கவிதை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

2023 கவிதைகள் ஜூன் 16-30,2023
முனைவர். கடவூர் மணிமாறன்
சான்றோர் உயர்ந்தோர் வாழ்த்துகிற
சமூகநீதிக் காவலராம்!
தேன்போல் இனிக்கும் நலத்திட்டம்
தேர்ந்து கொணர்ந்தார் வி.பி.சிங்
பூனா, அலகா பாத்திலுமே
பொறுப்பாய்ப் பல்கலைக் கழகத்தில்
தேனாய்க் கல்வி கற்றிட்டார்
தெளிந்தஅறிவைப் பெற்றிட்டார்!
மண்டல் ஆணையம் என்றாலே
மனத்தில் நிற்பதும் இவர்பெயரே!
உண்மை நேர்மை எளிமைக்கோர்
உயர்ந்தவர் இவரே அடையாளம்!
இடஒதுக் கீட்டின் பெருந்தலைவர்!
இருபத் தேழு விழுக்காடு
முடமாய் இருந்தோர் பிற்பட்டோர்
முன்னேற் றத்தைத் தொடங்கியவர்!
அரசக் குடும்பத்தில் பிறந்த இவர்
அன்பில் பண்பில் மிகச்சிறந்தார்;
உரிமைப் போரைத் தொடுத்திட்டார்!
ஒடுக்கப்பட்டோர் நலன் காத்தார்!
தில்லி அரசியல் உவர்க்கடலில்
தெளிந்த நன்னீர் நதியிவரே!
எல்லாருக்கும் எல்லாமும்,
என்றவர் கலைஞர் உயிர்த்தோழர்!
இந்திய நாடே வணங்குகிற
ஏழாம் தலைமை அமைச்சரிவர்!
இந்திய அரசியல் திருப்புமுனை;
இவரொரு சகாப்தம் எவர்மறுப்பார்? ♦