உலகிலுயர் தமிழர்ப் பண்பாடும்! ஒழித்தழித்த ஆரியர் செயல்பாடும்!

ஜனவரி 16-31

ஒவ்வொரு தமிழனும் _ அவன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் _ அறிய வேண்டிய அரிய செய்திகள் இவை.

தமிழர் சிறப்பறிய வேண்டுமானால் சங்ககால இலக்கியங்கள் உதவும் என்பர். சங்க காலம் ஆரியர் ஆதிக்கம் பெற்று தமிழர் பண்பாடு தகர்க்கப்பட்டு சின்னாபின்னமாகி சீர்கெட்டு கிடந்த காலம். தொல்காப்பியர் காலத்தைக் கொண்டு அறியலாமா? வேறுவழியில்லை. அதைத்தவிர நமக்கு வேறு சான்றுகள் அதிகம் இல்லை. அவர் காலத்திலே ஆரியம் நம் பண்பாட்டைச் சிதைக்கத் தொடங்கிவிட்டது. என்றாலும் பெருமளவு சீர்கெடா காலம்.

தொல்காப்பியத்தை அடிப்படையாய் வைத்து, அதற்கு முன்பிருந்த தமிழரின் தூய வாழ்வை, அதன் பின் சேர்ந்த ஆரிய கலப்பை பிரித்தெடுத்து ஆய்ந்தும், புதை பொருள்கள், அகழ் ஆய்வுத் தடயங்கள், உலகெங்கும் இன்றும் கிடைக்கும் எச்சங்கள் ஆகியவற்றைக் கொண்டும் அறியலாம், தெளியலாம், உறுதி செய்யலாம், பெருமை கொள்ளலாம்; பின்பற்றலாம்.

அரிதின் முயன்று பெறும் செய்திகளை வைத்து தமிழர் வாழ்வை, மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். 1. தூய தமிழர் வாழ்வு, 2. ஆரியர் தமிழரோடு கலந்தபின் வாழ்வு, 3. ஆரிய ஆதிக்கம் அரசு உதவியோடு  உச்சத்திலிருந்து நம்மை அடிமைப்படுத்திய போது வாழ்வு என மூன்று நிலையில் பிரிக்கலாம். இம்மூன்றிலும் தெளிவு இருந்தால்தான், தமிழர் மீண்டும் உயர் நிலையை, மானமுள்ள வாழ்வை, இழிவு நீங்கிய வாழ்வைப் பெறமுடியும். பகுத்தறிவு நெறியில் வாழவும் முடியும், சமத்துவ நிலையை எட்ட முடியும்.

1. உலகிலுயர் தமிழர்ப் பண்பாடு:-_

1. மொழி: உலகில் முதல் மொழி தமிழ். உலக மொழிகள் பல தமிழின் கொடை – தமிழிலிருந்து வந்தவை. நம்ப முடியவில்லையா? வியப்பாக இருக்கிறதா? என்றாலும் உண்மை அதுதான்.

பெரமிடு (எகிப்தில் உள்ளது) என்பது தூயத் தமிழ்ச் சொல். ஆங்கிலத்தில் உள்ள Mud, Market போன்ற வார்த்தைகள் தூய தமிழ்ச் சொற்கள். ஹிந்தியிலுள்ள ச்செலோ என்ற வார்த்தை எண்ணற்ற வார்த்தைகள், வடமொழியில் உள்ள ஜோடி, ஜுரம் என்பவையெல்லாம் சுரம், சோடி என்ற தமிழ் வார்த்தைகளிலிருந்து வடமொழிக்குச் சொந்தமாக்கப்பட்டவை. இப்படி உலகில் பல மொழிகளில் ஏராளமாய் எடுத்துக்காட்டலாம். ஜப்பானிய அறிஞர் சப்பான் மொழி தமிழ்மொழியிலிருந்து வந்தது என்று உறுதி செய்துள்ளார்.

இலக்கியம்: உலகிலே உயர்வான நூல்கள் பல தமிழில் இருந்ததை தொல்காப்பியம் வழி அறியலாம். காரணம், இன்றைக்கு உலகில் இணையில் இரு நூல்கள் என்றால் அவை 1. தொல்காப்பியம், 2. திருக்குறள். இவை இரண்டுமே இவற்றிற்கு முந்தைய சிறப்பான நூல்களைச் சுட்டுகின்றன என்றால் அதுதானே பொருள்?

இவையிரண்டும், ஆரியர்களின் அழிப்பு வேலையில் தப்பிப் பிழைத்தவை. மற்றவற்றை யெல்லாம் நீரிலும், நெருப்பிலும் அழித்தனர் ஆரியர்கள்.

தமிழர்களின் ஓலைச் சுவடிகள் தமிழர்களின் கல்வித் திறத்தைக் காட்டுகின்றன. மற்ற இனமெல்லாம் விலங்குகளைப் போல் பேச்சின்றி மொழியின்றி வாழ்ந்த நிலையில், எழுத்து வடிவத்தைப் பெற்றிருந்தது தமிழ்; பேச்சு மட்டுமல்ல இலக்கியம் படைத்து, அதை ஏடுகளில் ஆணி கொண்டு எழுதவும் கற்றிருந்தான் தமிழன்.

3. மருத்துவம்: செடி, கொடி, மரங்களின் இலைகள், பூ, வேர், தண்டு, கிழங்கு, பட்டை, காய், கனி, கொட்டை, மீன், பறவை, பாம்பு விஷம், விலங்குகளின் சுரப்புகள், உறுப்புகள், இரத்தம், மண், தங்கம், உப்பு, இரும்பு, செம்பு, கற்கள், படிமங்கள், கிளிஞ்சல்கள், சுண்ணாம்புக்கல் என்று பல பொருட் களை, துளாக, சாம்பலாக, சாறாக, தைலமாக, களிம் பாக, உருண்டையாக, களியாக,எண்ணையாக தயார் செய்து, எல்லா நோய்களையும் குணப்படுத்தினர்.

உணவில் மிளகு, மஞ்சள், இஞ்சி, கீரை, சீரகம், பூண்டு, வெங்காயம், வெந்தயம் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தினர். நோய் வராமல் தடுக்க இம்முறைப் பயன்பட்டது. இந்த மருத்துவ அறிவு கிராமப்புறத்துப் பெண்கள் கூடத் தெரிந்து வைத்திருந்தனர். மருத்துவ வல்லுநர்களாக சித்தர்கள் திகழ்ந்தனர்.

தமிழ்த் தாய்மார்கள் தாலாட்டில்கூட மருத்துவச் செய்திகளைப் பதிவு செய்தனர்.

வயிற்றுலைச்சல் மிஞ்சிப்போய் -_ கண்ணே உனக்கு
வயிற்றுவலி வந்திருச்சா
வெற்றிலையும் உப்பும் வைச்சு _ கண்மணியே
வெறுவயிற்றில் தின்னிடம்மா
என்று மருத்துவக் குறிப்பையே தாலாட்டு பாடலாய்ப் பாடினர்.

வான் ஆய்வு: சூரிய இயக்கத்தை நாள் கணக்கீட்டிற்கும், முழுநிலவை மாதக் கணக்கீட்டிற்கும், சூரியன் வடக்கு நகர்தல் தெற்கு நகர்தலை (உத்தராயணம், தட்சணாயனம்) அடிப்படையாக வைத்து ஆண்டுக் கணக்கீட்டிற்கும் பயன்படுத்தினர். தை முதல் நாள் சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்குவதிலிருந்து ஆண்டுத் தொடக்கத்தைக் கணக்கிட்டனர். இதுவே பின்னர் ஆங்கில ஆண்டிற்கும் அடிப்படையானது.

கலை: பரத நாட்டியத்தை கடல் அலையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கினர். பின் ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம் என பல ஆட்டங்களை ஆடினர்.

விளையாட்டு: இன்றைய கிரிக்கட் ஆட்டம் பண்டைய தமிழர்களின் கிட்டிப் புள் விளையாட்டின் மேம்பட்ட நிலை. அதாவது கிட்டிப் புள் விளையாட்டை மேம்படுத்தி உருவாக்கினர்.

குண்டு விரலால் சுண்டப்பட்டு குழிக்குள் தள்ளுவதை வைத்து இன்று பல விளையாட்டுகள் பரிணாமம் பெற்றுள்ளன.

போர்: யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை ஆகிய படைகளை உருவாக்கி போர்முறைகளை வகுத்து வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தவர்கள்.

வெறுங்கையைக் கொண்டு தமிழர்கள் உருவாக்கிய வீரக்கலையே இன்று கராத்தே கலையாக அயல்நாடு சென்று திரும்பி வந்துள்ளது. வாள், வேல், வில் போன்ற போர்முறைகளும் தமிழர்களால் உருவாக்கப்பட்டவையே!

கட்டடக்கலை: சுட்டச் செங்கல்லால் கட்டடங்கள் கட்டும் முறையை தமிழர்களே முதன்முதலில் உருவாக்கினர். வானுயர்ந்த கோபுரங்கள், அணைக்கட்டுகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றை முதன்முதலில் உருவாக்கியவர்கள். குளியல் அறைகள், தெருவிளக்குகள், வீதிகள் என நகர அமைப்புகளையும், பாதாளச் சாக்கடை முறையையும் தமிழர்களே முதலில் செய்தனர்.

சமத்துவம்: ஜாதி, மதம், ஏற்றத்தாழ்வு, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகள் அற்ற சமத்துவ வாழ்வைத் தமிழர்கள் வாழ்ந்தனர்.

பகுத்தறிவு: தொன்மைத் தமிழர்கள் எந்த மூட நம்பிக்கைகளும், மூடச் சடங்குகளும் இன்றி, பகுத்தறிவு வாழ்க்கை வாழ்ந்தனர். காதல்: வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டு, விருப்பப்படி சேர்ந்து வாழும் இல்வாழ்வு முறையைத் தமிழர்கள் மேற்கொண்டனர். காதலையும் வீரத்தையும் இரு கண்களாகக் கொண்டனர்.

குடும்பம்: பலர்அறிய மண வாழ்வை மேற்கொள்ளும் முறை அடுத்து நடப்பிற்கு வந்தது. ஒருவன் ஒருத்தி, குடும்ப வாழ்வு, பெண்ணுக்கு சீர் செய்தல், சிறப்பளித்தல், தாய்மையை உயர்வாக எண்ணுதல், எல்லா உயர்வானவற்றையும் பெண்ணாகவே உருவகம் செய்து மதித்தல் (நீர், நிலம், செல்வம், வீரம், கல்வி). பெற்றோர், பங்காளிகளுடன் கூட்டுக் குடும்பம் என்று திட்டமிட்ட குடும்ப வாழ்வு (இல்வாழ்வு) மேற்கொண்டனர்.

வீரம்: காதலும் வீரமும் இவர்களுக்கு வாழ்வின் அடிப்படை. ஆணைப் போன்றே பெண்ணும் வீரம் உடையவளாக விளங்கினாள்.

உடல் உழைப்பு: ஆணுக்கு நிகராகப் பெண்களும் உழைத்தனர். நெல் குத்துதல், மாவு அரைத்தல், அம்மி அரைத்தல், நாற்று நடல், அறுவடை செய்தல், கட்டு சுமத்தல், தூற்றுதல், புடைத்தல், களைக் கொத்துதல் என்று எண்ணற்ற புறவேலைகளையும், வீட்டு வேலைகளையும் செய்தனர்.
கொடை: வறியவர்களுக்குக் கொடுப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வீடுகளில் திண்ணையும் பொது இடங்களில் சத்திரங்களும் அமைத்தனர்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என உயர்வாய் எண்ணினர்.

தொண்டு: பொதுத் தொண்டு செய்யவே வீட்டை விட்டு வெளியில் வந்து தொண்டாற்றினர். அவர்களுக்கு அந்தணர்கள் என்ற பெயரும் அளித்தனர். உலகத் தொண்டு அமைப்புகளுக்கு அந்தணத் தமிழர்களே அடையாளம்.

வணிகம்: கடல் கடந்து பல இடங்களுக்கும் சென்று, வென்று, அங்கெல்லாம் தம் ஆட்சியை நிறுவியதோடு, வணிகமும் செய்தனர்.

நிலப்பகுப்பு: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தை அதன் இயல்புக்கேற்ப பகுத்தனர்.

நில அளவு: நிலங்களை முதன்முதலில் அளந்தவர்கள் தமிழர்களே! சோழர்கள் ஒரு சிறு பகுதியைக் கூட விட்டுவைக்காமல், தங்கள் ஆட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளையும் அளந்து கணக்கு வைத்தனர்.

வாக்கெடுப்பு: மக்கள் பிரதிநிதிகளை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யும் முறையை (குடவோலை) முதன்முதலில் செய்தவர்கள் தமிழர்களே! இதன் மூலம் மக்களாட்சி முறைக்கு வழிகோலியதோடு, மக்களின் விருப்பமறிந்து ஆட்சி செய்தனர்.

உள்ளாட்சி: உள்ளாட்சி முறையை முதன் முதலில் தமிழர்களே கொண்டு வந்து கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுத்தனர்.

வரிவிதிப்பு: மக்களின் சக்திக்கேற்ப வரி தண்டினர். வரி வருவாயை மக்கள் நலனுக்கே திருப்பிச் செலவிட்டனர். சுங்கவரி முறை பண்டைத் தமிழர் காலத்திலே நடப்பிற்கு வந்தது. நிலவரி முறையையும் முதன் முதலில் நடைமுறைப்படுத்தினர்.

நன்றி: பயன்படுபவற்றிற்கு நன்றி செலுத்துவதை தலையாயக் கடமை யாகக் கொண்டனர். நிலத்தலைவர், வீரர்கள், பத்தினிப் பெண்டிர், குலப் பெரியோரை வணங்கினர். பயன்படும் பொருட்களையும் வணங்கினர். பொங்கல் விழா நன்றி விழாவாகவே தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

விழாக்கள்: இயற்கையைப் போற்று விழாக்களே தமிழர், காதல் சார்ந்த, வீரம் சார்ந்த விழாக்கள் முதன்மைப் பெற்றன.

விருந்தோம்பல்: வாழ்வின் நோக்கமே விருந்தோம்புவதே என்று எண்ணினர். தமிழர் மனித நேயத்தையும், அன்புணர்ச்சியையும், பிறர் நலன் பேணும் உளப்பாங்கையும் காட்டுவதாய் இது விளங்கியது. ஒற்றுமை, சமத்துவம், இணக்க நிலை இவற்றிற்கு இது வித்திட்டது.

அனைத்தையும் விழுங்கிய ஆரியம்: சுமார் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த இனக்கலப்பும், இன ஆதிக்கமும் இன்றி தெற்காசியப் பகுதி முழுவதும் தங்களுடைய தாய் மண்ணாகப் பெற்று வாழ்ந்த தமிழர் மண்ணில் முதன்முதலில் ஊடுறுவியவர்கள் ஆரியர்கள். அடுத்து அரேபியர், அடுத்து அய்ரோப்பியர். இதில் மற்றவர் ஆதிக்கமும், ஆளுகையும் தமிழர் பண்பாட்டை, மொழியை களவாடவில்லை; சில கலப்பு மட்டுமே நிகழ்ந்தன. ஆனால், ஆரியர்கள்தான் நம்முடைய பண்பாட்டை ஒழித்து ஆரிய கலாச்சாரங்களைப் புகுத்தினர். நமது நன்றியின்பாற்பட்ட வழிபாட்டை கடவுள் வழிபாட்டாக்கினர்; தொழிற் பிரிவுகளை ஜாதிப் பிரிவுகள் ஆக்கினர்.

எல்லா தொழிற்பிரிவு மக்களும் ஒருவருக் கொருவர் மணவுறவு கொண்ட நிலையை ஒழித்து, ஜாதிக்குள் திருமணம், ஜாதிக்குள் உட்ஜாதிமுறை என்ற சதியைச் செய்தனர்.

நம்முடைய மருத்துவ அறிவையெல்லாம் களவாடி, தங்களுடையதாக்கினர். நம் வான் ஆய்வு, அரிய நூல்கள் எல்லாவற்றையும் வடமொழியில் பெயர்த்துக் கொண்டனர். தமிழ் மூலத்தை நீரிலும் நெருப்பிலும் அழித்தனர். ஆக அனைத்தையும் ஆரியமாற்றியது, ஏமாற்றியது, தங்களுடையதை நம்முள் ஏற்றியது.

தமிழன் எழுவது எப்படி?

ஆரியர்கள்தான் நம் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை அய்யத்திற்கு இடமின்றி அறிந்து, அவரிடம் விழிப்போடிருந்து, அவர்களது சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். அதற்கு நம்மிடமிருந்து அவர்கள் பறித்த கல்வியை அனைவரும் பெறவேண்டும். நம் வேலைவாய்ப்புகளை நம் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப பெறவேண்டும். தமிழை கலப்பின்றி பேசவும் எழுதவும் வேண்டும்.

ஆங்கிலம் புலமைபெற கற்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறப்பாக ஆங்கிலம் பேச பயிற்சி பெறவேண்டும். உலகில் எங்கு வேலை கிடைத்தாலும் சென்று பொருள் ஈட்டவேண்டும். தமிழன் மண்ணை மட்டும் விற்கக் கூடாது. விற்றாலும் பிற இனத்தார்க்கு விற்கக் கூடாது.

தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும். தொழில்புரியும் தமிழர்களும் நேர்மையாக தமிழர்களுக்கு பணியாற்ற வேண்டும். அரசியல் விழிப்பு வேண்டும். தமிழர் தவிர வேறு இனத்தார் ஆள குறிப்பாக ஆரிய ஆதிக்கம் ஏற்பட அனுமதிக்கக் கூடாது.

ஒரு தமிழன் மற்ற தமிழனுக்கு உதவ வேண்டும். பொறாமை கொள்ளாது, பிற தமிழர் உயர்விற்கு துணை நிற்க வேண்டும். உயர்வு கண்டு பெருமை கொண்டு பாராட்ட வேண்டும். தமிழரில் ஆற்றல் உள்ளோரைத் தட்டிக்கொடுத்து மேலும் உயர்த்த வேண்டும்;  பலர் அறிய தூக்கிப் பிடிக்க வேண்டும்.

ஆரியர் திணித்த ஜாதி, மத, மூடநம்பிக்கைகளை அறிவோடு சிந்தித்து விட்டொழித்து, அறிவுசார் வாழ்க்கை வாழவேண்டும். மனிதநேயம், உலகப் பார்வையுடன் பரந்த உள்ளத்துடன் உயர் வாழ்க்கை நெறியை கைக்கொள்ள வேண்டும்.

போதைப் பொருள், மது, புகை என்று எதையும் தொடக்கூடாது. பிள்ளைகளை அறிவு திறமையுள்ளவர்களாக வளர்க்க வேண்டும். அளவோடு பெறவேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரை வெறும் குறிப்புகளின் தொகுப்பு. விரிவாக அறிய விரிவான நூல் விரைவில் வெளிவருகிறது.

–   மஞ்சை வசந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *