தமிழினத்தின் கிழக்கு கலைஞர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

2023 ஆகஸ்ட் 1-15,2023 கவிதைகள்

அஞ்சுகம் முத்து வேலர்
அருந்தலைச் செல்வர் என்றும்
நெஞ்சிலே தமிழைத் தாங்கி
நித்தமும் ஒளிர்ந்து வந்தார்!
கெஞ்சிடார், தமிழி னத்தின்
கிழக்கெனக் கலைஞர் வாய்த்தார்!
வஞ்சினம் மேற்கொண் டோராய்
வாழ்வினில் களத்தில் நின்றார்!

முரசொலி இதழின் மூலம்
முத்தமிழ் முழக்கம் செய்தார்;
அரசியல் துறையில் தம்மை
அகிலமே உணர வைத்தார்!
திறமுடன் பெரியார் அண்ணா
திராவிடப் பாதை சென்றார்!
உரமுடன் மாநி லங்கள்
உயர்ந்திட உரிமை கேட்டார்!

வள்ளுவர் கோட்டம் கண்டார்
வள்ளுவர் தமக்கே தெற்கில்
உள்ளமோ உவகை கொள்ள
உயரிய சிலையும் வைத்தார்
விள்ளரும் தொண்டால் போற்றும்
வியத்தகு தலைவர் ஆனார்!
எள்ளலைப் புறத்தே தள்ளி
ஏற்றவை மகிழ்ந்து செய்தார்!

முதல்வராய் நாட்டில் அய்ந்து
முறையுமே பொறுப்பை ஏற்றார்!
பதவியால் பெருமை பெற்றார்
பகுத்தறி வோங்கச் செய்தார்!
பதரென இருந்தோர்க் கெல்லாம்
பாடமும் கற்றுத் தந்தார் !
எதற்குமே அஞ்சார் நம்முள்
இரண்டறக் கலந்திட் டாரே! றீ