தொலைநோக்குச் சிந்தனையில் தலைசிறந்த தந்தை பெரியார்! – (2)

நவம்பர் 01-15

 

ஆண்களைப் போல பெண்களும் வாழவேண்டும்!

தந்தை பெரியார் அவர்கள், “தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாக பெண்களையே முழுமையாக நியமிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்கள். “காரணம், தாய்தான் (பெண்கள்தான்) பிள்ளைகளின் முதல் ஆசிரியர். எனவே, அவர்களுக்கு கட்டாயம் கல்வி அளிக்கப்பட வேண்டும். பெண்கள் மட்டுமே 5ஆம் வகுப்புவரை ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்’’ என்று 1946இல் கூறினார்.

பெரியாரின் இக்கருத்தை 1992இல் அமைக்கப்பட்ட, பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக்குழு ஏற்று, “தொடக்கப் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்களாகப் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

தந்தை பெரியார் எவ்வளவு முன்னோக்கி இச்சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளார் என்பது இதிலிருந்து விளங்கும்.

இன்றைக்கு ஆண்களைப் போலவே பெண்கள் ஆடைகளை அணிகிறார்கள். அப்படித்தான் அணிய வேண்டும் என்று 70 ஆண்டுகளுக்கு முன்பே (1946) பெரியார் வலியுறுத்திக் கூறினார். உடை மட்டுமல்ல, தலைமுடியை ஆண்களைப் போல  வெட்டிக்கொள்ள வேண்டும்; சிலம்பம், குஸ்தி, வாள்வீச்சு எல்லாம் பெண்கள் பயில வேண்டும் என்றார். அவையும் இன்று நடப்பில் வந்துவிட்டன. இன்றைக்கு வந்துள்ள மாற்றங்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னேயே வரவேண்டும் என்ற பெரியாரின் தொலை நோக்கும் முற்போக்கும் வியப்பிற்குரியதல்லவா?  

மின்சாரத்தில் கார்கள் ஒடும்

“கார் இனிமேல் எண்ணெய்யில் ஓடாது; மின்சாரத்தில் கார் ஓடும்’’ என்று சொன்னார்.

ஏற்கெனவே சீனாவில் மின்சாரத்தில் கார்கள் தாராளமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்தியாவிலும் இறக்குமதியாகி விட்டது. இங்கே என்ன சிக்கல் என்றால், மின்சாரம் கிடைக்க வேண்டுமே என்று சிலர் கேட்பார்கள். ஆனால், அந்தக் கார் ஓடுவதிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்கிறமாதிரி அந்தக் காரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எல்லாவற்றிலும் பார்த்தீர்களேயானால், அய்யாவினுடைய புரட்சிகரமான கருத்து, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களைப் பாருங்கள். ஆள் நன்றாக இருப்பார்; விளையாட்டுப் போட்டி, கால்பந்தாட்டப் போட்டி, கைப்பந்தாட்டப் போட்டி இவையெல்லாம் பார்த்தீர்களேயானால், கறுப்பு மனிதர்களாக இருந்தாலும், ஆப்பிரிக்கக்காரர் களானாலும், அவர்கள் எல்லாம் என்ன சாப்பிடுகிறார்கள்? அவர்கள் என்ன பருப்புக் குழம்பையா சாப்பிடுகிறார்கள்?

இறச்சி உணவு இன்றியமையாதது

தந்தை பெரியார் சொன்னார், “ஆடு, கோழி, பன்றி முதலிய மாமிசம் சாப்பிடும் மக்களை மாட்டிறைச்சியும் சாப்பிடும்படி செய்து, அது எளிதாய்க் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். மேல்நாடுகளைப் போல் மாட்டுப் பண்ணைகளை வைத்துக் கொள்ள வேண்டும். பசு மாடுகளைப் பால் கறவைக்கு வைத்துக்கொள்ள வேண்டும். மேல்நாடுகளைப் போல் விவசாயத்துக்கு மாடுகளே தேவையில்லாமல் இயந்திரங்களைப் பயன்படுத்தச் செய்தல் வேண்டும்’’ என்று.

காந்தியார், இயந்திரங்கள் பிசாசுகள் என்று எழுதினார். உடனே, தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் தொடங்கும்போது முன்பு, தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதியிருக்கிறார். “இயந்திரத்தினுடைய பெருமை, இயந்திரம் எவ்வளவு சிறப்பானது. தொழிற்புரட்சிக்கே அதுதானே அடிப்படை. இயந்திரம் கூடாது என்றால், மனிதனுக்கு அபிவிருத்தி கூடாது என்று அர்த்தம்’’ என்றார் பெரியார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *