Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்தியா ? பாரத் ? ஒரு வரலாற்றுப் பார்வை- பேரா.இரவிசங்கர் கண்ணபிரான்

பரதநாடு என்பது வட இந்தியா மட்டுமா? தென்னிந்தியா அந்த நாட்டின் ஒரு பகுதி இல்லையா?

பரதநாடு என்பது மகாபாரதக் கதையின் படி பரத இனக்குழுவினர் ஆண்ட வட இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பகுதியே ஆகும். அதில் தென்னிந்திய நிலப்பரப்பு இணையவில்லை என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி முடிவுக்கு வரும் இடமே பரதநாட்டின் எல்லையாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது.

விந்திய மலைக்குத் தெற்கே அமைந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களாகத் திராவிடர்களையும் கேரளர்களையும் கர்நாடகர்களையும் சோழர்களையும் மற்றும் பல மன்னர்களையும் மகாபாரதம் சுட்டிக்காட்டி அவர்களும் அந்தக் குருச்சேத்திரப் போரிலே பங்கேற்றதாகக் குறிக்கின்றது.
மனுஸ்மிருதியில் (Manu 2-6-23) தென்னிந்திய நிலப்பரப்பு ‘பரத வர்ஷா’ நாட்டின் பகுதியாகச் சுட்டிக் காட்டப்படவில்லை. அதற்கும் மேலாக இந்தத் தென்னிந்திய நாட்டினரை ‘மிலேச்ச தேசத்தினர்’ அதாவது காட்டுமிராண்டிகள், கீழ்நிலை ஜாதியினர், சமஸ்கிருதம் அறியாத அயலவர்கள் என்று குறிப்பிடுகின்றது.

மகாபாரதத்தின் அனுசாசன பருவா (Book13, Sec. 35) உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் வெறுப்பைச் சம்பாதித்த கீழ் ஜாதி சூத்திரர்களாகத் தென்னிந்திய மக்களையும் மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.

மேகலா, திராமிடா என்னும் சொற்கள் இந்தப் பகுதியிலே குறிப்பிடப்படுகின்றது.

புராணங்களில் பரதவர்ஷா

பாகவத புராணம், வாயுபுராணம், அக்னி புராணம், மார்க்கண்டேய புராணம், ஸ்கந்த புராணம் ஆகிய புராணங்களில் பரதவர்ஷத்தைப் பற்றிய கற்பனைக் கதைகள் அள்ளிவிடப்பட்டிருக்கின்றன.

வாயு புராணத்தில் பரத வருஷத்தில் ஒன்பது தீவுகள் இருந்தன என்றும், அவற்றிற்கு இடையே கடல் இருந்தது என்றும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு யாரும் போக முடியாது என்றும் கதை சொல்லப்பட்டிருக்கின்றது.

பரதவர்ஷத்தைச் சுற்றி ஏழு கடல்கள் இருந்ததாக இந்தப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவை,

உப்புக்கடல்
கரும்புச்சாற்றுக் கடல்
மதுக் கடல்
வெண்ணை நெய்க் கடல்
தயிர்க் கடல்
பாற்கடல்
நன்னீர்க் கடல்

பரதவர்ஷத்தின் நிலப்பரப்பைக் குறிப்பிடும் மேற்கண்ட குறிப்புகள் எல்லாம் கற்பனையில் விளைந்த கதைகளே என்று சொல்லத் தேவையில்லை.

ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன?

இன்றைய ஒரிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திகும்பாக் கல்வெட்டு அந்தப் பகுதியைக் காரவேல மன்னன் கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆண்ட வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்கின்றது.

17 அடிகள் கொண்ட அந்தக் கல்வெட்டிலே பத்தாவது அடியிலே ‘பாரத வாஸா’ என்ற சொற்றொடர் வருகின்றது. காரவேல மன்னன் பாரத வர்ஷா நாட்டின் மீது படை எடுத்துச் சென்ற செய்தியை இந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. காரவேல மன்னன் ‘கலிங்காதிபதி’ என்றும் ‘கலிங்க ராஜ வம்ச’ என்றும் ‘கலிங்க நகரி’ என்றும் காரவேல மன்னன் கலிங்க சாம்ராஜ்யத்தின் குடிமகனாகவே இந்தக் கல்வெட்டில் பதிவுசெய்யப் பட்டிருக்கின்றார் என்பதும் பாரதவர்ஷத்தில் கலிங்க நாடு சேர்ந்து இருக்கவில்லை என்பதும் இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் செய்திகளாகும்.

இந்தக் காரவேல மன்னனை, 113 ஆண்டு களாகக் கலிங்கப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த திராவிட மன்னர்களின் கூட்டமைப்பை முறியடித்தவனாகவும், பாண்டிய மன்னர்களிடம் இருந்து முத்துக்களைப் பரிசாகப் பெற்றவனாகவும் இந்தக் கல்வெட்டுக் காட்சிப்படுத்துகின்றது.
இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய செய்திகளாக இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் முக்கியமான மூன்று முடிவுகளாவன:

1. கி.மு. முதலாம் நூற்றாண்டி
லேயே பரதவர்ஷாநாடு அமைந்திருந்தது

2. பரதவர்ஷா நாடு என்பது வட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே.

3. அந்தக் காலகட்டத்தில் கலிங்கப் பகுதியும் தென்னிந்தி யப் பகுதியும் பரதவர்ஷா நாட்டின் பகுதிகளாக இருக்க வில்லை. சமண மதத்தின் பரத மன்னன்
பரதவர்ஷா என்பது பார்ப்பனிய மதத்தின் சொல்லாடல் மட்டும் அன்று. அந்தச் சொல்லாடல் சமணத்திலும் பவுத்தத்திலும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘பாரத்’ என்னும் சொல் மத ரீதியான சொல்லாடல் இல்லை. அது பல பண்பாடுகளைத் தன்னுள்ளே கொண்ட மானுடவியலின் ஒரு சொல்லாடலாகும்.
சமண மதக் குறிப்புகளின் படி முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் நூறு மகன்களில் ஒருவன்தான் பரதன். ரிஷப தேவரின் மகளின் பெயர் பிராமி என்றும், அது அன்றைக்கு வழக்கத்திலிருந்த எழுத்துருவுக்குப் பெயராகக் (பிராமி எழுத்து) கொள்ளப்பட்டது என்பதும் கூடுதல் செய்தி.

கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சமண இலக்கியமான ஆதி புராணத்தின் படி ரிஷப தேவர் தனது நாட்டை 100 மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளார். ஆனால், பரதன் மற்ற 98 சகோதரர்களையும் போரில் தோற்கடித்து அவர்களுடைய பகுதியையும் கைப்பற்றிக் கொள்கின்றான். இறுதியாக ஒரே ஒரு சகோதரன் பாகுபலி மட்டும் இன்னும் தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். பாகுபலியுடன் பரதன் செய்த போரிலே பரதன் தோற்றுப் போய் விடுகின்றான். ஆனால், பாகுபலி சகோதர பாசத்தால் தனது நாட்டை பரதனுக்கு அளித்துவிட்டு, தான் ஒரு சமணத் துறவியாகப் போய் விடுகின்றான் என்று ஆதி புராணம் சொல்கின்றது.

இன்றைக்கும் கர்நாடகத்தின் சரவண பெலகுலா சமணக் கோயிலிலே மிக உயர்ந்த பாகுபலியின் சிலைக்கு அருகிலே பரத மன்னனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தக் கதையை உறுதி செய்வதாக உள்ளது.

மேலும் இந்த சமணமதக் கதையைப் பார்ப்பனிய விஷ்ணு புராணமும் ஸ்ரீமத் பாகவதமும் உறுதி செய்கின்றது. ரிஷப தேவரின் மூத்த மகனான பரதனின் பெயராலேயே இந்த நாடு பாரதவர்ஷா என்று அழைக்கப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் (5-4-9) அறுதியிட்டுச் சொல்கின்றது.

மேலே சுட்டப்பட்ட வேதிய இந்துமதப் புராணங்களின்படியும் சமண மத ஆதி புராணத்தின்படியும் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவனின் மகனான பரதனே இந்த நாட்டை பேரரசனாக ஆண்ட சக்கரவர்த்தி என அறிய முடிகின்றது.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள் பாரத் என்று அறியப்படும் இந்தியா அரசமைப்புச் சட்டத்தின் முதல் விதியில் நாட்டின் பெயர் அறிவிக்கப்படுகின்றது. அதில் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுக்கப்பட்டது.

இந்த முதல் விதியின் மீது நடந்த விவாதத்தில் ஒரு சிலரின் கருத்துகளைக் கீழே பார்ப்போம்.

திரு. அனந்த சயனம் அய்யங்கார்:

இந்தியா என்ற சொல்லுக்குப் பதிலாக பாரத், பாரத் வர்ஷா அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
திரு.லோக்நாத் மிஸ்ரா அவர்களும் பாரத் வர்ஷா என்ற பெயரை ஆதரிக்கிறார்.

திரு.சிபன்லால் சக்சேனா அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக் கூடாது என்றும், பாரத் என்ற வார்த்தை மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், இந்திய நாட்டின் தேசிய மொழியாக இந்தி அறிவிக்கப்பட வேண்டும் என்றும், வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றார்.

திரு.எச்.வி. காமத் என்பவர் மாநிலங்கள் என்ற வார்த்தையை மாற்றிப் பிரதேசங்கள் என்னும் ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றார்
இந்த வேளையில் குறுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு, பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறுவது சரியான முடிவு அல்ல என்று தனது கருத்தை முன்வைத்து உறுப்பினர்கள் தங்களின் சக்தியை அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் செலவழிக்க வேண்டுமென்றும் இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பிரச்சனைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பண்டித நேரு அவர்களின் கருத்துக்கு ஒத்திசைவு தந்து பிறர் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தையும் எதிர்க்கின்றார்.
பின்னர் ஒரு சமரசத் தீர்வாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாரத் என்று அறியப்படும் இந்தியா India that is Bharat என்னும் திருத்தத்தை முன் வைக்கிறார்.
திரு.எச் வி காமத் அவர்களும் திரு.சேத் கோவிந்த் தாஸ் அவர்களும் பாரத் அல்லது ஹிந்து என்னும் சொல் முதலில் வரவேண்டும் இந்தியா என்னும் சொல் பின்னால் வரவேண்டும் என்னும் திருத்தத்தை முன்வைக்கின்றார்கள்.

திரு.காலா வெங்கட் ராவ் அவர்கள், ஹிந்த் & இந்தியா என்ற சொற்கள் அயற்சொற்கள் என்னும் கருத்தியலால் இந்தி மொழியின் பெயரையே பாரதி என்று மாற்ற வேண்டும் என வேண்டினார்.

திரு.கமலபதி திருபாதி அவர்கள் மேலுலகத்தில் வசிக்கின்ற கடவுள்கள் பாரத் என்றே இந்த நாட்டின் பெயரை நினைவில் வைத்துள்ளார்கள் என்று சொல்கின்றார்.

இந்த நிலையிலே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறுக்கிட்டு இந்த விவாதங்கள் எல்லாம் தேவையா இன்னும் முக்கியமான வேலை நிறைய இருக்கின்றது என்று அவையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

பின்னர் திருத்தங்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு அண்ணல் அம்பேத்கரின் திருத்தமே அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதன்படி India that is Bharat இந்தியா எனும் பாரத் என்னும் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

முடிவுரை :

இந்தக் கட்டுரையில் வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா மற்றும் பாரத் ஆகிய சொல்லாடல்களைப் பற்றி ஆராய்ந்தபின் இந்த நாட்டின் பெயராக அந்தச் சொற்கள் எப்படி நிறுவப்பட்டன என்பதை ஆய்ந்த பின்னே நாம் கீழ்க்கண்ட முடிவுகளை எளிதாக எட்டலாம்.

01. இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு பெயர்களுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் மக்களுக்கு உந்துதல் தந்தது.
02. பல நூற்றாண்டுகளாக இந்த நிலப்பரப்பு இந்தியா என்னும் பெயராலும் அறியப்பட்டிருந்தது.
03. பாரத் என்னும் பெயரும் வெகு காலமாக இங்கு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
04. இந்தியா என்னும் பெயர் காலனியாதிக்கம்

நம் நாட்டின் மீது திணித்த பெயர் என்று கருதுவது தவறாகும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்து என்னும் சொல்லாடலின் அகவழக்கின் புறவழக்கே (Exonym of Endonym) இந்தியா என்னும் சொல்லாடலாகும். இந்தியா என்பது அயற்சொல் இல்லை.

05. யாரேனும் இந்தியா என்னும் சொல்லை அயற்சொல்லாகக் கருதி அதன் மீது வெறுப்பை உமிழ்ந்தால், பாரத் என்னும் சொல்லும் ஈரானிய வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த சொல் என்பதால் அதையும் அயற்சொல்லாகக் கருதி அதன் மீதும் வெறுப்பை உமிழ வேண்டும்.

06. யாக வேள்வியில் வார்க்கப்படுகின்ற காணிக்கைகளை நெருப்பானது மேலுலகில்வாழ்கின்ற தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதால் நெருப்புக்குப் பரதா என்னும் பெயர் வந்தது. இதனாலேயே நெருப்புக்கு ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயரும் வந்தது.

07. பரதப் பழங்குடியினர் வடமேற்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கங்கைச்சமவெளியில் குடி அமர்ந்து குரு ராஜ்ஜியத்தை அமைத்தார்கள்.

08. மகாபாரதத்தில் வருகின்ற பரத என்னும் சொல்லாடல் சகுந்தலை துஷ்யந்தன் ஆகியோரின் மகனான பரதனைக் குறிக்கவில்லை. அது பரதப் பழங்குடியினரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.

09. சமண மதத்தின் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் மகனான பரதச் சக்கரவர்த்தியின் பெயராலேயே இந்த நாடு பரதவர்ஷா என்று அழைக்கப்பட்டது என்பதை சமணத்தின் ஆதி புராணத்தின் வழியாகவும் அதே கருத்தை உறுதி செய்யும் வேதியத்தின் விஷ்ணு புராணம் ஸ்ரீமத் பாகவதத்தின் வழியாகவும் நாம் அறிந்தோம்.

10. பரதவர்ஷத்தில் தென்னிந்தியப் பகுதிகள் அடங்கி இருக்கவில்லை. மனுவின் ஸ்ருதிகள் இந்தக் கூற்றை உறுதி செய்கின்றன. கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே பரதவர்ஷா நாட்டின் எல்லைப் பரப்பாக அமைந்திருந்தது.

11. மிகப் பழமையான தொன்மவியல் ஆதாரமான ஹத்திகும்பாக் கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா இருந்துள்ளதையும் கலிங்கமும் தென்னாடும் பரதவர்ஷத்தில் இணையாமல் தனித்து இருந்ததையும் காட்சிப்படுத்தியது.

12. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களில் சில உறுப்பினர்கள் இந்தியா என்னும் சொல் அயற்சொல் என்று கருதி அதை நீக்க முற்பட்டதுடன் இந்தி மொழியின் மேல் கொண்ட அபிமானத்தாலும் இந்து மதத்தின் பால் கொண்ட அபிமானத்தாலும் பாரத் என்ற சொல்லே நம் நாட்டின் பெயராக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

13. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியா என்னும் பாரத் என்னும் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா, பாரத் ஆகிய இரண்டு பெயர்களையும் அரசியல் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்.

14. மானுடவியலின் அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்
பட்ட இந்த ஆய்வு என்பது இந்த இரண்டு சொற்களின் உண்மைத் தன்மையை உணர வைக்கின்றது. 