நிர்வாகம், சட்டத்துறைக்குப் பொருந்தும் இடஒதுக்கீடு நீதித்துறைக்கும் பொருந்தும்!

அக்டோபர் 16-31

23.9.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் (உச்ச)நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது. சுப்ரீம்கோர்ட்டுக்கு நீதிபதிகளை நியமிக்கும் போது, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, போடப்பட்ட பொதுநல மனுவின்மீது தீர்ப்பு வழங்கிய ஜஸ்டீஸ் டி.எஸ். தாக்கூர் தலைமையிலான (பெஞ்ச்) அமர்வு, அக்கோரிக்கையை ஏற்று தாங்கள் அப்படி ஒரு ஆணையைப் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

இது சட்டப்படி சரியா தவறா என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், அத்தீர்ப்பில் நீதிபதிகள் ஒரு முக்கியக் கருத்தைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றனர்.

 

சமூக நீதி _ -அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள்படி அது முக்கியமானது.
மனுவின் நோக்கத்தை நாங்கள் அறிந்து கொள்ளுகிறோம். சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து இனத்தவர் மற்றும் ஜாதிகளைச் சார்ந்தவர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கலாம். (அதற்காக, தனி ஒதுக்கீடு அளிக்க முடியாது).

இது தொடர்பாக நாங்கள் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கருதினால், அரசிடமோ அல்லது தலைமை நீதிபதியிடமோ மனு செய்யலாம் என்று குறிப்பிட்டிருப்பதாக ஒரு செய்தி நாளேடுகளில் வந்துள்ளது.

இதுபற்றி, சமூகநீதிக்காகப் போராடும் இயக்கத்தின் சார்பில் நமது கருத்தை உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் தெளிவுபடுத்தி, வற்புறுத்திட வேண்டியது நமது முக்கியக் கடமையாகும்.

இத்தீர்ப்பில் ஒரு  மய்யக் கருத்து அனைவருக்கும் (ஜனநாயகத்தில்) வாய்ப்புத் தரப்படுதல் நியாயமானதுதான் என்பதை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மறுக்கவில்லை. இதைப்பற்றி, எடுத்த எடுப்பிலேயே ஒரு கருத்து தெளிவாக்கப்படல் வேண்டும்.

சமூகநீதி அடிப்படையில், இத்தகைய ஒதுக்கீடுகள் – உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு _- பிரதிநிதித்துவம் என்பது சலுகையோ (Concession) பிச்சையோ (Charity) அல்ல.

மாறாக, அது உரிமை, அடிப்படை உரிமை அரசியல் சட்டப்படியே (Fundamental Right) என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள 16ஆவது பிரிவு 4ஆவது உட்பிரிவின்படி, “Equality of Opportunity in Matters of Public Employment (1) There shall be equality of opportunity for all citizens in matters, relating to employment or appointment to any office under the state.

இந்தப் பிரிவுதான் முக்கியமானது. இதில் உள்ள 4ஆவது உட்பிரிவுகள், சமூகநீதியை நடைமுறைப்படுத்தச் செய்ய துவக்கத்திலிருந்தே அதாவது முதலாவது சட்டத் திருத்தத்திற்கு முன்பிருந்தே இருந்து வரும் பிரிவு 16(4) என்பதாகும்.
இதன் தத்துவமும், நோக்கமும்.

1. எல்லோர்க்கும் வாய்ப்பு. அரசு வேலைகளிலும், நியமனங்களிலும் (Employment or Appoinments)  என்ற அரசியல் சட்டப் பிரிவுப்படி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் (By Appointment) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் (By Appointment) என்பது குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அடுத்தவரி “to any office under the State”என்ற வரிகள் மிகவும் தெளிவாக்கியுள்ளன!

இதனை நாளடைவில், வியாக்யானம் செய்த நீதிபதிகளும் மற்றும் சில ஆதிக்க மனப்பான்மையுடைய சட்ட வல்லுநர்களும் இந்த இடஒதுக்கீடு மாவட்ட நீதிபதிகள் வரைதான் பொருந்தக் கூடியதாகவும், அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்குப் பொருந்தாது என்றும் திசைதிருப்பி விட்டனர்! திட்டமிட்டே இப்படி ஒரு வியாக்யானம் கூறப்பட்டது. அரசியல் சட்ட விதிகள் மேலே கூறப்பட்டுள்ளவைபடி, இது எந்த நியமனத்திற்கும் “Any Office under the State” பொருந்தும் என்பதே நியாயமான பொருளாகும்.

தகுதி, திறமை பார்க்க இப்படி ஒரு பாதுகாப்பு – அதாவது உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பொருந்தாது என்று வியாக்யானம்  ஒரு தரப்பாரால் கூறப்படுகிறது.

இது விசித்திரமான வாதம் ஆகும்; எப்படியெனில்,

(அ) அப்படியானால் மாவட்ட நீதிபதிகளுக்கு தகுதி, திறமை பார்க்கப்பட வேண்டாமா?

(ஆ) வந்தவர்கள் எல்லாம் அவை இல்லாதவர்களா? தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா!

(இ) மாவட்ட நீதிபதிகளிலிருந்தும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை செல்லுகின்றனரே, அது எப்படி சரியாக முடியும்,- தகுதி, திறமைக்கு ஏன் இரட்டை அளவுகோல்?

தந்தை பெரியார் கேட்டபடி, தலைக்கு ஒரு சீயக்காய்; தாடிக்கு வேறு ஒரு சீயக்காயா?

உச்ச நீதிமன்றத்தில் இன்றுள்ள 30 நீதிபதிகளில் – ஒருவர்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்தோ, மலைவாழ் மக்களிலிருந்தோ (S.C., S.T.) இல்லையே!
66 ஆண்டு சுதந்திரத்தின் பலன் இதுதானா?

அரசியல் சட்டம் கூறிய சம வாய்ப்பு ஏன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது?

உயர் நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையுள்ள தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதிகள் தமிழ்நாட்டில் – சென்னை உயர் நீதிமன்றத்தில்தான்.

பார்ப்பன நீதிபதிகள் எண்ணிக்கை அவர்கள் விகிதாச்சாரத்திற்கு மேல் பல மடங்கு அதிகம்தான் இன்னமும் உள்ளது.

இந்த லட்சணத்தில் மேலும் புதிதாக (சென்னை உயர் நீதிமன்றத்திற்கு) 2, 3 பார்ப்பனர்கள் – பெண்கள் உட்பட வர இருக்கிறார்கள் என்ற சமூக அநீதிச் செய்திக ளும் வந்துள்ளன!

கொலிஜியம் என்ற பெயரில் அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்று மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டுவிட்டது என்ற கருத்தும், கொலிஜியம் என்பதில் மாநில உயர் நீதிமன்ற மூத்த மூன்று நீதிபதிகளில், மூவருமோ அல்லது இருவரோ வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களாக பெரும்பாலான இடங்களில் இருப்பதால், அவர்களது பரிந்துரை எவ்வளவு புரிந்துரைகளாக இருக்கும் என்பதும் கேள்விக் குறிகளாகும்!

ஆங்காங்குள்ள மக்களின் மண்ணின் மனோபாவம் (The Soil Psychology)  என்பதையேகூட புரிந்து கொள்ளாது, ஏதோ சில அளவுகோல்களை வைத்து பரிந்துரைப்பது எப்படி நியாயமாக இருக்கும்?

எனவே இந்த நியமனங்களில் வெளிப்படைத் தன்மை (Transperancy-யும் சமூகநீதியும் கட்டாயம் தேவை; IAS, IPS–க்குப் பொருந்தும் அதே விதிகளும் நடைமுறைகளும்  பெரும்பாலும் நியமனங்களைப் பொறுத்தவரை பொருந்த வேண்டும்.

மத்திய அரசு, சமூக நீதியை உறுதிப்படுத்திட வேண்டும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஜஸ்டீஸ் திரு. பி. சதாசிவம் அவர்கள் நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தேவை _  ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள கருத்தும் இதில் கவனிக்கப்பட்டாக வேண்டும்.
அரசின் மற்ற பிரிவுகளான நிர்வாகம், சட்டத் துறைக்குப் பொருந்தும் சமூகநீதி _- நீதித்துறைக்கும் பொருந்தியாக வேண்டும் அல்லவா!

இதுபற்றி ஆங்காங்கு கருத்தரங்குகளை நடத்திட சமூக ஆர்வலர்களும், சமூகநீதிப் போராளிகளும் முன்வர வேண்டும். இது அவசரம் -அவசியமாகும்.

– கி.வீரமணி, ஆசிரியர்

var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *