Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் மகாலெட்சுமி ஒரு மலைக் கிராம மக்களின் கல்விக் கனவை நிறைவேற்றிய சாதனைப் பெண்!

எதிர்காலச் சமூகம் சிறப்பானதாக விளங்கிட அடித்தளமாக விளங்குபவை கல்வியும் நல்லொழுக்கமுமே. இவை இரண்டிற்கும் ஆசிரியர்களே முதற்காரணமாக அமைகிறார்கள். எனவே கல்வியை அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதே அரசின் முதற்கடமை. மக்களிடம் மலைவாழ் பழங்குடி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க தனிப் பள்ளிகளை நிறுவினாலும் அம்மாணவர்களுக்கு கல்வி எட்டாக் கனியாகவே உள்ளது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிடும் மனநிலையும் மக்களுக்கு இருப்பதில்லை.

பழங்குடியினருக்காக அரசு நடத்தும் பள்ளி ஒன்றில் மாணவர்களே இல்லாத நிலையை மாற்றி, 400க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கிறார் ஒரு ஆசிரியை. மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்தக் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க, தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார் மகாலட்சுமி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையின் உச்சியில் ஜமுனா மரத்தூருக்கு அருகில் அமைந்திருக்கிறது மலை கிராமான அரசவல்லி. முழுதும் பழங்குடியினரே வசிக்கும் இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மகாலட்சுமி.
பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதியுள்ள இந்த உண்டு – உறைவிடப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மகாலட்சுமியைத் தங்கள் சக மாணவராகவே எண்ணும் அளவிற்கு அவர்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். மாணவருக்கும் மகாலட்சுமிக்கும் இடையிலான உரையாடல்கள், இரு நண்பர்களுக்கு இடையிலான உரையாடல்களைப் போலவே அமைந்திருக்கின்றன. ஆனால், இந்த நிலையை வந்தடைய அவர் கடந்த பாதைகள் மிகக் கடுமையானவை.

மகாலட்சுமியின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் என்ற குக்கிராமம். ஒரு கட்டத்தில் தாய்க்கு மனநலம் பாதிக்கப்பட, வீடே உருக்குலைந்து போனது. அதுவரை வேலைக்குச் சென்றுவந்த அவரது தாயார் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட, வீட்டில் வறுமை சூழ ஆரம்பித்தது.
இதனால், அவரது சகோதரி தன் படிப்பைநிறுத்திவிட்டு வேலைக்குப் போய் மகாலெட்சுமி யைப் படிக்க வைக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பில் 402 மதிப்பெண்களும் 12ஆம் வகுப்பில் 1052 மதிப் பெண்களும் எடுத்த மகாலட்சுமி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து இரண்டாண்டுப் படிப்பை முடித்
தார்.

அதற்குப் பிறகு தான் படித்த பள்ளியிலேயே சில நாட்கள் வேலை பார்த்தவர், வேறொரு பள்ளியில் தற்காலிப் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு இந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத் துறையின் கீழ் அரசவல்லியில் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் சேர்ந்தார்.

2006ஆம் ஆண்டில் மகாலட்சுமி இந்தப் பள்ளிக்கூடத்திற்குள் முதல் நாள் நுழைந்த போது, தலைமையாசிரியை இல்லை. வாயில் காவலர் இருந்தார். மாணவர்கள் யாரும் இல்லை. “குழந்தைகள் எங்கே எனக் கேட்டேன். குழந்தைகள் எல்லாம் தொடர்ந்து வர மாட்டார்கள். மதிய நேரத்தில் வந்து உணவை வாங்கிவிட்டுச் சென்று விடுவார்கள் என்று சொல்லப்பட்டது” என்று அந்த நாளை பி.பி.சி. செய்தியாளரிடம் நினைவுகூர்கிறார் மகாலெட்சுமி.
அதேபோல மதிய நேரத்தில் வந்த சில குழந்தைகள் உணவை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்று மதிய உணவின் தரம் படுமோசமாக இருந்தது. மாணவர்களே இல்லாததால், பள்ளிக்கூடமே கிட்டத்தட்ட மூடும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

அந்தப் பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, அந்த மலைப் பகுதியில் அமைந்திருந்த 23 பள்ளிக்கூடங்களிலும் இதைப் போன்ற நிலைமைதான் இருந்தது. முக்கியமான காரணம் அந்தப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் கிடையாது என்பதுதான்.

புதிதாக ஆசிரியர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு இரண்டாவது நாள் 3 பெண் குழந்தைகள் மட்டும் வந்தார்கள். எப்படியாவது மாணவர்களைப் பள்ளிக்கு ஈர்க்க முடிவுசெய்த மகாலட்சுமி, ஒவ்வொரு வீடாகச் சென்று குழந்தைகளை அழைக்க ஆரம்பித்தார்.

“அப்போது அந்தந்த வீட்டிலிருப்பவர்களே எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ‘வீட்டு வேலையை யார் பார்ப்பார்கள்’ எனக் கேட்பார்கள். என்ன ஜாதி எனக் கேட்பார்கள். ஆனால், கொஞ்ச நாட்களில் புரிந்துகொண்டார்கள்”.

பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் வர ஆரம்பித்தார்கள். அவர்களும் மதியம் வரைதான் இருந்து சாப்பிட்டுவிட்டு பிறகு ஓடிவிடுவார்கள். இதனால், அவர்களைத் தக்கவைக்க கார்ட்டூன் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார் மகாலெட்சுமி. கதைகளைக் கேட்டு ஓடிவிட்ட சூழலில், பாதிக் கதைகளை மறுநாள் சொல்வேன்’’ என்று. மாணவர்களை ஆர்வத்தை தூண்டியுள்ளார். அதன்பின் ஓரளவிற்கு மாணவர்களின் நம்பிக்கையை பெற ஆரம்பித்தார். பிறகுதான் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தபோது, அவர்களது நிலை மிக மோசமாக இருந்தது. துணிகள் கிழிந்து, பரட்டைத் தலையுடன் மோசமான நிலையில் இருந்தார்கள். இதனால் தானே சோப்பு வாங்கிவந்து அவர்களைக் குளிப்பாட்டுவார் மகாலட்சுமி. ஊரிலிருந்த வசதியானவர்களைக் கேட்டு, சிலருக்கு உடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அடுத்ததாக உணவில் இருந்த முறை கேட்டைத் தடுத்த நிறுத்தவும், அது தொடர்பாகக் கேள்வி கேட்கவும் ஆரம்பித்தார். முதலில் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைக்க ஆரம்பித்தது. அவரது கடும் உழைப்பால் நிலை மாற்றமடைந்தது.
2006இல் 10 குழந்தைகள்கூட இல்லாத இந்தப் பள்ளியில் தற்போது ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்களில் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் மலை கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர். முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வருபவர்கள்.
பல குழந்தைகளின் பெற்றோர் கூலி வேலை பார்ப்பவர்கள் என்பதால், குழந்தைகளைக் கவனிக்க நேரம் இருக்காது. ஆகவே, குழந்தைகள் தங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, முடிவெட்டுவது ஆகியவற்றைச் சொல்லக்கூட அவர்களுக்கு ஆளிருக்காது என்பதால் தாமே செயலில் இறங்கியவர்.
“ஒரு சலூனில் சென்று முடிவெட்டக் கற்றுக்கொண்டார். இப்போது யாராவது முடிவெட்டாமல் இருந்தால் தாமே வெட்டிவிட்டு, குளிக்க வைத்துவிடுகிறார் என்கிறார் மகாலட்சுமி.

மாணவர்கள் மனஅழுத்தம் இல்லாமல் இருப்பதற்கு அவர்களை பல்வேறு கலை, விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறார். பேயாடுதல் குறித்த அவரது விழிப்புணர்வு காணொலி பெரும் வரவேற்பை பெற்றது.

13 ஆண்டுகளுக்கு முன்பாக மூடும் நிலையில் இருந்த இந்தப் பள்ளி தற்போது புதிய கட்டடங்களுடன் காட்சியளிக்கிறது. நூலகம், ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவையும் இருக்கின்றன. மேல்நிலைப் பள்ளியாக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

“மனப்பாடம் செய்து, அதையே திரும்ப எழுதும் கல்வி முறைக்கு மாறாக அவர்களை முழுமையான ஆளுமையாக்குவது எனக்கு
முக்கியமாகப்படுகிறது” என்கிறார் மகாலட்சுமி.

இவரது பணி பலராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்கள் கவனிக்கின்றன. இருந்தபோதும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் மோசமாக இருந்தால் அதைச் சுத்தம் செய்யத் தயங்குவதில்லை.

இவற்றையெல்லாம்விட சிறப்பு என்ன எனில், வெறும் புத்தகத்தைக் கற்பிக்கும் வாத்தியாராக இல்லாமல், சமூகக் குற்றங்களைக் களையும் ஆசிரியராகத் திகழ்வதுதான்.

பிள்ளைகளிடமும் பெற்றோரிடமும் முற்போக்குக் கருத்துகளை விதைக்கிறார்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கருத்துகளையும், அயோத்தி தாசர், ஜோதிபாபூலே, உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களையும் அறிமுகப்படுத்துகிறார்.

பகுத்தறிவு வாழ்வியலைக் கற்பித்து மூடநம்பிக்கைகளை அகற்றுவதில் தனிக்கவனம் செலுத்துகிறார்.

இப்பகுதிகளில் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியதில் இவரது பங்களிப்பு மிகையானது.

மகாலட்சுமியின் இந்தப் பணி, பல பழங்குடியினக் குழந்தைகளின் வாழ்வை மாற்றியிருக்கிறது. அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தனிமனிதர்களின் செயல்பாடுகள், ஒரு சமூகத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு மகாலட்சுமி ஓர் எடுத்துக்காட்டு! 