முகப்புக் கட்டுரை: பிள்ளையார் சிலை பால் குடித்தது! பித்தலாட்டத்தை முறியடித்த 25ஆம் ஆண்டு விழா

அக்டோபர் 01-15, 2020

மஞ்சை வசந்தன்

 

ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்க அடிப்படை – கடவுளும், மதமுமே. கடவுளுக்கும், மதத்திற்கும் அடிப்படை – மூடநம்பிக்கை. எனவே, தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த  அதற்கு அடிப்படையான கடவுள் நம்பிக்கையையும், மூடநம்பிக்கையையும் பார்ப்பனர் திட்டமிட்டு பரப்பிவருகின்றனர். எப்போது எல்லாம் கடவுள் நம்பிக்கை குறைகிறதோ அப்போதெல்லாம்  ஏதாவது ஒரு மூடநம்பிக்கையை திட்டமிட்டுப் பரப்பி மக்களிடையே கடவுள் நம்பிக்கையை வலுப்படுத்துவது போலவே….

பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் மக்களை ஈர்க்கும் போதெல்லாம் அதைத் திசை திருப்ப அற்புதங்களை மூடநம்பிக்கைகளை திட்டமிட்டுப் பரப்புவார்கள்.

இருபத்து அய்ந்து ஆண்டுகளுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன்சமாஜ் ஆட்சி நடந்தபோது, கன்சிராம், மாயாவதி இவர்களின் முயற்சியால் பெரியார் மேளா நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். இது நாடு முழுவதும் உணர்வுப் பேரலைகளை உருவாக்கியது. இதனை திசைதிருப்ப பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற வதந்தியைப் பரப்பினர். ஆனால், அந்த மோசடி பகுத்தறிவாளர்களால் செயல்முறை விளக்கத்தின் மூலம் உண்மை  விளக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது.

பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று பரப்பிய செய்தி பித்தலாட்டமானது என மக்களுக்கு எடுத்துக்கூறி உண்மைநிலையை விளக்கி விழிப்பூட்டப்பட்டது. இது நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு விழா இணைய வழி நிகழ்ச்சியாக அண்மையில் சிறப்புடன் நடைபெற்றது.

மராட்டிய மாநிலத்தில் மக்கள் இயக்கமாகச் செயல்பட்டு வரும் பகுத்தறிவாளர் அமைப்பு, மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி நரேந்திர தபோல்கர் நிறுவிய ‘மகாரஷ்டிரா அந்தசிரத்த நிர்மூலன் சமிதி (Maharashtra Andhashraddha Nirmoolan Samiti-’Mans’) ஆகும். கடந்த ஆகஸ்ட் 21ஆம் நாள் தொடங்கி ஒரு மாத காலத்திற்கு மகாராஷ்டிரத்தில் நிலவி வரும் பலவிதமான மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவியல் பூர்வமான கருத்து விளக்கத்தினை களப்பணி மூலம் அந்த அமைப்பு ஆற்றி வருகிறது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஒரு மாத கால பிரச்சார இயக்கத்தின் நிறைவாக செப்டம்பர் 21ஆம் நாளன்று ‘பிள்ளையார் பால் குடித்த’ மூடநம்பிக்கை ஒழிப்பின் 25ஆம்ஆண்டு விழா நிகழ்ச்சியாக இணைய வழி நிகழ்ச்சியினை நடத்தினர். காணொலி கருத்தரங்கின் (Webinar) நிறைவு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் தலைவரும், பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று எழுச்சி மிகுந்த கருத்துரையினை வழங்கினார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலி கருத்தரங்க நிகழ்விற்கு மகாராஷ்டிர அந்தசிரத்த நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல் தலைமை தாங்கினார். இந்தியப் பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்பேராசிரியர் நரேந்திர நாயக் (மங்களூர், கர்நாடகா), கேரள அமைப்பின் Kerala Sasthra Sahitya Parishad (KSSP) பொறுப்பாளர் வேதியியல் பேராசிரியர் முனைவர் சங்கீதா சென்னம்பள்ளி (கள்ளிக்கோட்டை, கேளரா) மற்றும் மேற்குவங்க அமைப்பின் All India Peoples Science Network (AIPSN) தலைவர் பேராசிரியர் முனைவர் சப்யாசாச்சிசட்டர்ஜி (கொல்கத்தா) ஆகியோர் மூடநம்பிக்கை ஒழிப்புப் பற்றி கருத்துகளை வழங்கினர். இந்த நிகழ்வில் இணைய வழி கலந்துகொண்டு தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார். அதில், சில பகுதிகள்

தமிழர் தலைவர் சிறப்புரை

மூடநம்பிக்கை ஒழிப்புக் காணொலிக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:

சமூகத்தில் நிலவி வரும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் பணியில் தன் உயிரையே தியாகம் செய்த போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் நிறுவிய மகாராஷ்டிரா அந்தசிரத்த நிர்மூலன் சமிதி கடந்த ஒரு மாத காலமாக நடத்தி வரும் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்திற்குப் பாராட்டுகள்.

தமிழ்நாட்டில் எங்களது திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் நடத்தி வரும் பெரும்பான்மை பிரச்சாரக் கூட்டங்களின் தொடக்கத்தில் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியினை நடத்துவதை ஒரு வழக்கமாகக் கடைப்பிடித்து வருகிறோம்.  மக்கள் நடை முறையில் கடைப்பிடித்து வரும் சில பழக்க வழக்கங்கள், பொருள் புரியாமல் அச்சம் காரணமாக நடை முறைப்படுத்தி வரும் சில வாடிக்கைகளை விளக்கி, அதன் பின்னணி ‘மந்திரமல்ல, தந்திரமே’ என எடுத்துக் கூறி, தேவைப்பட்டால் அறிவியல் சார்ந்த கருத்துகளையும் எடுத்துக் கூறி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தியாகராயர் நகர் திடீர் பிள்ளையார்

“பிள்ளையார் பால் குடிப்பு’ பித்தலாட்ட பிரச்சாரத்தோடு இவர்களின் மோசடி, மூட நம்பிக்கை பரவல் நின்றுவிடவில்லை. தமிழ் நாட்டில் பிள்ளையாரை வைத்து ஒரு மாபெரும் மூடநம்பிக்கை நிகழ்ச்சியை நிரந்தரமாக்கிட முயற்சித்த செயலினை பெரியார் இயக்கத் தவர்கள் முளையிலேயே கிள்ளி எறிந்த நிகழ்வும் உண்டு. தமிழ்நாட்டில் சென்னையில் தியாகராய நகர் என ஒரு மய்யப் பகுதி இருக்கிறது. அந்தப் பகுதியில்தான் தந்தை பெரியார் தனது இறுதிப் பேருரையினை வழங்கினார். தந்தைபெரியார் வாழ்நாளிலேயே அந்தப் பகுதியில் ‘திடீர் பிள்ளையார்’  சுயம்புவாக எழுந்துவிட்டார் என கதைகட்டி அந்தச் சிலையை வணங்கி, உண்டியல் வைத்து பணம் வசூலித்து ஒரு கோயிலைக் கட்ட வேண்டும் என மதவாதிகள் திட்ட மிட்டு இருந்தனர்.   பிள்ளையார் சிலை திடீரென்று எப்படி தோன்ற முடியும்? அது குறித்து விசாரணை நடத்தி உண்மை நிலையினை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என திராவிடர் கழகம் தமிழக அரசுக்கு  எழுதிக் கேட்டுக் கொண்டது. அப்பொழுது முதல்வராக இருந்தவர் பெரியாரின் ஈரோட்டுப் பகுத்தறிவு குருகுலத்தில் படித்து வளர்ந்தபெரியாரின் மாணாக்கர் கலைஞர்

மு.கருணாநிதி அவர்கள்தான் சற்றும் தாமதிக்காமல் உடனே விசாரணைக்கு உத்தரவிட்டார். உண்மைநிலை வெளியில் வந்தது. காவல்துறையைச் சார்ந்த காவலர் ஒருவர் மதவாதிகளின் தூண்டுதலினால் ஒரு பிள்ளையார் சிலையை பொது இடத்தில் பூமிக்குள் புதைத்து அதனுடன் ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து வெடிக்கும் குண்டையும் வைத்து விட்டார். எதிர்பார்த்தபடி குண்டு வெடித்து, புதைத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை வெளியில் வந்தது. இப்படி, திட்டமிட்டு வெளிவந்த பிள்ளையார் சிலையை ‘சுயம்பு’ (தானாகவே கடவுள் சக்தியினால்) வந்தது என கதைகட்டினர். உண்டியல் வசூலும் நடை பெற்றது. இந்த விவரங்கள் விசாரணையில் தெரிய வந்து, உண்டியல் பணம் கைப்பற்றப்பட்டு, இந்து அற நிலைய பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிள்ளையார் சிலையைப் புதைத்து வைத்த காவலர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்படியாக பிள்ளையார் கோயில் கட்ட வேண்டும் என மூட நம்பிக்கையினை மூலதனமாக வைத்து தொடங்கப்பட்ட செயல், பெரியார் தொண்டர்களால், பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம் எடுத்த முயற்சியால், அப்பொழுது ஆட்சியில்இருந்த பகுத்தறிவு நெறி சார்ந்த முதல்வர் கலைஞர் அவர்களால் முறியடிக் கப்பட்டது. இப்படி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மதவாதிகள், மூடநம்பிக்கையினை வளர்க்கும் விதமாக எடுக்கப்படும் முயற்சிகளை பகுத்தறிவாளர் களாகிய நாம் முறியடிக்க வேண்டும். இப்படியெல்லாம் பகுத்தறிவாளர்களாகிய நாம் மதவாதிகளுக்கு எதிராக, மூடநம்பிக்கையாளர்களுக்கு எதிராக மட்டுமே நடப்பதாக கருதக்கூடாது. இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ஒவ்வொரு குடிமகனும் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமையைத் தான் ஆற்றி வருகிறோம். அரசமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ(எச்) கூறுகிறது;

“It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform”.

அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பது,மனித நேயம் பேணுவது,எதையும் கேள்விக்கு உட்படுத்திப் பார்க்கும் உளப்பாங்கினை வளர்ப்பது, சீர்திருத்தப் பணியினைப் பெருக்குவது இந்திய நாட்டு ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை தொடர்ந்து செய்துவருவதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையினைத்தான் பகுத்தறிவாளர்களாகிய நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த பணியில் எந்தவித எதிர்ப்புகள் வந்தாலும், கடமை ஆற்றுவதிலிருந்து பின்வாங்குதல் கூடாது. அரசமைப்புச் சட்டம் நமக்குத் துணையாக இருக்கிறது. கடமையைச் செய்திடும்  உண்மையான குடிமக்கள் பகுத்தறிவாளர்களே!

தந்தை பெரியார் தனது பிரச்சாரத்தின் பொழுது அடிக்கடி கூறுவார். மனிதர் ஒவ்வொருவரும் இரண்டு வித கற்கும் பணிகளை அவசியம் செய்திட வேண்டும். ஒன்று, – புதிதாக சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றொன்று, கற்றுக் கடைப்பிடிப்பவைகளை கைவிடவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்ததை கைவிடுவதுதான், கடைப்பிடித்து வரும் மூடநம்பிக்கை பழக்க வழக்கங்கள், இன்று அறிவியல் தொழில் நுட்பம் பல மடங்கு பெருகியுள்ளது. இதனால் மனிதரின் சராசரி வாழ்ந்திடும் காலமும் அதிகரித்தே வந்துள்ளது. 1870ஆம் ஆண்டு வரை மனிதரின் சராசரி வாழ்வுக்  காலம் 20-30 ஆண்டுகள். பின்னர் 1930 ஆம் ஆண்டு வரை 50 ஆண்டுகள் என உயர்ந்தது. அடுத்து 60 ஆண்டுகள் என ஆகி 1955 ஆம் ஆண்டிலிருந்து 70 ஆண்டுகள் என உயர்ந்து இன்று மனிதரின் சராசரி வாழும் காலம் 80 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படி மனிதர் அதிக நாள் வாழ்வதற்கு அடிப்படை அறிவியல் புரிதல், கடைப்பிடிப்பு, அத்தோடு எந்தப் பலனையும் அளிக்காத, தடங்கலை ஏற்படுத்தக் கூடிய மூடநம்பிக்கை பழக்க வழங்கங்களை அழிப்பது தான். அறிவியல் கற்றவரும், வாழ்வில் அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வது இல்லை. இந்த நிலைமைகள் மாற வேண்டும். மாற்றும் ஆக்கசக்தி பகுத்தறிவாளர்களிடம் உள்ளது; அவர்கள் ஆற்றிடும் பிரச்சாரப் பணியில்தான் உள்ளது. படித்தவர்களும் பாபாக்களிடம் மயங்கி சரண் அடையும் சூழல் நீடிக்கிறது. காலம் சென்ற கருநாடகா பகுத்தறிவாளர் அறிவியலாளர் எச்.நரசிம்மையா மோதிரம், சங்கிலியை மந்திர சக்தியால் கொண்டு வருவதாகக்கூறிய சத்ய சாயிபாபாவின் மோசடிகளை அம்பலப்படுத்தினார். நேரடியாக வந்து பொது மேடையில் செய்துகாட்ட முடியுமா என அறைகூவல் விடுத் தார். அப்படிப்பட்ட துணிச்சல் மிக்க, மக்களது மூடநம்பிக்கை மனநிலையை மாற்றுகின்ற பணியினை பகுத்தறிவாளர்கள் மேற்கொள்ள வேண்டும். புராணங்களே வரலாறாக திரிக்கப்பட்டு வருகின்றன. பொய்யான அறிவியலானது அறிவியல் முகமூடி அணிந்து மக்களை ஏமாற்றி வருகிறது. ஜோதிடம் எனும் போலி அறிவியலை உயர்கல்வி நிலையங்களிலே கற்பிக்கும் அவலநிலை நீடிக்கிறது. இந்த நிலைமைகள் எல்லாம் மாற வேண்டும். மனிதரது ஆற்றல் மூடநம்பிக்கை முழுவதும் களையப்பட்டு, சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும். அத்தகையை சூழலை, முன்னேற்றத்தை பகுத்தறிவாளர்தம் பரப்புரை மூலம்தான் கொண்டு வர முடியும். பிரான்சு நாட்டு சிந்தனையாளர் எமிலிஜோலா கூறினார்;  

“The world has to be conquered not by arms but by ideas”.

உலகம் போர்க் கருவிகளால் வெல்லப்படக் கூடாது. அறிவார்ந்த சிந்தனைகளால் வென்றெடுக்கப் பட வேண்டும்.

அதைப்போல உலகம் அறிவியல் மனப்பான்மையினைப் பெருக்குவதின் மூலம், எதையும் கேள்வி கேட்டு ஆய்வுசெய்திடும் முறையிலும் அணுகி மனித நேயம் பாதுகாக்கப்பட வேண்டும். இது எளிதான பணி அல்ல; ஓர் எதிர் நீச்சல் பணி; நன்றி எதிர்பார்க்காத பணி. அத்தகைய பணியினை மேலும் பலப்படுத்துவோம். பரந்துபட்டு பரப்புரை செய்வோம். வாழ்க தந்தை பெரியார்! வளர்க பகுத்தறிவு நெறி பெருகும் அறிவியல் மனப்பான்மை மற்றும் அணுகுமுறை!

இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப் பிட்டார்.

கருத்தரங்கில் பல தரப்பட்ட சமூகச் செயல்பட்டாளர்கள் கலந்து கொண்டனர்.சமிதியின் இணைச் செயலாளர் முனைவர் சுடேஷ் கோதேகாவ் அறிமுக உரையினையும், வரவேற்புரையினையும் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சவீதா சாதே; சுசிலா முன்டே, விருண்டா சென்டே, மும்பாய் குமணராசன், நிதின் குமார் ராவத் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை சுதர் நிம்பால்கர் ஒருங்கிணைத்து நடத்தினார். கருத்தரங்க காணொலியினைத் தாண்டி, பேஸ்புக் மற்றும் பெரியார் டிவி இணைய இணைப்பின் மூலம் உலகம் முழுவதிலிருந்தும் பலர் பார்வையாளர்களாக இருந்து பகுத்தறிவு கருத்தாக்கம் பெற்றனர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் மற்றும் மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோரும் பங்கேற்றனர்.

தஞ்சாவூரில் பேய்வீடு மூடநம்பிக்கை முறியடிப்பு

தஞ்சாவூர் தெற்கு வீதியில் இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் குடியிருப்பு வீடுகள் உள்ளன 15 ஆண்டுகளுக்கு முன்

தஞ்சாவூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் இராஜமாணிக்கம் என்பவர் குடியிருந்துள்ளார். அவரது மனைவி கார்விபத்தில் மறைவுற்றதை அடுத்து பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக யாரும் வசிக்காததால் பங்களா போன்ற வீட்டில் ஆலமரம் வளர்ந்து வீட்டுக்குள் விழுதுகள் படர்ந்து பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன் தூக்குபோட்டு ஒருவர் இறந்ததாகவும் அவரின் ஆவி அந்த வீட்டில் சுற்றுவதாகவும் சுற்றியுள்ள மக்களிடம் பீதியை உண்டாக்கிய ஒரு நபர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைக்கோலைப் போட்டும், மாடு வளர்ப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்.

இந்த மூட நம்பிக்கையை நம்பி

அந்தப்பகுதி மக்கள் பீதியடைந்தனர் செய்தி அறிந்த தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்கறிஞர்சி.அமர்சிங் தலைமையில் ஏராளமான கழகத்தோழர்கள் 10-.09.-2020 அன்று காலை 10:30மணியளவில் பாழடைந்த அந்த இல்லத்திற்கு சென்று அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பி அங்கு கூடியிருந்த ஊடக செய்தியாளர்களிடம் இந்த இடத்தை தமிழக அரசு உடனடியாக புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

இந்த இடத்தை மூடநம்பிக்கையின் காரணமாக யாரும் பயன்படுத்தப் பயந்தால் மூட நம்பிக்கையை ஒழிக்கும் நோக்கோடு பகுத்தறிவாளர்களான நாங்கள் வாங்குவதற்கும் தயார் என அறிவிக்கப்பட்டது.

இணை ஆணையரிடம் மனு அளிப்பு 

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான தஞ்சை மாநகரத்தின் மய்யப்பகுதியான தெற்கு வீதியில் பல கோடி மதிப்புள்ள இடத்தையும், அலுவலர்கள் குடியிருப்பு பகுதியையும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாகப் பயன்படுவதைத் தடுத்து தமிழக அரசு புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என தஞ்சை அறநிலையத்துறை இணை இயக்குநர் அவர்களிடம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது

மனுவைப் பெற்று கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார் நிகழ்வில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மண்டலத் தலைவர் மு.அய்யனார், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாத்துரை, கழக கிராமபிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி.க.அன்பழகன், கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, தஞ்சை தெற்கு ஒன்றியத்தலைவர் இரா.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், மாநகரத்தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநில மாணவரணி அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், உரத்தநாடு பெரியார்நகர் அ.உத்திராபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் இரா.சரவணக்குமார், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் செ. ஏகாம்பரம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர்

ச.அஞ்சுகம், மகளிரணி பாக்கியம், விடுதலையரசி, பொ.பகுத்தறிவு, பொ.தமிழிசை, போட்டோமூர்த்தி, மாணவரணி ரா.கபிலன், நாஞ்சிக்கோட்டை பகுதி செயலாளர் துரை. சூரியமூர்த்தி, வடக்குவீதி விஜயன், நெடுவை அய்யாஆறுமுகம், அ.பெரியார் செல்வன், கரந்தை பகுதி செயலாளர் டேவிட், தண்டாயுதபாணி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்

மக்கள் விழிப்புப் பெற்று அச்சத்திலிருந்து மீண்டனர்.

அம்மை  மாரியாத்தாளால்  வருவதல்ல

அம்மை போடுவது மாரியாத்தாள் செயல் என்ற மடமை இன்றும் காணப்படுகிறது. படித்தவர்கள்கூட இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றனர். மாரியாத்தாளே இல்லையென்னும்போது, சீற்றம் எங்கிருந்து வரும்?

எனது மகன் அறிவுக்கரசன் கடலூரில் ஒரு விடுதியில் தங்கிப் படித்தான். அந்த விடுதியில் ஒரு மாணவனுக்கு அம்மை வர, அவனோடு சேர்ந்து பழகிய அடுத்தவனுக்கு வர அப்படியே நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அம்மை வந்தது. இறுதியில் என் மகனுக்கும் வந்தது. ஓரிரு கொப்புளங்கள் வந்ததும் வீட்டிற்கு வந்து விட்டான். முதலில் அம்மை வந்த மாணவர்கள் சிலர் குணமாகி விடுதிக்கு வந்தனர்.

மறுநாள் விடுதியில் உள்ள விடுதி காப்பாளர் (பெண்) எண்ணுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அம்மை வந்தவர்கள் என்ன வைத்தியம் மேற்கொண்டார்கள் என்று கேட்டேன்.

அதற்கு அந்தப் பெண் மாரியாத்தாள் பேரில் பாரத்தைப் போட்டு, உங்கள் மனைவியைத் தினமும் குளித்து விட்டு மாரியாத்தாள் கோயிலுக்குச் சென்று ஈரத் துணியுடன் மூன்று முறை சுற்றி வரச் சொல்லுங்கள் என்றாள். நான் பகுத்தறிவுவாதியென்பது அந்த அம்மையாருக்குத் தெரியவில்லை. அதெல்லாம் இருக்கட்டும், மருந்து என்ன சாப்பிட்டார்கள்? என்றேன்.  உடனே விடுதிக் காப்பாளர் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். சுற்றிலும் வேப்பிலை போட்டுவிட்டு, மாரியாத்தாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள் என்றார்.

இதுதான் இன்றைய நாட்டில் படித்தவர்கள் நிலை.

உடனே, நான் மற்ற மாணவர்களுக்குச் செய்ய வேண்டிய வைத்தியத்தைச் சொல்லிவிட்டு தொலை பேசியை வைத்தேன்.

என் மகனுக்கு அம்மை வந்ததும் முதலில் அவனைத் தனியறையில் படுக்க வைத்தேன். தூய மெல்லிய ஆடையை இடுப்பில் கட்டக் கொடுத்தேன். படுக்கை முழுவதும் வேப்பிலையைப் பரப்பினேன். மேலே தினவெடுக்கும் போது வேப்பிலையால் தடவச் செய்தேன். உண்ணுவதற்குப் பேயன் வாழைப் பழம் அதிகம் கொடுத்தேன்.

அம்மை நோய் என்பது ஒரு நோய்க்கிருமியால் வரக் கூடியது. அது வேப்பிலைச் சாற்றால், வேப்பிலைக் காற்றால் அழியக் கூடியது.

எனவே, எனது மகனுக்கு வேப்பிலையும், மஞ்சள் தூளும் கலந்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அச்சாற்றை அரை டம்ளர் பருகக் கொடுத்தேன். ஒரு நாளைக்கு இருவேளை.

மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க அதே சாற்றை நலமாகவுள்ள மற்றவர்களுக்கும் கொடுத்தேன். நானும் குடித்தேன். என் வீட்டில் இருந்த 6 வயது சிறுமிக்குக் கூட அம்மை தொற்றவில்லை. என் மகனுக்கும் விரைவில் அம்மை நோய் குணமாயிற்று.

எனவே, அம்மையென்பது மாரியாத்தாளால் வருவதில்லை. மாரியாத்தாள் கோயிலுக்குப் போய் கும்பிட வேண்டியதில்லை. அம்மை நோய்க் கிருமியால் வருவதால், தொற்றுவதால் மற்றவர்கள் விலகியிருக்க வேண்டும்.

அம்மைக்குச் சரியான மருந்து வேப்பிலை, வேப்பிலையுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாறு வடிகட்டி குடித்தால், நோய் வந்தவர்க்கும் குணமாகும். மற்றவர்களுக்கும் தொற்றாது. மேற்கண்ட சாறு பொதுவாக உடல்நலத்திற்கு ஏற்றது. சாதாரண நாள்களில் கூட வாரம் ஒருமுறை அருந்தலாம். நோய் எதிர்ப்பாற்றல் உடலுக்கு வரும். மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் அவ்வளவு ஆற்றல் உண்டு.

வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியா?

சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். இதை மாரியாத்தாள் மகிமை என்று கூறி சூடம் கொளுத்தி வழிபடுகின்றனர். இது அறியாமையின் அடையாளம். இதற்கு எந்தவிதத் தெய்வீகக் காரணமும் இல்லை.

பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே இனிப்புப் பால் போன்று வடியும். இதைத்தான் பால்வடிகிறது என்கின்றனர்.

மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும்.

இப்படி பால்வடிகின்ற மரங்கள், நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும் என்பது இந்த உண்மையை அய்யத்திற்கு இடமின்றி உணர்த்துகிறது. எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லை யென்பதும், வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை யென்பதும் இவ்வுண்மையைத் தெளிவாய் உணர்த்தும்.

எனவே, காரணம் புரியாததற்கெல்லாம் கடவுள் மகத்துவம் என்று கண்மூடி வாழ்வதைத்தவிர்த்து, காரணம் அறிந்து, அறிவு வழியில் செயல்படுவதே மனிதர்க்கு அழகாகும்.

தீ மிதிப்பது இறைவன் அருளா?

கீழே கிடக்கும் ஒரு சிறு நெருப்பை மிதித்தால்கூட சுரீர் என்று சுடுகிறது. அப்படி இருக்க இறைவன் அருள் இல்லாமல் எப்படி தீ மிதிக்க முடியும்? எனவே தீ மிதிப்பது இறைவன் அருளால்தான் என்று பலர் நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கை முற்றிலும் தவறு.

கோயிலில் தீ மிதிக்கின்றவர்களை அழைத்து ஒரே ஒரு நெருப்புத் துண்டை சாம்பல் நீக்காமல் தரையில் போட்டு மிதிக்கச் சொன்னால் எப்படிப்பட்ட பக்தனாய் இருந்தாலும் சுட்டுவிடும்.

பின் ஏன் தீக்குழியில் இறங்கி நடக்கும்போது சுடுவதில்லை?

தீக்குழியில் தீ சுடாமல் இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. நெருப்பு அதிக அளவில் சமமாகப் பரப்பப்பட்டிருக்க வேண்டும். 2. நெருப்பில் நீறுபூத்த சாம்பல் இருக்கக்கூடாது. 3. கால் ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து மாறி மாறி எடுத்து வைக்கப்பட வேண்டும் (விரைந்து நடக்க வேண்டும்). இந்த மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே தீ மிதிக்க முடியும்.

சாம்பல் நீக்கப்படாத நெருப்பில் யாரும் தீ மிதிக்க முடியாது. அதனால்தான் முறத்தால் அல்லது வேப்பிலையால் விசிறி சாம்பலை நீக்குவார்கள்.

மேடு பள்ளமான நெருப்பில் தீ மிதிக்க முடியாது. அதனால்தான் அடித்து நொறுக்கிச் சமப்படுத்துகிறார்கள்.

ஒரே இடத்தில் நின்று தீ மிதிக்க முடியாது. அதனால் தான் விரைந்து ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்,

உள்ளங்கையில் ஒரு நெருப்புத் துண்டைப் போட்டு இரண்டு உள்ளங்கைக்கும் அதை விரைந்து மாற்றிக் கொண்டேயிருந்தால் சுடாது. ஆனால், ஒரே உள்ளங்கையில் சற்று நேரம் நெருப்பை வைத்திருந்தால் சுட்டுவிடும்.

அடுப்பில் சிதறி விழும் தணல் நெருப்பைப் பெண்கள் விரலால் சட்டென்று எடுத்து மீண்டும் அடுப்பில் போடுவார்கள். ஆனால் சாம்பல் பூத்த நெருப்பைத் தொட மாட்டார்கள். தொட்டால் சுடுவது மட்டுமல்ல; கொப்பளித்து விடும். சுடுசாம்பல் பசை போல் ஒட்டிக் கொள்வதே அதற்குக் காரணம்.

ஆக, இக்காரணங்களால் தீமிதிக்கும் போது சுடுவதில்லையே தவிர மற்றபடி இறைவன் அருளால் அல்ல. ஒரே இடத்தில் நின்று எந்த பக்தனாலும் தீ மிதிக்க முடியாது.

பின் எப்படி அக்கினிச் சட்டி கையில் ஏந்துகிறார்கள்? அது ஏன் சுடுவதில்லை?

அக்கினி சட்டி ஏந்தும் எந்தவொரு பக்தனும் வெறுங்கையில் நெருப்பை ஏந்த முடியாது. சட்டியின் அடியில் தடவப்படுகின்ற சாறு மற்றும் வேப்பிலைதான் சுடாமல் இருக்கக் காரணம்.

இறைவன் அருள் என்று எவனாவது கூறினால் அவன் கையில் ஒரு கரண்டி தணல் நெருப்பை அள்ளி வையுங்கள். அப்போது புரியும் சுடுகிறதா என்று!

ஆணிச் செருப்பு காலில் குத்தாததற்குக் காரணம் ஆணிகள் அதிக அளவிலும் கூர்முனைகள் சமமாக இருப்பதும்தான். ஒரே ஒரு ஆணியை நிமிர்த்தி செருப்பில் பதித்து அதன் கூர்முனையில் எந்த பக்தனாவது நிற்க முடியுமா? கேளுங்கள். – முடியவே முடியாது.

ஒரே ஒரு ஆணியில் நிற்கும்போது உடலின் எடை முழுவதும் அதன் மேல் வர ஆணி  காலில் ஏறிவிடும். அதிக ஆணிகள் இருந்தால் எந்த ஒரு ஆணியும் காலில் ஏறாது. காரணம் எடை பரவலாக்கப்படுகிறது. ஆக, இவையெல்லாம் இறைவன் அருளால் அல்ல. அறிவியல் முறைப்படிதான். பக்தியினால் அல்ல; யுக்தியினால்தான்.

தலையில் தேங்காய் உடைக்கும் மூடத்தனம்

அண்மைக் காலங்களில் கோயில்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் அவலம் நடக்கிறது. நேர்த்திக் கடன் வேண்டுதல், என்று சொல்லி பக்தர்கள் இதைச் செய்து கொள்கிறார்கள். இது அறியாமையின் உச்சம் இப்படி தலையில் தேங்காய் உடைக்க வேண்டும் என்பதை எந்தக் கடவுளாவது எதிர் பார்க்குமா? சிந்திக்க வேண்டாமா?

நம்மை வருத்திக் கொண்டால் கடவுள் இரக்கப்பட்டு அருள் புரியும் என்ற மூடநம்பிக்கையே இதற்குக் காரணம். இப்படிச் செய்வதால் எந்தப் பலனும் கிடைக்காது. மாறாக பாதிப்பு மிக மிக அதிகமாகும். இதனால் ஏற்படும் பாதிப்பை பிரபல நரம்பியல் மருத்துவர் திலோத்தம்மாள் M.D., D.C.H., D.M. (Neurologist) (USA) அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார்;

“தேங்காயைக் கையில் உடைக்கும்போது எலும்பு, சதை மட்டும்தான் உடைந்து பாதிப்பு ஏற்படும். ஆனால், தேங்காயை தலையில் உடைக்கும் போது மூளையைப் பாதிக்கும். அதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. கராத்தே பயிற்சியில் கையில் உடைப்பது போல் ஏன் செய்யலாமே என்று கேட்கலாம். தலையில் உள்ள எலும்புடன் மட்டும் சிக்கல் நிற்காது. உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லிமாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையை குலுக்கினாலே கூட மூளை ஆடலாம். அதனால் பிரச்சினை வரலாம். மூளையில் இரண்டு மூன்று வகை உண்டு அதில் நான் சொல்லுவது அதிர்ச்சி (Concussion). அடுத்து, அடிபட்டு கண்ணிப்போதல் (Contussion), மூன்றாவது Nuronal Damage, Oxonal Damage. Oxonal என்பதுதான் அடிப்படை செல். அதாவது நரம்புகள் சிதறிப்போவது; பிய்ந்து போவது.

தேங்காயைப் பொறுத்து அடிக்கும் வேகத்தைப் பொறுத்து தலையில் பாதிப்பு ஏற்படலாம். இந்த மாதிரி மூன்று விதத்திலும் எது மாதிரியும் உடையலாம். இது பிரைமரி கேமேஜ் ஆகும் ஆகும். இதனால் உள்ளே இருக்கும் ரத்தக்குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம். இது உடனேயும் நடக்கலாம்; தாமதமாகவும் ரத்தக் கட்டிவரலாம். ஹெமட்டோமா மூளையில் உள்ளேயும் இருக்கலாம்; வெளியேயும் இருக்கலாம். அதன் அழுத்தம் அதிகரித்து மூளை நசுங்க ஆரம்பிக்கும். அதனாலேயும் தொந்தரவு ஏற்படும்.

ஒவ்வொரு வருடமும் இதையே அடிக்கடி செய்தாலும் அவர்களுக்கும் உறுதியாக மூளையின் செயல் திறமை மங்கிப் போகும். பாதிப்புகள் உடனே தெரிவதில்லை. இரண்டு, மூன்று மாதம் கழித்து தெரிய ஆரம்பிக்கும்.

பாதிப்பு உணரப்படாமலிருந்தால், ஸ்கேன் செய்து பார்த்தால் பாதிப்பு தெரியும்.

வயதான பெண்களாக இருப்பவர்கள் தலையில் தேங்காய் உடைத்தால் உடனே எலும்பு உடையும். அபாயம் நேரும். எலும்பு சற்று லேசாக இருந்தாலும் உடனே உடைந்து விடும். இதில் உடனடியாக ரத்தக் குழாய் உடைப்பு ஏற்படலாம். மூளை மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு இரும்புப் பெட்டி (Box) யைப் போல் தலை அமைந்துள்ளது. இருதயத்திற்குக் கூட இந்தப் பாதுகாப்பு இல்லை! வேறு எந்த ஒரு உறுப்புகளுக்கும் உடலில் இந்த மாதிரி பாதுகாப்பு கிடையாது. எனவே மூளை உயிர்த்தலம் போன்றது. அதனைப் பாதுகாப்பது அவசியம். எனவே பக்தியின் பெயரால் தேங்காய் உடைக்கப்படுவதை அரசே சட்ட ரீதியாகத் தடை செய்ய வேண்டும்.

‘கார்ப்பரேட்’ சாமியார்கள்!

நம் நாட்டில் காவி அணிந்த மோசடி சாமியார்களுக்குப் பஞ்சமே இல்லை. அவர்கள் சட்டம், ஒழுங்குபற்றி சிறிதும் கவலைப்படாமல், அரசுகளுக்கு எதிரான ஒரு போட்டி அரசாங்கத்தையே (Parallel Government) நடத்துகிறார்கள்; மத்திய – மாநில அரசுகள் தங்களின் ‘சர்வ சக்தி வாய்ந்த’ காவல்துறைகளை முடுக்கிவிட்டு, அவர்களைக் கைது செய்து காராக்கிரகத்தில் அடைத்து சமூக ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் காப்பாற்ற எதனால் தவறுகிறார்கள் என்பது புரியவில்லை.

பல சாமியார்கள் இப்போது காலத்திற்கேற்ப ‘கார்ப்பரேட் சாமியார்களாகி’ கோடிக்கணக்கில் கொள்ளையடித்த சொத்துக்கு அதிபதியாகி, அப்பாவி மக்களை ஏமாற்றி, வஞ்சித்து – அவர்தம் பக்தி மூடத்தனத்தை மூலதனமாக்கி ‘பக்தி’ வியாபாரம் செய்து வருகின்றனர்!

பாலின வன்கொடுமைகளுக்கும், வக்கிரங்களுக்கும், வசீகரமான ‘வசந்தமாக’ அவர்தம் துறவு(?) வாழ்க்கை வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது.

தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமும், கூலி எழுத்தாளர்கள் மூலமும் இந்த ‘ஆன்மிக’ ஹம்பக்குகள் தங்களை அபரிமிதமாக விளம்பரப்படுத்திக் கொண்டு, ஏமாற்றும் ‘420’ பேர்வழிகளாகவும் திகழுகிறார்கள்.

திருவண்ணாமலையில் படித்துவிட்டு, வேலை கிட்டாத ஓர் இளைஞன் இந்த குறுக்கு வழியில் இப்போது ‘அவதாரமாகவே’ மாறிவிட்டான்!

நித்தியானந்தா என்ற பெயருடன் பல இடங்களில் சொத்து-, மடம், – சிஷ்யைகள் முதலியன; – கருநாடகத்தில் ஒரு பெரும் ‘சாம்ராஜ்யம்.’ அங்கே இருந்து ‘தேடப்படும் குற்றவாளியாக’ தலைமறைவாகியுள்ள நிலையில், இப்போது ‘கைலாசம்‘ என்று ஒரு புது நாட்டையே உருவாக்கியுள்ளதாகவும், அதில் யாவரும் பாஸ் போர்ட்டுக்கு விண்ணப்பித்துச் சேரலாம் எனவும், அதற்கென தனியே ரிசர்வ் வங்கி, தங்க நாணயம் எல்லாம் தயாராகியும் விட்டதாம்! அடிக்கொரு முறை தொலைக்காட்சி ஊடகங்களில் பரவலாக செய்தி வருவதும், திரைப்பட நட்சத்திரங்களையே தோற்கடிக்கும் வண்ணம் ஒப்பனைகளை விதவிதமாகச் செய்துகொண்டு ‘வித்தை’ காட்டுவதுமான விவஸ்தையற்ற செயல்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

இது ஏறத்தாழ 8 மாதங்களுக்குமேல் தொடர்ந்து இடைவெளி விட்டுவிட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது!

தேடப்படும் குற்றவாளி தொலைக்காட்சியில் தோன்றுவது எப்படி?

தேடப்படும் குற்றவாளியை மத்திய – மாநில அரசுகளின் சக்தி வாய்ந்த காவல்துறை ஏனோ கண்டுகொள்ளாதவைபோல், மவுனம் சாதித்து, அலட்சியமாக இருக்கிறதா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

இதுகுறித்து உடனடியாக தகுந்த சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து கைது செய்வதுடன் அந்த போலி புரட்டு ஆசாமியின் சொத்துகளை பறிமுதல் செய்ய முன்வரவேண்டும்!

அரசின் பல்வேறு துறைகள் இத்தகைய போலிகள், காவி(லி)களின் பக்தி வேஷத்தை அம்பலப்படுத்தி, உரிய வகையில் அரசுகளுக்குச் சவால்விடும் நிலையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

தொலைக்காட்சிகளில் எப்படி சினிமா காட்சிகள் போல – பலவித ஒப்பனை ஜோடனைகளுடன் இவர்களது மோசடி வித்தைகள் விளம்பரப்படுத்தப்படுவதை வைத்து, இவற்றிற்கெல்லாம் வேர் எங்கே இருக்கிறது என்பதை அரசுகள் மனம் வைத்தால், அடுத்த நொடிகளில் கண்டறிந்து, கைது செய்து, நீதிமன்றங்களில் நிறுத்தி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்து, சமூகத்தில் ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் நிலை

நாட்டிடலாமே?

மனமிருந்தாமல் மார்க்கமுண்டு. ஏனோ தயக்கம்? புரியவில்லை!

மக்களிடம் இந்த மோசடிச் சாமியார்கள் பற்றி  அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தையும் திராவிடர் கழகம் மேற்கொள்ளும் திட்டத்தில் விரைவில் இறங்குவது உறுதி! உறுதி!! என்று தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கையை ஏற்று, படித்தவர்களும் பகுத்தறிவாளர்களும் அரசியல் சட்டம் குறிப்பிடுவது போல மூடநம்பிக்கை ஒழிப்பை குடிமகனின் கடமையாகக் கொண்டு மூடநம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும். மக்களிடையே எப்பகுதியில் மூடநம்பிக்கை பரப்பப்பட்டலும் அதை முறியடித்து மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *