மாநாட்டுத் தகவல் – பகுத்தறிவாளர் கழக பொன்விழா துவக்க மாநாடு

நவம்பர் 01-15 2019

வை.கலையரசன்

“சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு’’ என்றார் அறிவாசான் தந்தை பெரியார்.

மேலும், “சமுதாயத் துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடைமை முதலிய குணங்கள் மனிதனின் அறிவுக் குறைவினால் பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத்தறிவை செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டவையேயன்றி காலக்கொடுமையாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது அல்ல” என்பது தந்தை பெரியாரின் கருத்தாகும்.

அத்தகைய பகுத்தறிவைப் பரப்பும் பணியில் இறுதி மூச்சு அடங்கும் வரையில் ஈடுபட்டவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். நேரடியாக திராவிடர் கழகத்தில் பணியாற்ற இயலாதவர்கள் பகுத்தறிவைப் பரப்பும் தொண்டறப் பணியைச் செய்வதற்காக 1970ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தை உருவாக்கினார்.

இதன் தொடக்கவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் 20.11.1970 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களை அழைத்தபோது, அவர் தம்மையும் பகுத்தறிவாளர் கழகத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது உரையில் அமைச்சர் என்.வி.என். அவர்கள் முன்னின்று தமிழக அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களையும் பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்பு உறுப்பினர்களாக சேர்த்து சிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், பங்கேற்றிருந்த இரு அமைச்சர்களும் நாங்களும் உறுப்பினராகச் சேரவேண்டும் என்று அறிவித்தனர்.

அன்றைய சட்டப்பேரவைச் செயலாளர் திரு. சி.டி.நடராஜன் அவர்கள் தலைவராகவும், அய்.ஏ.எஸ். அதிகாரிகளான கா.திரவியம், வி.எஸ்.சுப்பையா ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், மாநிலக் கல்லூரியின் பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்கள் செயலாளராகவும் தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் கிளைகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

 8.11.1971 அன்று காரைக்குடி மேல ஊரணித் தெருவில் பகுத்தறிவாளர் கழகத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழகம் அமைக்கப்படுவதன் காரணத்தை கீழ்கண்டவாறு தெரிவித்தார்.

“நாம் பகுத்தறிவாளர் கழகம் துவக்குகிறோம் என்றால் மனிதர்களுக்கான கழகத்தைத் துவக்குகிறோம் என்பதுதான் தத்துவம். ஏன் என்றால் உலகில் மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்ற எந்த ஜீவன்களுக்குமில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் அதனைச் சரியாக பயன்படுத்தாத காரணத்தால் மிருகமாக இருந்தான். இப்போதுதான் மனிதனாக முற்பட்டிருக்கிறான். அதை காட்டுவதுதான் இப்பகுத்தறிவுக் கழகம் என்பதாகும். மனிதன் தோன்றி எத்தனையோ ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. நமக்குத் தெரிய 3,000, 4,000 ஆண்டுகளின் சரித்திரம் தெரிகிறது என்றாலும், இந்த நூற்றாண்டில்தான் மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டு அதன் காரணமாக பல விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் கண்டுபிடித்துள்ளான்.

இத்தனை ஆண்டு காலம் மனிதன் தன் பகுத்தறிவை – சிந்தனா சக்தியைப் பயன்படுத்த முடியாமல் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற சில தடைகளிலிருந்ததால் மனிதன் பகுத்தறிவு  பெற்றும் சிந்திக்க முடியாதவனாகி விட்டான். அத்தடைகளைச் சிறிது சிறிதாக உடைக்க ஆரம்பித்தான். அதன் பலனாக மனிதனின் ஆயுள் வளர ஆரம்பித்ததோடு, பல விஞ்ஞான அதிசய அற்புதங்கள் எல்லாம் தோன்ற ஆரம்பித்தன. இன்று மனிதன் சந்திரனுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கின்றான்.

இந்நிலையில் நாம் இப்போதுதான் பகுத்தறிவிற்கே கழகம் அமைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த ஒரு நாட்டில் மட்டும்தான் நமது மூடநம்பிக்கையைக் கொண்டு பலன் அனுபவிக்கும்படியான ஒரு ஜாதிக் கூட்டம் இருக்கிறது. அதுதான் எல்லா வகையிலும் நாம் அறிவு பெற முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

உலகில் மதத்தின் பெயரால், உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்கின்ற பேதம் இந்த ஒரு நாட்டில் தான் இருக்கிறது. இங்குதான் மனிதன் சமுதாயத் துறையில் இழிமகனாக இருக்கிறான். எனவே, மற்ற எல்லா நாடுகளையும்விட நம் நாட்டிற்குத்தான் பகுத்தறிவாளர் கழகம் மிக மிக முக்கியமாகும். சமுதாய சீர்திருத்தம், பகுத்தறிவுத் தொண்டு ஆகியவைகளை திராவிடர் கழகம் செய்து வந்தாலும், அது அரசியலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் நமது மக்களின் நலனையும், தேவையையும் கருதி அரசியல் கட்சிகளை ஆதரிக்க வேண்டி இருப்பதால் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இதில் பங்கு கொள்ள வாய்ப்பில்லையானதால் அரசியல் சார்பற்ற தன்மையில் இக்கழகமானது அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கழகங்கள் இதுவரை 20க்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளன. மதம், கடவுள் என்கின்ற முட்டாள்தனமான மூட நம்பிக்கையானது மனிதனிடையே புகுத்தப்பட்டதோடு, சிந்திப்பது பாவம், சிந்தித்தால் நரகத்திற்குப் போக வேண்டும் என்கிற அச்சத்தினையும் ஏற்படுத்தி விட்டதால் மனிதன் சிந்தனையற்ற காட்டுமிராண்டியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அதனை மாற்றி மனிதனைப் பகுத்தறிவுவாதியாக்கவே இக்கழகமானது அமைக்கப்படுகிறது.

– (‘விடுதலை’ – 2.12.1970).

அத்தகைய பகுத்தறிவாளர் கழகம் இன்று நாடெங்கும் விரிந்து பகுத்தறிவு, மனிதநேயம், சமூகநீதி, அறிவியல் மனப்பான்மை சார்ந்த கருத்துகளைப் பரப்புரை செய்து வருகிறது.

மாநில அளவில் நூற்றுக்கணக்கான மாநாடுகளை நடத்தி, பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, அரசுகளுக்கு முன்மாதிரியாக வழிகாட்டி வருகிறது.

 அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சிகள், பகுத்தறிவுக் கலை விழாக்கள் என்று சமூக, கலை, இலக்கியத் துறைகளில் தமது  பங்களிப்பைச் செய்துவருகிறது. 

உலக பகுத்தறிவாளர் அமைப்பான பன்னாட்டு மனிதநேய அறநெறி கழகத்(IHEU)துடன் இணைந்து உலக நாத்திகர் மாநாடுகளை நடத்தி, பல நாடுகளில் உள்ள பகுத்தறிவாளர்களை அழைத்து பங்கேற்கச் செய்திருக்கிறது பகுத்தறிவாளர் கழகம்.

மேலும் இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான (FIRA) Fedaration of Inidan Rationalist Association என்னும் அமைப்புடன் இணைந்து பல்வேறு இடங்களில் இந்தியா முழுவதும் பகுத்தறிவாளர் கழகம் மாநாடுகளை நடத்தியுள்ளது.

அரசுத் துறைகள் அனைத்திலும் தனது கிளைகளைப் பரப்பி, பகுத்தறிவாளர் கழகம் செய்த பெரும் பணியின் மூலம்தான் இன்று  தமிழக அரசு அலுவலகங்கள் மதசார்பற்ற தன்மையில் ஓரளவிற்காவது இருந்துவருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பழைய பண்டிகைகளோடு, புதிது புதிதாய் ‘அட்சய திருதியை’ போன்றவற்றை உருவாக்கி, ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளும் மறுபுறம் கார்ப்பரேட் சாமியார்களும் மக்களைச் சூறையாடுகின்றனர்.

பள்ளிகளிலும் மாணவர்களிடமும் மூடநம்பிக்கைகளையும், ஜாதி உணர்வுகளையும் புகுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி மிக மிக கட்டாயமான – தேவையான ஒன்றாகும்.

அப்படிப்பட்ட பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா துவக்க மாநாடு விருதுநகரில் 2019 நவம்பர் 16 அன்று முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், உரை அரங்கம், நூல் வெளியீடு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி, அறிவியல் கண்காட்சி என பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட பகுத்தறிவுத் திருவிழாவாக நடைபெற உள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பல்வேறு அறிஞர் பெருமக்களும்,  பகுத்தறிவாளர்களும் இதில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *