தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி

செப்டம்பர் 01-15

ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக்கூடாதென்கிறார்கள். இப்பொழுது ஒரு சில இடங்களில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்றால், அது அரசாங்கத்தாரின் சட்ட பலத்தைக் கொண்டு. ஆனால், பொதுவாகத் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படுகிறார்களா?என்பதையும், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதை ஆதரிக்கிறார்களா? என்பதையும் இதுசமயம் எண்ணிப் பார்க்க வேண்டும்,   ஆதிதிராவிடர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின்வாங்குவதில்லை.

பிறவியில் மிருகமாய்ப் பிறந்தும், ஜாதியில் நாய் என்றழைக்கப்படுவதுமான, மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டுவிடும்போது, ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் ஒரு முனிசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும் விட மறுக்கப்படுவது என்ன கொடுமை?

இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய்ப் பிறந்து விட்டார்கள், அவர்களைக் குறித்து மனு தர்ம சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது, வேதத்தில் கர்மகாண்டங்கள் அப்படிச் சொல்லுகின்றன என்று சாஸ்திரக் குப்பைகளின் மீது பழியைப் போடுவதோடு, மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதரவாக்கிக் கொள்ளுகின்றார்கள்.

இவ்வாறு மதத்தின் பேராலும், சமய நூல்கள், சாஸ்திரங்கள் புராணங்களின் பேராலும் செய்யப்படும் கொடுமைகளுக்கு அளவில்லை.

ஆயிரக்கணக்கான வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமூகம் கொடுமைக்குட் படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர்களாகிய உங்களைவிடச் சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப்படுத்தாமல் விட்டார்களா? அதுவும் இல்லை.

உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்கவேண்டுமென்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசிமக்கள், பார்ப்பனனுக்கு அடிமைசெய்யப் பிறந்தவர்கள் என்ற இழிபெயர்களும் இட்டழைக்கிறார்கள்.

இக்கேவலச் செயல்களுக்குக் கடவுளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென்கிறார்கள்.

நம் மக்களுக்குள் அநேகர் எவர் எப்படிச் செய்தாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்ப்போமென்று இழிவுக்கு இடங் கொடுத்துக் கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்கமேற்படாது என்பது திண்ணம், கேளுங்கள்!

ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத் தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.

உலகத்தில் அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதிவித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமூக முன்னேற்றத்துக்கும், விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர, புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக்காரர்கள் தயாராகயிருக்கிறோம்.
கொடுமை செய்யும் மதத்தையும், சாஸ்திரத்தையும், கடவுளையும் ஒழிப்பதற்குப் பயந்தோமானால் நாம் நிரந்தரமாய் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கேவலமாகத்தானிருந்தாக வேண்டும். சம உரிமையில்லாதிருப்பதைவிடச் சாவதே மேலென்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு, ஒன்றும் தடையாயிருக்க முடியாது. அதற்குத் தடையாயிருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கறையில்லை. ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க நமது பெரியோர்கள் எவ்வளவோ பாடுபட்டு வந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கபிலர் காலத்திலும், திருவள்ளுவர் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஜாதியில்லை, ஒழுக்கத்தினால்தான் உயர்வு தாழ்வு என்று எவ்வளவோ வற்புறுத்தப்பட்டு வந்தும் ஜாதிக்கொடுமைப் பேய்கள் ஒழிந்தபாடில்லை.  நமது பெரியார்கள் சொல்லியவை ஆயிரக்கணக்காகப் பிறரால் வாயளவில் பாராயணம் செய்யப்படுகின்றனவேயன்றி செய்கையில் அதனால் ஒரு பலனுமேற்பட்டதாய்த் தெரியவில்லை.

இன்றைக்கும் ஜாதிக் கொடுமையினால் இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப்பட்டுவிடும், அவன் அந்தத் தெருவில் போனால் சாமி செத்துவிடுமென்ற அநியாயங்கள்தான் தலை விரித்தாடுகின்றன. இவ்வுலகில் பல மதக்கொடுமைகளுக்கும் ஜாதி வித்தியாச இழிவுக்குமுட்பட்டு, கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சமடைவதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானமென்று சொல்லுவேன்.

ஜாதிக்கொடுமையை ஒழித்து இங்கு சமத்துவத்தைக் கொடுக்காத சாமி அங்கு மோட்சத்தையும், ரம்பை, ஊர்வசி நடனத்தையும், தங்க மெத்தையையும், சுக போகத்தையும் கொடுக்கிறதென்றால் அதை நம்புகிறவன் மடையனா என்று கேட்கிறேன். நம்முடைய உதவி வேண்டும்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நமது சுதந்திரத்தையும், உரிமையையும் கேட்டால் சாமி செத்துப் போகுமென்பதும் என்ன அயோக்கியத்தனமென்றுதான் கேட்கிறேன்.

தீண்டப்படாதார், தாழ்ந்தவர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி, ஒடுக்கப்பட்டுத் துன்புறும் மக்களுக்கும், உயர்ந்த ஜாதியார் கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்கும், குணத்தினாலும், உருவத்தினாலும், அறிவினாலும் ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா என்று கேட்கிறேன்.

இவ்வாறிருக்க மக்களில் பெரும்பான்மை யோரை ஜாதிக் கொடுமைகளுக்கும் இழிவுக்கும் உட்படுத்திவைக்க மதப் புரட்டுகளும், புராணப் புரட்டுகளும்தான் ஆதாரமாக இருக்கின்றன. மக்கள் சுதந்திரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாயிருக்கும் இந்த இந்துமதத்தையும், புராணங்களையும் ஒழிக்காமல் பின் என்ன செய்வது என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள்.

(சென்னை ராயபுரத்தில் கண்ணப்பர் வாசகசாலையைத் திறந்து வைத்து தந்தை  பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.)

– குடிஅரசு, 06.01.1945

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *