எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (64) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா?

அக்டோபர் 16 - 31,2020

நேயன்

கோயில்களில், தாழ்த்தப்பட்டோர், நாடார் உள்ளிட்ட சூத்திர மக்கள் செல்ல முடியாத நிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலவியது. கோயில் கொடிமரம் வரை மட்டும் சில ஜாதி மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு மேல் அவர்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது. கோயில் மதில் சுவருக்கு வெளியே நின்று தரிசிக்க சில ஜாதியினருக்கு அனுமதி. சில ஜாதியினர் கோயில் இருக்கும் தெருக்களில் செல்லக்கூட அனுமதியில்லை.

கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவதற்குக்கூட இவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. தாங்கள் செலுத்தும் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலமே செலுத்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட நிலை மாறி இன்று எல்லோரும் கோயிலுக்குள் செல்லும் நிலை உடனே வந்துவிடவில்லை. அதற்கு காலங்காலமாகப் பல்வேறு முயற்சிகள், போராட்டங்கள் நடத்தியே படிப்படியாக கோயிலுக்குள் நுழையும் உரிமை பெறப்பட்டது.

கோயில் நுழைவுப் போராட்ட வரலாறு

நாடார்கள்களின் கோயில் நுழைவுப் போராட்டம்

திருச்செந்தூர் கோயிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.

1874இல் மூக்க நாடார் மதுரை—கோயிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோயில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.

1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோயில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.

1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.

1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.

1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.

1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.

1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.

சுயமரியதை இயக்கத்தின் கோயில் நுழைவுப் போராட்டங்கள்

•             சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18.01.1926இல் கோயில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோயிலில்தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.

•             முதல் கோயில் நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர். இவர் 07.02.1927இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது.                                                                                    (‘குடிஅரசு’ 6.5.1928)

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *