Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுப்பாக்கள்

அவனும் இவனும்

ஆண்டுக்காண்டு அகலமும் விரிந்தார்
அய்யன் அருள் என
அய்யர் வாய்மலர்ந்தார்

மாடிமேல் மாடியாய்
மவுசும் கூடினார்
வெள்ளியும் தங்கமும்
வகையாய் தேடினார்

மாற்றுக் கோவணம்
முருகனுக் கில்லை!
வீற்றிருந்தானே
மலையதன் மேலே!!

– மா.கண்ணன், திருநெல்வேலி

காதல்

அன்பை கீதை, குரான், பைபிள்
என மதம் கு(பி)றித்து
போதிப்பதில்லை
காதல்!

– வளியன், திண்டுக்கல்

அப்பனும் ஆத்தாளும்!

பார்வதியின் உடம்பிலிருந்து திரட்டிய
அழுக்கிலிருந்து பிறந்தவன்தான்
ஆனைமுகக் கடவுளென்றால்
அவனுக்குப்
பரமசிவன் எப்படி
அப்பன் ஆவான்?

பரமசிவனின்
இந்திரியம்
ஆறாய்ப் பெருகிஓடி
ஆறுகிளைகளாய்ப் பிரிந்து
அதிலிருந்து பிறந்தவன்தான்
ஆறுமுகக் கடவுளென்றால்
அவனுக்குப்
பார்வதி எப்படி
ஆத்தாள் ஆவாள்?

*******

வயிற்றில் பசியோடு
கையில் திருவோடு
ஏந்தியபோது…
சில்லரைக் காசுகளே
விழுந்தன!
காவி கட்டி
கமண்டலத்தோடு
ஆசிரமம் அமைத்து
அமர்ந்த பின்பு..
கோடி கோடியாய் காலடியில்!

-காழி கு.நா. இராமண்ணா, சென்னை

இதயத்தில் இன்றும்

சலவைத் தொழிலாளி
வாழ்க்கை மட்டும்
சுருக்கம் நிறைந்த
அழுக்கோடு

*******

மிதக்கும் காகிதக் கப்பல்
மகிழ்ச்சியற்ற சிறுமி
குடிசைக்குள் மழைநீர்

புயல் அறிவிப்பு
பதறும் விவசாயி
விதைத்த மறுநாள்

*******

சாலை விபத்து
வேடிக்கை பார்க்கும் விழிகள்
பார்த்துக் கிடக்கிறது
மனிதம்

*******

ஊரெங்கும்
சிலை திருட்டு
கடத்தல் பயமோ
அரிவாளுடன் அய்யனார்

*******

பசியால்
அழும் குழந்தை
வருத்தமாய் மீனவன்
புயல் எச்சரிக்கை

*******

சரஸ்வதி பூஜை
அறிவியல் புத்தகத்திலும்
குங்குமப் பொட்டு

*******

பற்று மிக்கவர்கள்
தமிழர்கள்
வளர்கிறது தாய்மொழி
தமிழ் பேசும்
ஆங்கிலப் படம்

*******

ஒற்றை நூலில்
வாழ்க்கை தொடங்கும்
சிலந்தி

*******

இறந்த உடல்
அடக்கம் செய்வது யார்?
எரியாத
தெரு விளக்கு

*******

அன்பைப் போதிக்கும்
மதம்
ஆயுத மேந்தி ஆண்டவன்

*******

இதற்கும் ஆஸ்துமாவோ
இப்படி மூச்சு விடுகிறதே
தெருக்குழாய்

*******

ஊமையும்
அழகாய்ப் பேசினாள்
விழிகளால்

*******

கிணற்றுத் தவளைதான்
நம்பிக்கையிருக்கிறது
வாழ்வில் நிமிர்ந்தால் தெரியும் வானம்

– பா. ஸ்டாலின், மேட்டூர்