சிறுகதை “எக்ஸ்க்யூஸ் மீ! எங்க வீடு எங்க இருக்கு?”

2022 சிறுகதை செப்டம்பர் 16 -30 2022

கோ. ஒளிவண்ணன்

எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது? எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல.
ரொம்ப நேரமா யோசிக்கிறேன். எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து தொலைய மாட்டேங்குது.
இதுக்கு முன்னால நுங்கம்பாக்கத்தில் இருந்த வீடு நினைவுக்கு வருது. இப்போ அடையாறு பக்கம் வீடு மாத்திக்கிட்டுப் போனோம். அது என்னவோ ஒரு நகர்… சாஸ்திரியா? காந்தியா? இந்திராவா?
சுத்தமா நினைவுக்கு வரலையே!
வயசாயிடுச்சா?
எந்தப் பஸ்ல ஏறது? இல்ல ஆட்டோல போறதா? எந்த இடம்னு தெரிஞ்சாத் தானே…
ஆட்டோ ஒன்னு பக்கத்தில் வந்து நின்னுது. ஆட்டோ டிரைவர் சீட்ல ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு உடம்ப வில்லுப் போல வளைச்சு, “சார் வண்டில உக்காருங்க, எங்க போகணும்?’’ என்று கேட்டார்.

பேசாமா இந்த ஆட்டோவுல போயிடலாமா. ஆனா எங்க போறது?
“நீ எங்கப்பா போற’’ அர்த்தமே இல்லாம ஒரு கேள்வியைக் கேட்டேன்.
“நைனா நீ எங்கப் போனம்னு சொல்லு.’’
தயங்கிக் கிட்டே “அடையாறு’’ என்றேன்.
பதில் எதுவும் சொல்லாமல் விடுக்கென்று கிளம்பிப் போய்விட்டான். அவன் வேற ரூட்ல போறான் போல இருக்கு.
பின்னால் இன்னொரு ஆட்டோ வந்து நின்றது. ஓட்டுநர் மிகவும் பவ்வியமாக “எங்க போகணும் சார்?’’
“அடையாறு’’
“தாராளமாப் போகலாம் சார். உக்காருங்க சார்’’, குரலிலே குழைவு. அவனது அளவுகடந்த மரியாதை வியப்பில் ஆழ்த்தியது.
இருந்தாலும் ஓர் எச்சரிக்கை உணர்வோடு “எவ்வளவு’’ என்றேன்.
மெதுவான குரலில் ஆனால் உறுதியாக “800 ரூபாய் கொடுத்துடுங்க’’ என்றான்.
அதிர்ந்தேன்.

“சார் எம்ப்டியாதான் திரும்பி வரணும்’’ என்றான்.
பதில் சொல்லாமல் திரும்பி விடுக்கென்று நகர்ந்தேன். ஒருவகையில் முதல் ஆட்டோ-காரரது செய்கைக்குப் பதிலடி கொடுத்த திருப்தி.
மணி என்ன இருக்கும்? கைப்பேசி சார்ஜ் இல்லாம எப்போதோ அணைந்து போய்விட்டது. சார்ஜர் எங்க இருக்குது? ஒருவேளை ஊரிலேயே விட்டுவிட்டு வந்துட்டோமா?
எப்படியும் மணி பத்தரைக்கு மேல இருக்கும்.
இனி பஸ்ஸ எதிர்பார்க்க முடியாது. பஸ் வந்தாக் கூட, எங்க போறது, எங்க இறங்குறது?
பசி எடுக்க ஆரம்பிச்சது. அப்போதுதான் நினைவு வந்தது, தான் இன்னும் சாப்பிட-லேங்கறது. அது ஒரு காலம், குறித்த நேரத்துல சாப்பிடுறது. இப்பல்லாம் பசியும் வர்ரதில்ல.. அப்படி எடுத்தாலும் தெரிய மாட்டேங்குது.

ஆட்டோ ஒன்று வந்து நின்றது டிரைவர் எஞ்சினை அணைத்து விட்டு அருகில் இருந்த டீக்கடையை நோக்கி நடந்தார்.
பொதுவாகத் தயங்கிக் கொண்டே “ஆட்டோ அடையாறுப் பக்கம் வருமா?’’ என்றேன்.
“போலாம் சார்! ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க, ஒரு டீ குஷ்ட்டு வந்துடறேன்’’ இயல்பான பேச்சு எனக்குப் பிடிச்சிப் போச்சு. அந்த ஆட்டோக்காரனுக்கு நடுத்தர வயது இருக்கும்.
பசியாற ஏதாவது சாப்பிடலாம்னு கடைக்கு வந்தேன். எப்பவோ சுட்டு, ஆறி உலர்ந்து போன வடையும் போண்டாவும் பரிதாபமாகக் காட்சி அளித்தன.
அந்த உயரமான கண்ணாடிக் குடுவையில் பட்டர் பிஸ்கட்டுகள் வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருந்தன. அதனைச் சாப்பிடலாம் என்று தீர்மானித்து பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தேன். சில்லறை எதுவும் இல்லை. ஒரு 500 ரூபாய்த் தாள் மட்டும் இருந்தது. இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு 500 ரூபாய்த் தாளைத் தர, கடைக்காரர் முறைத்தார்.
“சில்லறையாக இருந்தாக் குடுங்க’’.

பர்சுக்குள் மீண்டும் துழாவினேன். ஒன்றும் தேறவில்லை. எடுத்த பிஸ்கட்டுகளை மீண்டும் குடுவையில் திருப்பி வைக்கப் போனேன்.
“சாப்பிடு சார். நான் கொடுக்கிறேன்’’. என்று கூறிய ஆட்டோக்காரன் தனக்கும் ஒரு பிஸ்கெட்டை எடுத்துக் கொண்டான்.
இரண்டு விரல்களில் இலாவகமாக அந்த பிஸ்கட்டை தேநீரில் முக்கி எடுத்து நனைத்த பகுதியைக் கடித்தான். சுவைத்துக் கொண்டே,
“அடையார்ல எங்க போவணும் சார்?’’ என்றான்.
“தெரியல’’
“அட என்ன சார் சொல்ற?’’ அவன் திடுக்கிட்டான்.
“என் வீடு எங்க இருக்குதுன்னு நினைவுக்கு வரலயே’’.

“இன்னாபா அநியாயமா இக்குது. உன் ஊடு எங்க இருக்குன்னு உனுக்கே தெரில்லேனு சொல்லற’’ அவனுக்கு டென்ஷன் ஏறியது.
“அதான் தெரியலையே’’.
“இது இன்னாப்பா அதிசயமாக இக்குது! எத்தன வருஷமா இப்படி இருந்திருப்ப. அது எப்படி மறக்கும்?’’.
“கொஞ்ச நாளாதான்’’.
“இதுக்கு மின்னால எங்க இருந்த?’’
“நுங்கம்பாக்கம்’’
“அந்த வூடு தெரியுமா?’
“அது எதுக்கு இப்ப. அங்கிருந்துதான் காலி பண்ணிட்டோமே’’.
“சரி, உன் ஊட்ல பேசிக் கேளு’’.
“பொண்டாட்டி இல்லப்பா’’.
“ஊருக்குப் போய் இருக்கா’’.

“இல்ல அவச் செத்துப் போயி இரண்டு வருஷத்துக்கு மேல ஆவுது’’.
“ஓ, சாரி நைனா. அப்பத் தனியாவா இருக்கற’’.
“இல்ல என் மகன் வீட்ல’’.
ஆட்டோக்காரர் குடுவையைத் திறந்து மேலும் இரண்டு பிஸ்கட்டுகள் எடுத்துத் தனக்கு ஒன்றை வைத்துக்கொண்டு இன்னொன்றை அவரிடம் நீட்டினார்.
அவர் தயங்க, “எடுத்துக்க சார்’’ என்றார். பதில் சொல்வதற்குள் கைகளில் திணித்தார்.
“உங்க பையனுக்கு போன் பண்ண வேண்டியதானே’’
“அவன் ராத்திரில போனை சைலன்ட் மோடுல போட்டுட்டுப் படுப்பான், தூக்கம் கெட்டுடக் கூடாதுன்னு’’.
“இன்னிக்கு நீ ஊர்லருந்து வருவன்னு தெரியாதா அவனுக்கு?’’.
“தெரிஞ்சு இருக்காதுன்னு நினைக்கிறேன்’’
ஆட்டோக்காரன் குழம்பிப் போய்-விட்டான்.

“என்னப்பா எதுக்கெடுத்தாலும் ஏடா-கூடமாப் பதில் சொல்ற. இப்ப நீ எங்க இருந்து வர?’’
“கோயம்புத்தூர்’’
“அங்க யாரு இருக்காங்க’’
“என் பொண்ணு இருக்கு’’.
“ஊரிலிருந்து வர்ரேன்னுச் சொல்ற. கையில பொட்டி எதுவும் காணோம்?’’
“அங்க இருந்து அப்படியே கிளம்பி வந்துட்டேன்’’
“பொண்ணாண்டயும் சண்டைப் போட்டுக்கினியா’’
“இல்லப்பா. நான் யார் வம்புதும்புக்கும் போறது இல்ல’’
“பின்ன?’’
“அவங்களுக்கெல்லாம் நான் தேவை இல்ல. என்ன தொந்தரவுன்னு நினைக்கிறாங்க. எதுக்குப் பிரச்சனை. அதான் பொறப்பட்டு வந்துட்டேன்’’.

“புள்ளீங்கோ நல்லா வசதியாத்தானே இருக்காங்க?’’
“அவங்களுக்கு என்னப்பா குறைச்சல், நான் ஒரு குறையும் வைக்கல. நல்லாப் படிக்க வச்சேன். கட்டியும் கொடுத்தேன். எல்லாம் நல்லா வசதியாப் பிரமாதமாக இருக்காங்க.’’
ஆட்டோக்காரருக்கு உண்மையாகவே இப்பொழுது என் மீது பச்சாதாபம் ஏற்பட்டிருக்கலாம். நான் அணிந்திருந்த சாயம் போன பழைய பேன்ட்டும், ஒரு காலத்துல சிக்குன்னு சரியான அளவுல இருந்த இந்தச் சட்டை, பூஞ்சையான உடம்புல தொளதொளவெனத் தொங்கியதும் கூடுதல் பரிதாபத்தை வர வச்சிருக்கும். பல வருடத்துக்கு முன்னால எப்பவோ ஏதோ ஒரு பிறந்த நாளைக்கு என் பொண்டாட்டி தேடி வாங்கிக் கொடுத்தது.’’
“வீடுகதான் பெரிசாச்சே தவிர மனசெல்லாம் சிறுசாயிடுச்சு’’.

“எல்லார் ஊட்லயும் அதே கதைதான் சார். கையில் துட்டு இருக்கிற வரைக்கும்தான் மரியாதை. ஒன்னுமில்லன்னா நாய் கூடச் சீந்தாது’’.
ஆட்டோ ஓட்டுநர் சொன்னதை ஆமோதிப்பது போல் மவுனமாய் இருந்து விட்டேன்.
அந்த பிஸ்கட்டை நன்றாக மென்று சாப்பிட்டேன். கொஞ்சம் பசி அடங்கின மாதிரி இருந்தது.
“வேலையிலிருந்து கரெக்டா ஓய்வு கொடுக்குற மாதிரி ஒரு வயசு வந்த உடனே, போதும் நீ உலகத்திலே இருந்தது அப்படின்னு நம்ம உயிர் பட்டுனு போய்டனும்’’.
பரிதாபத்தோடு ஆட்டோக்காரர் “உச்’’ கொட்டினார். “அதெல்லாம் வுடு சார். ஆமா நீ எங்க வேலை செஞ்சினிருந்த?’’
“நான் ஒரு சேட் கம்பெனில கொடவுன் இன்சார்ஜா இருந்தேன். மகாராசன் ஒழுங்காத் தான் என்ன வச்சுக்கிட்டான். ரிடையர் ஆகுற வரைக்கும் நல்லாத்தான் பாத்துக்கிட்டான்’’.

“துட்டு ஒன்னும் சேத்து வக்கிலியா?’’
“ப்ச்… ஒன்னும் இல்ல. குடும்பம் நடத்தறதுக்கு, பசங்க படிப்பு, அவங்க வசதின்னு எல்லாம் செலவழிச்சிட்டேன். ரிட்டையர் ஆகும்போது சேட்டு கொடுத்த பணமெல்லாம் பொண்டாட்டி நோய்னு படுத்தப்ப வைத்திய செலவுக்குத் தீந்துப் போச்சு. இப்போ என்கிட்ட ஒண்ணுமே இல்ல. இந்த உடம்பு மட்டும்தான் மிச்சம்’’.
“ஒரே இடத்துலே உட்கார்ந்து வேலை பாக்குற மாதிரி, ஏதாவது தேடிக்கறதுதானே?’’
“அதுக்கெல்லாம் ட்ரை பண்ணேன். ஆன எதுவுமே செட்டாவல’’.

“ஏன்?’’
“எனக்கு ஒரு பிரச்சனை இருக்குது’’.
அப்போது அருகில் ஒரு கார் வந்து நின்றது.
“மாமா இங்கேயா இருக்கிறீங்க. உங்கள எங்கெல்லாம் தேடுறது’’ காரின் முன் பக்கத்திலிருந்து இறங்கிய மருமகள்.
“தாத்தா எங்க தாத்தா போன?’’ பின் சீட்டில் இருந்த பெயர்த்தி, குட்டிப் பெண்.
“நான் இப்பதான் ஊர்ல இருந்து வரேன்’’.
“சரி முதல்ல கார்ல ஏறுங்க’’ டிரைவர் சீட்டில் இருந்த மகன்.

காரில ஏறதுக்கு முன்னால, திரும்பி ஆட்டோ டிரைவரைப் பார்க்க,
“போயிட்டு வாங்க சார்’’
ஒரு நிமிடம் தயங்க,
“பிஸ்கட்டுக்கு எல்லாம் துட்டு வேணாம் சார், போயிட்டு வாங்க’’.
காரில் பின்பக்கம் ஏறிக்கொண்டேன்..
‘எங்கத் தாத்தா போன?’’
“அதான் சொன்னேனே. ஊருக்குன்னு. கோயம்புத்தூரு’’
“நீ பொய்ச் சொல்ற’’
“ஏன்டாக் கண்ணு இப்படிச் சொல்ற?’’
“சாய்ந்திரம் எங்கேயோ போறேன்னு சொல்லிட்டு போனியாமே. அதுக்குள்ளேயா கோயம்புத்தூருக்குப் போயிட்டுத் திரும்பி வந்துட்ட தாத்தா?’’
மிரண்டேன். ஏன் இப்படி? எனக்கு என்ன ஆச்சு?
“சாயந்தரம் உங்க பிரண்டு கருணாகரனப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனீங்-களாமே’’ மருமகள் கீதா.

“ராத்திரி ஒன்பது மணி ஆகியும் நீங்க திரும்பி வரலைன்னு எனக்கு ஃபோன் வந்துச்சு. ஆபீஸ் பார்ட்டியில் இருந்தேன். அப்ப இருந்து தேடிட்டு இருக்கோம். கருணாகரன் மாமாவுக்கு ஃபோன் பண்ணா நீங்க வரவே இல்லேன்னு சொல்லிட்டாரு’’ மகன்.
“அதுக்கு மேல நாங்க தேடாத இடமில்லை. போன் பண்ணாத இடமும் இல்லை. உங்கள் மகன் பதறிப் போய்ட்டாரு. நான் அவரு தவிச்சு நிலைகுலைஞ்சத இதுவரைக்கும் பார்த்ததே இல்லை’’ மருமகள் கலங்கினாள்.
“தாத்தா உன் ஃபோனை ஏன் சுவிட்ச் ஆப் பண்ணி வச்ச?’’.
“நான் பண்ணலடா கண்ணா! சார்ஜ் போய்டுச்சி’’.
எங்கள் காரை தாண்டி ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி இறங்கி வந்தார்.

“என்ன சார் அப்பா கிடைச்சுட்டாரா?’’
“ரொம்ப தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்.
“ஃபோன் சுவிட்ச் ஆஃப்ல வைச்சிருந்தாரா?’’
“சார்ஜ் தீர்ந்துப் போனதால ஆஃப் ஆயிடுச்சுங்க’’.
“எக்மோர் ஏரியால தான் ஃபோன் இருக்கிறதா வந்த தகவல் சரியாப் போச்சு’’.
“ஆமாங்க இன்ஸ்பெக்டர்’’.
“நீங்க ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளைன்ட திரும்ப வாங்கிக்கங்க’’.
“இப்பவே வரட்டுமா சார்’’
“வேண்டாம் வேண்டாம். நாளைக்குக் காலைல வாங்க’’.

போலீஸ் ஜீப் புறப்பட்டுச் சென்றது கார் கிளம்பியது.
அது சென்னை நகரில் பிரபலமான முதியோர் இல்லம். கார் அதனுள் நுழைந்தது. விடுதியில் இருந்த கிட்டத்தட்ட எல்லா விளக்குகளும் அணைந்து இருக்க முன் வாசலில் இருந்த விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அவ்விடுதியின் நிருவாகியும் காவலாளியும் நின்று கொண்டிருந்தனர்.
காரிலிருந்து இறங்கியவுடன் நிருவாகி என் மகனைப் பார்த்து, “என்ன சார், கிடைச்சுட்டாரா? எங்க போனாரு? ‘ரு’ வில் கொடுத்த அழுத்தம் வீட்டுக்கு நேரத்துக்குப் போக முடியாமல் போச்சே என்கிற எரிச்சலை வெளிப்படுத்தியது.
காவலாளி “வாங்க சார், எங்க சார் போய்ட்டீங்க’’ என்று என்னை உள்ளே அழைத்துச் செல்ல,
“தாத்தா பத்திரம்’’
“மாமா எங்கேயும் வெளியே போயிடாதீங்க, நல்லாச் சாப்பிடுங்க உடம்பப் பார்த்துக்கங்க’’ என்ற குரல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய, அந்த நீண்ட தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்தேன்.