கேரள மாநிலத்திற்கும் (பழைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு – பிரிட்டிஷார் ஆண்ட கால கட்டமாகிய – 1886ஆம் ஆண்டு) – சென்னை மாகாணத்திற்கும் இடையே 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இன்னமும் அது நீடிக்கும் நிலையில் கேரள அரசு வேண்டுமென்றே, எங்கே அணையை உயர்த்தி தமிழ்நாடு பயன்பெறும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தாலும், அவசியமற்ற பொறாமையாலும்தான் ஆற்றொழுக்காக சென்று கொண்டிருந்த இந்தப் பிரச்சினையை வழக்குக்குரியதாக்கி – சிக்கலாக்கி இரு மாநிலங்களிலும் வன்முறை வெடித்துக் கிளம்பும் அளவுக்கு விபரீதத்திற்குள் தள்ளிவிட்டது!
1. இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு – அணை பாதுகாப்புடன் இருக்கிறது என்று கூறியுள்ளது.
அதற்கு மேலும் விவகாரம் பண்ணியது கேரள அரசு என்பதால், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, அதில் இரு மாநிலங்கள் சார்பாக கருத்துகளை, நிலைப்பாட்டை, அவரவர்பால் உள்ள நியாயங்களை எடுத்துரைக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளே (தமிழ்நாடு, கேரள அரசுகளால்) நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் – அதற்காகக் காத்திராமல், புதிய அணை கட்டப் போகிறோம் என்று ஆரம்பித்தது கேரள அரசு.
அணைக்கு என்ன அவசரம்? அவசியம்? என்ற கேள்வி எல்லாப் பக்கங்களிலிருந்தும் கிளம்பிய பின், அணைக்கு ஆபத்து -அணை உடையும் என்று சொல்லி, அப்பாவி மக்களுக்கு ஆபத்து வரும்போல் உள்ளதே, அணை உடைந்தால் என்னாவது என்று கிளப்பிவிட்டதைப்போல, ஒரு திரைப்படத்தை அணைபற்றி தயாரித்து வெளியிட்டு பீதியை – கேரள அரசே கிளப்பி விடுவதற்கு மூல காரணமாய் அமைந்தது! முடிவு முன்னே, காரணம் பின்னே!
அதுவரையில் நீதிமன்றம் – சட்டம் – தீர்ப்பு என்று போய்க் கொண்டிருந்த இந்த முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, பீதியைக் கிளப்பி, உணர்ச்சி மேலீட்டை கேரள மக்களுக்குத் தரவும், அங்கே வன்முறை வெடித்துக் கிளம்பியுள்ளது!
உடனே தமிழ்நாட்டில் அதற்கு பதிலுக்குப் பதில் என்று ஒவ்வொரு செயலும் அதன் எதிர்ச் செயலையும் உருவாக்கும் (Every action will have its own reaction) என்பது போன்று தமிழ்நாட்டில் அமைதியைக் குலைத்து அமளி – துமளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடிக்கும் நிலை விரும்பத்தக்கது அல்ல.
அண்டை மாநிலத்தைப் பகைத்துக் கொண்டு எந்த மாநிலமும் வாழ்ந்துவிட முடியாது.
நதிகளை நாட்டுடைமையாக்கி, அங்கே கட்டப்பட்ட அணைகளுக்கு அவசியம் வந்தால் மத்திய அரசு ஒப்புதல் – மேற் பார்வை – மாநில அரசுகள் கலந்து ஆலோசித்து ஒத்துழைப்பு நல்கிய பிறகே கட்டலாம் என்று ஒரு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
நிலம் எப்படி அரசுக்கே சொந்தமோ அதுபோன்றே நீரும்கூட!
பற்பல மாநிலங்களிலும் இது போன்ற எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலிப் பிரச்சினை – வாக்கு வங்கி அரசியல் அதனை மேலும் உணர்ச்சிகளைக் கிளப்பி, உரிமைகள், நியாயங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் கொடுமை, இப்படித் தேவையின்றி மக்கள் நல்லிணக்கத்தற்கு உலை வைக்கிறது!
தேசிய ஒருமைப்பாடு என்பது இதுதானா? வங்கதேசத்துடன் இந்திய அரசும் மேற்கு வங்கமும் இணைந்து போடப்பட்ட கங்கை நீர்ப் பகிர்வு ஒப்பந்தம், சில மணித்துளிகளில் கையொப்பம் போட்டு இரு தரப்பும் (பங்களாதேஷ் அரசு – இந்திய அரசு மேற்கு வங்க அரசு) முடியும்போது, உள்நாட்டு நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை – உச்ச நீதிமன்றத்திலும் தீர்க்கப்பட முடியவில்லை யென்றால் இதைவிட கேலிக் கூத்து வேறு உண்டா?
உடனடியாக மத்திய அரசு அணையைப் பாதுகாக்கவும், புதிய அணைகளை அதன் ஒப்புதல் இல்லாமல் கட்டுவதைத் தடுப்பதற்கும் உடனடியாக முன்வருவது அவசர – அவசியம்!
தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல இதில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டு தமிழக அரசுக்குப் பலமாக நிற்கிறார்கள் என்பது உறுதி!
தேவையற்று தமிழ்நாட்டில் வன்முறை வெடிக்காமல், சமூகத் தீர்வை உச்ச நீதிமன்றத்தின் மூலமே காண வேண்டும். நதி நீர்ப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
மத்திய அரசுக்கு மாநிலங்களைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இந்திய அரசியல் சட்டத்தில் 365 என்ற விதி உள்ளது என்பதை நினைவூட்டுவது நமது கடமை.
இதில் மத்திய அரசும் ஆளும் கட்சி மாநிலத்தில் எது என்ற கண்ணோட்டம் பாராது, நியாயத்தை நிரந்தரமாக்கும் போக்குடன் செயல்பட வேண்டும்!
அறிவினால் தீர்க்கப்படாத பிரச்சினைகளே இல்லை; அதற்குரிய மனம்தான் முதல் தேவை. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது பழையமொழி. இப்போது சங்கை (கேரள) அரசே ஊதிக் கெடுப்பது நியாயம்தானா?
– கி. வீரமணி
ஆசிரியர்
Leave a Reply