பெரியாரின் பெருந்தொண்டர் கலைஞர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

2024 Uncategorized ஆகஸ்ட் 1-15, 2024 கவிதைகள்
பெரியாரின் பெருந்தொண்டர்; உலகம் போற்றும்
பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி!
சரியாக அரசியலைத் தேர்ந்தே, பொல்லாச்
சழக்கினரை மிகச்சாடி மாநி லத்தின்
உரிமைக்குக் குரல்கொடுத்த தமிழ்ப்போ ராளி!
உதவாத சாதிமத மடமைப் போக்கை
விரிவாக எடுத்துரைத்தே குமுக நீதி
வென்றிடவே பாடுபட்ட உழைப்புத் தேனீ!
முத்தமிழைக் கற்றுணர்ந்த மு.க! நல்லார்
முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற ஏந்தல்!
முத்தனைய சொற்கொண்டல்! வாழ்நாள் எல்லாம்
முரசொலியில் எழுத்துவிதை ஊன்றி வந்த
வித்தகராம்! அய்ந்துமுறை தமிழர் நாட்டில்
வீறார்ந்த முதலமைச்சர் பொறுப்பை ஏற்று
நத்திவந்த வெம்பகையை வீழ்த்திச் சாய்த்தார்!
நற்றமிழர் நம்பிக்கைத் தூணாய் நின்றார்!
வள்ளுவர்க்குக் கோட்டத்தை அமைத்தார்! போற்றும்
வள்ளுவமாம் குறளுக்கே உரைகள் தீட்டித்
தெள்ளமுதாம் தீந்தமிழைச் செழிக்கச் செய்தார்!
திராவிடத்துப் பூங்குயிலாய் உலவி வந்தார்!
உள்ளத்தில் முன்னேற்றக் கழகம் தன்னை
உயிராக, மூச்சாக எண்ணி வந்தார்!
அள்ள அள்ளக் குறையாத தமிழ்ச்செல் வத்தை
அறிவுலகம் வியந்திடவே படைப்பாய்த் தந்தார்!
வடபுலத்தோர் நடுங்கிடவே செய்தார்! மக்கள்
வாழ்வியலும் ஒளிர்ந்திடவே போர்தொ டுத்தார்!
உடன்பிறப்பார் உயிர்த்தெழவே மடல்கள் தந்தார்
ஒப்பரிய சமத்துவநற் புரங்கள் கண்டார்!
நடமாடும் நச்சரவாம் ஆரி யத்தார்
நாடகத்தை முகத்திரையைக் கிழித்தார்! வெல்லும்
அடலேறாய் நூறாண்டாய்த் தமிழர் நாட்டின்
ஆளுமையாய் வலம்வந்தார் கலைஞர் அன்றோ?