பெண்ணால் முடியும் : நம்பிக்கையோடு முயற்சி செய்தால் வெற்றி!

ஏப்ரல் 1-15,2021

கனவுகளைத் துரத்துபவர்கள், வாழ்வின் எந்த நிலையிலிருந்தாலும் அதனை நிஜமாக்க தொடர்ந்து முயற்சித்தால் ஒரு நாள் தங்களது லட்சியத்தினை வென்று, மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் வலம் வருவர். அந்த வகையில் சிறு வயதிலேயே (பால்ய) திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், வாழ்வின் முடிவு என்று அதனை எண்ணாது, மேற்கொண்டு தனது படிப்பை உயர்த்தி, அவர் கண்ட அய்.பி.எஸ். கனவை நனவாக்கி வென்றுள்ளார் _ தமிழகத்தைச் சேர்ந்த அம்பிகா. அவரது வெற்றிப் பயணத்தைப் பார்ப்போம்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 14 வயதே ஆன அம்பிகாவை திருமணம் செய்து வைத்தனர் _ அவரின் பெற்றோர். அவள் திருமணம் நடந்தபோது வெளி உலகம் அறியாத சிறு பெண்.

ஒரு நாள் குடியரசு தின காவல்துறை அணிவகுப்பைக் காண்பதற்கு தன் கணவருடன் சென்றார் அம்பிகா. அங்கு நடந்த பேரணியில் சிறப்பு விருந்தினருக்கு அடுத்தபடியாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் (அய்.ஜி.), துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.அய்.ஜி.) ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அன்றைய இரவு கணவரிடத்தில், “யார் இவர்கள்? எதற்காக இவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது’’ என்று கேட்டார்.

“அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கு காவல் துறையில் வழங்கப்படும் சிறப்பு மரியாதை’’ என்று அம்பிகாவுக்கு விளக்கினார் கணவர். அதைக் கேட்ட நொடி முதல் தானும் அய்.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்கிற ஆசை அம்பிகாவுக்குள் பிறந்தது. அவருக்கு நடந்தது சிறு வயது மணம் என்பதால் 10ஆம் வகுப்பைக் கூட அவர் அப்போது முடித்திருக்கவில்லை. தன் விருப்பத்தை கணவரிடத்தில் தெரிவித்து, படிப்பைத் தொடர அனுமதி கேட்டார். அவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அம்பிகாவுக்கு உறுதுணையாக இருந்தார்.

கணவர் ஒத்துழைப்போடு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர், தொடர்ந்து பட்டப் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். பிறகு தன் கனவுப் பணிக்காக, அய்.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சியில் சேர்வதற்காக சென்னைக்கு வந்தார்.

அய்.பி.எஸ். பொதுப் பணித் தேர்வை எழுதியவர், அடுத்தடுத்து இரண்டு முறையும் தோல்வியைத் தழுவினாலும்,  மனம் தளரவில்லை. ஆனால், மூன்றாவது முறையும் தோல்வி அடைந்த நிலையில், மனமுடைந்த அம்பிகாவுக்கு அவர் கணவர் ஆறுதல் கூறி பக்கபலமாய் இருந்து தேற்றினார். கடைசியாக மீண்டும் ஒருமுறை முயற்சி செய்வதாகத் தன் கணவரிடம் அனுமதி கோரியவர், இந்த முறையும் தோல்வி அடைந்தால் ஊருக்குத் திரும்பி அங்கு ஆசிரியர் வேலை செய்து கணவருக்கு உறுதுணையாக இருக்க முடிவெடுத்தார். நான்காவது முறை நம்பிக்கையுடன் தேர்வெழுதியதில் வெற்றி கிடைத்தது. அய்.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார் அம்பிகா.

குழந்தைத் திருமணத்தின் சாட்சியாய் இருந்தவர், தன் நிலைக்கு யார் மீதும் குற்றம் சுமத்தாமல், மனம் தளராமல், நம்பிக்கையோடு கடின உழைப்பால், விடா முயற்சியால் தனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிக் காட்டினார்.

நம்பிக்கைப் பெண் அம்பிகா அய்.பி.எஸ்.அவர்களுக்கு மகளிர் சார்பாக ஒரு வெற்றி வணக்கம்!

(தகவல் : ச.குமார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *