பெரியார் பேசுகிறார் : பிள்ளையார் பிறப்பு

செப்டம்பர் 1-15,2021

தந்தை பெரியார்

இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது _- ஏட்டிலடங்காது என்பது போல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பது; அத்தனை கடவுள்களுக்கும், புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியன ஏற்படுத்தி இருப்பவை; அவற்றுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவும் வெகுகாலமாய்ப் பாழாகிக் கொண்டு வருவது எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமில்லை.

இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்து மக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொண்டு வணங்கப்-படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும், விநாயகன் என்றும், விக்னேஸ்வரன் என்றும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.

நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை, இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமே இப்போது அமலிலிருக்கும் வழக்கமாய் உள்ளது. சமீபத்தில் அக்கடவுளின் பிறப்பு உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) வர இருக்கிறது.

1. ஒருநாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப் போகையில், குளிக்குமிடத்து வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்து-வதற்காகத் தனது சரீரத்தில் உள்ள அழுக்கு-களைத் திரட்டி, உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஓர் ஆண் குழந்தை ஆகிவிட்ட-தாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து, நான் குளித்து விட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்தச் சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டை-யான, வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்குக் கோபம் ஏற்பட்டுத் தன் கையிலிருந்த வாளினால் ஒரே வீச்சாக அந்த பிள்ளையார் தலையை வெட்டி கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போன-தாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்? என்று கேட்டதாகவும், அதற்குச் சிவன் காவல்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்-காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதித் தேடுகையில் வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியைத் திருப்தி செய்ததாகவும், கதை சொல்லப்-படுகின்றது. இக்கதைக்குச் சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களுமிருக்-கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் – பெண் யானைகள் கலவி செய்யும் போது சிவனும், பார்வதியும் கண்டு அவர்களுக்கு கலவி நினைவு ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கை-யில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று, அக்கருச் சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாகப் பார்வதி, யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதியின் தலையை வெட்டி விட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப் படுகிறது. இது தக்கயாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம். இன்னும் பல வழிகள் சொல்லப் படுகின்றன. அதனைப் பற்றியும், இப்பிள்ளையாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கை யாய் ஏற்பட்டதென்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும். கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவற்றிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப் பட்டதாகவும், பிறப்பு – வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதிகளைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா?

நிற்க. ஒரு கடவுளுக்குத் தாய், தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் – தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் – தகப்பன்கள் ஏற்பட்டுத் தானே தீரும். (இவற்றைப் பார்க்கும்போது கடவுள்கள்  தாமாக ஏற்பட்டவர்கள் தான் என்றால், எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதா யிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்.)

கடவுளைப் பற்றிய விவரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் கடவுள் ஒருவர் தான் – அவர் நாமரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு – இறப்பு அற்றவர், தானாய் உண்டானவர் என்று சொல்லுவதும், மற்றும் அது ஒரு சக்தி என்றும், ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி, அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு, பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவற்றுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில், எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றன என்பதை வாசகர்கள் தான் உணர வேண்டும்.

உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடு கின்றேன். சிதம்பரம் கோயிலில் யானை முகங்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப்படி பூசையும் நடத்தி வருகின்றது. பல ஆண் – பெண் பக்தர்கள் அதைத் தரிசித்துக் கும்பிட்டும் வருகின்றார்கள். சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி, அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் ஆட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவற்றுக்கு ஒரு கதையும், புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

அதாவது ஏதோ ஓர் அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை எல்லாம் அந்தக் கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள், அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல், பல இலட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையா ரானவர் ஈசல் புற்றிலிருந்து, கரடி ஈசல்களை உறிஞ்சுவது போல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் உறிஞ்சிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங்-களுக்குக் கண்டவற்றையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.

சிந்தனைக்கு எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதிவிட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்பட வில்லையா? அன்றியும் பல கோயில்களில் உருவாதாரங்களாகத் தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்து விட்டான் என்று சொல்லுவதானால், இவற்றுக்குத் தினமும் பெண்டு, பிள்ளை, வாகனம் முதலியவற்றுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவற்றைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். சீர்திருத்தக்காரர்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றும், மதத்திற்கு ஆபத்து, சமயத்திற்கு ஆபத்து, கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு, மதத்தையும், கடவுளையும் காப்பாற்றவென்று, அவற்றிடம் வக்காலத்துப் பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா? என்று கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லா விட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கிற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும், ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களை-யெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவதாலேயே எந்தக் கடவுளையும், எந்தச் சமயத்தையும் காப்பாற்றி விட முடியாதென்றே சொல்லு-வோம்.

– தந்தை பெரியார் அவர்கள் ‘சித்திரபுத்திரன்’

என்ற புனைப்பெயரில் எழுதிய கட்டுரை.

(‘விடுதலை’ 4.9.1959.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *