பிள்ளைப்பேறு – உடல்கூறு கல்வி

அக்டோபர் 01-15

– தந்தை பெரியார்

நமது பெண்களுக்கு முக்கியமாய்த் தெரிய வேண்டியது பிள்ளைப் பேறு, பிள்ளை வளர்த்தல், ஆண் பெண் உடல்கூறு ஆகியவைகளாகும். பிள்ளைப்பேறு விஷயத்தில் நமது பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது. அனேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப்பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது.

 

ஏதோ கடவுள் கொடுக்கிறார்; கடவுளே வயிற்றில் கொண்டு விடுகிறார், கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார், கடவுளே வளர்க்கிறார், கடவுளே சாகடிக்கிறார் என்று கருதிக் கொண்டு இது விஷயங்களில் மிருகங்களைவிடக் கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். நண்பர் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் பிள்ளைப் பேறு விஷயத்தில் ஆண் பிள்ளை வேண்டுமென்று கருதினால் ஆண் பிள்ளை பெறவும் பெண் பிள்ளை வேண்டுமென்று கருதினால் பெண் பிள்ளை பெறவும் மனிதனால் கூடும் என்னும் அந்த வித்தையைத் தான் படித்திருப்பதாகவும் அவர்கள் சொன்னதால் அது விஷயமான மற்ற விஷயங்களைப்பற்றியும் நான் சொல்லத் துணிந்தேன்.

அந்த மாதிரி, அதாவது முதலியார் அவர்களைப் போல் நான் சொல்லி இருந்தால் ஒரு நாஸ்திகன் சொல்லுகிறான் என்று சொல்லியிருப்பீர்கள். ஆஸ்திக சிகாமணியும் ஆஸ்திகப் பிரச்சாரம் செய்பவருமான அவர் சொன்னதினால் பிள்ளைப் பேறுக்கும் கடவுளுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்றாவது தெரிந்திருப்பீர்கள். இல்லா விட்டால் எல்லாம் கடவுள் செயல் என்றும், அதற்கு மாறுபட்ட அபிப்பிராயமெல்லாம் கடவுள் செயலை மறுப்பதென்றுமே சொல்லுவீர்கள். இந்தக் காரியத்தில் எல்லாம் கடவுள் பிரவேசிக்க முடியாது. அவர் இருந்தால் அவருக்கு வேறு எத்தனையோ வேலை இருக்கிறது. சோம்பேறிகளும் மூடர்களும் பித்தலாட்டக்காரரும்தான் தொட்டதற்கெல்லாம் கடவுளைக் கொண்டு வந்து குறுக்கே போட்டுவிட்டு தங்கள் பொறுப்பைக் கைவிட்டு விடுவது. அறிவு வளரவளர இது குறைந்துவிடும்.

மேல் நாட்டில்

மேல் நாடுகளில் பிள்ளைப் பேறு விஷயத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் சிறிதாவது அறிவுடையவர்களாகவே இருக்கிறார்கள். அதனாலேயே அங்கு பிள்ளைகள் சாவு மிகவும் குறைச்சல்; கர்ப்பத்தில் சாவதும் மிக மிகக் குறைச்சல், கர்ப்ப ஸ்திரீகள் சாவும் குறைச்சல், பிள்ளைகளுக்கு வியாதி வருவதும் குறைவு. அளவுக்கு மீறியும் வளர்க்க முடியாத அளவும் இளம் வயதிலும் பிள்ளைப் பெறுவது முதலாகிய காரியங்கள் அங்கு அதிகம் காண முடியாது. மனித வாழ்வு ஆயுளும் நம்மைவிட இரட்டிப்பு நாள் வாழ முடிகிறது. இவற்றில் எல்லாம் கடவுள் செயல் இருக்குமானால் கடவுளுக்கு நம் நாட்டின்மீதும், நம் சமூகத்தின்மீதும் கெட்ட எண்ணமே என்று யோசித்துப் பாருங்கள். இந்தக் காரியம் அங்கெல்லாம் மனித அறிவினாலும் மனித முயற்சியாலுமே சீர்படுத்தப்படுகிறது. இங்கு அறிவீனத்தாலும் கவலை ஈனத்தாலுமே இப்படி ஆகி வருகிறது.

சேர்க்கை விஷயம்

சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல் கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில் புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய் கேட்கிறபோதும் பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம். அந்தக் கலைகளை நமது ஆண் பெண் இருபாலருமே ஒரு அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப்பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய் சாவு ஊனம் மனச்சஞ்சலம் பொருந்தா வாழ்வு ஆகியவைகள் பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பின்பு எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி வளர்ப்பது, எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும். சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் பொம்பளை (பெண்பிள்ளை) நோவு என்று சொல்லி விடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும் பெண்கள் அதையும் பொம்பளை வியாதி என்றுதான் சொல்லுகிறார்கள். இது பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும். இது சம்பந்தமான வியாதி நம் நாட்டில் இருப்பதுபோல் மேல் நாட்டில் இவ்வளவு கிடையாது.

அறிந்தால் தவற மாட்டார்

ஆண்-பெண் தன்மை, உடல்கூறு சேர்க்கை விளக்கம், கர்ப்பம் – பிள்ளைப்பேறு ஆகியவைகளைப்பற்றி சர்க்கார் அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல்வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவற்றை நன்றாக மக்கள் அறிந்தால் இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல் கூட  ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். எப்படி எனில், மனிதன் இன்னஇன்ன பதார்த்தம் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது நோய்வரும் என்று கருதினால் எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால் அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல் இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையை கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?

கவலையற்ற இன்பம்

கல்யாணம் செய்துகொண்டவர்கள் அவசரமாகப் பிள்ளை பெற வேண்டுமென்று ஆசைப்படக் கூடாது. 10 வருஷமாவது சுதந்திரமாய் கவலையற்று வாழ்க்கை இன்பம் அனுபவிக்க வேண்டும். அல்லது குறைந்தது கல்யாணமாகி 5,6 வருஷத்திற்காவது பிள்ளை பெறாமல் கவலையற்று வாழ வேண்டும். இந்தக் காலத்தைத் தவிர மனிதனுக்கு கவலையற்ற இன்பமனுபவிக்க காலமே கிடையாது. இந்தக் கொள்கைகள் எல்லாம் சரி என்று பட்டால் பிறகு இவைகளுக்கு அறிவும் சவுகரியமும் தானாகவே ஏற்பட்டு விடும்.

செல்வம்

தாய் தகப்பன்மார்கள் மகளுக்கு துணிமணி வாங்கிக் கொடுப்பதிலும், நகை போடுவதிலும், ஆடம்பரச் செலவு செய்வதிலும் செலவிடும் பணத்தை ரொக்கமாகச் சேர்த்து வைக்கும்படி பெண்ணின்பேரால் பாங்கியில் போட்டு பெருக்கி வைக்க வேண்டும். குழந்தை பிறந்த உடன் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் தாதிக்கு (ஆயாம்மாளுக்கு) சம்பளம் கொடுக்கவும் அந்தப் பணம் உதவும்படி இருக்க வேண்டும். தாய் தகப்பன் பெண்களுக்குச் செய்ய வேண்டிய முக்கிய உதவி இதுவேயாகும். அதாவது கல்வி அறிவு கொடுப்பதும் பிள்ளை வளர்க்க பணம் சவுகரியம் செய்து கொடுப்பதுமேயாகும்.

சுகாதாரம்

தவிர, நமது பெண்களுக்குச் சுகாதார அறிவும் ஏற்படுத்த வேண்டும். நம் நாட்டில் நன்றாகப் படித்த பெண்களுக்குக்கூட சுகாதார அறிவு கிடையாது. நமது வீட்டுக் குப்பையைப் பக்கத்து வீட்டுப் பக்கம் கொட்டுவதும் நமது வீட்டுப் பிள்ளையை எதிர்த்த வீட்டு டிச்சில் வெளிக்கு இருக்க விடுவதும் வீட்டில் உள்ள அசிங்கத்தைக் காகிதத்தில் மடித்து நடு வீதியில் எறிவதும் சுகாதாரமாய் கருதப்படுகிறது. இப்படியே ஒவ்வொருவரும் செய்து தங்களை ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள். கடைசியில் சுகாதாரக் குறைவினாலேயே பல நோய்கள் உண்டாகின்றன. மேல்நாடுகளில் ஒரு பெண்ணோ ஓர் ஆணோ ஒரு பற்ற வைத்த நெருப்புக்குச்சித் துண்டைக்கூட ரோட்டில் போட மாட்டார்கள். ஜோப்பிலாவது போட்டுக் கொண்டு போய் குப்பைத் தொட்டி கண்ட பக்கம் அதை எடுத்து அதில் போடுவார்களே ஒழிய வீதியில் போட மாட்டார்கள். சத்தமாய் இரும மாட்டார்கள். தெருவில் எச்சில் துப்ப மாட்டார்கள். இவ்விஷயங்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம் கவலை செலுத்துவார்கள். இங்கே சில பெண்கள் மூக்குத்தி, நத்து பேசரி போட்டுக் கொண்டு மூக்கைச் சிந்துவதும் வீதியில், சுவரில், நிலத்தில் வீசி எறிவதும் வெகு ஆபாசமாய் காணப்படும்.

(16.06.1940 அன்று காஞ்சிபுரத்தில் திருவாட்டி லீலாவதி திருமணத்தில் கலந்து கொண்டு தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.)

– குடிஅரசு – 30.06.1940

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *