பகுத்தறிவு : ஜாதி, மத மூடநம்பிக்கைகள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள்!

2022 ஆகஸ்ட் 01-15 2022 மற்றவர்கள்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இந்த இந்திய நாட்டிற்கு வெளியேயிருந்து வந்த ஆரியர்கள், இந்நாட்டின் பழங்குடித் தமிழ் மக்களை வீரத்தால் வெல்ல முடியாமல், சூழ்ச்சிகளாலும் வலக்காரங்களாலும் மூடநம்பிக்கைகளான கருத்துகளைப் புகுத்தியும் அவர்களை ஒற்றுமை இழக்கச் செய்தும், வேறுவேறாகப் பிரித்தும், அவர்களுக்குள் பகைமை பாராட்டச் செய்தும், ஆட்சி இழக்கச் செய்தும் அடிமைப்படுத்தினர்; அறியாமையில் மூழ்கச்செய்தனர்; அவர்களை இழிவான பிறவிகள் எனத் தாழ்வுபடுத்தினர்.
நடு ஆசியாவின் குளிர்ப் பகுதியிலிருந்து அவர்கள் வந்ததால், வெப்ப நாடாகிய இந்நாட்டில் வாழ்ந்து வந்த பழங்குடித் தமிழ் மக்களைவிட ஆரியர்கள் நிறத்தால் வெளுத்தும் உருவத்தால் கொஞ்சம் திருத்தமுற்று அழகாகவும் இருந்தனர். பழந்தமிழ்க் குடிமக்களோ நிறத்தால் கொஞ்சம் கருத்தும், உருவத்தால் சிறிது பொலிவு குறைந்தும் காணப்பெற்றனர்.
எனவே, ஆரியர் தங்களைத் தேவர்கள், பிராமணர்கள் என்றும், தாங்கள் பிரமதேவன் என்பவன் முகத்திலிருந்து பிறந்தவர்கள் என்றும், பொய்யாகவும் புளுகாகவும் கூறி, நம் பழந்தமிழ்க் குடிகளை நம்பும்படி செய்தனர்.

ஆரியர்கள் பேசிவந்த வேதமொழி என்னும் செப்பமும் செழுமையும் இல்லாத ஒருவகைக் கரடு முரடான மொழி, நம் பழந்தமிழர்க்கு விளங்காமலிருந்ததால், அவ் வேதமொழியைத் தேவமொழி என்றும், அதிலேயே தேவர்களும் தெய்வங்களும் பேசிக் கொள்கிறார்கள் என்றும் கற்பனையாகப் பொய் கூறி, அப்பழந்தமிழ் மக்களை ஏமாற்றினர். அன்பிலும் விருந்தோம்-பலிலும் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் ஆரியர்களைவிடப் பல மடங்கு முன்னேறி மேம்பட்டிருந்த பழந்தமிழர்கள் ஆரியர்கள் கூறிய பொய்யுரைகளை முழுமையாக நம்பி அவர்களுடைய கருத்துகளையும் கொள்கை-களையும் பின்பற்றி அவர்களிடம் ஏமாறினர்; அவர்களை நம்பினர்.
இவ்வாறு ஏமாற்றத்திற்கும் நம்பிக்கைக்கும் உட்பட்ட பழந்தமிழர்கள், அவ்வாரியர்களின் வேதக் கருத்துகளை ஏற்றனர். பின் படிப்படியாக முழுமையும் வளர்ச்சியும் பெறாமலிருந்த அவர்களின் வேதமொழிச் சொற்களையும், நம் பழந்தமிழினத்தவர்கள் பேசிவந்த வடதமிழ் மொழிச் சொற்களையும் கலந்து, மக்கள் புழக்கத்துக்காக சமசுகிருதம் என்னும் ஒரு புதிய மொழியைச் செய்துகொண்டனர்.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்கு வேதிவினைகளையும், சில ஸ்மிருதி-களையும், சாஸ்திரப் புராணங்களையும் உருவாக்கி மக்களிடைப் புழங்க விட்டனர். அவற்றை மக்கள் நம்ப வேண்டும் என்றும், கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இல்லாவிடில் அவர்கள் தெய்வக் குற்றத்திற்கு (பாவத்திற்கு ஆளாகி நரகம் (தீயுலகம்) புகுந்து தண்டனை பெற வேண்டும் என்றும், அத்தண்டனையின் காரணமாக அவர்கள் அடுத்தடுத்த பிறவிகளில் கொடுமையான விலங்குகளாகவும், நச்சு உயிரிகளாகவும் பிறந்து உழல் வேண்டும் என்றும், அவ்வாறின்றி மக்களாகப் பிறந்தால் கீழ் ஜாதிகளிலேயோ, ஏழைமையராகவோ, உறுப்புகள் குறைந்தவர்களாகவோ (குருடு, செவிடு, ஊமை, கூன், நொண்டி முடம், அலி, கொடு நோயாளி முதலியவர்களாகவோ) பிறந்து துன்பமும் துயரமும் பெற்று வாழவேண்டும் என்றும் கூறியும் எழுதியும் வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தித் தங்கள் கருத்துகளுக்கு ஏற்ப உடன்படவும் செயல்படவும் செய்தனர்.

இவையுமன்றி, மக்களைப் பிரமதேவன் படைத்தான் என்றும், அவன் முகத்திலிருந்து படைக்கப் பெற்றவர்களே பிராமணர்களாகிய தாங்கள் என்றும், அவன் தோள்களிலிருந்து படைக்கப் பெற்றவர்களே சத்திரியர்கள் (அரசர்கள்) என்றும், தொடைகளிலிருந்து படைக்கப் பெற்றவர்களே வைசியர்கள் (வணிகர்கள்) என்றும், பாதங்களிலிருந்து படைக்கப் பெற்றவர்களே சூத்திரர்கள் (கீழ்நிலை அடிமை செய்பவர்கள்) என்றும் அவர்கள் பலவாறு கூறி, அவற்றுக்கு அடிப்படையாக வேதங்களைக் காட்டி நம்பச் செய்தனர்.
அத்துடன், அத்தகைய நான்கு பிறப்பினர்-களும், வகுப்பினர்களும், இவ்வுலகில் ஆற்ற வேண்டிய கடமைகளை எழுதி வைத்து, அவற்றிற்குத் தர்மங்கள் என்று கூறி மக்களை அவற்றின்படி நடக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

அவர்கள் எழுதி வைத்துக்கொண்ட வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மனுதர்மம் போன்ற நூல்கள் அனைத்தும் மக்களினத்தை வேறு பிரிப்பன; மக்களினத்துள் உயர்வு, தாழ்வுகள் கற்பிப்பன; அவர்களைப் பல மூட நம்பிக்கைகளுக்கும் அறியாமைகளுக்கும் உட்படுத்துவன; அவர்களின் கருத்துகளுக்கு இந்து மதம் எனும் பெயர் கொடுத்து, மக்களை அவர்கள் மதச் சேற்றுக்கும், பல்வேறு ஜாதிப் பிரிவுகளுக்கும் உள்ளாக்கினர். பழந்தமிழ் இனத்தவர் அனைவரும் ஜாதி, மதப் பிரிவுகளுக்கும், இழிவுகளுக்கும் ஆளாகிக் கிடந்த மூவாயிரம் ஆண்டுக் காலமாய் பலவேறு அடிமைத்தனங்களுக்கும், அறியாமை-களுக்கும், இழிவுகளுக்கும் உட்பட்டு தங்களுக்குள் வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டு, ஒற்றுமையின்றி, முன்னேறாமல், தங்களுக்குள்ள பழஞ்சிறப்புகளை எல்லாம் இழந்து தவிக்கின்றனர். தாங்கள் தமிழர் என்பதையும், தங்கள் தாய்மொழி தமிழ் என்பதையும் மறந்து, இன்று அவர்கள் மீளா அடிமைகளாய், உரிமைகள் இழந்து, இவ்வுலக உருண்டையில், பல்வேறு நாடுகளுக்கு ஏதிலிகளாகச் சென்று உழன்று, துன்பப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்கென்று ஒரு நாடில்லாமல், அரச அமைப்பு இல்லாமல், பிற இனத்தவர்கள் தங்களை ஆளும்படி அடிமைகளாக இருந்து வருகின்றனர்.
இவர்கள், இக்கால் பலவாறான மூடநம்பிக்கை-களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தங்களின் பகுத்தறிவையே இழந்து விட்டிருக்கின்றனர். தங்கள் தாய்மொழியாகிய தமிழை மறந்து வேறு வேறு மொழிகளைக் கற்பவர்களாகவும், தங்கள் இனத்தவரையே பகைப்பவர்களாகவும், வெறுப்பவர்களாகவும், காட்டிக்கொடுத்து உயிர் வாழ்கிறவர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களின் மூடநம்பிக்கை-களுக்கு அளவேயில்லை.

பிரம்மன் என்பவன் நான்கு முகங்களோடு இருந்து கொண்டு உயிர்களைச் சட்டிபானைகள் செய்வது போல் செய்து உலகில் உயிர் வாழவிடுவது! அவன் நாக்கில் அவன் மனைவி வாழ்வது! ஒருவன் தன் குடுமியிலேயே தன் இரண்டாம் மனைவியைப் பொதிந்து வைத்திருப்பது! நெருப்பு மழை பொழிவது! வானத்தில் தேர் ஓட்டுவது! பல பேர் மாட்டுக்கும், குதிரைக்கும், குரங்குக்கும், மீனுக்கும், கரடிக்கும் பிறப்பது! அரசன் மனைவிகள் குதிரையைச் சேர்ந்து குழந்தைகள் பெறுவது! ஒரு மண் குடத்திலிருந்து ஒருவன் பிறப்பது! ஒரு குதிரையின் மூக்கிலிருந்து இன்னொருவன் பிறப்பது! வானத்தில் மாளிகை கட்டுவது! மாடு இறக்கை வைத்துக்கொண்டு வானில் பறப்பது! நிலம் வெடித்து அதிலிருந்து குழந்தை பிறப்பது! நெருப்புக் குண்டத்திலிருந்து குழந்தைகள் பிறப்பது! உடம்பின் அழுக்கு-களைத் திரளையாகத் திரட்டி அதிலிருந்து குழந்தை செய்வது! அக்குழந்தையினுடைய தலையை வெட்டி விட்டு, அதற்குப் பகரமாக யானைத்தலையை வெட்டி அக் குழந்தையின் கழுத்தில் ஒட்டவைப்பது! மணலில் பானை செய்து அதில் தண்ணீர் எடுத்து வருவது! ஓர் ஆளின் வாய் வழியாக ஒருவன் வயிற்றுக்குள் புகுந்து, அதைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவது! நிலாவைப் பாம்பு விழுங்குவது! கதிரவனைப் பாம்பு விழுங்குவது! ஆணோடு ஆண் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெறுவது! குழந்தை தாயின் வயிற்றுக்குள் இருக்கும் பொழுதே அனைத்துக் கல்வியையும் கற்பது! பாம்புப் புற்றுக்குள் புகுந்து வேறோர் உலகத்தை அடைவது! கதிரவனுக்கு (சூரியனுக்கு)க் குழந்தை பிறப்பது! நிலவுக்கு (சந்திரனுக்கு)க் குழந்தை பிறப்பது! காற்றுக்கு (வாய்வுக்கு)க் குழந்தை பிறப்பது! நெருப்புக்கு (அக்னிக்கு)க் குழந்தை பிறப்பது! மழைக்கு (இந்திரனுக்கு)க் குழந்தை பிறப்பது போன்ற பல்லாயிரக் கணக்கான புளுகு மூட்டைகள் நிரம்பிய கட்டுக் கதைகளே ஆரியர்களின் புராண இதிகாசப் பொய்ச் சரக்குகள் ! இம் மூட நம்பிக்கைகளை உண்மைகள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களே இந்து மதத்தவர்கள்! இவர்களில் பெரும்பாலரே இன்றைய தமிழ் இனத்தவர்கள் ! இவர்களுள் நீங்களும் ஒருவராக இருக்கலாமா? எண்ணிப் பாருங்கள்! உங்கள் அறிவுக்கண் கொண்டு, அறிவியல் உணர்வு கொண்டு சிந்தித்துப் பாருங்கள்!
– தமிழ்ச்சிட்டு, குரல் : 22, இசை : 10, 1994