குடிஅரசு தரும் அரிய தகவல்கள்-8

பிப்ரவரி 16-28

 

அர்ச்சகப் பார்ப்பனர்களின்

அக்கிரமம்

4.11.1928 ‘குடியரசு’ ஏட்டில் வெளியான வாசகர் கடிதம்

 

சென்ற சனிக்கிழமை நானும் என் நண்பர்கள் பலரும் அபிஷேகம் செய்வதற்காக ஏராளமான பழம் தேங்காய் கற்பூரம் முதலிய அபிஷேக சாமான்களுடன் மதுரை மீனாட்சி ஆலயத்திற்குச் சென்றோம். முதல் வாசல்படி அண்டை ஓர் பார்ப்பன அர்ச்சகன் ஓடிவந்து “ஐயா என்னிடம் கொடுங்கள் நான் சாஸ்திரோக்தமாய் அபிஷேகம் செய்து தருகிறேன்’’ என்று சொன்னதின் பேரில் நான் “உன்னிடம் கொடுத்து அபிஷேகம் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை, நாங்களே உள்ளே போய் அபிஷேகம் செய்து கொள்ளுவோம்; எங்கள் அபிஷேகத்தை சுவாமி ஏற்றுக் கொள்ளும்’’ என்று சொன்னோம். அதற்கு அப்பார்ப்பான் “அடாபாவிகளா பிராமணர்களுக்குக் கொடுக்காத கைகளில் மறுஜன்மத்தில் குஷ்டநோய் உண்டாகும்’’ என்று வாய்கூசாமல் பிரசங்க மழைபொழியவாரம் பித்துவிட்டான். பின்பு இந்த மஹானுபாவரை லக்ஷியம் செய்யாமல் என் சிநேகிதர்களைக் கூட்டிக்கொண்டு இரண்டாம் வாசல் படியை அடைந்தோம். அவ்விடத்தில் சுமார் 15 பேர் கும்பலாகக் கூடிக் கொண்டு “என்னிடம் கொடுங்கள் என்னிடம் கொடுங்கள்’’ அபிஷேகத்தட்டை’’ என்று இழுத்தார்கள். “இதென்னடா சனியனாக இருக்கிறது நம்மால் இந்த அர்ச்சகர்களுக்குள் பெரிய கலகம் வந்து விடுமென்று நினைத்து “ஒருவரிடமும் கொடுத்து அபிஷேகம் செய்துகொள்ள எங்களுக்கு விருப்பம் கிடையாது. மரியாதை வேண்டுமானால் இவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்; தொந்தரவு செய்யாதீர்கள்’’ என்று எச்சரிக்கை செய்ததின் பேரில் கொஞ்சம் விலகி நின்றார்கள். பிறகு நாங்கள் மடமடவென்று நுழைந்து அம்மன் கோவில் சன்னதிக்கே போய்விட்டோம். அவ்விடமிருந்த கோவில் அர்ச்சகன் “தேங்காய் ஒன்றுக்கு கணக்குப்படி 6 பைசாவும் பழம் விபூதி குங்குமம் இவைகளுக்கு ரூபாய் 1_8_0ம் ஆகிறது; உன்னுடைய பேர் ராசிக்கு மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்ய வேண்டியிருந்தால் அதற்கு 12 அணாவும் ஆக ரூ.2_4_0 ஆகும்’’ என்று சொன்னான். நான் என்னய்யா? ஒரு நிமிஷ வேலைக்கு 2_4_0 ரூபாய் கேட்கிறாயே, இது உனக்கு நியாயமா? நாங்களே அபிஷேகம் செய்து கொள்ள எங்களுக்குத் தெரியும் என்றோம்’’ அதற்கு அர்ச்சக பூபதி இப்படி பிராமணர்களுக்கு கேட்டதை தராவிடில் ஸ்ரீமீனாட்சியம்மனுக்கு உங்கள் பேரில் எப்படி கிருபை உண்டாகும்? நீங்கள் பிரபுக்கள் இப்படி 2_4_0 ரூபாய்க்கு சோபித்தனம் செய்யக் கூடாது’’ என்று வாயில் உள்ள பற்களெல்லாம் தெரியும்படி கெஞ்சினான். நாங்கள் மேற்படி யார் வார்த்தைக்கும் செவி கொடாமல் தேங்காய் பழங்களைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்யாமல் ஏழை மக்கள் அரும்பசியைத் தீர்த்தோம்.

ஏ.சுருளிவேலு, ஜக்கமநாயக்கன்பட்டி

‘குடிஅரசு – 04.11.1928

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *