உயர் கல்வி நிறுவனங்களில் ஊடுருவும் மதவெறிக் கூட்டம்! – முகப்புக் கட்டுரை

2023 மார்ச் 1-15,2023 முகப்பு கட்டுரை

– மஞ்சை வசந்தன்

மும்பையில் அய்.அய்.டி-யில் ‘பி.டெக்’ முதலாமாண்டு படித்து வந்த 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். அவர் அய்.அய்.டி விடுதியின் 7ஆம் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்கொலைக்கான குறிப்பு எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், தர்ஷன் சோலங்கி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று அவரது சகோதரி ஜான்வி உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
இதன் பின்னணியில், தலித் மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணத்திற்கு நீதிகேட்டு நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பேரணிகளை நடத்தி வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, தில்லி ஜவகர்ஹால் நேரு பல்கலைக்கழகத்திலும், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் 19.2.2023 ஞாயிறன்று மாலை ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் முடிந்தபின், 30-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். அதன்பின்னர் இரவு 9:00 மணியளவில் அங்குள்ள மாணவர் செயற்பாட்டு அரங்கில் (Teflas)‘100 பூக்கள்’ என்ற மாணவர் மன்றத்தின் சார்பில் ‘ஜானே பி தோ யாரோ’ என்ற திரைப்படம் ஒன்றும் திரையிடப்படுவதாகவும் இருந்தது.இந்நிலையில், அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன், மாணவர் செயற்பாட்டு அரங்கத்தில் இருந்த காரல் மார்க்ஸ், லெனின், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஏபிவிபி குண்டர்களின் இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறிப்பாக, ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு மருத்துவப் பாடத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த நாசர் முகம்மது மொய்தீன், கனமான பொருளால் தாக்கப்பட்டு தலையில் படுகாயம் அடைந்துள்ளார். சக மாணவர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால், ஏபி.விபியினர் ஆம்புலன்சையும் மறித்து அராஜகம் செய்துள்ளனர். பல்கலைக்கழக மருத்துவ மய்யத்திற்குள் புகுந்தும் அநாகரிகமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

கல்விதான் உரிமை வேட்கைக்கான உயிரோட்டம் என்கிற உண்மையை நன்கு புரிந்துவைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பனக் கூட்டம், அக்கல்வியை தனக்கு மட்டுமே உரியதாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருந்த நிலையில், ஆங்கில ஆட்சியும், ஜோதிராவ் பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோரின் போராட்டங்களும் அந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தன.

இதன் விளைவாய்த் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் கல்வி பயின்று அய்-.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகளாய், நீதிபதிகளாய், பொறியாளர்களாய், மருத்துவர்களாய், விஞ்ஞானிகளாய், வழக்குரைஞர்களாய், பல்துறை வல்லுநர்களாய், கலைஞர்களாய் உருவாகி, உயர்ந்து வருவதோடு, ஆரியப் பார்ப்பனர்களைப் பின்னுக்குத் தள்ளி சாதித்து வருவதால், ஆத்திரமுற்ற ஆரியப் பார்ப்பனக் கூட்டம் இந்த வளர்ச்சியைத் தடுக்க என்னென்ன சதித் திட்டங்களைச் செயல்படுத்த முடியுமோ அத்தனையையும் செயல்படுத்திப் பார்த்தனர்.
ஆனால், பெரியார் தொண்டர்களும், அம்பேத்கர் தொண்டர்களும், கன்சிராம், முலாயம் சிங், லாலுபிரசாத் போன்றவர்களும், அவர்களது வழிகாட்டிகளும் தொடர்ந்து விழிப்போடிருந்து ஆரிய ஆதிக்கத்தை, சூழ்ச்சியை முறியடித்தனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததாலும், நேரு, இந்திரா, வி.பி.சிங், மன்மோகன்சிங் போன்றவர்கள் சமூகநீதியைத் தாங்கி நின்றதாலும் ஆரியப் பார்ப்பனக் கூட்டம் அடங்கி ஒடுங்கியது.

ஆனால், இராமனைக் காட்டி, மதவெறியை ஊட்டி, பி.ஜே.பி.யை வளர்த்து, மோடி என்ற ஒரு மனிதரை முன்னிறுத்தி மாற்றம், ஏற்றம், வளர்ச்சி இவற்றை உடனே உருவாக்கும் சக்தி படைத்தவராய் அவரைத் தூக்கி நிறுத்தி, அதிக எண்ணிக்கையில் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்து, ஏங்கிக் கிடந்த ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கக் கூட்டம் (ஆரியக் கூட்டம்) மீண்டும் எழுந்து, கொடூரக் கரம் நீட்டி, தாழ்த்தப்பட்டோரை, பிற்படுத்தப்பட்டோரை அடக்கி நசுக்குவதிலும், தங்கள் ஆதிக்கத்தை வளர்ப்பதிலும், தங்கள் சமஸ்கிருதத்தைப் பரப்புவதிலும், தங்களுக்குச் சாதகமான மனுஸ்மிருதி, பகவத் கீதை போன்ற மனித எதிர் நூல்களைப் பரப்புவதிலும் தீவிரங் காட்டுவதோடு, தாங்கள் சொல்வதைத்தான் சாப்பிட வேண்டும், தாங்கள் கூறும்படிதான் உடுத்த வேண்டும், தங்கள் சாஸ்திரப்படிதான் வாழவேண்டும், மீறினால் கொல்லுவோம் போன்ற செயல்பாடுகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.

இதன் முதற் கட்ட செயல்பாடாக, சமூகநீதி, பகுத்தறிவு, ஆரியப் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சனாதன, சமஸ்கிருதத் திணிப்பு மறுப்பு என்று சிந்தனை விதை விதைத்த பகுத்தறிவாளர்களை வீட்டிற்கே சென்று படுகொலை செய்து மிரட்டல் விடுத்தனர். இதன்மூலம் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாம் என்று கனவு கண்டனர். ஆனால், எதிர்விளைவு விபரீதமாய் மாற, பின்வாங்கிப் பதுங்கினர்.

அறிவுநுட்பம் வாய்ந்தவர்களாய் ஒடுக்கப்-பட்ட சமுதாய மாணவர்கள் உருவாவதையும், அவர்கள் விழிப்போடும், விவரத்தோடும், உரிமை வேட்கையோடும் வளர்வதையும் தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து இறங்கினர்.

அதன் முதல்கட்ட வெள்ளோட்டம் சென்னை அய்.அய்.டி.யில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரான செயல்கள் அவர்களால் தொடங்கப்பட்டது. அந்த நிறுவன மாணவர்களேயன்றி, அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஆர்தெழுந்து போராடிய தாலும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் போர்க்கோலம் பூண்டு போராடியதாலும் ஆர்.எஸ்.எஸ். ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் அடங்கிப் பணிந்து போனது.
அடுத்து, அய்தராபாத்தில் அவர்களின் ஆதிக்க வெறியை அரங்கேற்றினர். அந்த வெறிக்கு அறிவார்ந்த ஒடுக்கப்பட்ட மாணவர் ரோகித் வெமுலா பலியானார். போராட்டம் இந்தியா எங்கணும் பரவ, ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கூட்டம் அப்படியே பின்வாங்கி ஓடி ஒளிந்தது.
எவ்வளவு மூக்குடை பட்டாலும், எத்தனை முறை தோற்றாலும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவது ஆரியப் பார்ப்பனர்களின் பரம்பரை வழக்கம் என்பதால், அய்தராபாத் சூடு தணிவதற்குள், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்களின் கலவரத்தை, மோசடியை மூலதனமாகக் கொண்டு தொடங்கினர்.

9.2.2016 ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியதாக தேசவிரோத குற்றஞ்சாட்டி, இப்பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னையா குமாரைக் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.அய்.) தேசியச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜாவின் மகள் அபராஜிதா உட்பட 7 பேர் மீது தேசவிரோத வழக்குப் போடப்பட்டது.

அரசின் இந்த மோசடிச் செயலைக் கண்டித்து மாணவர்களும் பேராசிரியர்களும் பெரும் போராட்டத்தில் இறங்கினர்.
மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது இருப்பதாக வெளிப்படையாகக் குற்றச் சாட்டினர். இக்குற்றச்சாட்டு முற்றிலும் மோசடியானது.

“நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேசத்தை மனதார நேசிக்கிறோம். இந்த நாட்டின் எண்பது சதவிகித ஏழைகளுக்காக நாங்கள் போராடுகிறோம். இதுவே எங்களைப் பொறுத்தவரை தேசத்தை வழிபடுவது ஆகும். எங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீது அளவில்லாத நம்பிக்கையுள்ளது. அரசமைப்பை யார் எதிர்த்தாலும், அது சங்பரிவாரங்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் மட்டுமே நம்பிக்கையுள்ளது. டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான ஜந்தேவாலனிலும், நாக்பூரிலும் சொல்லித் தரப்படும் மனுவின் சட்டத்தின் மீது எங்களுக்குத் துளியும் மதிப்பில்லை. இந்தத் தேசத்தின் ஜாதியமைப்பின் மீது எங்களுக்கு எந்தப் பற்றுதலுமில்லை.’’ என்று இந்திய மாணவர் சங்கத் தலைவர்(AISF) கன்னையகுமார் பேசியதுதான் அவர்களை பாடாய்ப்படுத்தியது.

உரிமை வேட்கையுள்ள, ஆதிக்கம் அழிக்க நினைக்கும் மனித உரிமைப் போராளி எவரும் பேசக்கூடிய – பேச வேண்டிய பேச்சுதானே இது! இதில் என்ன குறை கண்டார்கள்? குறைதான் காண முடியுமா? முடியாது! எனவேதான், மோசடி முறையில் பழிபோட்டு, தேச விரோத வழக்குப் புனைந்து சிறைப்படுத்தினர்..

மேலும், 15.2.2016 அன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கன்னையாகுமார் நேர் நிறுத்தப்பட்டபோது, அங்குத் திரண்ட ஆசிரியர்கள், மாணவர்களை 40க்கும் மேற்பட்ட பி.ஜே.பி. வழக்குரைஞர்கள் திடீர் என்று தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மையினர் அமைப்பின் உறுப்பினர் அமீக் ஜமேய் என்பவரை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஓ.பி.ஷர்மாவும் அவரது ஆதரவாளர்களும் வெறிகொண்டு தாக்கினர்.

2001இல் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் கிலானி குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்ட பின், 16.02.2016 அன்று தேச விரோத வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அடுத்தகட்ட விசாரணைக்கு நீதிமன்றத்-திற்கு அழைத்து வரப்பட்ட கன்னையாகுமார், நீதிமன்ற கட்டுக் காவல்களையெல்லாம் மீறி, நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கப்பட்டார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் புனையப்பட்ட தேசவிரோத குற்றச்சாட்டும் அப்பட்டமான மோசடி என்பது இறுதியில் உறுதியாகிவிட்டது.
காணொளியைப் பதிவு செய்த விஷ்வ தீபக் தனது தலைமை எடிட்டர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு அவர் டில்லி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மோசடித் திரையைக் கிழித்தார்.
உயர்கல்வியின்

உண்மை நிலை என்ன?
இந்தியாவில் IITக்கள் (Indian Institute of Technology உள்ளன. இவை பொறியியல் கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள்.
நம் நாட்டில் மத்திய பல்கலைக்கழகங்கள் 49 உள்ளன. இவை எல்லா துறைகளையும் கொண்டுள்ள உயர் கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மய்யங்கள். இவை அடிப்படை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தருபவை.

மேலும் 20 IIMகள்(Indian Institute of Management)உள்ளது. இவை நிருவாகத் திறனை வளர்க்க உதவும் கல்வி நிலையங்கள். இது தவிர 31NITகள் (National Institute of Technology) உள்ளன. இவை ஒரு தனிப்பட்ட துறையில் சிறந்து விளங்க உருவாக்கப்பட்டவை.
மேற்கண்ட 123 கல்வி நிலையங்களில் வெறும் 3 சதவிகித மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். ஆனால், இந்த மூன்று சதவிகித மாணவர்களுக்கு உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 50 சதவிகிதத்தை நம் நாடு செலவு செய்கிறது.

ஆனால், இந்தியாவில் மொத்தம் 367 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை உயர் கல்வி மற்றும் அடிப்படை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தருபவை. இது தவிர 38,498 கல்லூரிகள் நாடெங்கும் உள்ளன. இவைதான் அநேக மாணவர்களுக்கு உயர் கல்வியை வழங்கிக் கொண்டுள்ளன. இந்த மாநில பல்கலைக்கழகங்களிலும் மற்றும் கல்லூரிகளிலும்தான் நாட்டின் 97% மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 50 சதவிகிதம் செலவு செய்யப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீட்டுக்குள்ளே பல மாணவர்கள் படித்து முன்னேறி வரவேண்டிய சூழல். ஆனால், வெறும் 3 சதவிகிதம் பேர் படிக்கும் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைக் கண்டால் அருவருக்கத்தக்க நிலையில் உள்ளன.

இந்தியாவில் சிறந்த அய்.அய்.டி.களில் சென்னை அய்.அய்.டி முதலிடம் பெற்றுள்ளது என்பது நம்மைப் பெருமைப்படுத்த வைத்தாலும், அங்கே நடைபெறும் ஒடுக்குமுறையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சென்னை அய்.அய்.டி.யில் ஜாதிவெறி தலைவிரித்தாடுவதாகக் குற்றஞ்சாட்டி விபின் என்ற உதவிப் பேராசிரியர் பதவி விலகினார். அதற்கு முன்பு தமிழ்நாட்டுக் கணித மேதையான முனைவர் வசந்தா கந்தசாமி, ஜாதிவெறி கொண்டவர்களால் சென்னை அய்.அய்.டி.யில் மோசமாகப் பழிவாங்கப்பட்ட நிகழ்வு சமூகநீதி களப் போராளிகளால் மக்களின் கவனத்திற்கு வந்தது.

கடந்த ஆண்டு ஃபாத்திமா லத்தீஃப் என்ற மாணவி, சில ஆசிரியர்களின் மதவாத வெறுப்பரசியலால் விளைந்த வக்கிர புத்தியால் பாதிக்கப்பட்டு தன்னையே மாய்த்துக் கொண்ட சம்பவம் சென்னை அய்.அய்.டி.யில் நடந்தது.

அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ரோகித் வெமுலா என்ற முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர், விடுதியிலேயே ஜாதியக் கொடுமை தாங்காமல் தன்னையே பலியிட்டுக் கொண்ட சம்பவம் உலகையே உலுக்கியது.

அய்.அய்.டி.யில் தமது கல்வியைத் தொடர முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்துவோரின் புள்ளிவிவரம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அய்.அய்.டி.யிலிருந்து கல்வியைத் தொடர முடியாமல் வெளியேறுவோரில் 60% முதல் 88% வரை தலித் மாணவர்கள் என்ற அதிரவைக்கும் உண்மை அம்பலமாகியுள்ளது.

5.8.2021 அன்று மாநிலங்களவையில் தொடுக்கப்பட்ட வினா ஒன்றிற்கு விடையளிக்கும்போது, கடந்த அய்ந்தாண்டுகளில் அய்.அய்.டி உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திலிருந்து அதிகமாக ஒடுக்கப்பட்ட தலித் சமுதாய மாணவர்கள் பாதியிலேயே வெளியேறும் புள்ளிவிவரம் ஒன்றிய அரசின் கல்வியமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி அய்.அய்.டி.யிலிருந்து வெளியேறுவோரில் 88% தலித் மாணவர்கள், டெல்லியில் 76%, சென்னையில் 70%, கான்பூரில் 61%, கரக்பூரில் 60% இதைத் தற்செயலானதாகப் பார்க்க முடியாது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் மிக அதிக அளவில் அய்.அய்.டி.யிலிருந்து வெளியேறுகின்றனர்.

‘நீட்’ தேர்வால் வடிகட்டப்பட்ட அனிதாக்கள் போக, தடைகளைத் தாண்டி அய்.அய்.டி. போன்ற உயர் கல்வி நிலையங்களில் நுழைந்த மீதி மாணவர்களையும் ஜாதியச் சுடுகணைகள் மூலம் தாக்குவதை எத்தனை காலம்தான் வேடிக்கை பார்ப்பது?
ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ். ஆட்களின் – பார்ப்பனர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உலகுக்கே தெரியும். கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால் ஒழிய, இந்த அலங்கோலங்களுக்கு விடிவு பிறக்காது.

சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் நடத்தி வந்த குருகுலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஆரிய சனாதனக் கொடுமை, தந்தை பெரியாரை காங்கிரசிலிருந்து வெளியேற்றி, சுயமரியாதையின் களம் காண வைத்தது. அதுபோல, உயர்கல்வி நிலையங்களில் தொடரும் ஜாதிய வன்கொடுமைகள், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வழிவகுக்க வேண்டும்.

மனிதர்களில் பஞ்சமர்கள், சூத்திரர்கள் என்று பிரித்து, ஒதுக்கி, தீண்டாமையைக் கடைபிடித்த அவர்களுக்கு, படிப்பில்கூட சூத்திரப் படிப்புகளைப் பிரித்து ஒதுக்கி வைத்தனர். ஆனால், அப்படிப்புகள் (ஆங்கிலம், பொருளாதாரம், வளர்ச்சிக்கான கல்விகள்) 2016இல், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அய்.அய்.டி. வளாகத்திற்குள் கற்பிக்கப்பட பஞ்சமர்களும், சூத்திரர்களும் அங்கு நுழைய வாய்ப்புக் கிடைத்தது.

ஆம், பொருளாதாரம், வரலாறு, ஆங்கிலம் வளர்ச்சிக்கான கல்விகள் போன்ற படிப்புகளை அவர்கள் பஞ்சமர், சூத்திரர்களுக்காகவே ஒதுக்கி வைத்தனர். கலைக்கல்லூரிகளும் பஞ்சமர் சூத்திரர் கல்லூரிகளாகவே செயல்படுகின்றன. அப்படிப்புகள் அவர்கள் புனிதம் காத்த வளாகத்திற்குள் வந்ததால், நொந்து, வெந்து வெடிக்கின்றனர்.

இப்படிப்புகள் சார்ந்த பாடப் பொருள்கள், சமூகம், பொருளாதாரம், வரலாறுகள் பற்றிய கருத்துகள் பேசுவதால், ஆய்வதால், இதைப் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்கான கருத்துக் களங்களும், பேசும் வாய்ப்புகளும், விவாதிக்கும் உரிமைகளும் தானே அந்த வளாகத்துள் வருகின்றன; உயர்கல்வி நிருவாகம் இந்தக் கருத்துக்களை கல்விக்கு அப்பாற்பட்டவையாகக் கருத முடியாமல், கண்டிக்க முடியாமல் போனதால் காழ்ப்பின் உச்சத்திற்குச் சென்றனர். அய்ந்தாண்டுகால ஒருங்கிணைந்த அப்படிப்புகளை அவ்வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தவும், அந்த ஆசிரியர்களை நீக்கவும் ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சட்டம் போட்ட இந்த ஆரியப் பார்ப்பனர்கள், இன்றைக்கு கலைப் பாடங்களை அய்.அய்.டி. வளாகத்தில் வரக் கூடாது என்பது ஏன்?

இப்படிப்பட்ட சூழல்களில்தான், பெரியார் _ அம்பேத்கர் வாசகர் வட்டத்தைத் தொடங்கி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள், பார்ப்பன ஆதிக்கப் பாதிப்புகள் போன்றவற்றை விவாதித்து மாணவர்களுக்கு விழிப்பூட்டினர். மோடி அரசின் மோசடிகள் தோலுரிக்கப்பட்டன, முகமூடிகள் கிழிக்கப்பட்டன. மோடி அரசைத் தாங்கி நிற்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகள் ஆத்திரங்கொண்டன. கண்ணெதிரே தங்கள் ஆதிக்கக் கோட்டை சரிவதைக் கண்டு கலங்கின.

அய்.அய்.டி. வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் என்று 70% மேல் ஆரியப் பார்ப்பனர்கள்தான். அவர்களிலும் பலர் ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள்தான். எனவே, ஆர்.எஸ்.எஸ்.இன் வழக்கமான செயல்திட்டப்படி சூழ்ச்சி, மோசடி, வதந்தி பரப்பல், இரகசியத் திட்டம், வன்முறை என்ற பல வழிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்.

ஆரிய பார்ப்பன ஆதிக்கம்

சமூகநீதிக்கு விரோதமாக அய்.அய்.டி. பேராசிரியர்கள் நியமனப் பட்டியல்:
சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ளலாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவிகிதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-.41 சதவிகிதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.
இணைப் பேராசிரியர்கள் (Associate Professors) 91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவிகிதம்) பிற்படுத்தப்
பட்டோர் பூஜ்ஜியம், தாழ்த்தப்பட்டோர் 3 (3.3 சதவிகிதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம் உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவிகிதம்) பிற்படுத்தப்
பட்டோர் 7 (3.95 சதவிகிதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவிகிதம்) பழங்குடியினர் -1.
ஆக, கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப் பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று. – இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு – மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப் படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத்துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரியராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டவர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் _- அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில் என்ற நிலை அய்அய்டியில் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

தமிழ் தலைவர் ஆசிரியர் கண்டனம்!

‘‘புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்-கழகத்தில் 19.02.2023 இரவு திட்டமிட்டு ஏபிவிபியால் பெரியார் படங்கள் உடைக்கப்-பட்டுள்ளன. இந்த ரவுடிக் கும்பலின் வன்முறையைத் தட்டிக்கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சில நாள்களுக்கு முன்பு பெரியாரிய ஆதர-வு மாணவர் பிரவீன் இதே காவிக் கும்பலால் தாக்கப்பட்டு கால் உடைந்த நிலையில் இருக்கிறார்.
இந்த மாணவர்கள் ஜேஎன்யூவில் தொடர்ச்சியாக சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள். “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் சமூகநீதிக்கான மாணவர் அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

பல்கலைக் கழகத்திலேயே பெரியார் பிறந்தநாள், சட்ட எரிப்பு மாவீரர் நாள்,
புதுக்கோட்டை வேங்கைவயல் வன்கொடுமைகளை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து இயங்கியவர்கள்.
தமிழ்நாட்டு மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது பற்றி ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பல்கலைக்கழக நிருவாகமும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. கூட்டத்துக்கு ஆதரவாகவே இயங்குகிறது.
தமிழ்நாடு அரசும், புதுடில்லியிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

உள்துறை அமைச்சகத்தின் கடமை!

டில்லி மாநிலத்தில் சட்டம் _ ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரின் கடமை.
டில்லியில் சட்டம் _ ஒழுங்கு எப்படி சந்தி சிரிக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டியவர் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷாதான்.
தந்தை பெரியார் ஒரு கட்சித் தலைவரல்ல_ உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மகத்தான தலைவர்! எரிமலையைச் சீண்ட வேண்டாம் – எச்சரிக்கை!’’
என்று ஆசிரியர் கண்டித்து எச்சரித்துள்ளதை ஒன்றிய அரசும், உயர்கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களும், பயிலும் மாணவர்களும் கருத்தில்கொண்டு, மாணவர் உரிமை மதவெறிக்கு இடமின்றி காக்கப்பட வேண்டும்!
இது உடனடித் தேவை!
கட்டாயக் கடமை!