இணையதளத்தில் செக்ஸ்டார்சன் காவல்துறை எச்சரிக்கை! – சரவணா இராஜேந்திரன்

2023 மற்றவர்கள் மார்ச் 1-15,2023

விழிப்புணர்வு

செக்ஸ்டார்சன்..!?
அது என்னது… செக்ஸ்டார்சன்? சமூகவலைதளத்தில் பகிரப்படும் படங்களை ஆபாசமாகச் சித்திரித்து அல்லது மோசமான வார்த்தைகளைப் பகிர்ந்து, ஆபாசப் படங்கள் எடுக்க அழைப்பது, இணையவழியாகவே பாலியல் செயல்களுக்கு வலியுறுத்துவது செக்ஸ்டார்சன் என்று கூறப்படுகிறது.

இதுமாதிரியான மிரட்டலுக்குப் பலர் பலியாகி வருவதை அடுத்து அண்மையில் புரூக்கிங்க்ஸ் என்ற நிறுவனம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டது.இதற்கு இளம் வயதுப் பெண்கள் மட்டுமின்றி வயது முதிர்ந்த பெண்களும் பலியாவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்ல முடியாமல் மறைத்து விடுகின்றனர். இந்தப் பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிய வந்தாலும், இதுகுறித்து எந்தப் புள்ளி விவரங்களும் அவர்களிடம் இல்லை. இந்தச் சிக்கல் உலகம் முழுவதும் நிலவுவதாகத் தெரிய வந்துள்ளது.

இந்தக் கொடுமைக்கு ஆளாகிறவர்கள் ஒரே நாட்டை, ஒரே இடத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது இல்லை. இணையவழியில் நடக்கும் சீரழிவுகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக 18 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் மிகவும் அதிகமாக அதாவது, 71 விழுக்காடும், நடுத்தர வயதினர் 14 விழுக்காடும், முதியவர்கள் மட்டும் 12 விழுக்காடும் இதற்குப் பலியாகி வருகின்றனர்.
முக்கியமாக, சிறுமிகள் மற்றும் பள்ளி – கல்லூரி மாணவிகள் இந்தச் சீர்கேட்டில் சிக்கி வெளியே சொல்ல முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்

இணையதளத்தில் ஊடுருவி மற்றவரின் தகவல்களைத் திருடி, பின்னர் அவர்களுக்கு நிர்வாணப் புகைப்படம் அனுப்புவது, வேலை குறித்த தகவல்களைப் பரிமாறுவது, பின்னர்
ஆபாசப் புகைப்படங்
களைக் கேட்பது என்று தற்போது பெண்களுக்குப் பல வழிகளிலும் மிரட்டல் எழுந்துள்ளது.
சிறுமிகளும் பள்ளி _ கல்லூரி மாணவிகளும் இந்தக் குற்றச்செயல் புரிபவர்களின் மிரட்ட-லுக்கு அஞ்சி புகார் தெரிவிக்காமல் இருந்து-விடுகின்றனர் இதற்கு முக்கிய காரணம் குடும்பத்தினரைக் கொலை செய்வோம், குடும்பத்தில் உள்ள பெண்களின் படத்தை ஆபாசமாக வெளியிடுவோம் என்று அவர்களுக்கு வரும் மிரட்டல்தான் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆதலால், ஒவ்வொரு பெண்ணும் தங்களது இணையதளத் தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) எம்.பி.ஏ பட்டதாரி, பெங்களூரில் நல்ல பணியில் சேர்ந்து கனவுகளோடு வேலைக்குச் சென்றுகொண்டு இருந்தவர் 2021 மார்ச் 23 அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதைக் கண்ட குடும்பம் அதிர்ச்சியில் நிலைகுலைந்தது.என்ன நடந்தது என்று கூட அவரது குடும்பத்தினரால் ஊகிக்க முடியவில்லை இந்த நிகழ்வு நடந்த சில நாள் கழித்து அவரது அம்மாவிற்கு ஓர் அழைப்பு வந்தது. “உன் மகள் கொடுக்க வேண்டிய மீதித் தொகையைத் தரவில்லை, அதைத் தரவில்லை எனில், அவளது அந்தரங்க வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவோம்!” என மிரட்டுகிறார்கள், பதறிப்போன மகளை இழந்த தாய் காவல் துறையில் புகார் செய்ய மொத்தக் கும்பலும் வசமாகச் சிக்கியிருக்கிறது.

நடந்தது இதுதான்:

நிஷாவின் முகநூலில் சினேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் நட்போடு பழகி இருக்கிறார். இது போலிக் கணக்கு எனத் தெரியாமல் அந்த அய்டியில் இருந்த ஒரு நபருடன் நட்பு பாராட்டியிருக்கிறார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் நட்பு ‘பேஸ்புக்’ கடந்து, மெசஞ்சரில் நுழைந்து, வாட்ஸப் வரை வளர்ந்து, வீடியோ அழைப்புகளில் பாலுறவு உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இதைப் பதிவுசெய்துகொண்டு உனது குடும்பத்திற்கு அனுப்பிவிடுவேன், பணம் கொடு என மிரட்ட ஆரம்பித்திருக்கிறது சினேகா என்கிற போலிக் கணக்கு.
பதறிப்போன நிஷா தனது நண்பர்களிடமிருந்து பணம் திரட்டி மிரட்டல்காரனிடம் கொடுத்திருக்கிறார். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டவே அழுத்தம் தாளாது தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்தது தெரியாமல் போன் தொடர்பில் இல்லையே என அவரது அக்காவுக்கு மிரட்டலைத் தொடரவே சிக்கியிருக்கிறது இந்தக் கும்பல்.

ஒருவரது அந்தரங்கப் புகைப்படங்களையோ, காணொலியையோ வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிப் பணம் பறிப்பதுதான் ‘செக்ஸ்டார்சன்’ (Sextortion)குற்றம். இது பெண்கள் முக்கியமாக சிறுமிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் தான் இவர்களது குறி(Target).

குடும்பம் மற்றும் சமூகத்தில் தனது பெயர் கெட்டுவிடுமே எனக் கேட்ட பணத்தைக் கொடுப்பது மட்டுமின்றி, காவல் துறைக்கும் செல்ல மாட்டார்கள் என்பதுதான் இக்குற்றங்களுக்குப் பக்க பலமாக நிற்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தானில் ஒரு செக்ஸ்டார்சன் கும்பலைக் கைது செய்தது டில்லி காவல் துறை. 14 வங்கிக் கணக்குகளை வைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் 200 பேரை இவ்வகையில் மிரட்டி ரூ.30 லட்சம் பணத்தைப் பறித்திருக்கிறது இக்கும்பல். பாதிக்கப்பட்ட இருநூறு பேரில் ஒருவர் துணிந்து புகார் கொடுக்கவே இந்த நடவடிக்கை சாத்தியமாகி இருக்கிறது. இதுபோல எண்ணற்றக் குழுக்கள் ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரை மிரட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்?

இலக்கு ஆண் என்றால், பெரும்பாலும்20 – 30 வயது மற்றும் 45 -60 வயது ஆண்களுக்கு, பெண்கள் பெயரில் போலிக் கணக்குகளைத் துவங்கி பேஸ்புக், டின்டர், இன்ஸ்டா உள்பட சமூக வலைதளங்களில் நட்பு அழைப்பு விடுக்கிறார்கள்.

நட்புக் கோரிக்கை ஏற்கப்பட்டவுடன் பெண்கள் அனுப்புவதுபோல செய்திகள் அனுப்பி, பழகி, வாட்ஸப் வீடியோ அழைப்புகளில் உல்லாசத்திற்கு அழைக்கிறார்கள். பெண்போல செய்தி அனுப்பலாம்; குரல் மாற்றும் செயலிகளைக் கொண்டு பெண்போலவும் பேசலாம். ஆனால், காணொலி அழைப்புகளில் போலி எனத் தெரிந்துவிடுமே!

இதை தவிர்க்க, வீடியோ அழைப்புகளின்-போது இருவழிகளைக் கையாளுகிறார்கள். மிரட்டல் குழுவில் ஒரு பெண்ணும் இருக்கிறார். எதிர்முனையில் இருக்கும் ஆணிடம் பேசி அவரது அந்தரங்கச் செயல்களைப் பதிவுசெய்வது முதல் வழி. அல்லது ஆபாச இணைய தளங்களில் பெண்கள் பேசுவதுபோல இருக்கும் வீடியோவைத் தரவிறக்கி, அதன் ஆடியோவை சம்பந்தப்பட்ட நபரின் பெயரை உச்சரிப்பதுபோல் மாற்றி வீடியோ அழைப்பு-போல் ஒளிபரப்புவது இரண்டாவது வழி.

இல்லை! நான் சும்மா பழகுவேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என மறுத்தாலும் தப்பிக்க முடியாது. வீடியோ காலில் தெரியும் உங்களது ஒரு நொடி முகம் போதும். அதைப் பதிவுசெய்துகொண்டு, ஏற்கெனவே தயாராக இருக்கும் பெண் வீடியோவின் வலது புற மேல்முனையில் சிறியதாக எடிட் செய்துவைத்தால் போதும். பார்ப்பதற்கு அந்தப் பெண்ணிற்கும் உங்களுக்கும் நீண்ட நாள் தொடர்பு இருப்பதுபோலவும், அவரது செயல்களை வீடியோ அழைப்பில் பார்த்து நீங்கள் ரசிப்பதுபோலவும் சித்திரித்துவிட முடியும்.
தெரியாத நபர்களிடமிருந்து பெண்களுக்குத் திடீரென மெசெஞ்சரில் வரும் வீடியோ அழைப்புகளுக்கு இப்படியும் ஒரு பின்னணி உண்டு. யார் என்ன என்பது தெரியாமல் எடுத்தால் எதிர்முனையில் ஓர் ஆண் நிர்வாணமாக நிற்பது போன்று இருக்கும். இதைப் பார்த்து, பதறி, கைவிரல்கள் நடுங்க வீடியோ அழைப்பைத் துண்டிக்கும் உங்கள் அந்த நொடி முகம் போதும், மேற்சொன்னபடி எடிட் செய்து மிரட்ட!

இந்த எடிட் அல்லது அந்தரங்கப் பதிவு முடிந்தவுடன் மிரட்டலைத் துவங்குகிறார்கள். ஏற்கெனவே உங்கள் வலைதளக் கணக்கு-களிலிருந்து உங்கள் நண்பர்கள், குடும்பம், நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் என உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டியிருப்பார்கள். அவர்களுக்கு அனுப்பி, உங்கள் பெயரைச் சமூகத்தில் காலி செய்துவிடுவேன் என மிரட்டுவார்கள். உங்களால் எவ்வளவு தொகை எளிதாகத் தர முடியும் என்பதையும்கூட கணித்திருப்பார்கள். ஒருமுறை தந்தால் இதிலிருந்து தப்பித்துவிடலாம் எனச் சொன்னதை நம்பி நீங்கள் தந்தால், மிரட்டல் தொடரும். உங்கள் வங்கி கணக்கு, வாழ்நாள் சேமிப்பு என அனைத்தும் காலியாகும் வரை இது தொடரும்.

மிரட்டல்களை எப்படித் தவிர்ப்பது? தப்பிப்பது?

சமூக வலைத்தளங்களில் நட்பு வகைக் கோரிக்கைகளை ஏற்கும்போது கவனமாகச் செயல்படுங்கள். அது புதிய கணக்கா, எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள், புகைப்படம் இவையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள். இதை வைத்தே போலிக் கணக்கா இல்லை நம்பகமானதா எனக் கண்டுபிடித்துவிடலாம். இது தவிர்த்து கோரிக்கையை ஏற்றவுடன் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களுடன் பேச வேண்டும் என செய்தி வந்தால், சரிதான் நாமதான் இலக்கு என அறிந்து எச்சரிக்கையாகிவிடுங்கள். போலிப் புகைப்படத்தைப் பார்த்து ஏமாறாமல் மனதைக் கல்லாக்கிக்கொண்டாவது பிளாக் செய்துவிடுங்கள்.

இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி

அந்தரங்க மிரட்டல்களில் இருக்கும் ஒரு பிரச்சினை பாதிக்கப்பட்டோர் புகார் செய்ய முனைவதில்லை. ஆகவேதான் ஒரு புகாரில் இருநூறு பேர் ஏமாந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதுபோன்ற நிலை மாற வேண்டும். சைபர் குற்றங்களுக்கு காவல் எல்லை இல்லை. இதற்கெனத் தனித்துச் செயல்படுகின்ற சைபர் செல்களிலும் புகார் செய்யலாம். நேரில் புகார் தர இயலாத நிலை என்றால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் ஆன்லைனிலும் புகார் செய்யலாம்..

மேலும் நம் அந்தரங்கப் புகைப்படமோ காணொலியோ இணையத்தில் கசிந்து-விட்டால் அத்தனையும் முடிந்தது என உடைந்துவிடாதீர்கள். இந்தப் பலவீனமான மனநிலைதான் சைபர் மிரட்டல்களின் ஆதார அச்சு. இது ஒரு பெருங்குற்றம். இது போன்ற மிரட்டல்களுக்குக் காவல் துறை மட்டுமே உங்களுக்கு உதவிட முடியும். மேலும் உடலைவிட இங்கு உயிர் வாழ்தல் மிக முக்கியம். நீங்கள் அளிக்கும் புகார் பாதிக்கப்பட இருக்கும் பல உயிர்களைக் கூடக் காப்பாற்றலாம்.
ஆகவே துணிந்து புகார் செய்யுங்கள்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மொபைல் போன்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணியுங்கள்.. அவர்களின் மொபைல் போனில் வாட்ஸ் அப், இன்ஸ்டா ஸ்னாப், சாட், குரல் அழைப்பு போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணியுங்கள் உங்கள் பிள்ளைகளின் மொபைலில் அவர்கள் ஸ்கிரீன் லாக்பின், நம்பர், பார்டர், அல்லது இதரவகைகளில் லான் செய்திருந்தால் அதன் விவரங்களைக் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

முக்கியமாக இரவு நேரங்களில் தங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் இருப்பதை அனுமதிக்காதீர்கள் இது போன்ற செக்ஸ்டார்சன் குற்றத்தினைப் புரியும் மோசடிப் பேர்வழிகளில் 92 விழுக்காடு இரவு 10 மணிக்குப் பிறகுதான் தங்களது மோசடி வலையை விரிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பிள்ளைகளின் கல்வி மட்டுமே முக்கியமானது. அவர்கள் பொழுது போக்கு நண்பர்களுடன் பேசுகிறேன் என்று கூறுவதை நம்பி அவர்களுக்குச் சுதந்திரம் முக்கியம் என்ற நினைப்பில் அவர்களை அவர்கள் போக்கில் விடவேண்டாம்.

14 வயது முதல் 22 வயது வரை மொபைல் இணையதளப் பாதிப்புகள் குறித்து அறியாமல் அவர்களாகவே செக்ஸ்டார்சன் என்ற மோசடிப் புதைகுழியில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனால் குடும்பத்தினரும் இந்த மோசடியாளர்களின் பிடிக்குச்சென்று துன்பத்தில் உழலும் சூழலுக்கு ஆளா
கின்றனர். எனவே, இளைஞர்களும், பெற்றோரும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டியது. கட்டாயம்! என காவல்துறை எச்சரித்-துள்ளது. எனவே, காவல்துறை எச்சரிக்-கையை ஏற்று விழிப்புடன் இருப்பது கட்டாயம். றீ