இந்தி சமஸ்கிருதத்தை அனுமதியோம் என்ற தமிழக அரசின் கருத்து வரவேற்கத்தக்கது!

ஆகஸ்ட் 16-31

நுழைவுத் தேர்வு ஒடுக்கப்பட்ட மக்களை நுழையாமால் தடுக்கும் சூழ்ச்சி !

ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து முறியடிக்கவேண்டும்

மாநிலப் பட்டியலுக்குக்
கல்வியை மீண்டும் கொண்டு வந்தால்தான்,
கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை எளிதில் தீர்க்க இயலும்.
உரிமைக்குக் குரல் கொடுத்தேயாக வேண்டும்.

சட்டப்பேரவையில் 9.8.2016 அன்று உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) பேசியதாவது:

புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பல அம்சங்கள் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளன. 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதை, இனி 5ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி என கூறப்பட்டுள்ளது. இது கிராமப்புற ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.

மறைமுகமான குலக்கல்வித் திட்டம்

சரியாக படிக்காத மாணவர்களை அதாவது 13 வயதிலேயே தொழில் பயிற்சிக்கு அனுப்பவும் வரைவு அறிக்கை பரிந்துரை செய்கிறது. இதன்மூலம் மத்திய பாஜக அரசு மறைமுகமாக குலக் கல்வி திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது. உயர்கல்வியில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதித்தால் ஏழைகளுக்கு உயர் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். சமஸ்கிருதம், இந்தி மொழியைத் திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது.

சமூகநீதி, இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலன் ஆகியவற்றுக்கு எதிராக உள்ள இந்த புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். கல்வியாளர்களைக் கொண்ட புதிய குழு அமைத்து கல்விக் கொள்கையை வகுக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தங்கம் தென்னரசு தம் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்:

புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை ஆராய்ந்து தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டைப் பாதுகாக்கவும், கல்வித் துறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளைத் தொடரவும் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. சமஸ்கிருதம், இந்தி மொழிகள் திணிப்பதற்கான வாய்ப்பை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது. சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலன்களை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின்:

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகளை நானும் தெரிவிக்க விரும்புகிறேன். பள்ளிக்கல்வித் துறையில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் தொடர்வதை தமிழக அரசு உறுதிசெய்யும். சிறுபான்மையினர் நலன் போற்றிப் பாதுகாக்கப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:

அமைச்சர்களின் கருத்தை வரவேற்கிறேன். புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடை பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்கள் உரைக்குப் பதில் அளிக்கையில், தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் அவர்களும் தமிழக அரசின் நிலைப்பாடுபற்றி திட்டவட்டமாகக் கூறிய கருத்துரைகளுக்காகவும், இப்பிரச்சினையை உரிய நேரத்தில், உரிய முறையில் எடுத்து வைத்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும், அமைச்சர் பெருமக்களின் உறுதியான பதிலுரைகளுக்காகவும், அதற்கு முழுக் காரணமான முதலமைச்சரையும், தமிழக அரசின் நிலைப்பாட்டிற்காக பாராட்டி வரவேற்கிறோம்.

மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மீண்டும் கொண்டு வந்தால்தான், கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை எளிதில் தீர்க்க இயலும். உரிமைக்குக் குரல் கொடுத்தேயாக வேண்டும்.

மேலும் பல ஆபத்துகள்!

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மாநில உரிமைப்பறிப்பு சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் பறிப்பு, சமூகநீதிக்குக் குழி பறிப்பு, நவீன குலக்கல்வி போன்றவை இடம்பெற்றிருப்பதால், இன்னும் விரிவான வகையில் முற்றிலுமாக புதிய கல்விக் கொள்கையை ஒருமனதான சட்டப்பேரவைத் தீர்மானம் மூலம் எதிர்த்தால் கூடுதல் பலன் அளிக்கும் என்பதுபற்றி, முக்கியமாக முதலமைச்சர் முடிவு எடுப்பது நல்லது.

நுழைவுத் தேர்வு எனும் ஆபத்து!

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுதல், அய்.அய்.டி.,களிலும் சேருவதற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கில் எடுக்காமல், தனியே நுழைவுத் தேர்வு எழுதிட வைப்பது, நமது ஒடுக்கப்பட்ட மற்றும் கிராமங்களிலிருந்து வந்து சேர விரும்பும் பிள்ளைகளை, அனுமதிக்காது தடுக்கும் சூழ்ச்சியையும் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து முறியடிக்க முன்வருதலும் அவசர அவசியமாகும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *