மே 20 அயோத்திதாசர் பிறந்த நாள்

மே 16-31

சுதேசிகளே…

அய்ரோப்பியர் அன்பு என்பதில் சிலர் பொறாமையும், சிலர் மருட்சியும், சிலர் வெறுப்புங் கொள்ளுவார்கள். காரணம் யதார்த்த குணம் விளங்காக் குறையேயாம். சுதேசிகள் சுதேசிகளென சொல்லிக்கொண்டு எதிர்வீட்டுக் காரனுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் ஜாதி வித்தியாசமும், பக்கத்து வீட்டுக் காரனுக்கு மூன்றாம் வீட்டுக்காரன் ஜாதி வித்தியாசமும், மூன்றாவது வீட்டுக்காரனுக்கு நான்காம் வீட்டுக்காரன் ஜாதி வித்தியாசமும் உண்டு.

இத்தகைய வித்தியாசங்களினால் பக்கத்து வீட்டுக்காரன் இறந்து விட்டானே நீரேன் போகவில்லை என்பாராயின் நாங்கள் வேறு ஜாதி அவர்கள் வேறு ஜாதி என்பார்கள்.

அல்லது நான்காம் வீட்டுக்காரன் தவறியேதோ ஓர் ஊக்கத்தினாலோ இழப்பினாலோ கீழே விழுந்து விடுவானாயின் அவனருகிற் செல்லா மலும், அவனை எடுக்காமலும், அவனது ஆயாசத்தைத் தெளிவிக் காமலும் தூரவே நின்றுகொண்டு அவனென்ன ஜாதி, எவ்வூரானென்று கேட்டுக் கொண்டே இருப்பார்களன்றி அவன் நம்மெய்ப்போன்ற மனிதவடிவினனாச்சுதே அவனுக்குள்ள ஆபத்தைத் தீர்த்து ரட்சிக்க வேண்டுமென்னும் அன்பே இவர்களுக்குக் கிடையாது. மனிதர்களுக்குள் மனிதர்களை ஆதரிக்க அன்பில்லாதவர்கள் மற்ற உயிரினங்களின் மீது இரக்கம் வைப்பார்களோ.

இத்தகைய அருளற்றவர்கள் வசம் சுதேச ராட்சிய பாரத்தை ஒப்படைத்தால் யாரையார் காப்பாற்று வார்களென்பதைக் கல்வி மிகுந்த கனவான்களே கண்டுகொள்ள வேண்டியது. அய்ரோப் பியருக்குள்ள அன்பின் மிகுதியை அநுபவத்தினாலும், காட்சியாலும் அறிந்துகொள்ள வேண்டியதேயாம்.

அதாவது, மைசூரிலிருந்த ஓர் அய்ரோப்பிய உத்தியோகஸ்தர் ஓடத்தில் செல்லுங்கால் ஓடங்க விழ்ந்து அதிலுள்ள சகலருந் தப்பித்துக்கொள்ள ஒரு சுதேசி நீரில் தவிப்பதைக் கண்ட அய்ரோப்பியர் அவனை நீரினின்று எடுத்துக் கரைக்குக் கொண்டுவரும்போது பெருவெள்ளத்தால் பாறையில் மோதப்பட்டு மாண்டுபோய்விட்டார். தான் அந்தஸ்துள்ள உத்தியோக துரை மகனென்று மேன்மையாகத் தன்னைத் தப்ப வைத்துக் கொள்ளாமல் ஏழைக் கூலியாளனைத் தன்னையொத்த மனிதனென்னுங் கருணை வைத்து காப்பாற்றுவதற்குத் தன்பிராணனைக் கொடுத்துவிட்டார். தேசாபிமானி களே, அன்பின் நிலையும், அதன் காட்சியும் யாவரிடத்து விளங்குகிறதென்று கண்டறியுங்கள்.

இத்தகைய அன்புமிகுத்தோர்வசம் அரசாட்சிப் பாரமிருக்குமாயின் சகல குடிகளும் சீர்பெறுவார்களா, அன்பென்பதற்று பொறாமையும், வஞ்சினமும், பொருளாசையும் உள்ளவர்பால் அரசாட்சி பாரத்தை அளிப்பதினால் சகல குடிகளும் சீர்பெறுவார்களா என்பதை சுதேசிகளுக்குள் சுதேசிகள் உணரவேண்டியதேயாம்.

 

– 3:16, செப்டம்பர் 29, 1909

தொகுப்பு: ஞான.அலோய்சியஸ்
நூல்: அயோத்திதாசர் சிந்தனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *