மருத்துவம் விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (108)

2022 செப்டம்பர் 1-15-2022 மருத்துவம்

குழந்தையின்மையும், தீர்வுகளும்
மரு.இரா.கவுதமன்

“பிள்ளைப் பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடன் புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்-படியாக பொலிகாளைகள்போல் தெரிந்-தெடுத்து, மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்கள் வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண், பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டு வந்து விடக் கூடும்.’’

_ “இனிவரும் உலகம்’’ _ தந்தை பெரியார்
பிள்ளை பெறாத பெண்கள் இழிவு-படுத்தப்படுகின்றனர். ஒதுக்கப்படுகின்றனர்.
இதில் மிகவும் கொடுமையான நிலை என்னவென்றால், வீட்டில் உள்ள மற்ற பெண்களின் ஏளனத்திற்கும், கேலிக்கும் இப்பெண் ஆளாவது. அதிலும் மாமியார், “ஒரு புழு, பூச்சு உண்டா’’ என்று ஏகடியம் பேசுவதும், மற்றப் பெண்கள் ஏளனம் பேசுவதும் ஓர் இயல்பான நிகழ்வாக மாறிப் போனது. இது குழந்தையில்லாத பெண்ணுக்கு மேலும் மனச் சோர்வையும், சங்கடத்தையும் உண்டாக்கும் நிலை!

இந்த மனச்சோர்வும், மனத்தளர்ச்சியும் பெண்ணையோ, இந்த நிலையில் உள்ள பெண்களையோ போலிச் சாமியார்களைத் தேடிச் செல்ல வைக்கிறது. போலிச் சாமியார்களும் “பிள்ளை வரம்’’ கொடுப்பதாக பெண்களை ஏமாற்றுவதும், பாலியல் கொடுமைகள் செய்வதும் இன்றுவரை நிகழும் நிகழ்வாக மாறிப் போனது. சில பெண்கள் கோயில் கோயிலாகச் சுற்றுவதும், ஆத்தா கோயில்களில் தொட்டில் கட்டுவதும், காசு கட்டுவதும், வேண்டுதல் என்கிற பெயரில் தீச்சட்டி எடுப்பதும், தீ மிதித்தல் போன்ற மூடநம்பிக்கைகளில் பெண்களைத் தள்ளுகிறது. அரச மரத்தைச் சுற்றுவதும், கடவுளுக்கு காணிக்கைகள் (முடி, பணம்) எனக் கொடுத்து வேண்டுவதும், பிள்ளை வரம் கொடுக்கும் “ஆத்தா’’க்களைத் தேடி அலைவதும், “காசி’’, “இராமேஸ்வரம்’’ என்று கடவுள் அருள் வேண்டிச் சுற்றுவதும், மஞ்சள் நீராடுவது, மற்ற வேண்டுதல்கள் செய்வது, விரதம் இருப்பது போன்ற (மூட) நம்பிக்கைகள் குழந்தையின்-மைக்குத் தீர்வாகாது.

அறியாமையில் மூழ்கியுள்ள நம் பெண்கள் இது போன்ற நம்பிக்கைகளை நம்பி, அறிவியல்பூர்வமான அணுகுமுறைகள் செய்யத் தவறிவிடுகின்றனர். சுற்று வட்டாரத்தில் இருக்கும் பெண்கள் பழி தூற்றுவார்கள் என்கிற அச்சமும், தயக்கமும் சமூக அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ போன்ற எண்ணங்களும் (மூட) நம்பிக்கைகளில் அவர்கள் ஆட்படக் காரணமாகின்றன. அக்கம், பக்கத்திலிருப்போர் கூறும் செவிவழிச் செய்திகள் இவர்கள் ஏமாறுவதற்குக் காரணமாகிவிடுகின்றன.

குழந்தை பிறக்காததை முன் வைத்து, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை-களுக்கு அளவே இல்லை. ஆண்களுக்கு ஆண் தன்மை குறைபாடு உள்ளதா இல்லையா என்று ஒருவருமே, ஒரு காலக்கட்டத்தில் கவலைப்பட்டதில்லை. ஆண்மைக் குறைபாடு என்று சொல்வதே ஒரு சமூக அவலமாகக் கருதப்பட்டது. அதனால் பழி பெண்கள் மேல் போடப்பட்டு, “மலடி’’ என்று அவர்களுக்கு முத்திரை குத்தி, மாமியாரும், மற்றவர்களும் கொடுமை செய்யும் நிலை அண்மைக் காலம் வரை இருந்தது. “இருதார மணத் தடைச் சட்டம்’’ வரும் வரை, ‘மலடி’ என்று காரணம் கூறி இரண்டாம் தாரமாக ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் கொடுமை-யெல்லாம் இந்தச் சமூகத்தில் நிகழ்ந்தது. சட்டத்தின் மூலமே இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மருத்துவ அறிவியல் வளர்ச்சியும், மக்களின் கல்வி வாய்ப்புகளும் குழந்தையின்மைக் குறைபாட்டை பெருமளவு குறைத்துவிட்டது. குழந்தை-யின்மைக்காக மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு, பொழுதையும், பணத்தையும் வீணாக்குவதை விட்டு, விட்டு மருத்துவர்களை அணுகினால் இந்தக் குறைபாட்டை எளிதில் தீர்க்க முடியும்.

பல நேரங்களில் உடல் அளவில் குறைபாடுகள் என்று இருப்பதைவிட, உளவியல் அளவில் குறைபாடுகள் இருக்கும். எப்படி இருந்தாலும் ஒரு பத்து சதவிகிதம் பேர்களுக்குத்-தான் இந்த வாய்ப்பின்மை இருக்கும். பெரும்பாலோர் மருத்துவ அறிவுரைகள் மூலம் குழந்தை பெறுகின்ற வாய்ப்பைப் பெறுகின்றனர் என்பதே உண்மை. பெண்களுக்குக் கல்வி வாய்ப்புகளும், வெளி உலகத் தொடர்புகளும், சமூகத் தொடர்புகளும், வலைத் தளங்களை அவர்கள் கையாளும் திறமையும், மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை மீட்டு, ஆக்கப்பூர்வமான அறிவியல் பக்கம் திருப்பியுள்ளது.

முதலில் குழந்தையின்மைக்குக் காரணம் கணவனா அல்லது மனைவியா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆண்கள் தங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் மன நிலைக்கு வரவேண்டும். பெரும்பாலான ஆண்கள் எங்கே தங்கள் மலட்டுத் தன்மை வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சி, பல ஆண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளத் தயங்கிய நிலை மிகவும் பரவலாக இருந்தது. ஆனால், அதைவிட ‘குழந்தை தேவை’ என்ற நிலையும், சமூக அங்கீகாரமும் முன் வந்து நிற்பதால் இந்தத் தயக்கம் மெள்ள மெள்ளக் குறைந்து வருகிறது. அதுவும் நகர்ப்புறங்களில் இந்தத் தயக்கம் பெரும்பாலும் நீங்கி விட்டது என்றே சொல்லலாம். கிராமப்புறங்களில் இந்தத் தயக்கம் இன்னும் இருந்தாலும், அதுவும் தேவையைக் கருதி விரைவில் மாறி விடும் என எதிர்பார்க்கலாம். அதே போல் கல்வியின்மையும் இந்தத் தயக்கத்திற்குக் காரணம். அந்த நிலையும் இப்பொழுது மாறி வருகிறது. இது பெண்களுக்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. அதுவுமில்லாமல் ஆண்களுக்கு ஆரம்ப நிலை ஆய்வுகள் மிகவும் எளிமையானவை.

அடுத்து, பெண்களுக்கு வரும் பெரும் இடர்பாடு “ஜாதகம்’’! ஜாதகம் என்பதே ஒரு பொய் அறிவியல். ஜோதிடப் பலன்கள் போடும் பெரும்பாலான பத்திரிகைகளைப் பாருங்கள். இரண்டு ஜோதிடர்கள் ஒரே மாதிரியாய்ச் சொல்லி இருக்க மாட்டார்கள். அதே போல் குழந்தை பிறந்த உடன் பிறந்த நேரத்தைக் கூறினால் ஜோதிடர், ஜாதகம் கணித்துக் கொடுக்கிறார். சில நட்சத்திரங்களில் பிறந்ததாகக் கூறப்படும் பெண் குழந்தைகள் இந்த ஜாதக மூடநம்பிக்கையால் வாழ்நாள் முழுதும் பாதிப்படைகின்றனர். எடுத்துக்-காட்டாக “மூல நட்சத்திர’’த்தில் பிறந்த பெண் குழந்தைகள்! “ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்’’ என்னும் சொலவடையைக் கேட்டிருக்கிறோம்.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை வளர்ந்த பின் திருமணம் செய்துகொள்ள எந்த ஆணும் முன் வருவதில்லை. அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், மணமகன் வீடு நிர்மூலமாகிவிடுமாம். அதேபோல், சில குழந்தைகளுக்கு (பெண்) “செவ்வாய் தோஷம்’’ என்பர். செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் மாமனார் வீட்டுக்கு ஆபத்தாம். இதுபோன்ற நட்சத்திரங்களையும், ஜாதகத்தையும் நம்பும் வீடுகளில் பல பெண்கள் திருமண வாய்ப்பே இல்லாமல் தாய் வீடுகளிலேயே இருக்கக் கூடிய நிலையும், வாழ்நாள் முழுவதும் துயரம் அனுபவிக்கும் நிலையும் ஏற்பட்டு விடும் சூழ்நிலைகளைக் காண்கிறோம்.

பிறந்த நேரம் சரியாகக் கணிக்க முடியுமா? குழந்தை தாய் வயிற்றில் உண்டான நேரமா? சில நேரங்களில் முதலில் கால்களும், சில நேரங்களில் கைகளும் வெளிவந்து, கடைசியில் தலை வெளிவருகிறதே! அப்பொழுது பேறு கால நேரமேது? பேறு காலத்தில் சிக்கல்கள் இருந்தால் மருத்துவர் தாயும், சேயும் பத்திரமாக இருப்பதைப் பார்ப்பாரா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பாரா? பேறுகால அறையில் கடிகாரம் தவறாக மணியைக் காட்டிக் கொண்டிருந்தால், பேறு கால நேரம் தவறாகக் கணிக்க வாய்ப்புண்டா இல்லையா? இது போன்ற சூழ்நிலைகளில் “பிறந்த நேரம்’’ எப்படி துல்லியமாகக் கணிக்க முடியும்?
அதைவிட வேடிக்கையான நிகழ்வுகள் தற்பொழுது நடக்கின்றன. அறுவை மருத்துவம் செய்து குழந்தையை எடுக்க வேண்டிய நிலை தற்போது ஓர் இயல்பான நிகழ்வாக இன்று மாறிப் போனது. தாய்க்கு உறவினர்கள், மருத்துவரிடம் வந்து, “இன்று நல்ல நாள், நல்ல நேரம்!’’ என்று கூறி அந்த நேரத்தில் அறுவை மருத்துவம் செய்யக் கேட்டுக் கொள்வர். மருத்துவர் அதற்கிசைந்து அதே சமயத்தில் அறுவை மருத்துவம் நிகழ்த்துவார். இதுபோன்ற நிலையில் பிறக்கும் நேரத்தை குடும்பத்தார் நிர்ணயிக்கிறார்களா இல்லையா? அது எப்படி இயல்பான பேறுகால நேரமாகும்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு இதுவரை எந்த ஜோதிடரும் பதில் சொன்னதில்லை என்பதே உண்மை!