ஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்!

ஏப்ரல் 01-15 2020

கே:       மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டிருப்பது – நீதிபதியின் நேர்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அவரின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டா?

– சங்கமித்திரன், மதுரை.

பதில்: நீதிப்போக்கு…

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஜஸ்டிஸ் டிபக் மிஸ்ரா இருந்தபோது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய நால்வர் நீதிபதிகளில் இவரும் ஒருவர். பிறகு ஒரு பெண் ஊழியர் பாலினப் புகார் – குற்றச்சாட்டு. அதற்குப் பிறகு வந்த ரபேல் தீர்ப்பு, தேர்தல் நேர தீர்ப்பு, ராமர் கோயில் பாபர் மசூதி – – இன்னும் பல. நாடே அறிந்தவை தான். இப்போது கைமேல் பரிசும் கிடைத்தது. அந்தோ நீதித் துறையின் நிலை  இப்படியா மக்களின் விமர்சனத்திற்கும், வெறுப்புக்கும் ஆளாவது. மாநிலங்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இவர் பதவியேற்ற போது கொடுத்த “வரவேற்பு” வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா?

கே:       பெரியார் மய்யத்தை ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் உருவாக்கினால் பெரியாரின் கொள்கைப் பரவல் விரைவுபடும். இது காலத்தின் கட்டாயம். அயல் நாட்டில் வாழ் இன உணர்வாளர்களின் உதவியுடன் இதைச் செய்யலாம். செய்வீர்களா?

– சசி, ஈரோடு.

பதில் :               இது சரியான — வாய்ப்பான பருவம் அல்ல. ஆங்காங்கே துவக்கப்படும் நிலை வருங்காலத்தில் கனியும். இது உறுதி. இளைய தலைமுறை இதனை முன்னெடுக்கும்.

 

கே:       கடவுள் நம்பிக்கையுள்ள இன உணர்வாளர்களைத் தனி ஓர் அணியாக அமைத்தால், அது களப் போராட்டங்களுக்கு வலுவுள்ள சக்தியாக மாறும் அல்லவா?  திட்டமிடுவீர்களா?

– காதர், சேலம்.

பதில்:                நமது போராட்டங்களில் – சமூகநீதி, -கல்வி,- மனித உரிமைப் போராட்டங்களில், ஆத்திகர் – – நாத்திகர் வேறுபாடு பார்ப்பதில்லை. எனவே தனி அணி தேவையில்லை.

கே:       இனமானப் பேராசிரியர் இழப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

– நெய்வேலி க.தியாகராசன்,

பதில்:  எல்லா மேடைகளிலும் பெரியார் கொள்கை முழங்கிய அந்தக் குரலின் கம்பீரம் இனி கேட்க முடியாது என்றாலும் அவர் தந்த ஊக்கம்  நம்மை வழி நடத்தத் துணையாக நிற்கும்.

கே:       பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இன்மையும், வன்கொடுமையும் அதிகரிக்கும் சூழலில் இப்பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டியது கட்டாயமல்லவா?

– சோமு, தாம்பரம்.

பதில்:                ஆம். உண்மை தான். அடுத்தடுத்த பல இடிகள் விழுந்துகொண்டே இருக்கும்போது பல களங்கள் பெருகுவதும் உண்மை தானே!

கே:       குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இஸ்லாமியர்கள் எதிர்க்கும் அளவுக்கு கிறித்துவர்கள் எதிர்க்காமல் இருக்கக் காரணம் என்ன? பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வெற்றியாகிவிடாதா?

– பார்த்திபன், சைதை.

பதில்: இல்லை. அவர்களும் எதிர்க்கிறார்கள். எப்போதும் அவர்கள் அதிகமாக ஓசை எழுப்பாதவர்கள். அவர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். ஏமாறவில்லை.

கே:       இரயில்வே, பி.எஸ்.என்.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்து, கார்ப்பரேட் மயமாக்குவதால் இட ஒதுக்கீடும் சேர்ந்து ஒழியுமே! பொதுத்துறை நிறுவனங்களைக் காக்க நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமல்லவா?

– சேகர், தஞ்சாவூர்.

பதில்:                எப்போதும் 24 மணி நேரமும் போராட்டக் களமே சாத்தியமா? மக்களுக்குத் தெளிவு வரும். ஒரே தீர்வு சரியான தீர்ப்பு மூலம் கிடைக்கும்.

கே: ‘நீட்’ தேர்வு தொடர்ந்தால் சி.பி.எஸ்.இ பள்ளிகள் அதிகம் வளர்ந்து, மாநில மொழிகள் அழியும். மருத்துவக் கல்வி பாதிப்பைவிட இது பெரிய பாதிப்பு என்பதை முதன்மைப் பிரச்சாரமாகக் கொண்டால், எதிர்ப்பு இன்னும் வலுப்படும் அல்லவா?

– மகிழ், சென்னை.

பதில்:                நீட் தேர்வு பற்றிய பரவலான விழிப்புணர்வு இப்போது முன்பை விட அதிகம். ஜூனியர் விகடனில் தொடர் கட்டுரை – நீட் மோசடி பற்றி வருவதே சரியான சாட்சியம் அல்லவா? மக்களும் பெற்றோரும் உணர்ந்துவரும் பல காரணங்கள் உண்டுதான்!

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *