கவிதை : ‘நீட்’டை நீக்குவோம்!

மார்ச் 16-31,2022

எஸ். துரைக்கண்ணு

‘நீட்’டைத் திணித்திங்கே – பெருங்

               கேட்டை விளைக்கின்றார்!

நாட்டை அழிப்பதுடன் – மாணவர்

               நலனைக் கெடுக்கின்றார்!

 

பன்னிரண்டு ஆண்டுகளாய்

               படித்ததை ஒதுக்குகின்றார்!

பயிற்சி வகுப்பென்றே – பணம்

               பலகோடி ஈட்டுகின்றார்!

 

பள்ளிப் படிப்புடனே – முடிவைப்

               பாமரர் எய்துவதோ?

பட்டம் பதவியெல்லாம் – மூன்று

               பங்கினர் கொய்வதுவோ?

 

மக்களே தேர்ந்தெடுத்த

               சட்ட மன்றமா?

ஒன்றிய பதிலாளாய்

               உட்காரும் ஆளுநரா?

மக்கள் கேட்கின்றார்

               மாற்றம் வரவேண்டும்!

 

மத்தியில் அதிகாரத்தை

               மலைபோல் குவிப்பதா?

மாநிலத்தில் சுயாட்சி

               மாண்பினைக் குலைப்பதா?

 

மாநிலப் பட்டியலில் – கல்வி

               மறுபடியும் வரவேண்டும்!

மக்களே அணிதிரள்வீர்! – நம்

               மாநில உரிமை மீட்க!

 

மாநிலத்தில் சுயாட்சியும் – அங்கு

               மத்தியில் கூட்டாட்சியும்

மலர்ந்திடப் போராடுவோம்; – நல்ல

               மாற்றம் உருவாக்குவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *