திதி – யார் வயிற்றில் அறுத்துக் கொட்ட?

உங்களுக்குத் தெரியுமா? மார்ச் 01-15

கேள்வி : திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறார்களே அது எதற்காக? போகிறவர்கள் என்றைக்கோ போய்ச் சேர்ந்தாகி விட்டது. அவர்களுக்கு வருடா வருடம் இந்த மாதிரி ஒரு சடங்கு தேவையா? இங்கே கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம் போன்றவை அங்கே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அவர்கள் இருக்கிற இடம்தான் உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் சொல்கிற மந்திரத்தின் மூலமாக, அவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நன்மை விளையப் போகிறது? இந்தச் சடங்கு எதற்காக? பகுத்தறிவுக்கு இது சற்றும் ஒவ்வாதது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

 

சோ : நீங்கள் பகுத்தறிவு என்று பேசுவதால் முதலில் அந்த விஷயத்தைப் பார்ப்போம். இப்போது ஒரு தலைவரின் சமாதி என்று ஒன்றை நிறுவி, அங்கே போய் வருடா வருடம் மலர் வளையம் வைக்கிறார்கள். ஏன்? அந்தத் தலைவரும் என்றைக்கோ போய்ச் சேர்ந்து விட்டவர்தானே? இங்கே இவர்கள் வைக்கிற மலர் வளையம், அங்கே அவருக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அல்லது அந்த மலரின் வாசனை அவருக்குப் போய் விடுமா? அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாது. அதை மட்டும் ஏன் செய்கிறார்கள்? அதுவும் அவர் என்று இறந்தாரோ, அந்தத் தேதியில் போய்ச் செய்வானேன்? மற்ற தினங்களில் செய்தால், அந்த மலர் வளையம் அவருக்கு ஏற்புடை-யதாகாதா? அவர் இறந்த தினத்தன்று இந்த மரியாதையை ஒரு அரசியல்வாதி செய்யவில்லை என்றால், உடனே அவரைப் பற்றி பல விமர்சனங்கள் வருகின்றன. ‘இறந்த தலைவர் மீது இவருக்கு மரியாதை இல்லை’ என்ற பேச்சு வருகிறது. சரி, இப்படி மலர் வளையம் வைப்பதால் ஒருவேளை ஓட்டு வருமோ, என்னவோ தெரியாது.

ஆனால், நீங்கள் குறிப்பிட்ட திவசம், திதி இதைச் செய்வதால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறபோது, அது அவர்களுடைய பிரேதத்திற்காகச் செய்யப்படுகிற காரியம் அல்ல. அவர்கள் மூன்று உருவில் இருக்கிறார்கள். ஒன்று _ ஆதித்ய ரூபம்; இரண்டாவது _ ருத்ர ரூபம்; மூன்றாவது _ வஸு ரூபம். அந்த ரூபத்தில் அவர்களுக்கு நாம் செய்கிற மரியாதை இங்கே செய்யப்படுகிற சிராத்தம். சிரத்தையோடு செய்யப்படுவதே சிராத்தம். இதில் முக்கிய-மானதே சிரத்தைதான். இந்த சிராத்தத்தைத்-தான் திவசம், திதி என்றெல்லாம் சொல்-கிறோம். இது ஒரு பண்டிகை அல்ல. இதை மிகவும் விமரிசையாகச் செய்யக் கூடாது. ‘ச்ராத்தம் ந விஸ்தாரயேத் தீமான்…’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அறிவுடை-யோன் சிராத்தத்தை விமரிசையாகச் செய்ய-மாட்டான். ஏனென்றால், இது ஒரு பொதுக்காரியம் அல்ல. சிராத்தத்தைச் செய்கிறவன் தனது முன்னோர்களுக்காகச் செய்கிற காரியம் இது. அதில் பெரிய விருந்து, படாடோபம் எல்லாம் கூடாது.

இறந்த முன்னோர்கள் எங்கே இருக்கிறார்கள்? நம்மால் பார்க்க முடியாதுதான். ஆனால், இன்று விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? வானுலகில் சில இடங்களில் ஜீவராசிகள் இருக்கலாம் என்று சொல்-கிறார்கள். நிச்சயமாக அங்கு ஜீவராசிகள் கிடையாது என்று அவர்கள் சொல்லவில்லை. அந்த ஜீவராசிகளின் சக்தி என்ன, அவர்-களுடைய அறிவு என்ன _ என்பதெல்லாம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். இந்த ஆராய்ச்சிகள் இப்படியே தொடர்ந்து, ஒரு கட்டத்தில், ‘மேலுலகில் ஜீவராசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் நல்ல அறிவு இருக்கிறது. அவர்கள் நம்மை விட மிகவும் நுட்பமான அறிவு கொண்டவர்கள், திறன் கொண்டவர்கள்’ என்றெல்லாம் விஞ்ஞானிகள் கூறினால், நாம் என்ன சொல்வோம்? ‘ஏதோ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், நமக்கு என்ன தெரியும்? நமக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்றா சொல்வோம்? அப்படிச் சொல்ல-மாட்டோம். விஞ்ஞானிகள் சொல்லி விட்டால் சரி என்று ஏற்று விடுவோம். அவர்கள் சொல்வதே அதற்கு நிரூபணம் ஆகி விடும். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து வேறு விஞ்ஞானிகள், இவர்களிடமிருந்து மாறுபட்டால், அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம். அதாவது அங்கே நம்முடைய சுய அறிவு என்பதற்கு வேலையே கிடையாது. என்ன சொல்லப்படுகிறதோ, அதை கண்மூடித்தனமாக ஏற்று விடுவோம். ஏனென்றால், அப்போதுதான் நமக்கு எல்லாம் புரிந்து விட்ட மாதிரி காண்பித்துக் கொள்ள முடியும். ஆனால், இப்பொழுது நம்பிக்கை ரீதியாக சிராத்தம் என்று சொன்னால், ‘யாருக்கு? எங்கே இருக்கிறான்?’ என்றெல்லாம் கேட்கிறோம்.

பித்ருக்கள் _ அதாவது _ மறைந்த முன்-னோர்கள் ஆதித்யர்கள், ருத்ரர்கள், வஸுக்கள் ஆகிய மூன்று உருவில் இருக்கிறார்கள் என்று சொன்னோம். எட்டு வஸுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள் இன்னும் சிலர் பித்ரு தேவர்கள் என்று கூறப்-படுகிறார்கள். இவர்களுடைய ஆதரவில்தான் நமது முன்னோர்கள், தங்களுடைய கர்மம் முடிகிற வரை, பித்ரு லோகத்தில் தங்குகிறார்கள். கர்மம் முடிந்த பின்பு, அவர்களுடைய அடுத்த பிறவி வரும். அதுவரை பித்ரு லோகத்தில் இருக்கிற அவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறோம். ஒரு புண்ணிய தீர்த்தத்தில் சென்று சிராத்தம் செய்தால், அது தீர்த்த சிராத்தம். கங்கையில் செய்தால், அது கயா சிராத்தம். இப்படி பல சிராத்தங்கள் கூறப்பட்டுள்ளன. பித்ரு தேவர்களையும், பித்ருக்களையும் வணங்கி நாம் செய்கிற சிராத்தம், ஹிந்து மதச் சடங்குகளில் மிகவும் புனிதமானவற்றில் ஒன்று.

இது திருவாளர் ‘சோ’ ராமசாமியின் பதில். (நூல்: ‘எங்கே பிராமணன்?’ )

எவ்வளவு சாமர்த்தியம் பார்த்தீர்களா? இதுதான் பச்சைப் பார்ப்பனத்தனம் என்பது. தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, நினைவிடங்களில் மலர் வளையம் வைப்பது ஒன்றும் வேண்டுதலல்ல. அந்த தலைவர்களின் பிறந்த நாளை, நினைவு நாளை நினைவு கூர்ந்து, அவர்களின் கருத்துக்களைப் பரப்புவது, சிந்திப்பது என்கிற பகுத்தறிவு நோக்கம்தான் -_ பிரச்சாரம்தான் அதில் அடங்கியிருக்கிறது.

தலைவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்றால் அந்த விழாவில் நாம் பேசுவதை அந்தத் தலைவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நம்பியோ, எண்ணியோ அல்ல. மாறாக, அந்தத் தலைவர்களின் தொண்டு குறித்தும், கொள்கை குறித்தும் மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தானே _ அந்த விழா?

ஆனால், திதி கொடுப்பது அந்த வகையைச் சேர்ந்ததல்ல. திதியானது பார்ப்பனருக்குக் கொடுக்கும் பொருள் இறந்தவர்களுக்குப் போய்ச் சேரும் என்பதாகும். இந்த இடத்தில்தானே பிரச்சினையே ஏற்படுகிறது. எப்படி போய்ச் சேரும் என்கிற பகுத்தறிவுக் கேள்வி எழுகிறது. மாலை அணிவித்தால் தலைவர்கள் பார்ப்பார்கள் என்று சொல்லவில்லை.

திதி கொடுத்தால் சம்பந்தப்பட்டவர் களுக்குப் போய்ச் சேரும் என்றல்லவா சாதிக்கிறார்கள். இரண்டும் எப்படி ஒன்றாகும்?

இன்னொன்று முக்கியமானது; திதி என்பது பச்சைப் பார்ப்பனப் புரோகிதச் சுரண்டல். செத்தவருக்குத் திதி என்று கூறி கொடுக்கப்படும் பொருள்கள் எல்லாம் பார்ப்பனப் புரோகிதனின் ஆத்துக்குத்தானே போகிறது? புரோகித பார்ப்பான் வயிற்றில்தானே ‘அறுத்து’ வைக்கப்படுகிறது.

மற்றொன்று: திதியில் புரோகிதனுக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருள்கள் எத்தகையவை? யாருக்குப் போய்ச் சேரவேண்டுமோ அவர்களுக்கு விருப்பமான உணவுப் பொருள்களைத்தானே கொடுக்க வேண்டும்?

மாறாக, என்ன நடக்கிறது? திதிக்கு உரியவர் மாமிசம் சாப்பிடுபவராக இருந்தால், அதில் விருப்பம் உடையவராக இருந்தால், கவிச்சி இல்லாமல் ஓர் உருண்டை சோறு உள்ளே போகாது என்ற நிலையில், அவருக்குத் தேவையான மாமிச உணவிற்கான பொருள்-களைத்தானே புரோகிதப் பார்ப்பானுக்குக் கொடுக்க வேண்டும்?

மாறாக, என்ன நடக்கிறது? பச்சரிசி (செத்தவர் அன்றாடம் சாப்பிட்டது புழுங்கலரிசிதான்) சகிதமாக அத்தகைய காய்கறி அய்யட்டங்கள், மளிகைச் சாமான்கள் அல்லவா புரோகிதனுக்குக் கொடுக்கப்படுகின்றன.

புரோகிதன் கொடுக்கும் பட்டியலில் (தனியே காண்க.) அரிசி என்று போட்டு அடைப்புக்-குறிக்குள் ரேஷன் அரிசி கூடாது என்றுள்ளதே. எவ்வளவு விவரமாக இருக்கான் பார்த்தீர்களா?

விஞ்ஞானிகளைக் கொண்டு வந்து இதில் திணிக்கிறாரே சோ; விஞ்ஞானம் எதைச் சொன்னாலும் காரணகாரியம் இருக்கிறது _ நிரூபணமும் இருக்கிறது. ‘சோ’ சொல்லும் திதியில் என்ன நிரூபணம் இருக்கிறதாம்? ‘மொட்டைத்தலை’க்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார் சோ. ‘கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமைமாடு ஏரோப்-பிளான் ஓட்டுகிறது’ என்று சொல்ல மாட்டானா?

இப்பொழுது புரிகிறதா? திதி என்பது பார்ப்பானின் பகற்கொள்ளையேதான்!  பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியா? என்பது சுயமரியாதை இயக்கத்தின் பாலபாடம்.

– மின்சாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *