ம.பொ.சி. தமிழ்த்தேசிய முன்னோடியா? பார்ப்பனர்களின் பின்னோடியா

ஜனவரி 16-31

கி.தளபதிராஜ்

திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடம் மாயை என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றிய போதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார். அப்போது விடுதலையில் ம.பொ.சிக்கு பதவியா? என்று கேள்விஎழுப்பி பெட்டிச் செய்தி வெளியானது. சுதாகரித்துக் கொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச்சொல்லி பதவி தர மறுத்துவிட்டார்.

பார்ப்பனர்களின் கைத்தடி!

1925ல் நடைபெற்ற சென்னை மாகாண பொதுத்தேர்தலில் பார்ப்பனரல்லாதார் நலனுக்காக துவங்கப்பட்ட நீதிக்கட்சி, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்காருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தவர் ம.பொ.சி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிப் போட்டியிடவில்லை. காங்கிரசில் ஒரு அங்கமாக இருந்த சுயராஜ்யக்கட்சியினர் பெரும்பான்மை பலம் பெற்றிருந்தாலும், அனைத்திந்திய காங்கிரஸ் தலைமை, அரசின் எந்தப் பதவியிலும் அங்கம் வகிக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி விட்டதால், அவர்களால் ஆட்சியை கைப்பற்ற இயலாத நிலையிருந்தது.எக்காரணம் கொண்டும் நீதிக்கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்த சீனிவாச அய்யங்காரோடு சேர்ந்துகொண்டு சுயேச்சையாக வெற்றிபெற்ற ப.சுப்பராயனை முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேலை செய்தார் ம.பொ.சி.

தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட சத்தியமூர்த்தி அய்யரை ‘நாவலர்’, ‘தீரர்’ என வானளாவ புகழ்ந்தவர். 1927ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு குழு புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றி ஆலோசனை வகுக்க இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று அறிவித்தது. காங்கிரசோ இந்தக் குழுவில் இந்தியர்கள் எவரும் இடம்பெறவில்லை எனக் காரணம் சொல்லி அந்தக் குழுவை கடுமையாக எதிர்த்தது. ஆனால் பார்ப்பனச் சங்கங்கள் கூடி சைமன் குழுவை பகிஷ்கரிக்கக் கூடாது என்று அவர்களுக்குள் முடிவெடுத்தனர். எம்.கே.-ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் அங்கத்தினர்களாக இருந்த இந்த சபைகள் சைமன் கமிஷனுக்கு ஒத்துழைக்கவும், தீர்மானங்கள் அனுப்பவும் தயார் நிலையில் இருந்தன.

விஜயராகவாச்சாரியார், சீனிவாச அய்யங்கார், ஏ.ரெங்கசாமி அய்யங்கார் போன்ற தேசியப் பார்ப்பனத் தலைவர்களும் தங்கள் கோரிக்கையை அச்சிட்டு சைமன் கமிஷனுக்குக் கிடைக்கும்படி செய்திருந்தார்கள். பார்ப்பனர்-களின் இரட்டை வேஷத்தை புரிந்து கொண்ட பெரியார், சைமன் குழுவை எதிர்க்க முடிவெடுத்திருந்த நீதிக்கட்சியினரிடம் “பார்ப்பன அரசியல் தந்திரத்தை பின்பற்றுவது பார்ப்பனரல்லாத சமூகத்தின் தற்கொலைக்குச் சமம்” என்று எச்சரித்தார். 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் “பார்ப்பனரல்லாதார் சைமன் குழுவினரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்” எனத் தீர்மானம் நிறைவேற்றினார். இந்தத் தீர்மானத்தைக் கடுமையாக விமர்சித்த ம.பொ.சி பார்ப்பனரல்லாதார் இயக்கம் ‘தேசத்துரோகம்’ செய்து விட்டதாக பிரச்சாரம் செய்தார். ஆனால் சைமன் குழுவினரைச் சந்தித்தப் பார்ப்பனர்களைக் காட்டிக் கொடுக்காமல் மறைத்தது அவரது பார்ப்பனப் பாசத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

திரிபு வேலைகள்

1927ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் நேரு கேட்டுக் கொண்டதோ பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய குடியேற்ற நாடு அந்தஸ்து. ஆனால் அதே தீர்மானத்தை திரித்து இந்தியாவிற்கு முழுமையான விடுதலை வேண்டி பூர்ண சுயராஜ்ய தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டதாகப் புளுகினார் ம.பொ.சி. அதேபோன்று இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்றும் முதலில் கோரிக்கை வைத்தது காங்கிரசே என்று திரித்துக் கூறியவரும் இவரே. மாகாண அமைப்பிற்கு சுயாட்சி வேண்டும் என்றும், மாகாண அரசுகள் தாமாக முன்வந்து அளிக்கும் அதிகாரங்களைத் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கே இருக்க வேண்டும்  என முதலில் ஆலோசனைகளை வைத்தவர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயரே. உண்மை இவ்வாறிருக்க ம.பொ.சி யாரையே தங்கள் தமிழ்த்தேசியத்திற்கு முன்னோடி எனக் கூறி அண்டப்புளுகில் ஈடுபட்டு வருகிறார்கள் இன்றைய நவீன

தமிழ்த்தேசியத் திலகங்கள்.

நாகாலாந்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்க சட்டம் இயற்றிய பொழுது, பாரத ஒருமைப்பாட்டிற்கு இது உகந்ததல்ல என்றும் நாகாலாந்தின் இந்த முடிவு நாளை அது பாரதத்திலிருந்து பிரிந்து போவதற்கான துக்க நிகழ்ச்சியாகும் என்றார் ம.பொ.சி.

சரியாகச் சொல்லவேண்டுமானால் திராவிடர் இயக்க எதிர்ப்பையே குறிக்கோளாகக் கொண்டிருந்த ம.பொ.சி அதன் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல் தமிழர் சுயநிர்ணய கோஷத்தை முன்னெடுக்கப் போவதாகச் சொல்லி தமிழரசு கழகத்தைத் துவக்கினார் என்றே சொல்ல வேண்டும்.

இந்திப் பற்று!

1938இல் தந்தை பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தை நடத்திய போது அதில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுத்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார், ஆங்கிலேய அரசு கொண்டுவந்த ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார். தாளமுத்து, நடராஜன் போன்றோர் சிறையிலேயே மாண்டனர். போராட்டத்தை ஒடுக்க நினைத்து தொண்டர்கள் சந்திக்க இயலாத வகையில் தந்தை பெரியாரை பெல்லாரி சிறையில் அடைத்தார். அதன் விளைவு “தமிழ் நாடு தமிழருக்கே!” என்ற முழக்கம் தமிழகம் எங்கும் ஓங்கி ஒலித்தது!. எழுச்சி மிகுந்த அந்த காலக்கட்டத்தில் இந்தி எதிர்ப்பைக் கண்டித்து இராஜாஜிக்கு ஆதரவுக் குரல்

எழுப்பியவர் ம.பொ.சி.

இந்தி எதிர்ப்பானது தமிழ்மொழியைக் காப்பதற்காக அல்லாமல், தேசவிடுதலைக்குப் பாடுபட்டு வந்த ஒரே அமைப்பாகிய காங்கிரசுக் கட்சியை வீழ்த்துவதற்காகவும், அப்போதுதான் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த ஜஸ்டிஸ் கட்சிக்குப் புத்துயிரளிப்-பதற்காகவுமே நடைபெறுகிறது என்று நாங்கள் கருதியதால், அந்த எதிர்ப்பை முறியடிக்க முயன்றோம்  என்று ‘எனது போராட்டம்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

1952இல் இரயில் நிலையங்களில் இடம் பெற்றிறிருக்கும் இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்து நடத்திய போது தனது கட்சிக்காரர்-களை விட்டு மண்ணெண்ணெய் கொண்டு மீண்டும் அந்த இந்தி எழுத்துகள் தெரியும்படி செய்வேன் எனக் கூறி இந்தி மொழி மீதான தன் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார் ம.பொ.சி.

இந்தியைப் பயிலுவதற்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்து வடிவத்தில் பாடப் புத்தகங்-களைத் தயாரிக்க வேண்டும் என்று அரசுக்கே யோசனை சொன்னவர்.

தனித்தமிழ்நாடு கோருவோர் வேண்டு-மானால் இந்தியை எதிர்க்கலாம். இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்கும் நாம் இந்தியை எப்படி புறக்கணிக்க முடியும்? என்று கேட்டார்.

இந்தி ஒழிக என்பது அறியாமை! அனாச்சரம்! என்றதோடு, தமிழரசு கழகம் ஆட்சிக்கு வந்தால் இந்தியை கட்டாயப் பாடமாக்குவோம் என்றார். இந்தியோடு சமஸ்கிருதத்திற்கும் சேர்த்து வால் பிடித்தவரே ம.பொ.சி.
“பெரியார் தேசியக்கொடி எரிக்கும் போராட்டத்தை கையிலெடுத்த போது அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது காங்கிரஸ் அல்ல. மாறாக பிரிவினை சக்திகளுக்கு எதிராகப் போராடி வருவது தமிழரசு கழகமே. தேசியத்தின் வாரிசாக, காந்தியத்தின் காவலனாக தன் கடமைகளைச் செய்துவருவது தமிழரசு கழகமே” என்று சொல்லி தனது துரோக வரலாற்றுக்கு தனக்குத் தானே நற்சான்று கொடுத்துகொண்டவர்தான் இந்த ம.பொ.சி.

அரசியல் சட்டப்படி நாம் இன்னும் சூத்திரர்களாகவே வைக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்ன பெரியார் பார்ப்பனரல்லாத மக்களை இழிவு படுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை கொளுத்தும் போராட்டத்தை 1950இல் அறிவித்தார். அந்த நேரத்தில் “திராவிட இயக்க எதிர்ப்புப் பிரச்சாரம் புயற்காற்று வேகத்தில் தமிழ்நாட்டில் பரவியதாகவும், தமிழரசு கழகம் திராவிட இயக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்டாலும், தி.க, தி.மு.க விற்கு இருந்த கொள்கை உடன்பாடு காரணமாக இரண்டையும் சேர்த்தே எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டதாகவும், காங்கிரசில் இருந்த நிலப்பிரபுக்களும், தொழில் அதிபர்களும் திராவிட இயக்க எதிர்ப்பு இயக்கத்தை ஊக்குவிப்-பதில் அக்கரை காட்டினர்” என்றும் எழுதினார்.

ம.பொ.சி யின் துரோகச் சரித்திரம் நீண்டதொரு வரலாறு. அவை இன்றளவும் புதுப்புது ஆட்களால் தொடரப்படுவதுதான் தமிழர்களுக்குப் பெருங்கேடு! 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *