிறேன்’’

என்று பயிரைப் பார்த்து சொன்னாரே என்று.

அந்த ஓருயிராக இருக்கக்கூடிய பயிரைப் பார்த்துச் சொன்னார். அதனால்தான் சோறு போட்டார்.
அன்றைக்குப் பற்ற வைத்த அடுப்பு
இன்றும் எரிந்துகொண்டிருக்கிறது!
பசித்தவர்களுக்கெல்லாம் சோறு போட்டார்; அன்றைக்குப் பற்ற வைத்த அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட அந்த வள்ளலார், வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன் என்று சொன்னதினுடைய நோக்கம் என்ன?
பல பேர் வள்ளலாரைப் பற்றி பேசுவார்கள்; இரண்டே வரிகள்தான் தெரியும்.
அருட்பெருஞ்ஜோதி – தனிப்பெருங் கருணை என்பார்கள்.
நாங்கள் வள்ளலாருடைய ஆறாந் திருமுறை வரை படித்தவர்கள்; அவருடைய தத்துவத்தைப் புரிந்தவர்கள்.
எங்களுக்கு ஒப்பனை முக்கியமல்ல; உயிர், உடல் என்பது மிகவும் முக்கியம்.
‘‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே’’ என்ற இந்த வார்த்தை எங்கேயாவது இருக்கிறதா?
வள்ளலார் அவர்கள், திருவள்ளுவருடைய கருத்தை உள்வாங்கினார்.
அன்புடையார் எல்லாம் உடையார்.
உடனே நம்மூரில் இருப்பவர் என்ன சொல்கிறார், ‘‘ஓ, உடையார் ஜாதியாரைப்பற்றி திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் பாருங்கள்’’ என்று.
அவருடைய அறியாமையைப் பாருங்கள். இப்படி யெல்லாம் குறுகிய பொருள் கொள்ளக்கூடாது.
‘‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே!’’ என்றார்.
‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’’ என்று சொன்னார்.
ஆனால், இன்றைக்கு என்ன செய்கிறார்கள்? அன்போடு கடவுளைப் பார்க்கவேண்டும் என்று இங்கே இருக்கின்ற சகோதரர்கள் கோவிலுக்குச் சென்றால், கோவில் கதவைப் பூட்டி வைக்கிறார்கள். ‘‘பூட்டிய கதவைத் தட்டு – திற’’ என்று சொல்லுவதற்குத் திருமா வளவன்களும், வீரமணிகளும், மற்றவர்களும் திரளக் கூடியவர்கள்.
எனவேதான், வள்ளலார் இன்றும் தேவைப்படு
கிறார்; என்றும் தேவைப்படுவார்; பெரியார் அதைத்தான் வலியுறுத்தினார்.
ஆகவேதான் நண்பர்களே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனப் பரிந்துரையைப்
பற்றி நாமெல்லாம் பெருமைப்படவேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இளையபெருமாள் ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்தியாவே கவலைப்படவில்லை; கலைஞர்தான் கவலைப்பட்டார்; தி.மு.க.தான் கவலைப்பட்டது; இந்த இயக்கம்தான் கவலைப்
பட்டது. அதனுடைய விளைவு தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் என்பது.
இப்பொழுது வடக்கேயும் இது பற்றிக்
கொண்டுள்ளது. ஹிந்தி மாநிலமான ராஜஸ்தானில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
குரல் ஒலிக்கத் தொடங்கியதும், அலறுகிறார்கள் பார்ப்பனர்கள்.

சனாதனம் விடைபெறும் –
சரித்திரம் நிலைக்கும்!

ஆகவேதான்,
ஜாதி, மதம் என்பது, ஆட்டங்காணும்;
இயற்கை, விஞ்ஞானம் வெல்லும்;
அஞ்ஞானம் ஒழியும்;

சனாதனம் விடைபெறும் –
சரித்திரம் நிலைக்கும்!
தத்துவங்களை மாற்ற முடியாது நீங்கள் – எவ்வளவு பித்தலாட்டம் செய்தாலும், ரவி அவர்களே, நீங்கள் எப்படி அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கம் செய்து உத்தரவுபோட்டு, அதை உடனே வாபஸ் வாங்கினீர்களோ, அதேபோல, அடுத்து ஓடிப் போகவேண்டிய கட்டத்தை உருவாக்கவேண்டிய சூழ்நிலை உரு
வாகும். அது எங்களால் அல்ல; உங்களால்தான்.

எனவேதான், வடலூர் வள்ளலாரைக் கருவியாக நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதற்காக இவ்வளவு பெரிய மாநாட்டை குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த, கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களுக்கும், அவருக்கு ஒத்துழைத்த அத்துணைக் கட்சித் தோழர்களுக்கும், இயக்கத் தோழர்களுக்கும் நன்றி!

(7.7.2023 அன்று வடலூரில் நடைபெற்ற வள்ளலார் பெருவிழா மாநாட்டில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை.)