முகப்புக் கட்டுரை – சந்திரயான் – 3 வெற்றியும் மூடநம்பிக்கைத் தகர்ப்பும்!

2023 Uncategorized செப்டம்பர் 1-15,2023 முகப்பு கட்டுரை

– மஞ்சை வசந்தன்

அண்மையில் சந்திரயான் 3 நிலவின் தென்பகுதியில் இறங்கி ஆய்வை மேற்கொண்டு வருவது விண்வெளி வரலாற்றில் நிலையான பதிவு ஆகும். ஆம்! நிலவின் தென்பகுதியில் விண்கலம் இறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமை என்றைக்கும் நிலைக்கக்கூடியது. அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வுகள் பல வகையில் உலக வளர்ச்சிக்கும், நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரிதும் பயன்படுகின்றன.

உற்பத்திப் பெருக்கம், விரைவான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, மருத்துவ வளர்ச்சி, இயற்கையை எதிர்கொள்ளல் என்று எண்ணற்ற நன்மைகளை அறிவியல் வளர்ச்சி நமக்கு அளிக்கிறது. அத்தோடு, மூடநம்பிக்கைத் தகர்ப்பிற்கும், விழிப்புணர்விற்கும், குழப்பங்கள், அய்யங்கள் அகலவும் அறிவியல் இந்த மானுடத்திற்கு மகத்தான வகையில் உதவுகிறது.

அறிவியல் வளர்ச்சி வருவதற்கு முன் எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள். இந்த உலகத்தை கடவுள்தான் படைத்தார். சில நாள்களில் படைத்தார். மண்ணையும், விண்ணையும், உயிர் உள்ளவற்றையும், உயிர் இல்லாதவற்றையும் அவரே படைத்தார் என்று நம்பப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு விதமாய் இந்த நம்பிக்கையிருந்தது.

கடவுள் படைத்த விதிப்படிதான் ஒருவரின் வாழ்வு அமையும்; அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பிறவிகள் கடவுளால் தரப்படுகிறது; கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன. பிறக்கின்ற நேரத்தில் கிரக அமைப்புகள் எப்படியிருக்கின்றனவோ அதற்கேற்பவே ஒருவரின் வாழ்வு அமையும்; சந்திரனுக்கு 27 மனைவிகள்; சூரியன் ஏழு குதிரை பூட்டிய தேரில் வருகிறான் என்று எண்ணற்ற மூடநம்பிக்கைகள். அது சார்ந்த ஆயிரமாயிரம் சடங்குகள்.

சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் நிழல் மறைப்பு என்ற உண்மை அறியாது பாம்பு விழுங்குகிறது என்று சொல்லி கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது என்று தடை; அது சார்ந்து அனேக வழிபாடுகள், பூசைகள்.
சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சியென்று கோயில்களில் வழிபாடுகள். ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தரும் விளம்பரங்கள். பெயர்ச்சி பலன்கள் கூறி பிழைப்பு என்று ஏராளம், ஏராளம்!

டார்வின் தந்த பரிணாமக்கோட்பாடு, கடவுள்தான் உலகைப் படைத்தது என்ற மூடநம்பிக்கைக்கு முடிவு கட்டியது; காலரா தடுப்பூசி காளியாத்தாள் சீற்றத்திற்கு முடிவு கட்டியது; அம்மைத் தடுப்பூசி மாரியாத்தாள் முத்துப்போடுகிறாள் என்ற மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பூமி உருண்டை என்ற கண்டுபிடிப்பு, பல புராண நம்பிக்கைகளை புதைக்குழிக்குள் அனுப்பியது. ஆதிசேஷன் பூமியைத் தாங்குகிறான் என்ற அறியாமையையும் இது அடியோடு அகற்றியது. அர்ஜுனன் வானத்தில் வர்ணவில் போடுகிறான் என்ற நம்பிக்கையை, இயற்பியல் ஆய்வுகள் இல்லாமல் செய்தன. அறிவியல் வளரவளர, அறியாமையும், மூடநம்பிக்கையும் அன்றாடம் அகன்று வருகின்றன.

புரட்டுகளை புறங்கண்ட புதிய கண்டுபிடிப்புகள்

ஒன்பது கிரகங்கள் சுழற்சிக்கு ஏற்பவே நம் வாழ்வு அமையும் என்று கூறி சோதிடத்தை உருவாக்கினர். மக்களின் மூடநம்பிக்கைகளில் ஒன்றாக இருந்த சோதிடத்தை ஆட்சிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ். காவிக்கூட்டம், அதை அறிவியல் என்று சொல்லி பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.அடிமுட்டாள்தனத்தை அறிவியல் கண்டுபிடிப்புகள் அடித்து நொறுக்கி வருகின்றன.
கோள்கள் 9 அல்ல; மேலும் சில கோள்கள் உள்ளன என்று புதிய கோள்களைக் கண்டுபிடித்து காட்டிவருகின்றனர். இன்னும் கண்டுபிடிக்கப்படாத கோள்கள் சில உள்ளன. உண்மை இப்படியிருக்க, 9 கோள்களை மட்டும் வைத்து கணிக்கப்படும் சோதிடம் எப்படிச் சரியாகும்? மற்றக் கோள்களின் பலன் கணக்கில் கொள்ளப்படாமல் கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியலாகும்?

அதைவிட மிக முக்கியமான கருத்து, சூரியன் இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்கிறது என்று கூறும் தப்பான செய்தி. சூரியன் நிலையாக நிற்கிறது. அது தன்னைத்தானே சுற்றுகிறதேயன்றி இடம் பெயர்ந்து செல்வதில்லை. அதைவிட மிக முக்கியமான உண்மை சூரியன் கிரகம் அல்ல. அது ஒரு நட்சத்திரம். கோள்(கிரகம்) என்பது வேறு, நட்சத்திரம் என்பது வேறு. இவர்கள் கூறும் 9 கிரகங்களில் சூரியன் கிரகமே அல்ல. ஆக, அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சோதிடம் என்பது சுத்த பித்தலாட்டம்.மூடநம்பிக்கையின் மொத்தம்!

பஞ்சாங்க பித்தலாட்டம்

பஞ்சாங்க பழைமைக்கு பராக்கு பாடிவந்த பாசிசக் காவிக்கூட்டம், சந்திரயான்_3 போன்ற விண்வெளி சாதனைகள் மூலம் அதிர்ச்சியடைந்துள்ளது. காரணம், அவர்களின் கட்டுக்கதைகள், இட்டுக்கட்டுகள், முட்டுக்கொடுப்புகள் அனைத்தும் விண்வெளிச் சாதனைகள் மூலம் தகர்ந்து போயுள்ளன.
கிரகங்களின் இயக்கங்கள் பற்றி பஞ்சாங்க கணிப்புகள் பலவும் தவறானவை. நான் மேலே சுட்டிக்காட்டியதுபோல, கிரகங்களின் எண்ணிக்கை, சூரியனை கிரகமாகக் கருதும் மடமை, சூரியன் இடம் பெயர்வதாகக் கூறும் அறியாமையெல்லாம் பஞ்சாங்கத்தில் உண்டு. இவை மட்டுமல்லாமல் பஞ்சாங்கத்தில் நடைபெறும் தில்லுமுல்லுகளும் தற்போது வெளிப்பட்டுள்ளன.

எங்கள் பஞ்சாங்கம் அறிவியல் நுட்பம் உடையது. அதன் கணிப்புகள் துல்லியமானவை என்ற அளப்புகள் எல்லாம் இப்போது தப்பானவை என்று உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதை வான்வெளி விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் அவர்கள் தெளிவாக விளக்குகிறார்.

ஜனவரி 14 உத்ராயணம் தொடக்க நாள் என்கிறது பஞ்சாங்கம். ஆனால், உத்ராயணம் ஜனவரி 21, 22 தேதிகளிளே தொடங்கிவிடுகிறது. தை 1ஆம் தேதி “மகாசங்கராந்தி” என்கிறது பஞ்சாங்கம். ஆனால், தை முதல் தேதியில் சூரியன் “தனுசு” ராசியில் உள்ளது. இவையெல்லாம் பஞ்சாங்கம் கூறும் உண்மைக்கு மாறான கருத்துகள்.

, பஞ்சாங்க கணிப்புகள் தற்கால அறிவியல் வளர்ச்சியில் பொய்யாகி வருவதால், இக்காலத்தில் பஞ்சாங்கம் அச்சிடக் கூடியவர்கள், கொல்கத்தாவில் உள்ள “வான்பொருள் நிலைக் கணிப்பு மையம்” வெளியிடும் தரவுகளை பஞ்சாங்கத்தில் பதிப்பித்து (அச்சிட்டு) விடுகிறார்கள்” என்கிறார். ஆக, இப்போதெல்லாம் பஞ்சாங்க கணிப்புகள் இப்படிப்பட்ட பித்தலாட்டங்களின் தொகுப்புகளாகிவிட்டன.

சிவன் தலையில் நிலவு?

நிலவைப் பற்றி எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள். நிலவு என்பது ஒரு கோள்(கிரகம்). அது பூமியைப் போன்று மண்ணால் ஆனது. இதை ஒரு ஆணாகக் கருதி, அதற்கு சந்திரன் என்று பெயரிட்டு, அந்த சந்திரனுக்கு 27 மனைவிகள் என்று சனாதன புராணங்கள் கூறுகின்றன.

இந்துமதக் கடவுளில் முதன்மைக் கடவுளான சிவன் தலையில் நிலவு இருக்கிறது என்பது இந்துக்களின் மிகப்பெரிய மூடநம்பிக்கை. சந்திரன் பெற்ற சாபத்தால் நிலவு தேய்ந்து கொண்டே வந்தது. முழுவதும் தேய்வதற்குள் நிலவு சிவனை வேண்ட, சிவன் அதைத் தலையில் சூடி மீண்டும் வளர்வாய் என்று சந்திரனுக்கு அருள் தந்தார். முன்னமே பெற்ற சாபப்படி நிலவு தேயும், சிவன் தந்த அருளால் மீண்டும் வளரும் என்று புராணம் புனைந்தது பூணூல் கூட்டம்.

ஆனால், அமெரிக்கா 1969இல் நிலவில் மனிதனைக் கால் பதிக்கச் செய்ததன் மூலமும், தற்போது சந்திரயான்3 நிலவின் தென்பகுதியில் தரையிறங்கியதன் மூலமும், நிலவு சிவன் தலையில் இல்லையென்பதும், சிவனும் இல்லை என்பதும், நிலவு தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லையென்பதும், நிலவு ஆண் அல்ல அது மண் என்பதும், சந்திரனுக்கு 27 மனைவிகள் இல்லையென்பதும் இந்தஅறிவியல் சாதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டதோடு, இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் அனைத்தும் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளன.

மூடநம்பிக்கைக்கு முட்டுக் கொடுக்கும் மோடி!

சந்திராயன் – 3 சாதனை மூலம் சிவனும் இல்லை, பக்கத்தில் சக்தியும் இல்லை, சிவன் தலையில் நிலவும் இல்லையென்பது தெள்ளத் தெளிவாக உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய நாட்டின் பிரதமர் மோடி தங்கள் கட்சியின் – ஆட்சியின் சனாதன சித்தாந்தப்படி, இந்த அறிவியல் சாதனைக்கு சமாதி கட்டும்படி சந்திரயான் தரை இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்று பெயர் இட்டுள்ளார். இது எப்படிப்பட்ட மோசடிச் செயல். இவர்கள் நம்பிக்கை கட்சிக்குள்ளும் வீட்டிற்குள்ளும் இருக்க வேண்டுமே தவிர அறிவியல் துறையில் அதை நுழைப்பது அறிவியலுக்கும், அதன் சாதனைகளுக்கும், அதைச் சாதித்தவர்
களுக்கும், மனித குலத்திற்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும். எனவே, மோடியின் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆட்சி மாற்றத்திற்கு பின்பாவது அது அகற்றப்பட வேண்டும்.

மதச்சார்பற்ற ஒரு நாட்டின் அறிவியல் சாதனைக்கு ஒரு மதத்தின் சாயத்தைப் பூசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மோடிக்கு உண்மையில் விண்கலம் பற்றிய அறிவு இருப்பின், நாணயம் இருப்பின், நேர்மை இருப்பின் என்ன காரணத்திற்காக சந்திரயான் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்று பெயரிட்டார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்! இல்லையேல் அறிவியல் வல்லுனர்கள், சந்திரயான்_3 சாதனையாளர்கள் இதைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்; எதிர்க்கவேண்டும்.

தகுதித்தேர்வு எனும் மூடநம்பிக்கையையும் இது முறியடித்தது!

சந்திரயான்  3ன் சாதனை, நிலவு சார்ந்த மூடநம்பிக்கைகளை முறியடித்ததோடு, தகுதித்தேர்வு சார்ந்த மூடநம்பிக்கைகளையும் முறியடித்துள்ளது.. கீழ்க்கண்ட விடுதலை தலையங்கம் இதை தெளிவாக விளக்குகிறது.23.8.2023 என்பது அறிவியல் உலகில் அரிய நாள்!

மயில்சாமி அண்ணாதுரை

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான் -3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. இதுதான் உலகளவில் முதல் வெற்றியாகும்.

சந்திரயான்-2 தோல்விக்குப் பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-_3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

வீரமுத்துவேல்

பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பின்னர் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் – 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.

நிலவுக்கும், லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்த
பட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிக பட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டு வரப்பட்டது.
பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சார்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தேர்வு செய்யப்பட்டது.

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரை யொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த சந்திரயான்-_3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் “நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம்; சந்திரயான்_3 திட்டத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை கொண்டவர் பெண் விஞ்ஞானி வனிதா முத்தையா. அண்ணா பல்கலை.யில் பொறியியல் படித்த
வனிதா, சந்திரயான்-_2 வெற்றிக்காக அப்போது இரவும் பகலும் பாடுபட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக நிலவை சுற்றி வரும் சந்திரயான்_2இல் உள்ள ஆர்பிட்டர் தற்போது சந்திரயான்_3 உடன் இணைந்து செயல்படும் அளவுக்கு பணிபுரிந்து சாதித்து காட்டியவர் வனிதா ஆவார்.

தமிழர்களின் தனித்திறன்

இந்த வெற்றியின் பின்னணியில் உள்ளவர்கள் மூன்று தமிழர்கள் என்று எண்ணும்போது நம் நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது.
“சந்திரயானின் மூன்று திட்டங்களுக்கும், தமிழ்நாட்டின் மயில்சாமி அண்ணாதுரை, வனிதா, தற்போது வீரமுத்துவேல் ஆகியோர் பொறுப்பு என்ற நிலையில் இது தமிழர்களின் சாதனை” என்று கூறி நமது முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சாதாரண குடும்பத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் இவர்கள். தகுதி, திறமை பேசும் தக்கைகள் இனியாவது வாய் மூடுவார்களா?
சந்திரன் குரு பத்தினியைக் கற்பழித்தான் என்றும், ராகு, கேது என்ற பாம்பு சந்திரனை விழுங்கியது என்றும், அதனால் வந்ததுதான் கிரகணம் என்றும் கூறும் மூடக் குப்பைகளை இனிமேலாவது பரப்பு வதைத் தூக்கி எறிய வேண்டும். அஞ்ஞானத்தை விஞ்ஞான வழியாகப் பரப்புதலைத் தவிர்க்க வேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவரின் கருத்து முக்கியமானது.

ஆட்சி, அதிகாரம், தங்கள் ஆதிக்கம் இவற்றைப் பயன்படுத்தி சனாதனிகள் மூடநம்பிக்கைகளுக்கு எவ்வளவு முட்டுக் கொடுத்தாலும், சந்திரயான் போன்ற அறிவியல் சாதனைகள், மூடநம்பிக்கைகளைத் தகர்த்து மக்களுக்கு விழிப்பூட்டும் என்பது உறுதி!

விஞ்ஞானிகள் தங்களுக்கென்று தனிப்பட்ட நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும், இதுபோன்ற அறிவியல் சார்ந்த செயல்பாடுகளில் அவற்றைக் கலக்காமல், அறிவியல் சாதனைகளை அறிவியல் சாதனைகளாக மட்டுமே பதிவு செய்யவேண்டும்.

விண்ணில் ஏவுவதற்கு முன்பும், ஏவி வெற்றி பெற்ற பின்பும் கோயில்களுக்குச் சென்று விஞ்ஞானிகள் வழிபாடு செய்வது அறிவியலைக் கொச்சைப்படுத்தும் நிகழ்வாகும்.

விண்வெளிச் சாதனை விஞ்ஞானிகளின் தனிப்பட்ட சாதனை. இதில் கடவுளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லையென்னும்போது, கடவுளால் எல்லாம் நிகழ்வதுபோல கடவுளுக்கு வேண்டுதல் செய்வது அறிவியலுக்குச் செய்யும் கேடு ஆகும். விஞ்ஞானிகள் விஞ்ஞானிகளாக நடந்துகொள்ள வேண்டும். ♦