திட்டங்கள் : சுயதொழிலை வளர்க்கும் தமிழ்நாட்டு அரசின் திட்டங்கள்

பிப்ரவரி 16-28,2022

சுயதொழில் வளர்ச்சிக்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (Tamilnadu Minorities Economic Development Corporation – TAMCO) செயல்படுத்தப்-பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார விரிவாக்கம், கைவினை மற்றும் மரபு வழி (Traditional) சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் தொழில் சேவை (Service) நிலையங்கள், விவசாயம் தொடர்பான சிறு தொழில்கள், போக்குவரத்து ஆகிய தொழில்-களுக்கு தனிநபர் கடன்கள் வழங்கப்படுகின்றன. வயது 18க்கு மேல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும்.

கடன் கோரும் திட்டத்தின் மதிப்பீடு ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை இருப்பின், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் (NMDFC) ஒப்புதல் பெற்று தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். போக்குவரத்துத் தொழில் தவிர, பிறவற்றுக்கு வழங்கப்படும் அனைத்துக் கடன்களுக்கும் ஆண்டு வட்டி விகிதம் 6%. போக்குவரத்து வாகனங்கள் வாங்கிட அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. இக்கடன் தொகைக்கான ஆண்டு வட்டிவிகிதம் 10%. திட்ட மதிப்பீட்டில் 5% பயனாளியின் பங்கு ஆகும். மீதமுள்ள 95% கடனாக வழங்கப்படும். கடன் தொகையை 60 மாத கால தவணைகளில் கடன் பெற்ற வங்கிக்குக் குறிப்பிடப்பட்ட தேதியில் திரும்பச் செலுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிக் கிளைகள், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள டாம்கோ அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இலவசமாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நீட்ஸ் திட்டம்(NEEDS Scheme)

தமிழ்நாடு அரசின் நீட்ஸ் திட்டத்தின் மூலம், முதல் தலைமுறை தொழில் முனைவோர் புதிய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கு இதன் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த தொழில் திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத் தரப்படுகிறது. இத்திட்டத்தை மாவட்ட தொழில் மய்யங்களும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இணைந்து செயல்-படுத்துகின்றன. இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களைத் தொடங்கலாம். இதற்கென தமிழ்நாடு அரசு 25% மானியமும், 3% வட்டி மானியமும் வழங்குகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35, இதர சிறப்பு பிரிவினருக்கு (மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள்) அதிகபட்ச வயது 45. இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியாகப் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் அய்.டி.அய், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் (Project Value) 10 சதவிகிதமும், சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவிகிதமும் பங்களிப்பு செய்ய வேண்டும். வங்கி மூலம் வழங்கப்படும் கடனுதவியைப் பொறுத்து கால நிர்ணயம் செய்யப்-படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் மாவட்டத் தொழில் மய்யங்களில் விண்ணப்பம் பெறலாம்.

தொழில் முனைவோருக்குப் பயனுள்ள இணைய தளங்கள்!

Government of Tamilnadu – www.tn.gov.in
Entrepreneurship Development and Innovation Institute – www.editn.in
Ministry of Micrro, Small & Medium Enterprises (Government of Tamilnadu) – www.msmeonline.tn.gov.in
Ministry of Micro, Small & Medium Enterprises (Government of India) – www.msme.gov.in

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *