பெரியார் பேசுகிறார் : அண்ணா முடிவு…!

செப்டம்பர் 1-15 2019

இன்று அண்ணா அவர்கள் முடிவு எய்திவிட்டார். இந்த முடிவு தமிழ்நாட்டின் நான்கு கோடி மக்களை மாத்திரமல்லாமல் இந்தியா முழுவதிலுமுள்ள மக்களையும், இந்தியா மாத்திரமல்லாமல் உலகில் பல பாகத்திலுமுள்ள மக்களையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்திருக்கும் முடிவாகும்.

* * *

அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாடும் தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றமடையக் காத்திருந்தது. அவரும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி அதை உருவாக்குவதே தனது கடமை என்று கருதி இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டாக,

“நான் இந்த (என்னுடைய) மந்திரிசபையையே பெரியாருக்கு காணிக்கையாக வைத்துவிட்டேன்’’ என்று கூறி இருக்கிறார். அப்படி என்றால் பெரியார் கொள்கைப்படி நான் நடப்பேன் என்று சொன்னதாக நான் கருதினேன்.

அரும்பெரும் சாதனை!

அதற்கேற்ப அவர் செய்த அரும் பெரும் காரியங்களில் முக்கியமானது “சுயமரியாதைத் திருமண செல்லுபடி சட்ட’மாகும். அதில் கடவுளுக்கோ, மதத்திற்கோ, சாஸ்திரத்திற்கோ இடமில்லை என்பதாகும். இது தமிழ்நாட்டிற்கு மாத்திரமில்லாமல் உலகத்திற்கே மாபெரும் துணிச்சலான காரியம் என்று கருதப்பட்டது.

மற்றும் “பொதுப்பணி இடங்களிலுள்ள கடவுள் படங்களை அப்புறப்படுத்திவிட வேண்டியது’’ என்கின்ற அரசுக் கட்டளையானது மிக மிகத் துணிச்சலான சீர்திருத்தமாகும்.

மற்றும் “இந்தி மொழி தமிழ்நாட்டுக்கு கட்டாயம் என்பது ஒப்புக்கொள்ள முடியாது’’ என்று சட்டசபை மூலமே தீர்மானம் செய்ததானது தனது பதவி போனாலும் சரியென்ற துணிவு கொண்ட காரியமாகும். இவை தவிர உத்யோகங்களில், பதவிகளில் தமிழர்களின் உரிமையைப் பாதுகாத்ததாகும்.

இதில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அதிசயம் என்னவென்றால் இவைகள் செய்யப்பட்ட பிறகும் நாட்டில் எல்லா கட்சியாருடனும் எல்லா மக்களுடனும் மிக்க நேசமாகவும், அன்புக்குரியவராகவும் இருந்து வந்ததாகும்.

அண்ணாவின் குணம் மிக மிக தாக்ஷண்ய சுபாவமுடையது என்றுதான் சொல்ல வேண்டும். யாரையும் கடிந்து பேசமாட்டார். தன்னால் முடியாத காரியமாய் இருந்தாலும் முடியாது என்று சொல்ல மிகவும் தயங்குவார். நல்ல ஆராய்ச்சி நிபுணர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்பினால் கட்டுப்படுத்தப்பட்ட ஸ்தாபனம்

காங்கிரஸ் ஸ்தாபனம் என்பது அதிகார சக்தி கொண்ட ஸ்தாபனமாகும். அண்ணாவின் முன்னேற்றக் கழக ஸ்தாபனமானது அதிகாரம் இல்லாதது என்பதோடு அன்பினாலேயே கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நட்புநிலை ஸ்தாபனமாகும். இதற்கு உதாரணம் என்னவென்றால் தி.மு.க.வில் ஏமாற்றமடைந்தவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் கழகத்திற்குள் ஒரு பூசலோ, தனிப் பிரிவோ, கருத்து வேற்றுமை கோஷ்டியோ இல்லாமல் ஒரு குடும்பம் போலவே வாழ்ந்து வருகின்றார்கள் என்றால் இதற்கு அண்ணா நடந்து கொள்ளும் தன்மையேதான் காரணமாகும். இவைகளையெல்லாம்விட என்னைப் பற்றியும் சில இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.

அண்ணாவின் பெருந்தன்மை

அதாவது நான் தி.மு.க.வுக்கு அது தேர்தலில் வெற்றி பெறும்வரை நான் அக்கழகத்திற்கு- படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து மிக்கப் பெருந்தன்மையோடு நட்புகொள்ள ஆசைப்பட்டு என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன் நண்பராகவே நடத்தினார். அதன் பயனாக எனக்கு மக்களிடையே அதிக மதிப்பு ஏற்பட்டதுடன், என் அந்தஸ்தும் அதிகமாயிற்று என்றுகூட சொல்லலாம். அதற்கு நான் கடமைப்பட்டவனாக இருக்க வேண்டியதும் என் கடமையாகிவிட்டது.

இதன் பயன் தி.மு.க.வை என்றென்றும் பகுத்தறிவுக் கழகமாகவே இருக்க உதவும் என்று நினைப்பதோடு அண்ணா என்னிடம் காட்டிய அன்பும், ஆதரவும், அளித்த பெருமையும் தி.மு.க.வுக்குள் எந்தவிதக் கருத்து வேற்றுமையையோ, கட்சி மனப்பான்மையையோ கழகத்திற்குள் புகுத்தவிடாமல் கழகம் பெருமையோடு விளங்கவும், மக்களுக்குத் தொண்டாற்றவும் பயன்படும் என்று உறுதி கொண்டிருக்கின்றேன். அதற்கேற்ற தன்மைகளை அண்ணா, தம்பிமார்களுக்கு ஊட்டியும் இருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இப்படிப்பட்ட ஒரு அற்புத குணம் படைத்த அண்ணா முடிவானது தமிழருக்கும், தமிழ் நாட்டிற்கும் பரிகாரம் செய்ய முடியாத நட்டமேயாகும்.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஏற்பட்ட அண்ணாவின் இந்த முடிவு இந்த நாட்டில் மற்ற எவருக்கும் எளிதில் கிடைக்க முடியாத உயர்தர முடிவேயாகும். அண்ணா நல்ல பதவியில், நல் வாழ்வில் எல்லா மக்களாலும் கொண்டாடி, புகழ்ந்து, பாராட்டி முடிவைப் பற்றி துக்கம் கொண்டாடும்படியான அரிய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

பாராட்டுதற்குரிய புகழ் பெற்றவர்

மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு _ மேன்மைக்கு அறிகுறி முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே அண்ணா அடைந்த புகழ் மிக மிக பாராட்டுதற்குரியதாகும்.

மற்றும் இனியும் அவர் புகழ் ஓங்க வேண்டுமானால் “அண்ணாவுக்குப் பிறகும் அண்ணா இருப்பதுபோலவே காரியங்கள் நடைபெற்று வருகின்றன’’ என்று சொல்லப்படும் நிலையால்தான் முடியும். தி.மு.கழகத் தோழர்கள் யாவரும் எனது நண்பர்களும் அரும்பெரும் கூட்டுப் பணிக்காரர்களுமாக இருப்பதால் நான் அவர்களை எனது சொந்த தி.க. தோழர்களைப் போல, கூட்டுப் பணியாளர்களைப் போலவே கருதுகின்றேன்.

கடைசி நேரத்தில் அண்ணா உடல்நிலை தேறி அவர் பிழைத்துக் கொள்வார் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் கடவுள் பிராத்தனைகளும், பூஜைகளும் வளர்ந்ததுடன், ஜோசியர்கள் எல்லாம் ஜோசியம் நல்ல நம்பிக்கையுடன் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அவர்களும் ஏமாற்றம் அடையும்படி முடிவு ஏற்பட்டு விட்டதானது மிக்க பரிதாபத்திற்குரியதாகும்.

பொதுமக்கள் எல்லோரும் மாற்றுக் கட்சியாளர்கள் உள்பட இந்த மாபெரும் நட்டத்திற்கு பரிகாரமாக அந்தத் (தி.மு.க.) தலைவர்களுடன் ஒத்துழைத்து அதனால் மக்களுக்கு வேண்டிய எல்லா நலன்களையும் பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

–  ‘விடுதலை’ 3.2.1969

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *