மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [15] இதய செயலிழப்பு நோய் (Heart Failure)

அக்டோபர் 01-15, 2020

பொதுவாக மாரடைப்புக்கும் (Heart Attack)  இதய செயலிழப்புக்கும் (Heart Failure) வேறுபாடு தெரியாமல் மக்கள் குழம்புகிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டு விடுமானால் உயிராபத்து அதிகம். சில சமயங்களில் திடீரென்று மரணம் கூட ஏற்படும் அதே போல் “இதய முடக்கம்“ (Cardio Arrest) சட்டென்று எந்த வலியோ, தொல்லைகளும் இன்றி இதயம் நின்றுவிடும். ஆனால், இதய செயலிழப்பு அதுபோன்று நிகழாது. இதயம் பழுதடைந்து அது கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வரும். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் பழுது ஏற்பட்டால் இதய செயல்பாடு குறைந்து இதயம் நின்றுவிடும். அதனால் ஆரம்ப அறிகுறிகள் தெரியத் துவங்கும் பொழுதே மருத்துவம் செய்து கொண்டால் நோய் நன்றாகும் சூழ்நிலை ஏற்படும்.

இதயச் செயலிழப்புக்கான காரணிகள்:

1. இதயச் செயலிழப்பு தானாக ஏற்படுவதில்லை இதயத்தில்  ஏற்படும் வேறு நோய்களே இதற்குக் காரணமாகின்றன.

2. வயது முதிர்ந்தவர்களுக்கு, உடலின் மற்ற பாகங்கள் களைப்படைவதைப் போலவே இதயத் தசைகளும் களைப்படைகின்றன. அதுபோன்ற நிலையில் இதயச் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

3. நீரிழிவு நோய் நீண்ட காலம் இருந்து, சரியான முறையில் மருத்துவம் செய்து கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதயச் செயலிழப்பு ஏற்படும்.

4. மிகு இரத்த அழுத்தம் (Hypertension) உள்ள நோயாளிகளுக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

5. மிகு ரத்த அழுத்தம், நீண்ட நாள்களுக்கு இருந்து, அதற்கு மருந்து உட்கொள்பவர்களுக்கே இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

6. இதயத் தமனியில் ஏற்படும் குறுகல்களும், (Ischaemia) இதயத் தமனி அடைப்புகளும் இந்நோயை ஏற்படுத்தும்.

7. பிறவி இதய நோய்கள் உள்ளவர்களுக்கு ஆரம்ப நிலையில் அறிகுறிகள் தெரியாவிட்டாலும், நாளடைவில் செயலிழப்பு ஏற்படும்.

8. இதய அடைப்பிதழ் (Valves) நோய்களும்,  செயலிழப்புக்கு காரணமாகின்றன.

9. பிறவிக் கோளாறு நோய்களான (Congenital Heart Disease) இதய இடைச்சுவர் ஓட்டைகள் (ASD, VSD) – மேலறைகளையும், கீழறைகளையும் பிரிக்கும் இடைச்சுவர் (Septum)  நாளடைவில் செயல் இழப்பை ஏற்படுத்தும்.

10. நீண்ட நாள்களாக இருக்கும் இதயத்துடிப்பு சீரின்மை நோய்களும் இதயச் செயலிழப்பை ஏற்படுத்தும்.

பொதுவாக எல்லா வகை இதய நோய்களும் இதயச் செயலிழப்பை ஏற்படுத்தும் தன்மை உடையவையே. இந்நோய்கள் ஆரம்பத்தில் இதயச் செயலிழப்பை பெரும்பாலும் ஏற்படுத்தாவிட்டாலும், நாளடைவில் செயலிழப்பை அதிகமாக்கி, ஆபத்தை விளைவிக்கும்.

11.  புகை பிடித்தல் பழக்கத்தால் இதயத் தமனிகள் பாதிக்கப்பட்டு இதயச் செயல் இழப்பு ஏற்படும்.

12. நீண்ட நாள் மதுப் பழக்கம் உடையவர்களுக்கு நாளடைவில் இந்நோய்ப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.

இதயச் செயலிழப்பின் வகைகள்: (Types of Heart Failure):

1. இடது கீழறை செயலிழப்பு (Left Ventricle failure)  இதுதான் அதிக அளவில் காணப்படும் நோய். இடது கீழறை தான் மகா தமனி மூலம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்தம் செலுத்துகிறது. இதய இடது கீழறை சுருங்கும்போது, இது நிகழ்கிறது. இடது கீழறை செயலிழப்பு, இடது கீழறை சுருங்கும்போதோ அல்லது விரியும்போதோ ஏற்படும் செயலிழப்பு (Systolic heart failure and diastolic heart failure) என இரண்டு  வகைப்படும்.

கீழறை சுருங்கும்போது ஏற்படும் செயலிழப்பினால், இரத்தத்தைச் செலுத்தத் தேவையான சக்தி அதற்குக் கிடைப்பதில்லை.  அதனால் இரத்தம் முழுமையாக வெளியேறாமல் இதயத்திலேயே தேங்கும்.

கீழறை விரியும்போது ஏற்படும் செயல் இழப்புக்குக் காரணம், இதயக் கீழறைச் சுவர்கள் கெட்டியாகி (Stiff) விடும். அதனாலும் சுருங்கி விரியும் தன்மையில் பாதிப்பு ஏற்படும் உடலுக்கு இரத்தம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.

2. வலது கீழறை செயலிழப்பு: வலது கீழறை சுருங்கி விரியும் தன்மை குறைவதால் செயலிழக்கும் நிலை ஏற்படும். அதனால் வலது கீழறையில் இருக்கும் இரத்தம் நுரையீரல் தமனியில் செலுத்தமுடியாமல் போகும். வலது கீழறையில் ரத்தம் தேங்குவதால் அது வெளி வரமுடியாத நிலை ஏற்படுவதாலும் சிரைகளில் (கீழ்பெருஞ்சிரை,  மேல் பெருஞ்சிரை)  இரத்தம் தேக்கமடையும். இதனால் கால்கள், வயிறு, உடலின் முக்கிய பாகங்களில் எல்லாம் இரத்தம் தேங்கும். இதனால் அந்தப் பகுதிகளில் (நீர் கோப்பினால்) வீக்கம் ஏற்படும். இதய செயலிழப்பு நோயினால், கணுக்கால் வீக்கம் (Paedal oedema) ஏற்பட இதுவே காரணம்.

பொதுவாக செயலிழப்பு, இடதுபுறம் துவங்கி வலது புறமும் பரவும். இடது புற கீழறையில் இரத்தம் தேங்குவதால் நுரையீரல் சிரை மூலம் வரும் இரத்தம், இடது மேலறையில் வெளியேற முடியாது. இதன் விளைவாக நுரையீரலிலிருந்து இரத்தம் வெளியேறாது. நுரையீரலில் காற்றுப் பைகளில் நீர் கோத்துக் கொள்ளும். இதன் விளைவாக மூச்சுத் திணறல் ஏற்படும். நோய் அதிகமாக அதிகமாக நுரையீரல் செயலிழக்கும் நிலை ஏற்படும்.

நோயின் அறிகுறிகள்: நோயின்அறிகுறிகள் அதன் தீவிரத் தன்மைக்கேற்ப மாறுபடும். ஆரம்ப நிலையில் லேசான அறிகுறிகள் தெரியத் துவங்கி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.

மார்புப் பகுதியில் வலி

இருமல் (வறட்டு இருமலாக இருக்கலாம் சளியோடும் இருக்கலாம்.)

தலைச்சுற்றல் (Dizziness)

களைப்பு (Fatigue)

வேலை செய்ய முடியாமை

பசியின்மை (Loss of appetite)

மூச்சிரைத்தல், இரவு நேரத்தில் மூச்சு திணறல், படுத்தால் மூச்சுத்திணறல், நடக்கும் பொழுதும் படியேறும் போது மூச்சுத் திணறல்.

வயிற்றில் சங்கடம்,  வயிற்றில் காற்று இருப்பது போல் வயிறு பெருத்து விடுதல். (Bloating)

இரண்டு கணுக்கால்களிலும் வீக்கம் கணுக்காலில் வீக்கம், கால்களின் மேல் பகுதிகளுக்கும் பரவுதல்.

உடல் பருத்து எடை கூடுதல்

உடல் பருமன் ஏற்படுவதால் மேலும் மூச்சுத்திணறல்

இரவு நேரங்களில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்

வேகமான சீரற்ற இதயத் துடிப்பு

நோயறிதல்:

கீழ்க்கண்ட பரிசோதனைகளைச் செய்வதன் மூலமும் நோய் அறிகுறிகளையும் வைத்தே இந்நோயை  எளிதில் கண்டுபிடிக்கலாம்.

இரத்தப் பரிசோதனை: இரத்த சோகைக்கான சோதனைகள், இரத்தக் கொழுப்பின் அளவைப் பார்த்தல் (Cholestrol), தைராய்டு பரிசோதனை

BNP பிஎன்பி: BNP பரிசோதனை என்பது இதயத்தில், மிகு இரத்த அழுத்தத்தின் போதும் இதயநோய் ஏற்படும் பொழுதும் வெளிப்படும் ஒரு சுரப்பு. இதயச் செயல்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டால் இது அதிகமாகும்.

மார்பு எக்ஸ்ரே:  இதில் இதயத்தின் அளவு, இயல்பான அளவைவிட பெரிதாகத் தெரியும்.

இதய மின் பதிவு (ECG)

எதிரொலி இதய மின் பதிவு (Echo cardiogram)  இந்த சோதனை, இதயத் தசைகளின் சரியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்.

ஓடு பொறி சோதனை (TMT) மூலம் இதயத்தின் செயல்பாட்டை அறிய முடியும்.

குருதிக் குழாய் வரைவி (Angio gram) மூலமும், இரத்தக்குழாயில் ஏற்படும் குறுகல்களையும், அடைப்புகளையும் கண்டறிவதன் மூலம் இந்தக் காரணங்களால் இதயச் செயலிழப்பு ஏற்படுகிறதா என அறியமுடியும்.

மருத்துவம்: மேற்கூறிய சோதனைகள் மூலம் இதயப் பாதிப்பைத் துல்லியமாக மருத்துவர்கள் கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ முறை முடிவு செய்வர். ஆரம்ப நிலை செயலிழப்பை மருந்துகளைக்  கொண்டே சீராக்கி விடலாம். செயலிழப்புக்கு என்ன காரணம் என்றறிந்து அதற்கு மருத்துவம் செய்தால்தான் இந்நோய் முழுமையாகக் குணமடையும். இதயச் செயலிழப்பு ஓர் ஆபத்தான நோய். ஆனால், துவக்கத்திலேயே லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். மருத்துவத்தைப் புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டால் உயிர் ஆபத்து ஏற்படும். எனவே, எச்சரிக்கை தேவை!

(தொடரும்…)

மக்கள் பொதுவாக, திடீரென ஒருவர் மரணமடைந்தால் ‘ஹார்ட்’ ஃபெய்லியரால் இறந்து விட்டதாகச் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், (ஹார்ட் ஃபெய்லியர்) இதயச் செயலிழப்பு உடனடியாக மரணத்தை ஏற்படுத்தாது. இதயச் செயலிழப்பு சிறிது சிறிதாக அதிகமாகித் தான் மரணத்தை ஏற்படுத்தும்.

மாரடைப்பு (Hear attack) தான் திடீரென மரணத்தை உண்டாக்கும். இதய தமனிகளில் திடீரென ஏற்படும் அடைப்பினால் இதயத்திற்கு செல்லும் இரத்தம் தடைப்படும். இதயம் இயங்காது நின்றுவிடும். இது இதயத் தமனியான இரத்தக் குழாய் (Vascular Disease)  நோய்.

இதய முடக்கம் (Cardiac Arrest)  என்பதோ இதயத்தில் நரம்புகளில் ஏற்படும் கோளாறு. இதய நரம்புகள் திடீரெனச் செயலிழப்பதால் இதயம் திடீரென்று நின்று விடும். இதனால் இதய  முடக்கம் ஏற்பட்டு மரணம் நிகழும்.

மாரடைப்பும், இதய முடக்கமும் மிக மிக ஆபத்தான நிகழ்வுகளாகும். பொதுவாக இதய நோய்கள் என்றாலே எச்சரிக்கை தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *