நிகழ்வுகள் : மனிதனை மனிதன் சுமப்பதா? மறியல் போர்!

மார்ச் 1-15 2022

கி.தளபதிராஜ்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை மட ஆதீனகர்த்தர் பிப்ரவரி 7ஆம் தேதி (2022) பட்டினப்பிரவேசம் மேற்கொள்ள இருப்பதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கடந்த 2ஆம் தேதி மாலை ஆதீனகர்த்தரை நேரில் சந்தித்து  பட்டினப்-பிரவேசம் எனும் மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமை மீறலை கைவிடக் கோரி வேண்டுகோள் விடுத்தனர்.

நேரில் சந்தித்த கழகத் தோழர்களிடம் ஆலோசிப்பதாகக் கூறிய ஆதீனகர்த்தர் திட்டமிட்டபடி பட்டினப்பிரவேசம் செல்ல இருப்பதை அறிந்து தலைமைக் கழகத்தின் சார்பில் திருவாவடுதுறையில் மாபெரும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இச் செய்தி தீப்போல் பரவி பல்வேறு தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் இந்த மறியலில் தாங்களும் கலந்து கொள்வதாக அறிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், குத்தாலம் காவல்துறை ஆய்வாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கில் சந்நிதானம் பவனி வருவது மனித உரிமை மீறலாகும். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆதீனம் பல்லக்கு ஏறும் பட்சத்தில் திருவாவடுதுறையில் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று சொல்லி மாவட்டக் கழகத்தின் சார்பில் இரண்டு நாள்களுக்கு முன்னர் மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மறியலைக் கைவிடக்கோரி காவல் துறையிலிருந்து கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது. முன் கூட்டியே கைது (Prevent Arrest) செய்வோம் என மிரட்டிப் பார்த்தனர். இது தோழர்களுக்கு இன்னும் உத்வேகத்தை அளிக்கவே பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மதியம் 2:00 மணிக்கே கழகத் தோழர்கள் சாரை சாரையாக குவியத் தொடங்கினர். கொட்டும் பனியில் கடும் குளிரில் பெண்களும் குழந்தைகளும் மறியலில் முழக்கமிட்ட காட்சி காண்போரை வியக்க வைத்தது.

மாலை 5:00 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்து ஆர்ப்பாட்டத் தலைவர்களை முன்மொழிந்தார். மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் வரவேற்றார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில்  மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மயிலாடுதுறை, குடந்தை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், சிதம்பரம், அரியலூர், விருத்தாசலம் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மண்டலத் தலைவர் கி.முருகய்யன், தஞ்சை மண்டலச் செயலாளர் குடந்தை குருசாமி, கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன்,  கழகப் பேச்சாளர்  இராம.அன்பழகன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு இராமகுரு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி குடந்தை மாவட்டச் செயலாளர் செல்வம், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பெரியார்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நேரம் செல்லச் செல்ல காவல்துறையினர் கழகத் தோழர்களைக் கலைக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டனர். கைது செய்யப் போவதாக மிரட்டினர். தேர்தல் நேரம் என்பதால், 6:00 மணிக்கு மேல் ஒலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது என்றனர். நீங்கள் கலைந்து சென்றால்தான் நாங்கள் உள்ளே சென்று பல்லக்கை நிறுத்தச் சொல்லி பேச முடியும் என்றனர். தோழர்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. எங்களால் உங்களுக்கு ஒரு சிறு சட்ட ஒழுங்கு பிரச்சினை கூட ஏற்படாது. எங்கள் தோழர்கள் இராணுவக் கட்டுப்பாட்டையும் மிஞ்சியவர்கள் என்று பதிலளிக்கப்பட்டது.

கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் ஒலிபெருக்கியின்றியே தனது தலைமை உரையை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறின்றி சாலை ஓரத்தில் அமர்ந்தபடி தோழர்கள் மீண்டும் இடி முழக்கமிட்டனர். இரவு 9:00 மணியளவில் காவல்துறையினர் கைது செய்வதாக அறிவித்தனர். பெண்கள் குழந்தைகள் உள்பட மறியலில் கலந்து கொண்ட தோழர்கள் உற்சாகமாக முழக்கமிட்ட-வாறே காவல் துறை வாகனங்களில் ஏறினர். குத்தாலம் ஆசியா மகாலில் தோழர்கள் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரவு பத்து மணிக்கு ஆதீனம் மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் ஏறி ஊர்வலம் புறப்பட்டார் என்ற செய்தி அறிய, கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மண்டபமே இடிந்து விழுந்து விடுமோ என்றளவிற்கு சந்நிதானத்தை எதிர்த்து கடும் குரலில் கண்டனம் எழுப்பினர். உணர்ச்சி வயப்பட்ட கழக முதுபெரும் பெரியார் தொண்டர்களை அமைதிப்படுத்துவதே பெரும்பாடாகிவிட்டது. திருவாவடுதுறையில் பட்டினப் பிரவேசமெல்லாம் முடிந்த பின்னர் நள்ளிரவு 2:00 மணிக்கு விடுதலை செய்வதாக காவல்துறையால் அறிவிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட தோழர்களுக்கு நன்றி தெரிவிக்கப்-பட்டு தோழர்கள் விடைபெற்றனர்.

போராட்டத்தின் தொடக்கத்தில் விசிறி சாமியார் தஞ்சை முருகன் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனுக்கு பயனாடை அணிவித்து, தோழர்கள் மீது மலர் தூவி வாழ்த்தினார்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் மாற்று அமைப்பினரும் வருகை தந்து பெருமளவில் மறியல் போரில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *