இதனைச் செய்தால் நீங்களும் கொடையாளர்தான்

ஜூலை 01-15

உதிரக்கொடை (இரத்த தானம்) :

ஒருவர் உடலில் இருக்கும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி மட்டுமே அளிப்பது இரத்த தானம்

உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே அளிக்க முடியும்.

எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்.

சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்.

பலன் : உதிரம் தேவைப்படும் பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம். இரத்தம் கூறுகளாக பிரிக்கப்பட்டால் ஒரே முறையில் பல பிணியாளர்க்ளுக்கு பயன் படும்.

உதிரக்கொடை அளிக்க விரும்பினால் : அருகிலுள்ள அரசு மருத்துவமனையின் உதிரவங்கியை அணுகவும்

பார்வைக்கொடை (கண் தானம் / கருவிழிப்படலகொடை):

உயிருடன் உள்ளவர் கண் தானம் செய்ய முடியாது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்யலாம்

ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்கள் எடுக்கப்படும்.  இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்

கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்

எடுக்கப்பட்ட கண்களின் கருவிழிப்படலம் (கார்னியா) அடுத்த நபருக்கு பொருத்தப்படும்

பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு.

ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்களை எடுக்க வேண்டும்

கண்ணாடி அணிந்தவர்கள், ஏற்கனவே கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கூட தானம் செய்யலாம்

எலும்பு கொடை (எலும்பு தானம்) :

உயிருடன் உள்ள ஒருவர் எலும்பு தானம் செய்ய முடியாது. எலும்பு தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்களால் இறந்தவரின் எலும்புகள் தானம் செய்யப்படலாம்

ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்

இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்

மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்

பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்

எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது

எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.

பலன் : பல பிணியாளர்களுக்கு

மூளைச்சாவு உறுப்புக்கொடை (உறுப்பு தானம்):

உயிருடன் உள்ளவர் உறுப்பு தானம் செய்ய முடியாது.

(முக்கிய குறிப்பு : உயிருடன் உள்ள நபர்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, அல்லது தங்கள் விரும்பும் ஒருவருக்கு தங்களின் ஒரு சிறுநீரகம் மட்டும் அல்லது  கல்லீரலின் ஒரு பகுதி மட்டும்  தானம் செய்ய சட்டத்தில் ஒரு வழிமுறை உள்ளது)

அது தவிர உயிருடன் உள்ளவர் உறுப்பு  தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் மூளைச்சாவால்  இறந்த பின்னரே அவரது உறவினர்கள் மூளைசாவு அடைந்தவரின் உறுப்புக்களை தானம் செய்ய இசைவு தரலாம்

மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்.

சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், தோல், எலும்பு, மூட்டுக்கள் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்

பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்

பலன் : பல பிணியாளர்களுக்கு

முழு உடல்கொடை (உடல்தானம்) :

உயிருடன் உள்ள ஒருவர் முழு உடல் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலை தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம்

இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும். விபத்து என்றால் முழுஉடல்தானத்திற்கு உடல் பெறப்படமாட்டாது

உடல் உறவினர்களிடம்  அளிக்கப்படாது.

உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்

அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும், இதய ஒரு போக்கிகளும் (இதய வால்வுகள்) எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன்படும்

பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால், இதய ஒரு போக்கிகளால் பல  பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு.

உறுப்பு தானம் என்பது வேறு !! உடல் தானம் என்பது வேறு. உறுப்பு தானம் என்பது மூளைச்சாவு எற்பட்டால் மட்டுமே. அதன் மூலம் மற்றொரு உயிரை காக்கலாம். உடல் தானம் என்பது இயற்கை மரணம் ஏற்பட்டால் மட்டுமே.

உடல் தானம் குறித்த வழிமுறைகள் http://www.dmrhs.org/tnos/orders-of-tn-govt/donationof-body-after-death-procedure-for-donation

இணைய முகவரியைச் சொடுக்கினால் அறியலாம்.

மதம் வளர்க்கும் உலகில் மனிதம் வளர்ப்போம் வாருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *